என் மலர்
திருநெல்வேலி
- 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
- கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
நெல்லை:
பாளை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது. 6-ந்தேதி தமிழக முறைப்படியும், 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், மகா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
- 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- விபத்து தொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரித்து வருகிறார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை மையவாடி அருகே உள்ள ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 பேர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர்.
நெல்லையை அடுத்த ராமையன்பட்டியை தாண்டி சங்கரன்கோவில் சாலையில் சிவாஜி நகர் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஆடு ஒன்று ஓடியது. இதனால் ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை டிரைவர் திருப்பி உள்ளார். அவர் பிரேக் போட்ட போது, திடீரனெ கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
உடனே வேனில் பயணித்த குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அலறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வேன் அருகே ஓடிச் சென்றனர்.
விபத்தில் சிக்கிய வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் அந்த வழியாக பொதுமக்கள் உள்ளே சென்று வேனுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் பெரும்பாலானோர் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினர். சுமார் 13 பேருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அதிகமான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அழைத்துச்செல்லப்பட்ட மும்தாஜ்(வயது 35), அப்துல்லா(30), ஷேக் மீரான்(8), அமீர் பாத்து, பீர் மைதீன்(59), மைதீன் அப்துல் காதர், அப்துல் காதர்(35), முகமது மைதீன்(3), முகமது அஜ்மல்(2), பீவி(85), முகமது ரியாஸ்(2), அருணாச்சலம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆடு மீது மோதாமல் இருப்பதற்காக வேனை திருப்பிய போது நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரித்து வருகிறார்.
- பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது.
- 16 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. இந்த அணைகளில் நேற்று மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 941 கனஅடியாக குறைந்தது. அணைகளில் இருந்து 354 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 43.60 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. மாநகரிலும் காலையில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அங்கு 1.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ள ளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 20 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 21 அடியாக உள்ளது.
இதேபோல் ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் தலா 1 அடி உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை சற்று குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தணிந்தது.
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்விழ்ச்சி அமைந்துள்ளது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்தியது.
வெயிலின் தாக்கத்தால் தலையணை தண்ணீர் இன்றி வறண்டது. மரம், செடி,கொடிகளும் மழை இன்றி காய்ந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனைதொடர்ந்து வறட்சியின் காரணமாக மூடப்பட்ட தலையணை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 16 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
- இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் வார்டுகளில் பின்தங்கி உள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காகவும், வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினை அன்றைய தினம் நிலுவையின்றி செலுத்திடவும் வாய்ப்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்
அதன்படி மேலப்பாளையம் மண்டலம் வார்டு 47 மற்றும் 49 ஆகிய பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக நேரூஜி வீதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று சிறப்பு வரிவசூல் முகாம் நடந்தது.
இம்முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டண வரிவிதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கினர்.
இதேபோல் நெல்லை மண்டலம் வார்டு 22-ல் பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு வரியை நிலுவையின்றி செலுத்தினர். இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மண்டல சேர்மன் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 11 பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம் வார்டு எண் 32 பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது.
- நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
- இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதையொட்டி கிறிஸ்தவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை களக்காடு சேகரகுரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் பச்சை நிற ஆடை அணிந்து அணிவகுத்து சென்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த முழக்கங்கள் எழுப்பியவாறு கைகளில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சென்றனர்.
மரக்கன்றுகள் நடப்பட்டது
இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து களக்காடு அண்ணா சாலையில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. முன்னதாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை வந்தடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. சேகர குரு சந்திரகுமார் நன்றி கூறினார். ஸ்தோத்திர பண்டிகை நாளை (3-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.
- பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
- தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் விதமாக மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், நிதியுதவி உள்ளிட்ட ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட் ராமன், மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பாளையங்கால்வாய் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாளையங்கால்வாய் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .
மேலும் பொது இடங்களிலும், கால்வாய் களிலும் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
- நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தெற்கு வள்ளியூர் அருகே உள்ள மேல கடம்பன்குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் பாலசூர்யா (வயது 20) என்பதும், தப்பி ஓடியது நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற செல்லையா மகன் அருள்நம்பி (23) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலசூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருள்நம்பியை தேடி வருகின்றனர்.
- நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.
- மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் இருந்து மாட்டு சாணம் உரம் ஏற்றி கொண்டு ஒரு மினிலாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மினி லாரியை கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம் அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்த ஜெனிஸ்குமார் (வயது 43) ஓட்டி சென்றார்.
மினிலாரியில் தொழிலாளர்கள் ஆலங்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (60), கணபதிபுரம் அருகே உள்ள புதுமடத்தையை சேர்ந்த மணிகண்டன் (50) ஆகியோர் இருந்தனர். நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளம் நான்கு வழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் மினிலாரியை முந்த முயற்சி செய்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கார் மினிலாரியில் மோதியது. இதில் மினிலாரி தடுப்புசுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதுபோல மினிலாரியில் மோதிய கார் நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் ஜெனிஸ்குமார், தொழிலாளர்கள் பால கிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற நெல்லை நரசிங்கநல்லூரை சேர்ந்த யுகேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து ஜெனிஸ்குமார் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையிலும், பால கிருஷ்ணன் ராஜாக்கள் மங்களம் தனியார் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டனர். இது குறித்து மூன்றடைப்பு போலீ சில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கோவில்பத்து ஜோதி நகரை சேர்ந்த இளங்கோ (63) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
- ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ துவரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 50). தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த கணபதி மனைவி ராணி(60) என்பவரிடம் குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதற்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வட்டி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் வட்டி பணத்தில் ரூ.3,500 மட்டும் கொடுத்த ஜெயக்குமார் மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராணி, அவரது கணவர் கணபதி(70), மகள் சுமதி(40), மருமகள் முத்துலெட்சுமி(38) ஆகிய 4 பேரும் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் அன்று இரவில் விஷம் குடித்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் விசாரணை நடத்தி ராணி, கணபதி உள்பட 4 பேர் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் தலைமறைவாக உள்ள ராணி, கடந்த ஜூலை மாதம் தெற்கு மீனவன்குளம் பகுதியை சேர்ந்த இசக்கி என்பரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர். காங்கிரஸ் பிரமுகரான அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது மருமகள் முத்துலெட்சுமி கள்ளிகுளம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
- காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. இதில் தென்மாவட்டங்களில் வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே பருவமழை பெய்தது. இதனால் குளங்கள் வறண்டன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பருவமழை குறைவால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்து வந்தது. மேலும் கோடையை மிஞ்சும் வகையில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது.
நெல்லையில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம் 48.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 5 அடி உயர்ந்து 54.20 அடியை எட்டியது.
இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 22 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இதனால் 156 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி அதிகரித்து 72.93 அடியானது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 3,184 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 354 கனஅடி நீர் வினாடிக்கு திறந்துவிடப்படுகிறது.
மணிமுத்தாறு அணை பகுதியிலும் 33 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனால் 118 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 41.30 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சுமார் 2 அடி அதிகரித்து 43.10 அடியானது. கொடுமுடியாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பையில் 21 மில்லிமீட்டரும், களக்காட்டில் 13.6 மில்லி மீட்டரும், கன்னடியனின் 15 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையை சுற்றியுள்ள எஸ்டேட்டுகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலையில் கனமழை கொட்டியது.
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நேற்று மதியத்திற்கு பிறகு இரவு வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 16 சென்டிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி பகுதியில் 14.7 சென்டி மீட்டரும், மாஞ்சோலை எஸ்டேட்டில் 86 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 61 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, வீரவ நல்லூர், முக்கூடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 10.8 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
கடனா, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டம் தலா 1 அடியும், குண்டாறு அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அடவி நயினார் அணை நீர்மட்டம் 81 அடியாகவும், ராமநதி அணை 53 அடியாகவும், கடனா அணை 47.50 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது.
மாவட்டத்தில் செங்கோட்டையில் சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதிக பட்சமாக சிவகிரியில் 28 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 22 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும் மெயின் அருவிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. பின்னர் மழை நின்றதும், ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் அந்த அருவியில் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று காலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களில் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.






