என் மலர்tooltip icon

    சேலம்

    • பொங்கல் பண்டிகையைெயாட்டி சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனையானது.
    • வழக்கமாக மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.5 கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த முறை ரூ.15 கோடி வரை விற்பனையாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும் அதிக அளவில் மதுபாட்டில்களும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று கடை விடுமுறை என்பதால் அதற்கு முன்பாக 2 நாட்கள் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. இதில் 14-ந் தேதி ரூ.5.5 கோடிக்கும், 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று ரூ.10.25 கோடிக்கும் என ரூ.15 .25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    வழக்கமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை படைத்தார்.
    • டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    சேலம்:

    கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐஎம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.

    மேலும் தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் , வருகிற ஜூலை மாதம் சீனா செங்குடுவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.

    இவருக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதிகளில் பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன.
    • சேலம் மாவட்டம் அறுநூற்று மலை பகுதியில் புலிகுத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பச்சைமலை என மலைகள் சூழ்ந்த மாவட்டமாகும். இதில் கல்வராயன் மலையின் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ளது அருநூற்றுமலை. அருநூற்று மலையில் ஆலடிப்பட்டி, பெலாப்பாடி, சிறுமலை ஆகியவை உள்பட 8 கிராமங்கள் உள்ளன.

    பெரும்பாலான மலைக்கிராமங்களில் பழங்குடி மக்களே வசித்து வருகின்றனர்.பழமை மாறாமல் சில வழக்கங்களை இன்றளவும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.ஆங்காங்கே சில ஊர்களில் ஊருக்குப் பொதுவான இடங்களில் வழிபாட்டில் எண்ணற்ற பழங்கால நடுகற்களும், புதிய கற்கால கருவிகளும் உள்ளன.

    பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாய் கல்திட்டைகள், கற்குவை முதலான ஈமச்சின்னங்களும் காணப்படுகின்றன. இந்த மலையில் சில இடங்களில் அடர்ந்த காடுகள் சில இடங்களில் காணப்படுகின்றன.அரியவகை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் புகலிடமாய் கல்வராயன் மலை உள்ளது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இப்பகுதிகளில் கரடி, மான், சிறுத்தை, புலி போன்றவை அதிகளவில் காணப்பட்டுள்ளன என்று ஆங்கிலேயர் கால ஆவணமான "இந்தியன் கெசட்டியர்" சான்று கூறுகிறது.

    இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த ஏ.டி.மோகன், பெரியசாமி, ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், முத்தையன் , நித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த நடுகற்களைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை தெரிவித்தனர்.

    இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

    16,17-ம் நூற்றாண்டுகளில் இங்கே விலங்கு- மனித மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.குறிப்பாக புலிகள் மக்களைத் தாக்க முயலும்போது, புலிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வீரத்துடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு இங்கே நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன.

    வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் மரபு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த வகையில் அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி கிராமங்களில் 16-ம் நூற்றாண்டு நடுகல்லொன்று காணப்படுகிறது. இதில் வீரனுக்கு வலது புறத்தில் நின்று கொண்டிருக்கும் ஆக்ரோஷமான புலி வீரனைத் தாக்குவது போலவும், அவ்வீரன் தனது இரு கைகளால் ஈட்டியைக் கொண்டு புலியைக் குத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலையில் அழகிய கொண்டையும், காதணி மற்றும் சரபலி, ஆரம், காப்பு மற்றும் காலில் வீரக்கழல் போன்ற அணிகலன்களை அணிந்துள்ளான்.

    இதனை மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.

    மேலும் பெலாப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு நடுகல் காணப்படுகிறது. இந்நடுகல்லில் வீரனுக்கு இடதுபுறத்தில் புலி ஒன்று வீரனை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது.வீரன் தனது இடது கையில் கட்டாரியை கொண்டு புலியின் வாயில் குத்துவது போன்றும், வலது கையில் ஈட்டியை கொண்டு புலியின் வயிற்றில் குத்துவது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த வீரனின் தலையில் அழகிய கொண்டை கட்டப்பட்டுள்ளது. காதணிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஆகும்.

    பொங்கல் பண்டிகையின் கரிநாளின்போது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் எண்ணற்ற இன்னும் பல வரலாற்றுச் சின்னங்களும், அவை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
    • கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5.1 கோடி மட்டுமே அபராதம் வசூலானது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிரமாக டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர், முறைகேடாக பயணிப்போர், லக்கேஜ் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 69 சதவீதமாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

    மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • ஓடங்காடு விநாயகர் கோவில் அருகே பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து மொபட்டில் விழுந்தது.
    • இதனால் மெபட்டியில் பிரேக் பிடிக்க முயன்றபோது முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் கடந்த 14- ந்தேதி தனது உறவினருக்கு சொந்தமான மொபட்டை எடுத்துக் கொண்டு சொந்த வேலையாக கோணகப்பாடி சென்றபோது ஓடங்காடு விநாயகர் கோவில் அருகே பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து மொபட்டில் விழுந்தது. இதனால் மெபட்டியில் பிரேக் பிடிக்க முயன்றபோது முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அக்கம்பக்கத்தினர் கீழே விழுந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கவேல் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தங்கவேலின் மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.
    • அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பனைமடல் சவுக்கு காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல்.

    இவரது மகன் கோவிந்தன் (வயது 32). இவர் நேற்று மதியம் பனைமடல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நள்ளிரவு ஒரு மணி அளவில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்–பட்டணத்தை அடுத்த பைத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.

    இவரது மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் நேற்று ஏற்காடு மலை பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொம்மியம்பட்டி ஊராட்சி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்தும் விவசாய நிலங்களை மேம்படுத்தவும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
    • சிகரம் நண்பர் குழு பவுண்டேஷன் சார்பாக சிறப்பாக விவசாயம் செய்து வந்த 5 விவசாயிகளுக்கு அரிவாள்,மண்வெட்டி, பால் கேன், களை வெட்டி உபகரணங்களை வழங்கினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்தும் விவசாய நிலங்களை மேம்படுத்தவும் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிகரம் நண்பர் குழு பவுண்டேஷன் சார்பாக சிறப்பாக விவசாயம் செய்து வந்த 5 விவசாயிகளுக்கு அரிவாள்,மண்வெட்டி, பால் கேன், களை வெட்டி உபகரணங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிகரம் நண்பர் குழு செயலாளர் சிவகுமார் செய்திருந்தார். இதில் தலைமை ஆசிரியர் சக்தி சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுக்களும் இயங்கி வருகிறது.
    • அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்களுடன் கூடிய பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும் இயங்கி வருகிறது.

    இதில், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் இயக்கம் நிறுத்தப்பட்டு, அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதன் காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகா வாட்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. பழைய அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுக்களும் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    • மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,018 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை சற்று அதிகரித்து விநாடிக்கு 1,100 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து காவிரியில் 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 110.19 அடியாக இருந்தால் மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 109.51 அடியானது. இனிவரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    • பொங்கல் பண்டிகை ஒட்டி அதிக அளவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மண்டலத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய 18 பேர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஒட்டி அதிக அளவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மண்டலத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய 18 பேர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று மாலை வரை 50 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்தது. கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வராத நிலையில், அதில் அதிக ஒலி எழுப்பியது, கண் கூசும் அளவில் முகப்பு விளக்குகளை எரியவிட்டது உள்ளிட்ட குறைகளை கண்டறிந்து ரூ.11/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    வரும் 16-ந் தேதி வரை வாகன சோதனை நீடிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×