என் மலர்
திருநெல்வேலி
- தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
- நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.
இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.
பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.
வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.
பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.
இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.
சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.
இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.
இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.
- மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
- ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் விவசாய பணிகள் வேகமெடுத்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும், சேர்வலாறில் ஒரு மில்லிமீட்டரும் மழை பெய்தது. மழையால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 850 கனஅடியாக இருந்து வருகிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 404.75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.10 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 91.14 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.08 அடியாக உள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி 3.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை மற்றும் அதனை சுற்றிலும் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை வரை 62 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 41 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அம்பையில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு காணப்படுகிறது. லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தென்காசியில் ஒரு மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதமான சீதோஷண நிலை நிலவி வருவதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறி சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
- உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேர் திருவிழா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.
மேற்படி 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறி சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.
மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை.
- சோதனை பரப்பளவை தோட்டம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே. ஜெயக்குமார் கடந்த மாதம் 4-ந் தேதி உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் உவரி அருகே கரைசுத்துபுதூரில் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கை திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப் பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், இதுவரையிலான விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி அன்புவிடம் சமர்ப்பித்து விவரங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கரைசுத்து புதூருக்கு சென்றனர். அங்கு ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது தோட்டத்தில் தீவிர சோதனையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயக்குமாருக்கு சொந்தமான அந்த தோட்டம் சுமார் 7 ஏக்கர் அளவு கொண்டது. அதில் இதுவரை நெல்லை மாவட்ட போலீசாரும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடல் கிடந்த இடத்தில் இருந்து 1 ஏக்கர் அளவிலேயே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புதிதாக எந்த தடயங்களும் சிக்கவில்லை. இதனால் சோதனை பரப்பளவை தோட்டம் முழுவதும் விரிவுபடுத்தி உள்ளனர்.
இதற்காக கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு, இன்று காலை முதல் ஜெயக்குமாரின் தோட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஏதேனும் முக்கிய தடயங்கள் சிக்குகிறதா? என்பதை ஆய்வு செய்ய தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல்லை:
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "செட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரிய ராகலாம். செட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும்.
அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் செட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.
இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.
இந்நிலையில் 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதனை தொடர்ந்து, செட் தேர்வு நடத்து வதற்கான விண்ணப்பங்களை பெற்று தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்திருந்தது.
இந்த தேர்வில் கலந்துக்கொள்ள சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் இருந்து இன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக உதவி பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முதன்முறையாக இந்த தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
- தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயின் தீவிரத்துக்கு ஏற்ப, ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்த நிலையில் சக்திவேல் (வயது 60) என்ற நோயாளி உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரை உடனிருந்த கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், வார்டில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரத்தடியில் படுத்திருந்தார். நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்து விட்டதால் சக்திவேல் தவழ்ந்தபடி அவசர சிகிச்சை கட்டிடத்தை நோக்கி சென்றார்.
இதனைப் பார்த்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டீன் ரேவதி பாலன், உடனடியாக அந்த நோயாளியை மீட்டு வார்டில் சேர்க்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள், முதியவரை மீட்டு சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளி மழையில் நனைந்தபடி தவழ்ந்து செல்வதும், அவரை மீட்டு ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜெயக்குமாரின் நண்பர்கள், உறவினர்கள், என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
- வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள், ஊர் மக்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் சிக்கியுள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை போலீசார் கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். கடந்த 4-ந்தேதி ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை கரைசுத்துபுதூர் சுற்றுவட்டாரத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் பட்டியலை எடுத்துள்ளனர். அதன் மூலம் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் ஒரு திருப்பம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜெயக்குமார் வழக்கில் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களிடம் ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் எழுத்து பூர்வமாக வாங்கிய தகவல்களை ஆராயும் பணி நடக்கிறது.
1,500 பக்கங்கள் கொண்டதாக ஒப்படைக்கப்பட்ட அந்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான குழுவினர் கவனமாக படித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது.
- விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப் படுகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
நெல்லையில் மீண்டும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படை யெடுத்து வருகின்றனர். பாபநாசம் அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணை, பணகுடி குத்திரபாஞ்சான் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் குளித்து மகிழ குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர்.
மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டம் விரைவில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அதற்கு முன்பே மாஞ்சோலையை பார்வையிட்டு வந்துவிட வேண்டும் என்று அங்கும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கால்நடைகள் பகல் நேரங்களில் குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீருக்குள் தஞ்சம் அடைவதை காண முடிகிறது.
இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் மூலக்கரைப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடுமையான வறட்சியை நோக்கி சென்ற பிரதான அணைகளின் நீர்மட்டம் கோடை மழை காரணமாக வெகுவாக உயர்ந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ள தோடு, விவசாய பணிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழை நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பெருமளவு கை கொடுத்து உள்ளது என்றே கூறலாம்.
கடந்த ஆண்டு இதே நாளில் பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 29.75 அடி மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 74.20 அடியில் உள்ளது.
118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு 62.15 அடியாக இருந்த நிலையில் தற்போது 83.53 அடியாக உள்ளது. மேலும் சேர்வலாறு அணை நீர்மட்டம் இந்த ஆண்டு இன்று 90 அடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 48.75 அடி மட்டுமே நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாபநாசம் அணை நீர்மட்டம் 2 மடங்கும், சேர்வலாறு அணை நீர் இருப்பு ஒரு மடங்கும் உயர்ந்து இருக் கிறது.
இதற்கிடையே நீர் போதிய அளவு இருப்பதால் அணைகளில் இருந்து முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் விவசா யிகள் தற்போது நெல் நடவு பணிகளை தொடங்கி உள்ளனர். பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், அரியநாயகிபுரம், கல்லூர், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் நெல் நடவுக்காக பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாகவே மழை இல்லை. அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றா லத்தில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதால் நீண்ட வரிசையில் நின்று குளிக்கின்றனர்.
கோடை மழையால் பாவூர்சத்திரம், செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பால் விவசாயிகள் கத்தரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், மல்லி இலைகளை பயிரிட்டுள்ளனர். சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் மானாவாரி பயிர்களான உளுந்து, சோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்று திடீர் சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. காடல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 13 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. எட்டயபுரம், விளாத்திகுளத்திலும் லேசான சாரல் அடித்தது.
- 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது.
- இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த காவல் கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவை யான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ். 4 என்ஜின் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
அதன்படி 3-வது கட்ட மாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப் பட்டு நேற்று சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார். திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டனர்.
சோதனை வெற்றிகரமாக நடந்ததால் இஸ்ரோ குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கட்டமாக 725 வினாடிகளும், 2-வது கட்டமாக 350 வினாடிகளும் வெற்றிகரமாக சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது.
- அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான்.
நெல்லை:
தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் கூறியதாவது:-
தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது. இது அவர்களது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால் எல்லாம் மாறும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்க மாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டி உள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.
தற்போது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது என்றும் மாறாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அரசியலுக்கு அனைவரும் வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார்.
- வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயக்குமார் உடல் கிடந்த இடம், அவரது தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள், பணிப்பெண்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடதப்பட்டுள்ளது.
அவர் கடந்த 4-ந் தேதி பிணமாக மீட்கப்படுவதற்கு முன்பு வரை கடைசியாக 3 நாட்களுக்கு எங்கெல்லாம் சென்றார்? அவருடன் அதிக நேரம் இருந்தவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயக்குமார் அரசு மற்றும் தனியார் வங்கிகள் என 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவற்றை ஆய்வு செய்ய வங்கிகளை நாடுவதற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு, ஜெயக்குமார் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு சென்று கடைசி 2 ஆண்டுகள் அவரது வங்கி கணக்கில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்கின்றனர். அவரது வங்கி கணக்கிற்கு யாரெல்லாம் பணம் செலுத்தி உள்ளனர்? ஜெயக்குமார் யாருக்கெல்லாம் பணம் அனுப்பி உள்ளார்? என்பது குறித்த ஆய்வை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் மற்றொரு குழுவினர் திசையன்விளை பஜார் பகுதியில் உள்ள விடுதிகளில் கடைசி 2 மாதங்கள் வந்து தங்கி இருந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் ஓரிரு நாட்களில், அவர் கடிதத்தில் எழுதி வைத்திருந்த அவர்களுக்கு சம்மன் அனுப்பவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
- சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங் (வயது 60).
இவர் கடந்த 4-ந்தேதி அவரது வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சம்பவம் நடந்த தோட்டம், ஜெயக்குமார் வீடு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சாட்சியங்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே சிலரிடம் விசாரித்து இருந்தாலும், அவர்கள் நெல்லை மாவட்ட போலீசார் விசாரித்தபோது கூறிய தகவல்களும், தற்போது சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கூறிய தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மீண்டும் அந்த நபர்களிடம் விசாரணையை நடத்துகின்றனர்.
மேலும் பல்வேறு சாட்சியங்களிடமும் இன்று நேரில் திசையன்விளைக்கு சென்றும், சிலரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.
மேலும் கரைசுத்து புதூரில் ஜெயக்குமார் உடலை முதலில் பார்த்த தோட்ட தொழிலாளி, அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், அவரது கார் டிரைவர், இறப்பதற்கு முன்பாக கடைசி 3 நாட்கள் அதிக நேரம் அவருடன் இருந்தவர்கள், அந்த நாட்களில் ஜெயக்குமார் தனது செல்போனில் அதிக நேரம் பேசியவர்களிடமும் இன்று விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.






