என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து- இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.
    • பர்மிங்காமில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை.

    பர்மிங்காம்:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.

    லீட்ஸ் டெஸ்டில் 5 சதம் அடித்தும், 835 ரன் குவித்தும் (முதல் இன்னிங்ஸ் 471 + 2-வது இன்னிங்ஸ் 364) இந்தியா தோற்றது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் சவாலானது. மேலும் பர்மிங்காமில் இந்திய அணி வெற்றி பெற்றது இல்லை. இங்கு ஆடிய 7 டெஸ்டில் 6-ல் தோற்றது. ஒரு போட்டி டிரா ஆனது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்துவீச்சு தான் சொதப்பலாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. பேட்டிங்கில் சாய் சுதர்சன், கருண் நாயர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

    இதனால் குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், நிதீஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வாய்ப்பில் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆடுவாரா? என்பது கடைசி நிமிடங்களில் தான் தெரியும்.

    முதல் டெஸ்டில் 2 சதம் விளாசிய ரிஷப்பண்ட், ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், கே.எஸ்.ராகுல் 2-வது போட்டியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும். மேலும் கடைசி கட்ட வீரர் கள் சிறப்பாக ஆடுவது முக்கியமானதாகும்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வியூகமாக அமைத்துள்ளது. அதே நிலையை இந்த டெஸ்டிலும் கடைபிடிக்கும். 2-வது போட்டிக்கான அந்த அணியில் மாற்றமில்லை. ஆர்ச்சர் இடம் பெற்றாலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டக்கெட், அலி போப், ஹேரி புரூக், ஜோரூட், ஜேமி சுமித் ஆகியோரும் பந்துவீச்சில் ஜோஷ்டங், கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கார்ஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • 771 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
    • ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, ஐசிசி-யின் டி20 பேட்டர்ஸ் தரவரிசையில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக 62 பந்தில் 112 ரன்கள் விளாசி, இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இதன்மூலம் 771 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 794 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஹேலே மேத்யூஸ் 774 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

    ஷபாலி வர்மா 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஹர்லீன் தியோல் 86ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை படோசா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரிட்டனின் கேடி பவுல்டர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என பிரிட்டன் வீராங்கனை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பவுலா படோசா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பவுல்டர் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது.
    • திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (14 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (10 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தன. சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின.

    இந்த நிலையில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் கோதாவில் இறங்குகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

    கலக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்:

    4 முறை சாம்பியனான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, லீக் சுற்றில் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்தது. நெருக்கமாக அமைந்த சில ஆட்டங்களில் கூட கடைசி கட்டத்தில் அட்டகாசமாக பந்து வீசி வெற்றிக்கனியை பறித்தது. பாபா அபராஜித் (3 அரைசதம் உள்பட 315 ரன்), ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (237 ரன் மற்றும் 8 விக்கெட்), ஆஷிக் (186 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், அபிஷேக் தன்வர் (13 விக்கெட்), பிரேம்குமார் (9 விக்கெட்), சிக்கனத்தை காட்டும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் எம்.சிலம்பரசன் (ஓவருக்கு சராசரி 5.62 ரன் வழங்கி 8 விக்கெட் எடுத்துள்ளார்) உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் மிரட்டுகிறார்கள்.

    ஏற்கனவே திருப்பூர் தமிழன்சுக்கு எதிரான லீக்கில் 174 ரன் இலக்கை 16 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்திய கில்லீஸ் அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணும். வெற்றிப்பயணத்தை நீட்டித்து 6-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டும் ஆர்வத்துடன் தயாராகி வருகிறது.

    திருப்பூர் எப்படி?

    முதல் 3 ஆட்டங்களில் 2-ல் சறுக்கிய திருப்பூர் அணி அதன் பிறகு கடைசி 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று எழுச்சி பெற்றதுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்தது. ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்திருக்கும் தொடக்க ஆட்டக்காரர் துஷர் ரஹேஜா (4 அரைசதம், 25 சிக்சருடன் 383 ரன்), அமித் சாத்விக் (218 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (95 ரன் மற்றும் 10 விக்கெட்), புதிய நட்சத்திரமாக உருவெடுக்கும் வேகப்பந்து வீச்சாளர் இசக்கி முத்து (9 விக்கெட்), சர்வதேச அனுபவம் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் (9 விக்கெட்), ஆகியோர் தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். அவர்கள் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் கில்லீசும், ஒன்றில் திருப்பூரும் வெற்றி கண்டுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

    இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
    • ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 2 ஆவது இன்னிங்கில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ஜிம்பாப்வேவுக்கு 537 ரன்கள் என்ற இமாலய இலக்கை தென்னாப்பிரிக்கா நிர்ணயம் செய்தது .

    இதனையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்துள்ளது.

