என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மை யான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகளுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது, மரங்கள் வெட்டி சாய்ப்பது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

    இதனிடையே இளம்பெண் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பேரில் வழக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி(42)என்பவருக்கு சொந்தமான டிராக்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகள், வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் மீண்டும் இந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம் பகுதிகளை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 79.72 குவிண்டால் எடை கொண்ட 278-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.45-க்கும், சராசரி விலையாக ரூ.80.50-க்கும் என ரூ.5 லட்சத்து 56ஆயிரத்து 737-க்கு விற்பனையானது.

    • நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

    • தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர், சித்ரா, முன்னிலை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர், சித்ரா, முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்து வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)., திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர், வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி. ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    • பாலமுருகனுக்கு ஆவணிமாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆவணிமாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், மற்றும் சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டாரம் கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார். கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று) சித்திரைச்செல்வி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக சான்று பெறுவதற்கான முறைகள், உழவர் தொகுப்பு உருவாக்குதல், இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், ஆகியவற்றை குறித்து விளக்கினார். திருச்சி சிறுகமணி பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் தென்னையில் ஏற்படும் நோய்கள், பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உயிரி உரத்தின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார். கபிலர்மலை வேளாண் உதவி இயக்குநர் ராதாமணி அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதன் பயன்கள் பற்றி விரிவாக விவரித்தார். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நிஷா ஆகியோர் செய்திருந்தனர். 

    • திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
    • குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் பு ரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பாக அன்னை தெரசா நினைவு தினத்தை ஒட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மருத்துவர் மகேஸ்வ ரன், செவிலியர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக அரசு மருத்துவமனையை அடைந்தது. சுமார் 100 விவேகானந்தா செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் கண் இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

    • டிராக்டரின் முன்பக்க 2 டயர்கள் மற்றும் பின்பக்க டயர் ஒன்றும், டிராக்டர் என்ஜினும் எரிந்துள்ளது.
    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    இந்த நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 13-ந்தேதி முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் மர்மநபர்கள் புகுந்து தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீவைத்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார்.

    இந்த சூழலில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. மேலும் பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான சின்னமருதூர் பகுதியில் 3 ஏக்கர் நிலத்தில் நடப்பட்டிருந்த சுமார் 3200 பாக்கு மரங்கள் மர்மநபர்களால் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி (42) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை மர்மநபர்கள் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் டிராக்டரின் முன்பக்க 2 டயர்கள் மற்றும் பின்பக்க டயர் ஒன்றும், டிராக்டர் என்ஜினும் எரிந்துள்ளது.

    இதே போல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

    சம்பவ இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜேடர்பாளையம் பகுதி முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். குணசேகரன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு.
    • ராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

    கோவை:

    மதுரையில் வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடக்கிறது. இது தொடர்பான கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சித்தாபுதூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சனாதனம் கலாசாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. வட நாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.

    அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். ஆனால் அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு விலை பேசி ஒரு தலிபான் போல செயல்பட்டு உள்ளார்.

    உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்று பவர்களுக்கும் தி.மு.க, மற்றும் இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பேசி உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசு தான் காரணம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

    இவரது மனைவி தீபா (43). இவர் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தீபா, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகநாதன் இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

    இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகநாதனிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி நேற்று மதியம் ஜெகநாதன் கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த தீபாவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதை வாங்கிய தீபா தனது மொபட்டிற்குள் பணத்தை வைத்துவிட்டு வந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை கைது செய்தனர்.

    தொடர்ந்து தீபா மொபட்டில் வைத்திருந்த பணத்தை கைப்பற்றியதுடன் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து தீபாவை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நாமக்கல் லஞ்ச ஒப்பு துறை போலீசார் தீபாவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரணை நடத்துகின்றனர்.

    ×