என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையில் லேப்டாப் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட சென்றால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2017-2018-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்று கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு சிவகங்கை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டம் நடைபெறும்போது கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலெக்டர் அலுவலக்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் அவரது கார் வரும் போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அவரது காரை முற்றுகையிட முயன்றனர்.

    இதைதொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் அதற்குள் அமைச்சரின் கார் சென்று விட்டது .

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரி அமுதா அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
    தேவகோட்டை அருகேசுவர் இடிந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே அனுக்கானேந்தல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 60).விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.தொடர் மழையால் வீட்டின் பக்கவாட்டு மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவேகம்பத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தேவகோட்டை தாசில்தார் சேகர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
    மேலநெட்டூரில் அம்மா மினிகிளினிக் தொடங்குவதை அதிகாரிகள் திடீரென்று நிறுத்தினர். இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே மேலநெட்டூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆலம்பசேரி, காக்குடி, அரியனூர், மணக்குடி, நாடார் குடியிருப்பு, ஆலங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் திடீெரன்று காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல்உபாதைகளால் அவதிப்படும் போது சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தான் சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிராம மக்கள் பயன்பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினிகிளினிக் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி மாநிலம் முழுவதும் மருத்துவ வசதி இ்ல்லாத கிராமங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த அம்மா மினி கிளினிக் மேல நெட்டூர் கிராமத்திலும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் அங்குள்ள சுகாதார நிலையத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்மா மினி கிளினிக் அமைப்பதற்கான பணியை நிறுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார் கூறும் போது, எங்கள் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறக்க இருந்த நேரத்தில் திடீெரன்று அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். அரசியல் காரணங்களால் அம்மா மினிகிளினிக்கை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாக தெரிகிறது. இது குறித்து கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளேன். புகாரை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். அவர் விரைந்து எங்கள் கிராமத்தில் அம்மா மினிகிளினிக்கை தொடங்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.

    இது தொடர்பாக சிவகங்கை சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதாமணியிடம் கேட்ட போது, அம்மா மினி கிளினிக் தொடங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்தது உண்மை தான். இது போல் 4 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். ஒரு இடத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்க 5 இடங்களில் ஆய்வு செய்வோம். அது போல் தான் இந்த கிராமத்திலும் ஆய்வு செய்து உள்ளோம். கலெக்டர் தான் எந்த கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டும் என முடிவு எடுப்பார் என்றார்.

    இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும் போது, தற்போது கிராம மக்களின் உடல்நலனை பேணும் வகையில் அம்மா மினிகிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது தான். இதனால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும். எங்கள் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    போலீசாருடன் பொதுமக்கள் இணைந்தால் தான் குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும் என்று போலீஸ் டி.ஐ.ஜி. கூறினார்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் கிராமப்புற காவலர் திட்டம், பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் டி.ஐ.ஜி. மயில்வாகனன் கிராமப்புற போலீஸ்காரர் அழகு பூபதியை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    போலீசாரும் பொதுமக்களும் இணைந்தால் தான் குற்றச் சம்பவங்களை முழுமையாக தடுக்கவும், குற்றவாளிகளை பிடித்து தண்டனை பெற்றுத் தரவும் முடியும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் போலீசாருடன் இணைந்து குற்ற சம்பவத்தின் பின்னணியின் தகவல்களை தெரிவிக்க வேண்டும்். கிராமப்புற மக்களிடம் தொடர்பில் இருப்பதற்காகவே போலீஸ்காரர் அழகு பூபதியை நியமிக்கப்பட்டு உள்ளார். உங்கள் பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பார்.

    குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களின் விவரங்களை ரகசியம் காத்து குற்றத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இந்த திட்டம் கோட்டையூர் கிராமம் அதன் கிளை கிராமங்களான சிறுபாலை, புலியூர், தெற்கு கீரனூர், தரிகொம்பன், வாணி ஆகிய பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து கிராம மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாரதிராஜன், ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், கோட்டையூர் கூட்டுறவு வேளாண்மை வங்கி தலைவர் சைமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனிதா சைமன், அமுதா பெரியசாமி, நாகேஸ்வரன், திருப்பதி, பாம்கோ முன்னாள் பொது மேலாளர் தோமையார், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்,
    கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்ததை கண்டித்து குன்றக்குடி-மதுரை சாலையில் விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் கண்மாய்கள், குளங்கள் நீர் நிரம்பி காணப்படுகின்றன. அந்த வகையில் காரைக்குடி அருகே சின்ன குன்றக்குடி பகுதியில் உள்ள கண்மாய் அதற்கான கொள்ளளவை எட்டிய நிலையில் நிரம்பியது. கண்மாயின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மடையை திறந்து விட்டனர்.

    இதற்கிடையே அந்த கண்மாயை சுற்றி உள்ள விவசாயிகள், தண்ணீர் திறக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். யாரோ சிலர் தூண்டுதலின் பேரில் கண்மாய் நிரம்புவதற்குள் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டதாக கூறி நேற்று காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குன்றக்குடி பஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    பின்னர் குன்றக்குடி-மதுரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஜெயந்தி, காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கண்மாய் நிரம்புவதற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பாசன பகுதி மிகவும் பாதிப்படையும். எனவே கண்மாய் நிரம்பும் வரை தண்ணீர் திறக்க கூடாது என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். கண்மாய் நிரம்பி கரை உடைந்து தண்ணீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக தான் மடை திறந்து விடப்பட்டது என அதிகாரிகள் கூறினார்கள்.

    இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே கொரோனா காலத்தில் அனுமதியின்றி திரண்டு மறியலில் ஈடுபட்ட சுப்பு தலைமையிலான 49 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    மானாமதுரையில் நேற்று இரவு வாலிபரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்நாதன் என்கிற மைனர் மணி (வயது 29). இவரது நண்பர் வினோத் கண்ணன் (28). இவர் மானாமதுரை அருகே உள்ள உடையகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

    இவர்கள் 2 பேர் மீதும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. நேற்று இரவு 9 மணியளவில் 2 பேரும் மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர் .

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களை கண்டதும் மைனர் மணியும் வினோத் கண்ணனும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கும்பல் கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 2 பேரை நோக்கிப் பாய்ந்தது.

    இதனால் மைனர் மணியும், வினோத்கண்ணனும் தப்பி ஓடினர். ஆனால் மர்ம கும்பல் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த்னர். அதற்குள் பகுதி மக்கள் அங்கு திரண்டதால் கொலை கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த மைனர் மணி, வினோத் கண்ணன் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மைனர் மணி பரிதாபமாக இறந்தார். வினோத் கண்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை நடந்திருப்பது மானாமதுரையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    போலீஸ் துணை சூப்பி ரண்டு சுந்தரமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

    மைனர் மணி, வினோத் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் பழிக்குப்பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் யார் என்ற விவரம் தெரியவில்லை.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வினோத் கண்ணனிடம் விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர்.

    ஆனால் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி காரைக்குடியில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தரமானதாகவும், விரைந்து முடிக்கக்கோரியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    காரைக்குடி நகராட்சி சார்பில் வளர்ச்சி திட்ட பணிக்காக ரூ.112.53கோடி நிதியை பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ஒதுக்கப்பட்டு இந்த பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரை காரைக்குடி நகர் பகுதியில் இந்த பணிகள் நடைபெற்று முடிந்த 39 இடங்களில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளை இணைக்கும் குழாய் அமைத்து அதன் மீது கான்கிரீட் தொட்டி அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் புதிதாக போடப்பட்ட சாலைகளும், கான்கிரீட் அமைப்புகளும் தரமற்ற நிலையில் உள்ளதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    எனவே இந்த சாலையை அமைத்த ஒப்பந்தக்காரர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக கவனிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பாதா சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி காரைக்குடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு பொங்கல் விழா முடிந்ததும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பி.எல்.ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தி.க, ம.தி.மு.க கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெரியாறுபாசனகால்வாய்களுக்கு தண்ணீர் வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன கால்வாய்களில் முறையாக தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

