என் மலர்
நீலகிரி
- சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.
- முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அடுத்துள்ளது சப்பந்தோடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முகமது(வயது54).
இவருக்கு வீட்டிற்கு பின்புறம் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான பாக்குமரங்களை வளர்த்து பராமரித்து வந்தார்.
இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறி 2 காட்டு யானைகள் சப்பந்தோடு கிராமத்திற்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள், முகமதுவின் பாக்கு தோட்டத்திற்குள் புகுந்தது.
அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது. வெளியில் ஏதோ சத்தம் வருவதை கேட்டதும் தூங்கி கொண்டிருந்த முகமது எழுந்து விட்டார்.
பின்னர் வீட்டிற்கு வெளியில் வந்து டார்ச்லைட் அடித்து என்னவென்று பார்த்தார். அப்போது தோட்டத்திற்குள் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
அதற்குள் அங்கு நின்றிருந்த 2 காட்டு யானைகளில் ஒன்று முகமதுவை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அச்சம் அடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை துரத்தி வந்து, முகமதுவை தாக்கி தூக்கி வீசியது.
இதில் பலத்த காயம் அடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.
அப்போது அங்கு காட்டு யானைகள் நின்றிருந்தன. பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டியதும் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. இதையடுத்து அவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது முகமது உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் முகமதுவின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானையிடம் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரியும், இங்கு சுற்றி திரியும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தியும் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உடலை எடுக்க விடாமல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் வந்து யானையிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தால், தமிழக-கேரள எல்லையின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கருஞ்சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் மிளிதேன் பகுதியில் கடந்த 2 நாட்களாக கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.
குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக அந்த கருஞ்சிறுத்தை நடமாடுகிறது. சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து பின்பு வெளியே செல்லும் காட்சிகளும், சாலையில் அமர்ந்து நோட்டமிடும் காட்சிகளும் காமிராவில் பதிவாகி தற்போது அவை வலைதளங்களில் பரவி வருகின்றன.
கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் மிளிதேன் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் மாலை நேரங்களில் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்ப முடியவில்லை. குழந்தைகளை வெளியில் அனுப்பினால் சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.
எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- அருவங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சட்டன் எஸ்டேட் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 54) நேற்று இரவு குன்னூரில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சின்ன கரும்பாலம் சதீஷ் (19), கவுதம் (19) ஆகிய 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு நேற்று மாலை ஆபிரகாம் (வயது 70) என்பவர் மனைவியுடன் காரை ஓட்டிவந்தார்.
அப்போது பாய்ஸ் கம்பெனி அருகே வாகனம் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.
இதில் காரில் இருந்த ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி நஜானா (66) ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து கணவன்-மனைவிக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அருவங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோவை செல்லும் சாலையில் ஒரு பெரிய கரடி ரோட்டில் நடந்து சென்றது.
- நீலகிரி போக்குவரத்து சாலைகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார குடியிருப்பு பகுதிகள் மட்டுமின்றி சாலைகளிலும் நடமாடி வருகின்றன.
ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவை செல்லும் சாலையில் ஒரு பெரிய கரடி ரோட்டில் நடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள் செல்போனில் பதிவுசெய்து வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில், யானைகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நடந்து சென்றதால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இது மிகவும் குறுகிய சாலை என்பதால் வாகனங்கள் ஒலி எழுப்பினாலும் யானைகள் சாலையை விட்டு வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குமிங்குமாக உலாவந்தன.
சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகுதான் வாகனஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுடன் தங்களின் வாகனத்தை இயக்கி கோவை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
நீலகிரி போக்குவரத்து சாலைகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்து உள்ளது. அவை சாலையில் பல மணி நேரம் நிற்பதால் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் டீசல், பெட்ரோல் விரயமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே நீலகிரி செல்லும் நெடுஞ் சாலைப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, ரோட்டுக்கு வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
- இந்தியாவில் 150 வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் உள்ளன.
- நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் குறிஞ்சி மலா்கள், தற்போது அதிகளவில் பூக்கத் தொடங்கி உள்ளன. ' ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா' தாவரவியல் பெயா் கொண்ட இத்தகைய மலர்களில் ஏறக்குறைய 200 வகைகள் உண்டு.
இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் 150 வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட குறிஞ்சி மலர் வகைகள் தற்போது நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் மட்டுமே பூத்து குலுங்கி வருகின்றன.
மேலும் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலர்ச்செடிகள் வரை குறிஞ்சியில் ஏராளமான வகைகள் உண்டு.
அவற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் 30 முதல் 60 செ.மீ. உயரமுடைய நீலக்குறிஞ்சி மலர்கள் தனித்துவமாக கருதப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகே எப்பநாடு, பிக்கமந்து, கொரனூா், எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
மலைச்சரிவுகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிச்சி மலர் செடிகள் உள்ளன. ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகள் தற்போது பூத்து குலுங்க தொடங்கி உள்ளன.
பச்சைப்பசேல் காடுகளில் நீல நிறத்தில் பூத்து குலுங்கு நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகளை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்த்து வியப்புடன் ரசித்து செல்கின்றனர். அவர்கள் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி செடிகளுக்கு முன்பாக புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் நீலகிரி மலைத்தொடரில் லட்சக்கணக்கில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளதால், அந்த பகுதிகளுக்கு தேனீக்கள் மற்றும் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
- ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.
- குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் மைதானத்தில் தேசிய சிலம்ப பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி 78 நிமிடங்கள் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனை நிகழ்த்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வெலிங்டன் கண்டோன் மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் லோட்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து சுமார் 1200 மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு 78 நிமிடங்கள் சிலம்பம் சுழற்றி சாதனை நிகழ்த்தினர்.
