என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடியில் ஒரு ஆண்டாக போலி சி.பி.ஐ. அதிகாரிகளாக வலம் வந்த சமையல் மாஸ்டர்களிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த மைதீன் (43), ஹரிகரன் (24) போலி சி.பி.ஐ. அதிகாரிகளாக வலம் வந்தனர்.

    காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த கிருபாகரன். மோட்டார் சைக்கிளில் அங்குள்ள மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் டிப்-டாப்பாக வந்த மைதீன், ஹரிகரன் அவரை மடக்கினர். தாங்கள் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் என கூறி அடையாள அட்டையை காண்பித்தனர். இதனால் சந்தேகமடைந்த கிருபாகரன் விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மைதீன், ஹரிகரன் பிடிபட்டனர்.

    அவர்கள் இருந்த வீட்டில் போலீஸ் யூனிபார்ம், போலி அடையாள அட்டைகளை கைப்பற்றினர். மேலும் வீட்டில் இருந்து ரூ.4.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மோசடி செய்த பணமா என விசாரணை நடத்தினர். இந்த பணத்துக்கு அவர்கள் கணக்கு காட்டியுள்ளனர். இதையடுத்து பணம் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவர்களது சீருடையில் துப்பாக்கி வைக்கக்கூடிய பவுச் இருந்தது. இதனால் அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடு முழுவதும் தேடினர். எதுவும் சிக்கவில்லை.

    மேலும் விசாரணையில் மைதீன் சமையல் தொழில் செய்து வந்ததும், ஹரிகரன் அவருக்கு உதவியாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது. பணம் பறிக்கும் ஆசையில் போலீஸ் சீருடை வாங்கி போலி அடையாள அட்டை தயாரித்து ஏமாற்றியுள்ளனர்.

    இவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போலீஸ் சீருடையில் இருந்த போட்டோவுடன் பேஸ்புக் முகவரி வைத்துள்ளனர். இதன்மூலம் பலரை ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதீன், ஹரிகரன் இருவரும் பைக்கில் வந்துள்ளனர். அவர்களிடம் ஆவணங்களை கேட்டபோது தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காட்டி சென்றுள்ளனர்.

    அவர்கள் பிடிபட்ட பிறகு தான் போலீசாரையே ஏமாற்றி சென்றது தெரியவந்துள்ளது.

    அவர்கள் போலீசாரிடம் கூறுகையில்:- சிறுவயதிலிருந்தே போலீஸ் சேர வேண்டும் என ஆசை நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தை பார்த்த பிறகு சூர்யா போலவே இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இதையடுத்து போலீஸ் சீருடை அணிந்து செல்பி, போட்டோ எடுத்துக் கொண்டோம். பண ஆசையில் மோசடி செய்ய முயன்றோம் என தெரிவித்துள்ளனர்.

    இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்

    2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கு மேலாக போலி சி.பி.ஐ. ஆக வலம் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


    பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய 2 பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு புதுத்தெருவை சேர்ந்தவர் வைரம் ராஜா (எ) ராஜேந்திரன் (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி ராஜாவை 2 பெண்கள் உள்பட 7 பேர் கும்பல் கடத்தி சென்றது. வெளியில் சென்ற கணவர் ராஜா வீடு திரும்பாததால் அவரது மனைவி ரமாதேவி ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார்.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டுக்கு வந்த ராஜா மனைவியிடம் தன்னை சிலர் கடத்தி சென்று விட்டதாக நடந்த சம்பவங்களை கூறியதுடன் போலீசிலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு அடுத்த வேப்பூரை சேர்ந்த ராஜாவின் நண்பரான தணிகைவேல் (47) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராஜாவுக்கு தணிகைவேல் ரூ.2.10 லட்சமும், தணிகைவேலின் நண்பர் ஆம்பூர் அருண் (30). ரூ.5 லட்சமும் தர வேண்டும். ராஜா தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ராஜாவை கடத்தி பணம் கேட்டு மிரட்டலாம் என்று அருண் கொடுத்த ஐடியாவின் அடிப்படையில் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதாக தணிகைவேல் போலீசாரிடம் தெரிவித்தார்.

    அருண் அவர்களது நண்பர்களான 2 பெண்கள் உள்பட 7 பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து நாட்றம்பள்ளி டோல்கேட் அருகே நின்றிருந்த திண்டுக்கலை சேர்ந்த உமாதேவி (40), ஜோதி (40) ஆகிய 2 பெண்களையும் கைது செய்தனர். மேலும் கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக இருந்த ஆம்பூர் அருண் உள்பட கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர் அருகே கார் மோதியதில் லாரியில் சிக்கி ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    ஒடுகத்தூர் கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த அரசன் (வயது 27). ஆட்டோ டிரைவர் நேற்று இரவு ஒடுகத்தூரில் இருந்து கொய்யா பழங்களை ஏற்றிக் கொண்டு வேலூர் வந்துகொண்டிருந்தார்.

    அப்துல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது வேகமாக வந்த கார் ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் தறிகெட்டு ஒடிய ஆட்டோ சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இதில் அரசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செம்மர கூலி தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிழக்கத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 28). இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (33), இளையகுமார் (30), பழனி, மற்றொரு பழனி, சென்றாயன், கிருஷ்ணமூர்த்தி, சஞ்சய் ஆகிய 7 பேரை ஆந்திர பகுதிக்கு காட்டில் செம்மரம் வெட்ட அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    அதற்கான கூலியை 7 பேருக்கும் தராமல் சீனிவாசன் இழுத்தடித்து வந்தார். இதனால் கடந்த 3-ந்தேதி கூலி கேட்டு சீனிவாசன் வீட்டுக்கு 7 பேரும் மற்றும் உடன் சிலரும் சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் சீனிவாசனை அவர்கள் காரில் ஏற்றி கடத்த முயன்றனர்.

