என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.
    • மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிராண்ட் பிரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் மோதிய ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா வீழ்த்தியது.

    இதனால் மனமுடைந்த ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்தனர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போல காட்சியளித்த ஒரு ரசிகர் இந்த ஆட்டத்தை நீளமான தாடி, வெள்ளை குர்தாவுடன் கண்டுகளித்தார். அவரது இந்த தோற்றத்தை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் தோனிதான் மாறுவேடத்தில் அமெரிக்கா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்ததாக சமூகவலைதளங்களில் வைரலாக்கினர்.


    • அயர்லாந்து 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
    • ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் பயனில்லை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் கனடா- அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய கனடா 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிக்கோலஸ் கிர்ட்டன் 49 ரன்களும், ஷ்ரேயாஸ் மோவ்வா 37 ரன்களும் அடித்தனர்.

    இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அணி அயர்லாந்து. அதனால் கத்துக்குட்டி அணியான கனடாவை அயர்லாந்து எளிதா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கனடா பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச அயர்லாந்து தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமழிந்தனர்.

    பால்பிரைன் (17), பால் ஸ்டிர்லிங் (9), டக்கர் (10), ஹாரி டெக்கர் (7), கேம்பர் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 53 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    ஜார்ஜ் டாக்ரெல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 30 ரன்களும், மார்க் அடெர் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அயர்லாந்து அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் கனடா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இத்தொடரில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

    • ஐந்து செட்கள் வரை சென்ற நீண்ட நேர ஆட்டத்தில் அல்காரஸ் சின்னெரை வீழ்த்தினார்.
    • முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த மூன்று செட்களையும் வரிசையாக கைப்பற்றினார் ஸ்வெரேவ்.

    பாரீஸ் நகரில் நடந்து வரும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

    இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியின் முதல் போட்டியில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சின்னெர் (இத்தாலி), 3-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் நீயா-நானா என்று ஆக்ரோஷமாக ஆடியதால் ஆட்டம் சூடு பிடித்தது.

    முதல் 4 செட்டுகளை இருவரும் தலா 2 வீதம் வசப்படுத்திய நிலையில், கடைசி செட் மேலும் பரபரப்பானது. ஆனால் இறுதி செட்டில் ஆரம்பத்திலேயே சின்னெரின் சர்வீசை அல்காரஸ் 'பிரேக்' செய்ததால் அவரது கை ஓங்கியது. அதில் இருந்து மளமளவென கேம்ஸ்களை கைப்பற்றி அல்காரஸ் வெற்றிக்கனியையும் பறித்தார்.

    4 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சின்னெரை வெளியேற்றி பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    2-வது அரையிறுதி போட்டியில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். இந்த போட்டி அந்த அளவிற்கு பரபரப்பாக செல்லவில்லை. முதல் செட்டை ரூட் 2-6 எனக் கைப்பற்றினார். அதன்பின் ஸ்வெரேவ் ஆட்டத்திற்கு ரூட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    அடுத்த மூன்று செட்டுகளையும் ஸ்வெரேவ் 6-2, 6-4, 6-2 என வரிசையாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால் நாளை நடைபெறம் இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் சாம்பியன் போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின.
    • இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

    வாஷிங்டன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் பெற்ற மாபெரும் வெற்றி. இந்த நிலைக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இந்த வாய்ப்பை நாங்கள் இரு கைகளாலும் பிடிக்க முயற்சிக்கிறோம்.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதே எங்கள் வேலை என்பதால் இன்னும் வேலை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. எனவே அணி உண்மையிலேயே நம்பிக்கையுடன் உள்ளது.

    நாங்கள் இந்த வேகத்தை தக்கவைத்துக் கொள்வோம். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதே எங்களின் அடுத்த இலக்கு என தெரிவித்தார்.

    • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார்.
    • 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிஃப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார்.

    ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரபோத் சிங் தங்கம் வென்றார்.

