என் மலர்
சிவகங்கை
மானாமதுரை அருகே மேலநெட்டூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆலம்பசேரி, காக்குடி, அரியனூர், மணக்குடி, நாடார் குடியிருப்பு, ஆலங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் திடீெரன்று காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல்உபாதைகளால் அவதிப்படும் போது சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தான் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கிராம மக்கள் பயன்பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினிகிளினிக் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி மாநிலம் முழுவதும் மருத்துவ வசதி இ்ல்லாத கிராமங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த அம்மா மினி கிளினிக் மேல நெட்டூர் கிராமத்திலும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் அங்குள்ள சுகாதார நிலையத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்மா மினி கிளினிக் அமைப்பதற்கான பணியை நிறுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார் கூறும் போது, எங்கள் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறக்க இருந்த நேரத்தில் திடீெரன்று அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். அரசியல் காரணங்களால் அம்மா மினிகிளினிக்கை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாக தெரிகிறது. இது குறித்து கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளேன். புகாரை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். அவர் விரைந்து எங்கள் கிராமத்தில் அம்மா மினிகிளினிக்கை தொடங்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.
இது தொடர்பாக சிவகங்கை சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதாமணியிடம் கேட்ட போது, அம்மா மினி கிளினிக் தொடங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்தது உண்மை தான். இது போல் 4 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். ஒரு இடத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்க 5 இடங்களில் ஆய்வு செய்வோம். அது போல் தான் இந்த கிராமத்திலும் ஆய்வு செய்து உள்ளோம். கலெக்டர் தான் எந்த கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டும் என முடிவு எடுப்பார் என்றார்.
இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும் போது, தற்போது கிராம மக்களின் உடல்நலனை பேணும் வகையில் அம்மா மினிகிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது தான். இதனால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும். எங்கள் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் கிராமப்புற காவலர் திட்டம், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் டி.ஐ.ஜி. மயில்வாகனன் கிராமப்புற போலீஸ்காரர் அழகு பூபதியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-
போலீசாரும் பொதுமக்களும் இணைந்தால் தான் குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுக்கவும், குற்றவாளிகளை பிடித்து தண்டனை பெற்றுத் தரவும் முடியும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் போலீசாருடன் இணைந்து குற்ற சம்பவத்தின் பின்னணியின் தகவல்களை தெரிவிக்க வேண்டும்். கிராமப்புற மக்களிடம் தொடர்பில் இருப்பதற்காகவே போலீஸ்காரர் அழகு பூபதியை நியமிக்கப்பட்டு உள்ளார். உங்கள் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பார்.
குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களின் விவரங்களை ரகசியம் காத்து குற்றத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்த திட்டம் கோட்டையூர் கிராமம் அதன் கிளை கிராமங்களான சிறுபாலை, புலியூர், தெற்கு கீரனூர், தரிகொம்பன், வாணி ஆகிய பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து கிராம மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாரதிராஜன், ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கோட்டையூர் கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் சைமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனிதா சைமன், அமுதா பெரியசாமி, நாகேஸ்வரன், திருப்பதி, பாம்கோ முன்னாள் பொது மேலாளர் தோமையார், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்,
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்நாதன் என்கிற மைனர் மணி (வயது 29). இவரது நண்பர் வினோத் கண்ணன் (28). இவர் மானாமதுரை அருகே உள்ள உடையகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் 2 பேர் மீதும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. நேற்று இரவு 9 மணியளவில் 2 பேரும் மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர் .
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களை கண்டதும் மைனர் மணியும் வினோத் கண்ணனும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கும்பல் கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பேரை நோக்கிப் பாய்ந்தது.
இதனால் மைனர் மணியும், வினோத்கண்ணனும் தப்பி ஓடினர். ஆனால் மர்ம கும்பல் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த்னர். அதற்குள் பகுதி மக்கள் அங்கு திரண்டதால் கொலை கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மைனர் மணி, வினோத் கண்ணன் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மைனர் மணி பரிதாபமாக இறந்தார். வினோத் கண்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை நடந்திருப்பது மானாமதுரையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
போலீஸ் துணை சூப்பி ரண்டு சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
மைனர் மணி, வினோத் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் பழிக்குப்பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் யார் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோத் கண்ணனிடம் விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.
ஆனால் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






