என் மலர்tooltip icon

    நீலகிரி

    • வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
    • சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு

    ஊட்டி:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

    வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

    மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.

    மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

    மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.

    அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
    • திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.

    முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.

    நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.

    ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.

    ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமாக மவுண்ட்ரோடு பகுதியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    காய்கறி கடை, துணிக்கடை, எலெக்ட்ரிக் பொருட்கள் கடை, பெயிண்ட் என என பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இங்கு கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணியளவில், வழக்கம் போல வியாபாரிகள் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைகளை அடைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    சிறிது நேரத்தில் துணிக்கடையில் பற்றிய தீ அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. அந்த கடைகளிலும் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    தீ விபத்து ஏற்பட்டதை பார்த்ததும், அங்கு இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    அவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    உடனடியாக குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் வாகனங்களில் வேகமாக வந்து, மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து ஊட்டி, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. ஓரளவு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தபோது, அங்குள்ள பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டி.எஸ்.பி. ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவை தாண்டி மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், மார்க்கெட்டில் உள்ள துணி, பெயிண்ட், மளிகை கடை என 15-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் எரிந்து தீக்கிரையானது.

    இன்று காலையும் அதிகளவு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு துறையினர் அங்கேயே முகாமிட்டு அதனை கண்காணித்து வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் பூட்டப்பட்டுள்ளதால் மார்க்கெட்டிற்கு வந்த சரக்கு லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றது.

    இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

    • ஊட்டியில் 700 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி.
    • பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைகிறதா? மாவட்டங்களில் நடந்து வரும் திட்டப்பணிகள் சரியாக நடக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகளையும் வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் ஏப்ரல் முதல் வாரம் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொள்கிறார். ஏப்ரல் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அவர் நீலகிரி மாவட்டத்தில் முகாமிட்டு ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளார்.

    அப்போது ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார்.

    இதையொட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்து வரும் இறுதிக்கட்ட பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டும், ஏற்படுத்தப்பட்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் ரூ.143.69 கோடி செலவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை யினரும் இணைந்து நிலச்சரிவு, மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே இக்கட்டுமான பணிகளை சிறப்பாக கட்டி முடித்துள்ளனர்.

    இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலை பிரதேசம் என்றால் அது ஊட்டி என்று தான் சொல்ல வேண்டும்.

    மேலும் இந்த மருத்துவ மனையின் சிறப்பம்சம் என்னவென்றால் பழங்குடியினருக்கு தனி வார்டு ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பழங்குடியினருக்கென தனி வார்டு ஒன்று, ஆண்களுக்கு 20 படுக்கைகள், பெண்களுக்கு 20 படுக்கைகள் மற்றும் மகப்பேறுக்கென்று 10 படுக்கைகள் என மொத்தம் 50 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்மருத்து வமனையை பொறுத்தவரை எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கு களுடனும் அமைக்கப்பட்டு தற்போது திறக்கும் தருவாயில் உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5 மற்றும் 6-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ந்தேதி அன்று ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் 17 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், எமரால்டு அரசு மருத்துவமனையில் ரூ.8.60 கோடி செலவில் தங்கும் அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், தடுப்புச்சுவர், கழிவுநீர் சுத்திகரிப்பான் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூடுதலாக பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    • ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    ஊட்டி:

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏப்ரல் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள், விவசாயிகள், ஆட்டோ டிரைவர்கள் என பல்வேறு சங்கங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு பிறகு அனைத்து சங்கங்களின் கூட்டு குழுவினர் கூறியதாவது:-

    இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல், நீலகிரி மாவட்டத்துக்கு வார நாட்களில் 6 ஆயிரம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

    ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி நீலகிரி மாவட்டம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டமும், ஏப்ரல் 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.
    • இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கென தனி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

    இதில் தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ள மஞ்சக்கல் மந்து பகுதியில் தோடர் பழங்குடி மக்களின் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை 9 ஆண்டுகளுக்கு பின் வேயும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்து கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சி போல் கூரைவேயும் நிகழ்ச்சி இவர்களுக்கு முக்கியமானதாகும்.

