என் மலர்
நாகப்பட்டினம்
- காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணியை முழுமைப்படுத்த வேண்டும்.
- அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி முடிவ டைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் அங்கு சுற்றுச்சுவர், பேவர்பிளாக் நடைபாதை மற்றும் காத்திருப்போர் கூடம் அமைத்து பணியை முழுமை ப்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அங்கு நேரில் ஆய்வு செய்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அப்பணிகள் நடைபெறும் என்றும், விரைவில் அனைத்துப் பணிகளும் முடிந்து ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்தீக்கா, பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரிதாவுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது.
- சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.
காரைக்கால்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்த மான மீன்பிடி விசைப்படகில், கடந்த 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, அறிவரசன், சுரேஷ், விஜய் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அருகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரும் வரை படகில் இருந்த கேன்களை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 7 மீனவர்களும் தத்தளித்தனர்.
பின்னர் படகுகளில் விரைந்து வந்த, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கேன்கள் உதவியோடு நடுக்கடலில் தத்தரித்த 7 மீனவர்களையும் 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.
காரைக்கால் அழைத்து வரப்பட்ட கீச்சாங்குப்பம் மீனவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள், த.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் வரவேற்று நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக 7 மீனவர்களையும் மீட்ட காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களை அவர்கள் பாராட்டினர்.
- வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.
- மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.
ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் .
வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.
நேற்று காலை துவங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் சாகர்கவஜ்ஆபரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
- நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு மதுகடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மது பானங்களை கடத்தி சென்ற காரைக்காலை சேர்ந்த சரவணன் (37), நாகை அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த தாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராய கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,, சாராய வியாபாரிகளுக்கு மது விற்பனையில்ஈடுபடும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பார் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அரசு உதவி நடுநிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தியது.
- முதலாவதாக எழுத்து த்தேர்வு நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயம் அரசு உதவி நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தியது.
போட்டியில் சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து பதிவு செய்த மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக எழுத்து த்தேர்வு நடைபெற்றது.
அதில் வெற்றிபெற்ற 10 மாணவர்கள் முதன்மை வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வடமழை கந்தவிலாஸ் அரசு உதவி நடுநிலைப்பள்ளி, பன்னாள், மருதூர் தெற்கு, ராஜன்கட்ட ளை ஆகிய அரசினர் உயர்நிலைப்பள்ளிகள், தேத்தாக்குடி-தெற்கு அல்நூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் வீதம் 5 மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகப்பட்டினம் மாவட்ட துணைத்தலைவரும், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான சந்தோஷ் காட்சன் மற்றும் வடமழை கந்தவிலாஸ் அரசு உதவி நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார துணைத்தலைவர் மற்றும் பொறுப்பு செயலாளருமான அறிவொளி ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
இதில் வட்டார ஆசிரியர்கள் நந்தினி, செல்வராணி, வீரபாண்டியன், அனிதா மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்படுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார தலைவர் கருப்பம்புலம் சித்திரவேலு செய்திருந்தார்.
- மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்.பி.,க்கள் செல்வராஜ், ராமலிங்கம் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் , தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திட்டக்குழு அமைப்பு ஊரக வளர்ச்சித் துறையின் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்ட குழுவிற்கு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் துணை விதிகள் பிரிவு 241 படி மாவட்ட திட்ட குழுவிற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இருப்பார்கள்.
மாவட்ட திட்டக் குழுவின் பணியானது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களைச் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல், ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாநில அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாதித்த மாவட்ட முழுமைக்குமான வரைவு வளர்ச்சி திட்டம் ஒன்றை தயாரித்தல் மற்றும் ஊரக மற்றும் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் சார்ந்த திட்டமிடுதல் நீர் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உட்பட பொதுவான நலன் பற்றி விவாதித்து ஒருங்கிணைத்து அடிப்படை வசதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்க உதவுதல், மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் கூறுகளை கண்டறிதல் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளை செயலாக்கத்தை கண்காணித்து ஆய்வு செய்தல் ஆகும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் (ஊரகப்பகுதி, நகர்பகுதி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
- நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்:
இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
- சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார்.
பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்
சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்பு மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர் வசந்தா அன்னாசி பழங்களை பரிசாக வழங்கினார்.
பின்னர் அன்னாசி பழத்தின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து எடுத்து கூறப்பட்டன.
- சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
- விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை போலீஸ் சூப்பிரண்ட் நேரில் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு
மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
இதை முன்னிட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடை பெற்றது வருகிறது.
விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து நாகப்பட்டினம் மாவட்டபோலீஸ் சூப்பிரண்ட்ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வருகின்ற 5-ந்தேதி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.
- நாகையில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் உத்தரவின் பேரில், தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஶ்ரீ வழிகாட்டுதலின் அடிப்படையில், தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியைப் தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வடுகநாதன் (பொறுப்பு) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தப்படி கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி தலைஞாயிறின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளியில் நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, நாகராஜன், வினோத், வீரன், விக்னேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்பு புகையிலை தீமை குறித்து சுகாதார ஆய்வாளர் நாகை செல்வம் எடுத்து கூறினார்.
- குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது.
- நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர்.
அதில் சிங்காரவேலவர் தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலில் உள்ள சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.
அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் கண்கொள்ளா காட்சி இங்கே நிகழ்கிறது.
இந்த அற்புத காட்சியை காண தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை மனமுருகி தரிசித்து செல்வார்கள்.
தேவலோகத்தில் உள்ள காமதேனு பசு, தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிட இத்தலத்தில் தவம் செய்து சாபம் நீங்கி அருள் பெற்றதாகவும், பின்னர் தனது பாலினால் திருக்குளம் அமைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
வசிஷ்ட முனிவர் அந்த பாலில் வெண்ணையை எடுத்து சிவலிங்கம் ஆக்கி பூஜை செய்ததாகவும், பூஜை முடிந்து அதை எடுக்க முயன்ற போது பூமியிலேயே சிக்கி சிவலிங்கமாக உருபெற்றதால் இவ்வூருக்கு சிக்கல் என்றும், சாமிக்கு வெண்ணை பிரான் நவநீதேஸ்வரர் என்றும் பெயர் வரக் காரணமாகியது என்பது நம்பிக்கை ஆகும்.
சிவன் மற்றும் பெருமாள் இருவரும் அருகருகே ஒரே ஆலயத்தில் அமைந்து அருள்பாலிப்பது இந்த கோவிலின் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனி சன்னதி, ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டது. ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள், உள்பிரகார மண்டபங்கள், மகா திருமண்டபம் ஆகியவை திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய தயார் நிலையில் உள்ளது.
கோவிலின் வடபுறத்தில் யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 5- ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.
குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.