அப்போது வீரர்-வீராங்கனைகள் கண்ணை கட்டியும், பானைகள் மீது நின்றும் சிலம்பம் சுழற்றியது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும், மாற்றுத்திறனாளிகளும், பயிற்சி ஆசிரியர்களும் விடாமல் சிலம்பம் சுழற்றி ராயல்புக் உலக சாதனையில் இடம்பிடித்தனர்.
குன்னூர் சிலம்ப சாதனை நிகழ்ச்சியில் பரத நாட்டியம், கராத்தே, கேரம் போர்டு, ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி குன்னூரில் இருந்து ஊட்டி வரை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் மலை ரெயில்களில் குடும்பத்துடன் பயணித்து வழியோரம் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளித்து செல்கின்றனர்.
மேலும் கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
இதனால் மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
- இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும்.
- இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு மற்றும் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து, ரெயில் தண்டவாளத்தை மண் மூடியது.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்ததால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை ஊட்டி மலை ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் முடிந்ததாலும், 23 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
23 நாட்களுக்கு பிறகு இன்று ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் சேவை தொடங்கியது.
- கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பென்னட் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா(வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி யாஸ்பின்(47). இவர்களுக்கு இம்ரான்(27), முக்தார்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இம்ரான், ஊட்டி வண்டிச்சோலை பகுதியை சேர்ந்த அப்துல் சமது-நிலாபர் நிஷா தம்பதியின் மகளான ஆஷிகா பர்வீன்(22) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஆஷிகா பர்வீன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது உடல், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் காபியில் விஷம் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீன் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார், இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் வாங்குவதற்காக ஆஷிகா பர்வீனை அவரது பெற்றோரிடம் இருந்து ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதை அவரது பெற்றோரால் கொடுக்க முடியவில்லை.
இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக ஊட்டியில் உள்ள ஒரு நகை கடையில் நகைக்கு பாலீஸ் போட பயன்படுத்தும் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து கொடுத்து ஆஷிகா பர்வீனை கொலை செய்து உள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
இதையடுத்து இம்ரான், யாஸ்பின், முக்தார் ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
- சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது.
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-ம் போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டனர்.
கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளது.
இந்தநிலையில் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் நீலகிரி பூண்டு உச்சபட்சமாக ரூ.400-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 400 முதல் 300 ரூபாய் கொள்முதல் செய்யப்பட்டது.
சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது. இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்க ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருவதால் நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது.
- வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
ஊட்டி:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வனத்தையொட்டிய கிராமங்களில் யானைகள் புகுந்து ரேசன் கடைகளை உடைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன், உணவு பொருட்கள் சேதம் அடைவதால் அதற்கான தொகையை ஊழியர்கள் ஈடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனால் வனப்பகுதிகளையொட்டி உள்ள ரேசன் கடைகளில் பணிபுரிவதற்கு ஊழியர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை ஆகிய இடங்களில் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது.
மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் ரேசன் கடை உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரேசன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை காட்டு யானை தூக்கி வெளியே வீசியுள்ளது.
இதில் கடையின் கதவுகள் உள்பட பல்வேறு பொருட்களும் சேதமாகின. இதனால் அருகே உள்ள கட்டிடத்தில் பொருட்களை மாற்றி வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன.
காட்டு யானை சேதப்படுத்திய ரேசன் கடை கட்டிடம் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை சீரமைக்கப்பட்ட ரேசன் கடையை மீண்டும் சேதப்படுத்தி ஷட்டரை உடைத்தது.
இதையடுத்து கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் அறிவுரைப்படி மசினகுடி ரேசன் கடைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரேசன் கடையை சுற்றிலும் சூரிய மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் கூறியதாவது:-
மசினகுடி ரேசன் கடையை பாதுகாக்க சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலை, இரும்பு கேட்ட, இரும்பு ஷட்டர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ரேசன் கடைகளை யானைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதேபோல் வனப்பகுதியையொட்டி உள்ள அனைத்து ரேசன் கடைகளையும் பாதுகாக்க இந்த நடைமுறை ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருகிறது.
- வாகனஓட்டிகள் கரடியை வீடியோ பதிவு செய்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவாரங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கமாகி விட்டது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களில் கைகாட்டி-மஞ்சூர் சாலை வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது பெங்கால் மட்டம்-கேரிகண்டி சாலையில் ஒரு கரடி சாலையோரம் நடந்துசென்றது.
தொடர்ந்து அவ்வழியே சென்ற வாகனஓட்டிகள் அந்த கரடியை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.
இதனை பார்த்த கரடி "நான் சும்மா தானே போய்கிட்டு இருக்கேன், என்னை ஏன்டா தொந்தரவு பண்றீங்க" என்பதுபோல் கையெடுத்து கும்பிட்ட காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

குன்னூர் கிளண்டல் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வாசு என்பவரின் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் 2 கரடிகள் புகுந்தன. பின்னர் அவை சமையல் அறையில் இருந்த சமையல் எண்ணெயை ஆசை தீர குடித்து தீர்த்தன.
அப்போது வாசு தற்செயலாக சமையல் அறைக்கு வந்தார். அங்கு 2 கரடிகள் நிற்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி வீட்டுக்குள் நின்ற கரடிகளை விரட்டினார். இருப்பினும் அந்த கரடிகள் சமையல் அறையில் இருந்த எண்ணை கேனையும் எடுத்துச் சென்றன.