    இதற்காக கோரக்குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கிடைக்கும் மூங்கில், பிரம்பு மற்றும் அவில் எனப்படும் புல் ஆகியவற்றை கொண்டு வந்தனர். தொடர்ந்து தங்களின் பாரம்பரிய உடை அணிந்து கூரை வேய்ந்தனர். அதன்பின் நேற்று மாலை கோவில் முன்பு அவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சியில மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கோவில் பணிகளை ஆண்கள் மட்டுமே மேற்கொள்வார்கள். எனவே ஒருமாதமாக ஆண்கள் விரதம் மேற்கொண்டனர்.

    • ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
    • காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம்.

    அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.

    முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    • சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் சாய் பல்லவி பங்கேற்றார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
    • மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    கோவை நகரில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது.

    கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான பானங்களை வாங்கி குடித்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் சற்று மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து சாரல் மழை, பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இடியுடன் பெய்த கனமழைக்கு அவினாசி சாலை, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் அதில் மெல்ல ஊர்ந்து சென்றன.

    திடீர் மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று திரும்பியோர் பலர் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. சிலர் மழைக்கு ஆங்காங்கே பாதுகாப்பாக ஒதுங்கி நின்றனர்.

    இதேபோல் உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த திடீர் மழையால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை மாறியது. இரவிலும், அதிகாலையிலும் குளிர் தெரிந்தது. வெப்பணம் தணிந்து குளிர் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    குன்னூர், சேலாஸ், கொலகம்பை, வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, காட்டேரி, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இதன் காரணமாக அங்குள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த மழைக்கு, ஓட்டு பட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் சமுதாயக்கூடம் அருகே தடுப்பு சுவர் இல்லாததால் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள புவனேஸ்வரி மற்றும் சுலோச்சனா ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக ஊட்டியில் கடந்த சில தினங்களாக நிலவிய வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • டிரிம்மருக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் காஜா. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவர் ஆன்லைன் நிறுவனத்தில் ரூ.1,000-க்கு டிரிம்மர் ஆர்டர் செய்தார். இதைதொடர்ந்து நேற்று பார்சல் வீட்டிற்கு வந்தது.

    அதை அவர் வாங்கிய போது, அட்டை பெட்டி மிகவும் கனமாக இருந்ததால் சந்தேகம் அடைந்து பார்சலை டெலிவரி செய்தவர் முன்னிலையில் பிரித்து பார்த்தார். அப்போது உள்ளே டிரிம்மருக்கு பதிலாக ஜல்லி கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து காஜா, டெலிவரி செய்த இளைஞரிடம் கேட்டபோது, பதில் கூறாமல் சென்றதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • சுமார் 80 நாட்களில் ஸ்டிராபெர்ரி பழம் விளைய தொடங்கும்.
    • கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    குன்னூர்:

    தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். இங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    அதிலும் குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரி விவசாயம் களைகட்டி காணப்படுகிறது. இதனை ஒரு முறை நடவு செய்தால், 10 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் புனேவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள விவசாய நிலங்களில் ஓடுகள் பதித்து ஸ்ட்ராபெர்ரி விதைகளை நடுவதற்கு சரியான படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.

    பின்னர் அந்த இடம் பிளாஸ்டிக் தாள்களால் மூடப்படுகிறது. தொடர்ந்து தயாரிக்கப்பட்ட படுக்கைகளுக்கு அடியில் சிறிய குழாய்களை வைத்து நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது.

    தயாரிக்கப்பட்ட படுக்கைகளில் நாற்றுகளை நடவு செய்தவுடன், தேவையைப் பொருத்து தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. மற்ற பயிர்களை போலவே, ஸ்ட்ராபெரி செடிகளும் பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க அவற்றுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.

    சுமார் 80 நாட்களில் ஸ்டிராபெர்ரி பழம் விளைய தொடங்கும். இந்த பழத்துக்கு நுகர்வோர் மத்தியில் அதிக தேவை இருப்பதால் விவசாயிகள் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்யும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் இங்கு காய்கறிகளுக்கு மாற்றாக ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை தொடங்கி உள்ளோம். மற்ற பயிர்களை விட ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் ஏற்படும் செலவுகள் அதிகம். இருந்தாலும் லாபம் மிகவும் அதிகமாக இருப்பதால் நாங்கள் ஸ்ட்ராபெர்ரி விவசாயத்திற்கு மாறினோம். மேலும் மழையில் இருந்து பாதுகாக்க, இந்த செடிகளை மறைத்து வளர்த்து வருகிறோம்.