    இதையொட்டி நேற்று காலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளுடன் திரண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் மற்றும் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் முற்றுகையை கைவிட்டு விட்டு கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆா்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆா்.தேவர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜெயசிம்மன், திரைப்பட இயக்குனர் களஞ்சியம், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார்கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சந்திரன், விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர் பாலசிங்கம், முத்துராமலிங்கம், தி.மு.க.மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்டகலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்களிடம் கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகர் வளர்ச்சி பணிக்காக பாதாள சாக்கடை திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.125 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி காரைக்குடி நகரில் உள்ள பெரும்பாலான இடத்தில் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் நடைபெற்று வருகிறது. தற்போது காரைக்குடி செஞ்சை, வைத்திலிங்கபுரம் ஆகிய பகுதியில் நடைபெற்ற நிலையிலும், காரைக்குடி வாட்டர் டேங்க் பகுதியில் இருந்து கோட்டையூர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் காரைக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகவும், ஒரு சில இடங்களில் பெரும் பள்ளமாக கிடப்பதால் தினந்தோறும் காரைக்குடி பகுதி மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து விரைவில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், பலனில்லை. இந்நிலையில் காரைக்குடி 34-வார்டிற்கு உட்பட்ட வைத்திலிங்கபுரம், பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த பகுதியில் புதிதாக சாலைகள் போடாததால் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாகவும், சில இடங்களில் சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சேதமான சாலைகள் பல்வேறு இடங்களில் பெரும் பள்ளமாக இருப்பதால் இந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் கீழே விழுந்து தினந்தோறும் காயங்களுடன் செல்லும் நிலையும் உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெகநாதன் கூறும்போது, காரைக்குடி வைத்திலிங்கபுரம் பகுதியில் சுமார் 300 வீடுகளுக்கும் மேல் உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இப்பகுதி மக்களை ஒன்று திரண்டி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
    தேவகோட்டை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள எழுவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 43). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்க சென்றார். அங்கு குளித்து கொண்டு இருக்கும் போது அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    இதுகுறித்து ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடியில் உணவு சமைக்க தாமதம் ஆனதால் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு கணவர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இதில் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    இளையான்குடி:

    இளையான்குடி நகர் பகுதியில் உள்ள மல்லிபட்டினத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). இவர் கட்டிட வேலையில் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (29).

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கண்ணன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி, மதிய உணவு தயாரித்து கொண்டு இருந்தார். கொஞ்ச நேரம் பொறுங்கள். உணவு ரெடியாகி விடும் என முத்துலட்சுமி கூறி இருக்கிறார்.

    வேலைக்கு போக வேண்டும் அவசரத்தில், ஏன் சீக்கிரம் சமையல் செய்ய மாட்டாயா? என கண்ணன், தனது மனைவியை திட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து நான் ஓட்டலில் சாப்பிட்டு கொள்கிறேன் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

    கணவர் தன்னை திட்டி விட்டு சென்றதால் விரக்தி அடைந்த முத்துலட்சுமி வீட்டில் தன்னுடைய சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்துலட்சுமியின் தந்தை சேகர் கொடுத்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரைக்குடி அருகே ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    குன்றக்குடி போலீஸ்சரகம் ஆத்தங்குடி- முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 45). இவர் கோனாபட்டு பள்ளிக்கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டில் வசித்து வருகிறார். முத்துப்பட்டணத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 

    இது குறித்து தகவல் அறிந்த அவர் அங்கு சென்று பார்த்த போது பீரோக்கள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் நகை திருடியவர்களை தேடி வருகிறார்கள்.

    ×