    50 மீட்டர் ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் சிஃப்ட் கவுர் சம்ரா வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவால் இரண்டு பதக்கங்கள்தான் வெல்ல முடிந்தது.

    சீனா 4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 11 பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்தது. நார்வே ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 3 பதக்கங்கள் பெற்று 2-வது இடம் பிடித்தது.

    பிரான்ஸ் ஒரு தங்கம், ஒரு வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்தது. இந்தியா 1 தங்கம், ஒரு வெண்கலத்துடன் 4-வது இடம் பிடித்துள்ளது.

    • இலங்கை குரூப் போட்டிகளில் விளையாட 4 இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளில் ஒரே மைதானத்தில் விளையாடுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. டி20 தொடர் தொடங்கியதில் இருந்து மோசமான ஆடுகளம், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு வசதியான வகையில் போட்டி அட்டவணை, மோசமான வசதி என பல புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக இலங்கையின் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணிக்கு நியாயமான முறையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியதுதான் இதற்கு காரணம். குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாட இலங்கை அணி நான்கு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது மட்டும் போதாத நிலையில், வங்காளதேச அணிக்கெதிராக விளையாட தல்லாஸ் செல்லும்போது ஏழு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    "இது தொடர்பாக ஐசிசி-க்கு புகார் அளித்துள்ளோம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியாக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஐசிசி-யிடம் கேட்டுள்ளோம்" என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒட்டல், தற்போது போட்டி நடத்தப்படும் இடத்திற்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியா நான்கு போட்டிகளில் முதல் மூன்று போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடுகிறது என மற்ற அணிகள் குற்றம்சாட்டுகின்றன.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் ஆண்டர்ஸ் அண்டோன்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 22-24, 18-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • அமெரிக்கா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பாகிஸ்தான, இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளுக்கு உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளிப்பது ஒன்றும் பெரிதல்ல. அந்த வகையில்தான் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை அமெரிக்கா வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த போட்டி "டை"யில் முடிய சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான். ஆனால் குரூப் "ஏ" பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா? என்பது அச்சம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றைய தோல்வி குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    பரிதாபத்திற்குரிய செயல்பாடு. அமெரிக்காவுக்கு எதிராக விளையாடியதால் நான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் அமெரிக்கா வெற்றி பெற்றார்கள். அவர்கள் விளையாடிய விதம் பாராட்டுக்குரியது.

    சூப்பர் ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுப்பது ஒரு ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுப்பதாக நான் அர்த்தம் கொள்கிறேன். பாகிஸ்தான் "சூப்பர் 8" சுற்றுக்கு முன்னேற போராடி வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்தியா மற்றும் இன்னும் இரண்டு சிறந்த அணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இவ்வாறு அக்ரம் தெரிவித்துள்ளார்.

    குரூப் "ஏ" பிரிவில் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    தற்போது அமெரிக்கா கனடா, பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இந்தயா அயர்லாந்தை வீழ்த்தியுள்ளது. அமெரிக்கா இன்னும் இந்தியா, அயர்லாந்து அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் போகும்.

    • அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்தார்.
    • சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    டல்லாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 44 ரன்னும், ஷதாப் கான் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ரன்கள் எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ரன்களை எடுத்து, டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ரன்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ரன்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ரன்களுடன் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    • முதலில் ஆடிய நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    ஸ்காட்லாந்து சார்பில் பிராட் வீல் 3 விக்கெட் , பிராட்லி கியூரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து விளையாடியது. ரிச்சி பெரிங்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்கவிட்டனர். மைக்கேல் லீஸ்க் 35 ரன் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரிச்சி பெரிங்டன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    35 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மைக்கேல் லீஸ்க் ஆட்டநாயகன் விருது வென்றார்.

    • பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
    • இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழந்து 18 ரன்களை குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

    அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

     


    2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப் அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.

    முன்னதாக, யு19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
    • விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.

    இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    ×