    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது.
    • ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடிய வீரர்களுடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

    அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் அந்த அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் விலகியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்தின் ஆடும் லெவன்:-

    ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வார), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

    • முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.
    • இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெட்வதேவ்வும் கைப்பற்றினர்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆண்களுக்கான முதல் சுற்று ஆட்டத்ததில் மெத்வதேவ் (உருசியா) மற்றும் பெஞ்சமின் போன்சி (பிரெஞ்ச்) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை போன்சியும் 2-வது செட்டை மெத்வதேவும் கைப்பற்றினர். 3-வது செட் பரபரப்பாக சென்றது. இதில் போன்சி 7-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். 4-வது செட்டையும் போன்சி வென்றார். இதன் மூலம் 7-6 (2), 3-6, 7-6 (3), 6-2 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி போன்சி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும்.
    • வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்கியது. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னில் புல்தரையில் நடக்கக்கூடிய ஒரு போட்டியாகும். அத்துடன் வீரர், வீராங்கனைகள் வெள்ளைநிற உடை மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இதையொட்டி கடந்த சில தினங்களாக வீரர், வீராங்கனைகள் அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) மற்றும் கார்சன் பிரான்ஸ்டைன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-1, 7-5 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த அணியில் சூர்யகுமார் யாதவ் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளார்.
    • ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி தேர்வு செய்யாத அவர் தன்னையும் தேர்ந்தெடுக்கவில்லை.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆண்டு நேற்றைய தேதியில் 2-வது டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

    இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அஸ்வின் உடனான சமீபத்திய உரையாடல் ஒன்றில் வருண் சக்ரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் ஆல் டைம் லெவன் அணியைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அதன்பின் அவர் அணியை தேர்வு செய்துள்ளார்.

    வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த அணியில் இந்திய டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 3 இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, மகேந்திரசிங் தோனி ஆகியோரை தேர்வு செய்யாத அவர் தன்னையும் தேர்ந்தெடுக்கவில்லை.

    வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த கனவு லெவன் அணி விவரம் பின்வருமாறு:-

    ஜோஸ் பட்லர், டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்ட்யா, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மதீஷா பதிரனா

    • "கேப்டன் கூல்" வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார்.
    • தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் "கேப்டன் கூல்" வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் ஜூன் 5, 2023 அன்று இந்திய டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டது.

    "கேப்டன் கூல்" என்ற பெயர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளின் போது பிரபலமானது.

    இந்த டிரேட்மார்க் மூலம், தோனி தனது பிராண்ட் அடையாளத்தை பாதுகாக்கவும், வணிக வாய்ப்புகளை விரிவாக்கவும், குறிப்பாக விளையாட்டு பயிற்சி, ஆடை, மற்றும் டிஜிட்டல் துறைகளில் தனது பெயரைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

    இந்த டிரேட்மார்க்கிற்கு 2021-ல் பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் (Prabha Skill Sports) என்ற நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதே பெயரை அந்த நிறுவனம் பதிவு செய்ய முயன்றது. ஆனால், தோனியின் புகழ், ஊடக கவரேஜ் மற்றும் ரசிகர்களின் அங்கீகாரம் காரணமாக, இந்தப் பெயர் தோனியுடன் மட்டுமே தொடர்புடையது என டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி ஏற்றுக்கொண்டது.

    இதன் மூலம் தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னதாக 8,707 புல்-அப்ஸ் எடுத்து ஓ யோஹான் சாதனை படைத்திருந்தார்.
    • ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

    தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்-அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த சாதனை 2024 செப்டம்பர் 28-29 அன்று இன்சியோனில் நடந்தது.

    2019-ல் தனது ராணுவப் பணியின்போது இதற்கான பயிற்சியைத் தொடங்கிய ஓ யோஹான், கடுமையான உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்த இலக்கை அடைந்துள்ளார். தனது 707-வது சிறப்பு பயணப் பிரிவுக்கு (707th Special Mission Group) இந்த சாதனையை அர்ப்பணித்துள்ளார்.

    முன்னதாக 8,707 புல்-அப்ஸ் எடுத்து சாதனை படைத்திருந்த இவர், ஒரு வாரத்திற்குள் மற்றொரு போட்டியாளரால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டதால், மீண்டும் இந்த மாபெரும் 11,707 என்ற எண்ணிக்கையை எட்டி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

    • அசார், 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
    • 1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, அந்த அணியில் முக்கிய வீரராக இவர் இருந்தார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் மோசமான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். அந்த அணியில் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மாறி கொண்டே வருகிறார்கள்.

    அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர்கள் கேரி கிரிஸ்டன், ஜேஸன் கில்லெஸ்ப்பி ஆகியோர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இருவரும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் 8 மாதங்களிலே ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்

    முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார்.

    மேலும், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்றவர். 1999 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோது, அசார் மஹ்மூத் அந்த அணியில் முக்கிய வீரராக இருந்தார்.

    இவர் 2016 முதல் 2019 வரை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×