என் மலர்
வேலூர்
உலகத்தை ஆட்டுவிக்கும் கொரோனா கட்டுப்படுத்த உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசியை தயார் செய்து வருகின்றன. இந்திய நாடும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட உள்ளது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட 500 மருத்துவ பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்துக்கு 42 ஆயிரத்து 100 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு 2 தடுப்பூசி போடப்படும். முதல் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 28 நாட்களுக்கு பிறகு மற்றொரு தடுப்பூசி போடப்படும். தமிழக அரசு உத்தரவு வழங்கிய உடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என வேலூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேர்ணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள சாமரிஷிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 24) மேளம் அடிக்கும் தொழிலாளி.
இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த். ஹேமந்துக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று இரவு அவரது வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் ஹேமந்த் பிறந்தநாளை அஜித் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்போது எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வில்சன் சுதாகர் என்பவரது மகன் ராபின் (27) மற்றும் ரீகன் ராஜ் (40) சின்னா என்கிற சதீஷ்குமார் (23) ஆகியோர் பைக்கில் வந்தனர்.
பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த அஜித் தரப்பினரிடம் அவர்கள் இங்கே ஏன் பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள் என கேட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராபின், ரீகன் ராஜ், சின்னா ஆகியோர் அஜித்தை பேனா கத்தியால் வயிற்றில் குத்தினர்.
இதனை தடுக்க முயன்ற அஜித்தின் சித்தப்பா வேலு என்பவரையும் கத்தியால் குத்தினர். இதில் அவரது குடல் சரிந்தது. இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பொதுமக்கள் படுகாயமடைந்த அஜித் மற்றும் வேலு ஆகியோரை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அஜித் பரிதாபமாக இறந்தார்.
வேலு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து ராபின், ரிகன் ராஜ், சின்னா என்கிற சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் ரைஸ்மில் தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
நள்ளிரவில் மர்மநபர்கள் இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது கண்காணிப்பு கேமரா ஒயர்களை துண்டித்தனர். பல மணி நேரம் முயற்சி செய்தும் எந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது தானியங்கி மூலம் வங்கிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை வங்கி ஊழியர்கள் சென்று பார்த்த போது எந்திரத்தின் ஒரு சில பகுதியில் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் எடுக்கவில்லை.
அந்த இயந்திரத்தில் ரூ.4 லட்சம் பணம் அப்படியே இருந்தது. கொள்ளையர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பி உள்ளது. இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மையத்திலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று ஆம்பூரில் இருந்து பேச்சை முடித்துக்கொண்டு மாதனூர் வழியாக குடியாத்தம் நேதாஜிசவுக் வந்து கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் வழியாக குடியாத்தம் பழைய பஸ் நிலையம் வந்தார்.
இந்த குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் தரைப்பாலம் கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே உள்ளது. குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்யமகாநதி ஓடுகிறது. இந்த வழியாக வந்த நடிகர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு காரிலிருந்து இறங்கி பார்த்து மிகவும் மன வேதனை அடைந்தார்.
அப்போது நடிகர் கமல்ஹாசன் நகரின் நடுவே ஓடும் ஒரு ஆற்றில் கழிவுநீரும் குப்பைகளும் இருப்பதை மனதை இறுக்கம் அடைய செய்வதாக கூறினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை திறந்தவேனில் கொட்டும் மழையில் பேசினார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியினரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
வேலூரின் சிறப்பு சிப்பாய் புரட்சி. எழுச்சி கொண்ட மண்ணாகும்.
வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். அதில் சிப்பாய் புரட்சி தோற்க காரணம் தலைவர்கள் தலை கொடுக்காததே.
தலைவர்கள் தலை கொடுத்தால் தான் வெற்றி வரும். நான் என் தலையை தமிழகத்திற்காக வைத்துவிட்டேன்.
நீங்களும் வைத்தால் தான் தமிழகத்தை மீட்க முடியும். நாம் நாற்காலியை பிடிப்பது உட்கார அல்ல, உட்காராமல் மக்கள் சேவை செய்ய.