    வீட்டிலிருந்த சீனிவாசனின் மனைவி சாந்திபிரியா (25), தாய் மல்லிகா (45) சீனிவாசனை கடத்த முயன்றதை தடுத்தனர். அப்போது அவர்களும் தாக்கப்பட்டனர்.

    இதில் மயங்கி விழுந்த சாந்திபிரியா, மல்லிகா ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சாந்தி பிரியா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இளையராஜா, பழனி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் உள்பட 6 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று வேலூர் ஜே.எம்.3 கோர்ட்டில் வெங்கடேசன் என்பவர் இவ்வழக்கில் சரணடைந்தார். அதே வேளையில் ஆலங்காயம் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் முனிவேல் (50) என்பவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்பு முனிவேலை கைது செய்தனர். இவர் தி.மு.க. வில் வேலூர் மேற்கு மாவட்ட அவை தலைவராக உள்ளார். பெண் கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் கைது செய்யபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர ஆலாசனை கூட்டம் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர ஆலாசனை கூட்டம் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.

    அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சட்ட விதிகளை சரியாக பின்பற்றாமல் 9 மாவட்டங்கள் நீங்கலாக மீதமுள்ள மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அதன் வாயிலாக உள்ளாட்சி நிதியை கபளீகரம் செய்ய துணிந்த அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் வேலூர் மாவட்டம் உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தலை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி உடனே தேர்தல் நடத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 4.5 புள்ளிகளுக்கு கீழே சரிந்து இந்திய பொருளாதாரம் தள்ளாடும் நிலைக்கு காரணமாக மத்திய அரசுக்கும், துணைபோகும் அ.தி.மு.க. அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் வேலூர் மாவட்ட தி.மு.க.விற்கு உட்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆற்காடு:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அனைத்து கட்சி அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வியாபாரிகள் சார்பில் கத்தியவாடி சாலை அருகே இருந்து பேரணியாக சென்று தொலைதொடர்பு அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், முத்தவல்லிகள், ஜமாத் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பேரணியையொட்டி மேல்விஷாரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஆம்பூர் பஸ் நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

    அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

    காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.
    வேலூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

    டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

    இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் வகுப்புக்கு சென்றனர்.
    நாட்டறம்பள்ளி அருகே சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    நாட்றம்பள்ளி:

    குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவர் தனது குடும்ப நண்பர்கள் 8  பேருடன் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று காரில் புறப்பட்டு சென்றனர். 

    காரை விஜயன் ஓட்டி சென்றார். நிகழ்ச்சி முடிந்து இன்று காலை ஓசூரில் இருந்து குடியாத்தம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை அருகே கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் வந்த 8 பேரும் படுகாய மடைந்தனர். 

    இது குறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம் அருகே தந்தை விபத்தில் சிக்கியதாக கூறி பள்ளியில் இருந்து மாணவியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 11 வயது மகள் அருகே அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். குளிதிகையை சேர்ந்த வினோத் (வயது 30), தொழிலாளி. இவர், நேற்று மாலையில் மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்றார்.

    மாணவியிடம் உனது தந்தை விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார். அதனால் உன்னை அழைத்து வர சொன்னார்கள் என கூறி மாணவியை அழைத்து சென்றார். அப்பகுதியில் உள்ள கானாற்று ஓடை பகுதிக்கு அழைத்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.

    மாணவியை அழைத்து சென்றது குறித்தும், மாணவியின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டது குறித்தும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    விபத்து சம்பவம் எதுவும் நடைபெறாமல் தனது மகளை அழைத்து சென்றது குறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை தேடி விரைந்து சென்றனர்.

    இந்த நிலையில் கானாற்று பகுதியில் மாணவி, வினோத்திடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டுள்ளார். மாணவியின்அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் வினோத்திடம் இருந்து மாணவியை மீட்டனர்.

    பின்னர் வினோத்தை சரமாரியாக தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது தொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அவர் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    இதற்கிடையே, அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

    இதனையடுத்து பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 12-ந் தேதி புழல் ஜெயிலில் இருந்து பேரறிவாளன் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உடனடியாக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பேரறிவாளனை முக்கிய பிரமுகர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    பேரறிவாளன் கிருஷ்ணகிரியில் நடந்த அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பறையடித்து உற்சாகமாக இருந்தார். மேலும் தந்தை குயில்தாசனை வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் இன்றுடன் முடிந்தது. 
    அற்புதம்மாள்
    இந்நிலையில், பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    வாலாஜாவில் சாலையில் நடந்து சென்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வன்னியவேடு பகுதியை சேர்ந்தவர் அமிர்தம் (60). இவர் கடந்த 9-ந் தேதி வன்னியவேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு அய்யப்ப பூஜையில் கலந்து கொள்ள நடந்து சென்றார்.

    வாலாஜா அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அங்கு இருந்த கார் ஒன்று பின்னோக்கி வந்து அமிர்தம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கார்த்திகேயன் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அடுக்கம்பாறையில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பட்டப்பகலில் புகுந்து 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை மூவேந்தர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது சென்னையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். வெளியே சென்றிருந்த ராணுவ வீரர் மனைவி திரும்பி வந்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

    இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

    மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ×