என் மலர்
நீலகிரி
- குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
- குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.
சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
ஊட்டி அருகே கல்லக்கொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளாகத்தில் சிறிது நேரம் சுற்றி வந்தது.
பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிய சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை தனது வாயில் கவ்வி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி வெளியே சென்று விட்டது.
இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளது.
எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
- மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
ஊட்டி:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.
ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.
27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
- ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், யானைகள் வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கடந்த 2008-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018-ம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி 'சீல்' வைக்க உத்தரவிட்டது. அதன்படி 38 விடுதிகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
ஆனால் யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 'சீல்' வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து, தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும், அவற்றை இடிக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. விசாரணை குழுவின் உத்தரவுப்படி, மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை, அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்றி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
- குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருந்தது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்கிறது.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றும் மழை நீடித்தது.
காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. மழைக்கு சில இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இன்று அதிகாலை குன்னூரில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் எம்.ஆர்.சி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், மரங்கள் மற்றும் மண் திட்டுகள் இருக்கும் பகுதிகளில் நிற்கவோ, வாகனங்களை நிறுத்தவோ வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
- சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
ஊட்டி:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (16-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். இதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். மேற்கண்ட ரெயில்கள் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் 2-வது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும்.
மேலும் ஊட்டி-கேத்தி இடையே இருமார்க்கங்களிலும் 3 சுற்றுகள் ஜாய்ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக முதல் சுற்று சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வரும்.
2-வது சுற்று ரெயில் 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி வரும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வரும்.
3-வது சுற்று சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி வரும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வரும். மேற்கண்ட சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார்.
- மா.சுப்பிரமணியன் பாராட்டி கேடயம் வழங்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூரரை சேர்ந்த நர்சு சபீனா என்பவர் வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவின.
இந்தநிலையில் அரசு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீரப்பெண்மணி சபீனாவின் செயலை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் சபீனாவின் செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டது குறித்து பெண் நர்சு சபீனா கூறியதாவது:-
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட போது மீட்புக்குழுவினர் ஆண் செவிலியர்களைதான் முதலில் தேடி வந்தனர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில் நானே முன்வந்து மீட்புக்குழுவினருடன் புறப்பட்டு சென்றேன்.
மேலும் சூரல்மலை பகுதியில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். இதற்கு அக்கரையில் உள்ளவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
பெண் செவிலியரை ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் தயக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போதே அக்கரையில் படுகாயம் அடைந்து தவிப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது.
மற்றபடி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்கு அச்சமாக தெரியவில்லை. மேலும் ஜிப்லைனில் செல்லும்போது காலுக்கு அடியில் ஓடிய வெள்ளம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கையில் வைத்திருக்கும் மருந்துப்பெட்டி கீழே விழுந்து விடுமோ என்று மட்டும்தான் எனக்கு பயமாக இருந்தது.
முதலில் ஜிப்லைன் மூலமாக நானும், பிறகு மருத்துவ ஊழியர்கள் உட்பட 3 பேரும் சென்றோம். அங்கிருந்தவர்களில் பலருக்கு காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சி இருந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது.
- நாளை முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் ஏழு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.
கல்லாறு முதல் ஹில்குரோவ் வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் உதகை- மேட்டுப்பாளையம் மலை ரெயில் நாளை முதல் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வகையில் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இந்த மலை ரெயில் அதிக அளவில் விரும்பி பயணம் மேற்கொள்வார்கள்.
- கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்று உள்ளன.
- மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு தான் மேம்படுத்த வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி இளம்படுகர் சங்க கட்டிடத்தில் நீலகிரி முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மாஸ்டர் மாதன் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டு மாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் திருப்பூரில் வருகிற 11-ந்தேதி மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க உள்ளோம். தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு தான் மேம்படுத்த வேண்டும். ஆனால் விவசாயிகளுக்காக ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கும் நிதிகள் முறையாக மக்களை சென்றடையவில்லை. அரசு அதிகாரிகளே போலி கணக்குகள் மூலம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பணத்தை மீண்டும் திரும்ப பெறும் வகையில் மத்தியஅரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து உள்ளது என்பதற்கு உதாரணம் காவல்நிலையம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சுதான். சட்டத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. நடிகர் கவுண்டமணி சொல்வதுபோல அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கூறுவது போல சட்டத்துறை அமைச்சர் செயல்படுகிறார்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்று உள்ளன. 1991-ம்ஆண்டுமுதல் 34 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் பொறுப்பில் உள்ளேன். ஆனால் நான் இதுவரை கூட்டணி குறித்து பதில் சொன்னது இல்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வதும், யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்ற அதிகாரமும் பா.ஜ.க.வின் மேலிட தலைவர்களுக்கு தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கவுன்சிலர் சுசீலா போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
- சுசீலா, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரசபையில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 22 பேரும், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-6, சுயேச்சை-1 என கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகரசபை தலைவராக 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக ஷீலா கேத்தரின் பதவிவகித்து வந்தார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து நகரசபை தலைவர் பதவியை நிரப்புவதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நகரசபை தலைவர் பதவிக்கு 16-வது வார்டு கவுன்சிலர் சுசீலா போட்டியிடுவார் என தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுசீலா, நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து வாழ்த்து பெற்றார். தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சுசீலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டார். இன்று காலை நகரசபை தலைவர் தேர்தல் ஆணையாளர் சசிகலா தலைமையில் நடந்தது. தலைவர் தேர்தலில் போட்டியிட சுசீலா வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சுசீலா, நகரசபை தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுசீலாவிடம் ஆணையாளர் வழங்கினார். நகரசபை தலைவர் சுசீலாவின் கணவர் முருகேசன், குன்னூர் நகர தி.மு.க. துணை செயலாளராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
- பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறை பயன்படுத்த உள்ள பேரிடர் மீட்புக்கருவிகள் மற்றும் உபகரணங்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், தேவாலா மற்றும் குந்தா ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டு தயார்நிலையில் உள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர பல்வேறு துறைகளை சேர்ந்த 500 பேர் அடங்கிய 42 குழுவினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு போல நீலகிரி மாவட்டத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூகவலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சமோ, பீதியோ அடைய வேண்டாம்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அபாயகர பகுதிகளை புவியியல்துறையை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர்.
பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் பொதுமக்கள் அருகிலுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ளலாம். மேலும் பருவமழை பாதிப்புகள் குறித்து 1077 தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடுவட்டம் பேரூ ராட்சியில் மிகவும் அபாயகரமான இந்திரா நகர் மற்றும் டி.ஆர்.பஜார் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர், நடுவட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்பு களையும் ஆய்வு செய்தார்.
- ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தல்.
- மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு.
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார்.
போலியான செய்திகாளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இணைய தளத்தில் தகவல் பரவிய நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
- கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மிதமான மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்ததால், பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவர்கள், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
கூடலுார், முதுமலை, நடுவட்டம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழைக்கு ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், தவளை மலைஅருகே, மண் சரிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
இதனால், ஊட்டி-கூடலூர் மற்றும் கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வனப்பகுதி என்பதால், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள், பொக்லைன் வாயிலாக மண்ணை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது. சூறாவளி காற்றுக்கு குன்னூரில் உள்ள டிம்பர் டாப்ஸ் செல்லும் நடைபாதையில் மரங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன.
இதனால் அந்த வழியாக செல்வதற்கு மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகரட்டி, மேலும், குன்னக்கம்பை, கோட்டக்கல் பகுதிகளில் மரங்களும், கேத்தி, மணியபுரம் பகுதிகளில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.
வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
மரங்கள் முறிந்து விழுந்ததாலும், விடிய, விடிய கனமழை பெய்ததாலும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றன.
தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.