நீங்கள் எல்லோருமே தலைவர்கள். நான் உங்களை என் குடும்பமாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.
மக்கள் நீதி மய்யத்தில் மகளிர் அணியினர் போஸ்டர் ஒட்டுகின்றனர். அது மற்ற எந்த கட்சியிலும் கிடையாது.
வெற்றியை நோக்கி அற்புதமாக நடைபோட்டுக் கொண்டுள்ளோம். அனைத்தும் பிரமாதமாக போய்க்கொண்டிருக்கிறது.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்பதை தற்போது ஏளனம் செய்கின்றனர். நாளை இதனை அமல்படுத்தும்போது உலகம் நம்மை பாராட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணினி அரசு செலவில் நிர்ணயிக்கப்படும். அது இலவசம் அல்ல. மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடாகத்தான் அதனை கருத வேண்டும்.
அரசுக்கும், மக்களுக்கும் இடையே அது தொடர்பை ஏற்படுத்தும். அரசின் சேவைகளும் எளிதில் கிடைத்து விடும். அரசின் சேவையை மக்கள் பெறுவது உரிமை. அதை அரசு தேடி வந்து தர வேண்டும். அதற்கான இடர்பாடுகளைக் களைந்திடவே வீட்டுக்கு ஒரு கணினி திட்டமாகும்.
விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும்.
சுற்றுச்சூழலை பற்றி பேசும் ஒரே கட்சி நாம் தான். பேசுவது மட்டும் அல்ல அதற்கான திட்டத்தையும் வகுத்து வைத்துள்ளோம்.
சரித்திரம் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பு அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் நேர்மைக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர் இதில் பங்கேற்று கொள்ளுங்கள். என்னை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஆரணி சுற்றியுள்ள கோட்டை மைதானங்கள் சரியாக பராமரிக்கப்பட்டால் உலக சுற்றுலா மையங்களில் ஒன்றாக ஆரணி மாற வாய்ப்புள்ளது.
அதனை செய்யும் திட்டம் எல்லாம் எங்களிடம் உள்ளன. சிறிய நகரங்களை பெரிய நகரங்களுக்கு நிகராக மாற்றி காட்டுவோம். எங்களால் நிறைவேற்றி காட்ட முடியும். எங்களின் கனவு இதற்காக மக்கள் நீதி மய்யத்தின் கரத்தை வலுப்படுத்துங்கள்.
நாங்கள் மக்களுக்காக அறிவார்ந்தவர்கள், அனுபவம் வாய்ந்தகளுடன் கேட்டு தெரிந்து ஆராய்ந்து பல திட்டங்களை வைத்திருக்கிறோம். அந்த திட்டங்களால் மக்கள் பயன்பெற வேண்டும். அப்போது நாங்கள் இருக்க வேண்டும். அது சீக்கிரத்தில் நடக்க வேண்டும்.
நாங்கள் தாமதமாக வந்தாலும் வேகம் எடுத்து விட்டோம். நாங்கள் எங்கு சென்றாலும் வெயில் மழை பாராமல் மக்கள் ஏராளமாக கூடுகிறார்கள். புதிய தமிழகத்தை உருவாக்க ஒரு கருவி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறீர்கள். அந்த கருவியாக நான் இருப்பேன். ஊர் கூடி தேர் இழுத்தால் வெற்றி நிச்சயம் நாளை நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி புதிய காலனி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் சூர்யா (26). டிப்ளமோ படித்துவிட்டு ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் சூர்யாவை எச்சரித்துள்ளனர். ஆனால் சூர்யா தொடர்ந்து அந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சூர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. முப்பதுவெட்டி ஏரிக்கரை அம்மன் நகர் அருகே உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சூர்யா இறந்து கிடந்தார். அவரை கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
அந்த வழியாக சென்றவர்கள் சூர்யா இறந்து கிடப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர் மேலும் ஆற்காடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