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பவானி எஸ்டேட், கேத்தி-பாலடா, கொல்லிமலை, சோகத்துறை, காசோலை, கைகாட்டி, காட்டேரி வில்லேஜ், குன்னக்கம்பை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஸ்ட்ராபெர்ரி பயிரிடப்பட்டு உள்ளது.

    கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு அதிக கிராக்கி ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.320 விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். ஆனால் கடைகளில் 200 கிராம் கொண்ட டப்பா ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்.

    இந்தப் பழத்தில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து உள்ளது. தோலின் இழந்த நீர்ச்சத்தை ஈடுசெய்யவும், மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.

    ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்த பழம் என்பதால் புற்றுநோய் செல்களை தடுக்கவும் பயன்படும். விட்டமின்-கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற சத்துக்கள் இருப்பதால் உணவுப்பாதை மற்றும் ரத்த செல்களை சீராக்கும். தைராய்டு உள்ளிட்ட நாளமில்லா சுரப்பிகள் சிறப்பாக இயங்கவும், நுண்ணிய ரத்த குழாய்கள் அடைப்பின்றி செல்லவும் பயன்படும். மேலும் இந்த பழங்களில் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. 5 பழங்கள் 250 மில்லி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரி சத்து கிடைக்கும். மேலும் சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றில் நறுமண பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊட்டி, குன்னூர் நகர பகுதிகளில் மொத்தம் 7 ரெயில் நிலையங்கள் உள்ளது.
    • இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம்.

    ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.

    காதலர்கள் தங்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் ரெயில் நிலையத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டி ரெயில் நிறுத்தங்களில் ஒன்றான இது சேலம் ரெயில்வே கோட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வே மண்டலத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

    ஊட்டி, குன்னூர் நகர பகுதிகளில் மொத்தம் 7 ரெயில் நிலையங்கள் உள்ளது. 7 ரெயில் நிலையங்கள் இருந்தாலும் அதில் வித்தியாசமானதாக உள்ளது லவ்டேல் ரெயில் நிலையம்.சுற்றிலும் மரங்கள், மலை முகடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகுடனும், பறவைகளின் கீச் கீச் சத்தம் என எப்போதும் கண்களுக்கு இனிமையாகவும், அமைதியான சூழ்நிலையில் இந்த ரெயில் நிலையம் காட்சியளிக்கிறது.

    இதுமட்டுமின்றி அனைவரும் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் நிலையத்தின் கட்டிடக்கலை. இந்த ரெயில் நிலையம் 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையம் இன்றும் அப்படியே பழமை மாறாமல் காட்சியளித்து கொண்டிருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. 1854 முதலே இந்த இடம் லவ்டேல் என அழைக்கப்பட்டு வருகிறது. 1916-ம் ஆண்டு ஊட்டியில் உள்ள மிகச் சிறந்த அழகான பகுதியாகவும் இது திகழ்கிறது. 19-ம் நூற்றாண்டின் அழகு எனவும் வர்ணிக்கப்படுகிறது.

    இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திகழும் இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்ற வேண்டும் என பாரம்பரிய நீராவி அறக்கட்டளை(எச்.எஸ்.சி.டி.) கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக எச்.எஸ்.சி.டி நிறுவனர் கே.நடராஜன் கூறியதாவது:-

    காதலர் தினம் என்பது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய நாள் அல்ல. இது நட்புணர்வையும், ரசிப்புத் தன்மையையும் கொண்டாடும் தினமாகவும் உள்ளது.

    இந்த தினத்தை கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக இந்த லவ்டேல் ரெயில் நிலையம் உள்ளது.

    சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதால், இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்ற வேண்டும்.

    அவ்வாறு மாற்றம் செய்து, அனைவரும் அமர்ந்து உணவு அருந்தி கொண்டு பேசும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும். கலாசார நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்தலாம். அதுமட்டுமின்றி, நீலகிரியில் விளையக் கூடிய பொருட்களையும் விற்பனை செய்யும் சூழல் உருவாகும். எனவே தெற்கு ரெயில்வே இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×