என் மலர்
நாகப்பட்டினம்
- நாளை காலை ரெயில் புறப்பட்டு மறுநாள் இரவு வேளாங்கண்ணி சென்றடையும்.
- அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை, செகந்திரபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண். 09047) புறப்பட்டு மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்க ண்ணியில் இருந்து 29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.09048) மறுநாள் மாலை 5.30 மணிக்கு மும்பை வதோதரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.
இதேபோல் செகந்திரா பாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07125) அடுத்த மாதம் ( செப்டம்பர்) 4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு வழிதடத்தில் வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07126) அடுத்த மாதம் 6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.
இதேபோல் செகந்தி ராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.07127) செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி காலை 8 .40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ( வண்டி எண்.07128) அடுத்த மாதம் 10-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்ற டையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
- குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது
- வேளாண் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதீன கல்லூரி விழாவில் பங்கேற்றார்.
2-ம் நாளான நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கொலை, கொள்ளை, திருட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் 3-ம் நாளான இன்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், மத்திய மாநில அரசுகளின் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ஏ.வ.வேலு, பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, மாவட்ட கலெக்டர்கள் ஜானிடாம் வர்க்கீஸ் (நாகை), தீபக்ஜேக்கப் (தஞ்சை), சாருஸ்ரீ (திருவாரூர்), மகாபாரதி (மயிலாடுதுறை) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், துறை சார்ந்த அரசு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள், செய்ய வேண்டிய பணிகள், செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினர்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி மண்டல வாரியாக ஆய்வு நடத்தி வருகிறேன். இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மக்களை தேடி மருத்துவம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள், கனிகள் உற்பத்தி அதிகரிப்பதற்காக வழிமுறைகளை ஆராய வேண்டும்.
இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. அதனை உயர்த்த நடவடிக்கை தேவை. விளைபொருட்களுக்கு உரிய சந்தை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். சந்தை வசதிகளை பெருக்க வேண்டும்.
வேளாண் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேளாண் திட்டங்களோடு இல்லாமல் அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பட்டா மாறுதல், பட்டா திருத்தம் போன்றவற்றிற்காக சான்றிதழ் வழங்குவதில் தாமதம் இருக்க கூடாது.
6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலன் கருதி ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே இந்த குறைகளை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி வீதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது வேதனை அளிக்கிறது. இனி வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் அதிகளவிலான மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டங்களில் நடந்து வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும், மாவட்ட நிர்வாகமும், தலைமை செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.
அரசின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எனவே பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாங்கண்ணிக்கு சென்று மதிய உணவு அருந்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூருக்கு செல்கிறார்.
இன்று இரவில் திருவாரூரில் உள்ள அவரது வீட்டில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுகிழமை) திருவாரூரில் செல்வராஜ் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சிக்கு காரில் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
- சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
- மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழில் ஆகும். இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரைக்கு கிழக்கே சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழியர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது கஞ்சா பொட்டலங்கள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், அவை கடலில் விழுந்து சுமார் 1 மாதம் ஆகி இருக்கலாம் எனவும், கஞ்சா பொட்டலங்களில் பாசி பிடித்துள்ளது எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் முழு மானியத்தில் குழித்தட்டு மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.
- இணையதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.
நாகப்பட்டினம்:
திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக முழு மானியத்தில் குழித்தட்டு, கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.
இதனை பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டு 9715141468 என்ற இைணயதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகையில் தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
- சவரப்ராம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
நாகப்பட்டினம்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சுதார் (வயது 30). இவர் நாகை வெளிப்பாளையம் சிவன் குளம் மேல்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தச்சு வேலை செய்து வருகிறார்.
இவருடன் ராஜஸ்தான் மாநிலம் கீன்வசார் பகுதியை சேர்ந்த மாங்கிலால் என்பவரது மகன் சவரப்ராம் (20) உள்பட 11 பேர், வீட்டில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று சவரப்ராம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
தினேஷ் சுதார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சவரப்ராம் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சவரப்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சவரப்ராம் உறவினர்கள் நாகைக்கு வந்து, உடலை விமான மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றனர்.
நாகையில் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நான் யார் தெரியுமா? என்று கேட்டதற்கு சி.எம். என்று அந்த மாணவி கூறினாள்.
- ஸ்கூல் எப்போது முடியும் என்று கேட்டதற்கு 4 மணிக்கு முடியும் என்று பதில் அளித்தாள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறினார். அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் ஹரி என்று பதில் அளித்தான். கையில் வாட்ச் கட்டி இருக்கிறாய். டயம் பார்க்க தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் வாட்ச் தப்பா போகுது என்றான்.
இடது புறம் இருந்த மாணவியிடம் உன் பெயர் என்ன? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு அந்த மாணவி சுதர்சனா என்று கூறினாள். என்ன படிக்கிறாய் என்றதற்கு 3-ம் வகுப்பு என்றாள்.
தினமும் வீட்டில் காலையில் சாப்பிடுவாயா? பள்ளிக்கு வரும்போது சாப்பிடுவியா? என்று கேட்டதற்கு அந்த மாணவி ