என் மலர்tooltip icon

    தேனி

    • தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்ததால் கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 25-ந்தேதி முதல் 7 நாட்கள் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. கடந்த மாதம் 26-ந் தேதி 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    தொடர்ந்து நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 69.19 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1510 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசன தேவைக்காக 500 கன அடியும், குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தம் 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5622 மி.கன அடியாக உள்ளது.

    கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு வைகை அணை மீண்டும் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வைகை அணை வரலாற்றில் தற்போது 35-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    வழக்கமாக அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 69 அடியை கடந்த பிறகும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் திறக்கப்படவில்லை.

    71 அடி வரை உயர்த்தப்பட்டு பின்னர் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும் அணை பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அணைக்கு வரும் நீர் வரத்து அளவை கணக்கிட்டு வருகின்றனர்.

    5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரமும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்துக்கு தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் எந்த நேரமும் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வப்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 136 அடிக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 133.65 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு நீர் வரத்து 974.50 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1867 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5551 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
    • மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதில் உறுதியாக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

    பெரியகுளம்:

    தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்த நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக விடுத்த அறிவிப்புக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

     

    இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் மாநாட்டின்போது எடுத்து வைக்க வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதில் உறுதியாக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

    இதற்கு அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், காலம் கடந்து எடுத்த முடிவு என்ற போதும் பா.ஜ.க.வில் இருந்து விலகியது ஓ.பி.எஸ். உடைய துணிச்சலான முடிவு. இத்தனை ஆண்டுகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றவுடன் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அவர் விலகிய பிறகும் ஒரு சிலர் சமரசம் பேச முயன்று வருகின்றனர்.

    ஆனால் தனது நிலைப்பாட்டில் ஓ.பி.எஸ். உறுதியாக உள்ளார். அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து வெளியிடுவார். நகர்மன்ற தலைவர் பதவி தொடங்கி எம்.எல்.ஏ., அமைச்சர், 3 முறை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அவை முன்னவர், கட்சியின் பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வழங்கியுள்ளார். இனிமேல் அவருக்கு புதிய பதவி கிடைக்கப்போவதில்லை. எனவே பதவிக்காக யாருடனும் சேர வேண்டிய அவசியமும் இல்லை.

    வருகிற தேர்தலில் ஓ.பி.எஸ். எடுக்கும் முடிவு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததை வைத்து தி.மு.க.வில் இணையப்போவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். அவர் ஒரு போதும் தி.மு.க.வில் இணைய மாட்டார் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

    விஜய் கட்சியுடன் இணைந்து வருகிற தேர்தலை சந்திக்க பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது குறித்தும் அவர் ஆலோசித்து முடிவு செய்வார் என்றனர்.

    • தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

    அணையில் இருந்து மதுரை மாவட்ட பாசனத்துக்காக கடந்த 14 நாட்களாக 800 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டது. இன்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த வாரம் அணையின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.

    நீர்மின் நிலையம் வழியாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் இன்று அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 1594 கன அடி தண்ணீர் வருகிறது.

    69 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது. இந்த முறை வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு பின்னர் வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து வருகின்றனர்.

    தற்போது தேனி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு 1053 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1862 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 134.15 அடியாக உள்ளது. நீர் இருப்பு 5667 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மற்ற அணைகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    • மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும்.
    • ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அடவுபாறையில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி இன்று அவர் அடவுப்பாறையில் கால்நடைகளுடன் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என ஏராளமானோர் சென்றனர்.



    ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறுகையில்,

    மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    எனவே ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும். இலங்கையில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல. தமிழகத்தில் மது பழக்கத்தை பழக்கி சாமானிய மக்களை கொல்வதும் இனப்படுகொலைதான். வெளி மாநிலத்தவர்களுக்கு இங்கு அனுமதி கொடுத்தால் விரைவில் அவர்கள் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மலையேறி மாடு மேய்க்கும் சீமானின் போராட்டத்தை தடுத்து வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வனத்துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விதித்த தடையை மீறி சீமான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

    • அணையில் நீர்வரத்து மற்றும் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.45 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினாலும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1578 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5355 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    ஏற்கனவே 66 அடியை எட்டிய போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 68.50 அடியில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும். இதனால் அணையில் நீர்வரத்து மற்றும் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.45 அடியாக உள்ளது.1398 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    பெரியாறு அணை 10.4, தேக்கடி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.
    • கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 1256 நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு முகாம் வீதம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சுழற்சி முறையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 வகையான துறை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்.பி. சினேகாபிரியா, தங்கத்தமிழச்செல்வன் எம்.பி., மகாராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர். வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.

    அதன் பிறகு பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் முன்னிலையில் மகாராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. அவரிடம் இருந்து அடையாள அட்டையை பறித்து தான் வழங்க முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிக் கொண்டதால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதைக் கேட்காமல் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறி கூட்டத்தை புறக்கணித்தார். அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் விழாவில் தனக்கு வழங்கப்படவில்லை என தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. தெரிவித்து வெளியேறினார். இதனால் முகாமிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பேசிக்கொண்ட வீடியோ சமூக வளைதலங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை.
    • 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்பத்திவிட்டு முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிவரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    142 அடியாக நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரளா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. மேலும் தமிழக பகுதியில் விவசாய நிலங்களில் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை கேரளா தடுத்து வருவதாகவும், அணைக்கு செல்லும் வல்லக்கடவு வனப்பகுதியை சீரமைக்காமல் உள்ளதாகவும், பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளது.

    விசாரணையின்போது அணையில் பராமரிப்பு பணி செய்யவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்த மரங்களை வெட்டுவதற்கும் வல்லக்கடவு பகுதியில் இருந்து அணைக்கு தளவாடப் பொருட்களை கொண்டு வரும் வனப்பகுதி பாதையை சீரமைக்கவும் சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு சாதகமாக இருந்த போதிலும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க விடாமல் கேரளா பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் என்பதால் 4 வாரத்திற்குள் அனுமதியை பெறும் வகையில் தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,

    தமிழக அரசு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது ஏற்கனவே கூறப்பட்டதுதான். தற்போது 4 வார காலகெடு வைத்துள்ளனர். கண்டிப்பாக இதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும். 2014ம் ஆண்டு மிகவும் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் முழுமையாக அமல்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கே அனுமதி பெற முடியாத நிலையில் மரத்தை வெட்ட எப்படி அனுமதி கிடைக்கும். இருந்த போதிலும் தமிழக அரசு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் வகுப்பறையில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் வகுப்புக்கு வந்தாலே மாணவிகள் அச்சமடையும் நிலை ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிகாரிகள் வகுப்பறை மற்றும் குடியிருப்புகளில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் தெரிவிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர்.

    இதனையடுத்து மாணவிகள் ஆங்கில ஆசிரியரின் அத்துமீறல் குறித்து 1098 என்ற எண்ணுக்கு புகார் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வந்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்ததால் ஆங்கில ஆசிரியர் ரஞ்சித்குமார் மீது ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே விவசாய கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.

    இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில் உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    நோட்டீஸ் வந்தபிறகுதான் மணிகண்டன் தனது வங்கி கணக்கை சோதனை செய்த போது பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன் இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பின்னர் அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதே போன்று தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது.
    • சுருளி அருவியில் இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்கிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    பருவமழை குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த வாரம் 60 அடியில் இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.27 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2046 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    அணையில் 4916 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பட்டாவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டும்போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறந்து விடப்படும்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்தும் 5516 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் 137 அடி வரை ரூல் கர்வ் விதிமுறைப்படி தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அணையில் 5703 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை 30.8, தேக்கடி 26.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளான மேகமலை, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிபாறை, காப்புக்காடு பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடி அமாவாசையன்று நீர்வரத்து சீரானதால் வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் அருவியில் நீராடினர். ஆனால் அன்று மதியத்துக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து பொதுமக்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.

    இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

    • தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    கூடலூர்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    கடந்த 2 நாட்களாக தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று அணைக்கு நீர்வரத்து 4574 கன அடியாக இருந்தது. நீர்மட்டம் 131.90 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து 4711 கன அடியாக அதிகரித்துள்ளது.

    நீர் திறப்பு 1867 கன அடியாக உள்ளது. நீர்மட்டம் மேலும் உயர்ந்து 132.95 அடியாக உள்ளது. ரூல்கர்வ் விதிப்பதி இம்மாதம் 30-ந் தேதி வரை 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியாறு அணையில் 28, தேக்கடியில் 21 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாகவும், வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும் நீர்மட்டம் இன்று காலை 65.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1794 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4818 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதும், வைகை அணை கரையோரம் உள்ள 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்படும். 68 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.

    தொடர் மழையால் சுருளி, மேகமலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்பாகவே தொடங்கி பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்தது.

    ஆனால் ரூல் கர்வ் முறைப்படி அதற்கு மேல் தண்ணீர் தேக்க முடியாது என்பதால் உபரி நீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது. அதன் பின்னர் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த 1 வாரமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தால் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து 2131 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 4001 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலை மேலும் நீர்வரத்து உயர்ந்து 4574 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. நேற்று நீர்மட்டம் 130.90 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 131.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் மற்றும் போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 1865 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ரூல் கர்வ் விதிப்படி ஜூலை 31 வரை அணயில் 137 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் முழு அளவில் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 1837 கன அடி. நீர் திறப்பு 869 கன அடி. இருப்பு 4738 மி.கன அடியாக உள்ளது. 66 கன அடியை எட்டியதும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதால் அணையின் நீர்மட்டத்தை நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×