என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
    • சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை ( செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார்.

    நாளை மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மதுரை செல்லும் அவர் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார்.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதேபோல் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனையங்கள் அமைத்தல், வடக்கு சரக்கு கப்பல் தளம்-3 எந்திர மயமாக்கல், நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதேபோல் ரூ.550 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில்வே தூக்கு பாலத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

    நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து, நீர் வழிகள் மற்றும் ஆயூஷ் துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை இணை மந்திரி சாந்தனு தாக்கூர், மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    இதில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்து கொள்கின்றனர்.

    பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் நேற்று கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் அது அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் ஆய்வு செய்தனர். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பிரதமர் பங்கேற்கும் விழா நடைபெறும் பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

    தொடர்ந்து சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி.
    • வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா, படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விழாவில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * திமுக ஆட்சிக்கு வந்தபின் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    * பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி.

    * கனிமொழியைப்போல அமைச்சர் கீதாஜீவனும் சிறப்பாக செயல்படுகிறார்.

    * மழை வெள்ளத்தின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இங்கேயே இருந்தார்.

    * உடைந்த பாலங்களை எல்லாம் சரிசெய்த பிறகே அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார்.

    * அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருவாரம் நெல்லை, தூத்துக்குடியில் தங்கி இருந்தார்.

    * 258 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டன. உடைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய ரூ.15 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    * தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரிய நிறுவனங்களை கொண்டு வருகிறோம். இன்றுகூட கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.

    * மலேசியா, சிங்கப்பூர் நிறுவனங்களும் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளன.

    * தொழிற்சாலைகள் தொடங்கப்படும்போது தென் மாவட்ட இளைஞர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.

    * கொரோனா பாதிப்பின்போது ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினோம்.

    * வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி உள்ளோம்.

    * பாதிக்கப்படும்போது மட்டும் அல்லாமல் இறுதி வரை துணை நிற்போம்.

    * கால்நடைகள், பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கினோம்.

    * சிறு வணிகர்களுக்கு கடனுதவித் தொகை வழங்கப்படுகிறது.

    * கால்நடைகளை இழந்தோருக்கு தனிநபர் கடனுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளோம்.

    * சாலைகளை சீரமைக்க ரூ.343 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * சேதம் அடைந்த படகுகள், வலைகள், மீன்பிடி இயந்திரங்களுக்கு நிவாரணம் வழங்கி உள்ளோம்.

    * அரசு ஆவணங்களை இழந்தோருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    * வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.

    * 2 பெரிய பேரிடர்களுக்காக ரூ.37 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டோம். சாதுர்யம் இருந்தால் நீங்களே சமாளிக்க வேண்டியதுதானே என்கிறார்கள்.

    * உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் திமுக என்று கூறினார்.

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா வில் குடவருவாயில் தீபாரா தனையும், 7-ம்திருவிழாவில் காலையில் வெட்டி வேர் சப்பர பவனியும், மதியம் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

    8-ம்திருவிழா அன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மதியம் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12-ம் திருவிழாவான இன்று இரவு 7மணியளவில் சுவாமி அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.
    • தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள சிப்காட் பகுதிகளில் தொழில் வளங்களை பெருக்கி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.

    நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அந்த வகையில் தென் மாநிலத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் முதல் மின் வாகன தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை வியட்நாமை சேர்ந்த பிரபல நிறுவனமான வின் பாஸ்ட் தொடங்க உள்ளது.

    இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு 1½ லட்சம் மின் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில்.

    வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில்.

    ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த புதிய மின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி சில்லா நத்தத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு புதிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், ராஜ கண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., வின் பாஸ்ட் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலர் பாம் சான் சவு, துணை தலைமை செயல் அலுவலர் பார்த்தா டட்டா, கலெக்டர் லட்சுமிபதி, சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.

    அப்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், வீடு சேதம் அடைந்தவர்கள், படகுகள் சேதம் அடைந்த மீனவர்கள் என 16 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதே போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து விழாக்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    முதலமைச்சரை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி முழுவதும் தி.மு.க. கொடிகள், தோர ணங்கள் வைக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டி ருந்தது. மேலும் முதலமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் 'கியூ'பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், இருதயராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் உயிர் கொல்லி பூச்சி மருந்துகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை 17பண்டல்கள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8,750 பாக்கெட்டுகளில் அடைத்து 15 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் ஆகியவை இருந்தது அவற்றை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வியநட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் புதிய மின்கார் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட்டில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. அங்கு மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது.

    சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த தொழிற்சாலை அமைகிறது. இங்கிருந்து ஆண்டுக்கு 1 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க.வினர் சார்பில் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சில்லாங்குளத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அப்போது புதிய மின்கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், சேதமடைந்தவர்கள், மீன்பிடி படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

    முதலமைச்சரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதனை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்காக 5 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் மிக பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    மேலும் 7-ம் திருவிழாவான 20-ந்தேதி சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளல், 8-ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், அதனை தொடர்ந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து 7.15 மணிக்கு நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

     தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தில் மாலைமுரசு இயக்குனர் கதிரேசன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித் குமார், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில பொது செயலாளர் டாக்டர் அரசு ராஜா, ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், தி.மு.க. மாநில விவசாய அணி கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் குமர குருபரஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஹெட் கேவார் ஆதித்தன், சபேஷ் ஆதித்தன், அசோக்குமார் ஆதித்தன், தனிகேசவ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகநாதன் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேரானது நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    11-ம் திருவிழாவான நாளை இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமியும், அம்பாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

    நாளை மறுநாள் 12-ம் திருவிழா அன்று மாலை 7 மணி அளவில் சுவாமி, அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    • புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
    • ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).

    இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.

    பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

    இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார்.
    • நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

    தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது முறையாக 2024-ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என பா.ஜ.க. தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமின்றி பிரதமர் மோடியும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அந்தந்த மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே அங்கு முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.

    அந்த வகையில் பிரதமர் மோடி இன்று குஜராத், உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    கடந்த மாதம் ஏற்கனவே இருமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார். வருகிற 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக 28-ந் தேதி காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர் துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் ராக்கெட், செயற்கைகோள்கள் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து சிறுகுறு மற்றும் நானோ வகையில் எடை குறைந்த செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்காக மத்திய அரசு புதிதாக ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.

    அதன்படி பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. இந்நிலையில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    மேலும் தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் ரமேஸ்வரன் பாம்பன் கடலின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே தூக்குப்பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

    பிரதமர் மோடி கலந்து கொள்ளும் தூத்துக்குடி அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி கடலோர காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கூடுதலாக தென்மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி. தலைமையில் தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. தூத்துக்குடி அரசு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி அதனை முடித்துக்கொண்டு நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வருகிறார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.

    • திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
    • அம்மன் கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்பின்னர் தினமும் காலையில் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில் பூசாரியான தர்மராஜ், கோவில் நடையை திறந்து பூஜை செய்தார். அப்போது அம்மன் கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது. அதை அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து வியந்துள்ளனர். இந்த தகவல் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது.

    உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது.

     இந்த அதிசய நிகழ்வு குறித்து கோவில் பூசாரி தர்மராஜ் கூறியதாவது:-

    தினமும் காலை 9 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்வேன். அதன்படி நேற்றும் காலையில் வந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை செய்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்மனே வந்து நேரடியாக என்னை சந்தித்தது போல் உணர்ந்தேன். அம்மன் கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது.

    அம்மனுடைய இடது கண் மனிதர்களின் கண் போல் 2 புறமும் வெள்ளையாகவும், நடுவில் கருவிழியும் இருப்பது போல் இருந்தது.

    என்னை பார்த்து அம்பாள் கேள்வி கேட்பது போல் உணர்ந்தேன். அந்த நேரம் தரிசனம் செய்ய வந்த ஒருவர் வந்தார். அவரை அம்மனை பார்க்க சொன்னேன். உடனே அம்மனை பார்த்த அந்த பக்தர், வலது கண் மனித கண் போல் காட்சியளிப்பதாக தெரிவித்தார். இது உண்மைதானா என்பது குறித்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து காண்பித்தேன்.

    என்னுடைய 50-வது வயதில் நான் தற்போது பூஜை செய்து வருகிறேன். வீடுகளில், கோவில்களில் பூஜை செய்துள்ளேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தீ விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமான டாரஸ் லாரி ஒன்று நேற்று நள்ளிரவில் தூத்துக்குடியில் இருந்து சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சுநாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர் கற்பகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கிளீனர் முருகேசன் என்பவர் இருந்தார்.

    லாரி இன்று அதிகாலையில் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியது.

    இதில் லாரியின் முன்பக்க டயர் ஒன்று ஸ்டிரியங் உடன் துண்டானது மட்டுமின்றி, மோதிய வேகத்தில் டீசல் டேங்க்கும் உடைந்தது. இதனால் மளமளவென தீ பற்றி எரிந்தது. இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் கற்பகராஜா மற்றும் கிளீனர் முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அருகில் இருந்த அப்பகுதியினர் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரியில் நிலக்கரி இருந்ததால் லாரி மட்டுமின்றி அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நிலக்கரியும் எரிந்து சாம்பலானது.

    இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
    • பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    8-ம் திருநாளான நேற்று அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து மேலக்கோவிலில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சைநிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சைநிற கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 11-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

    ×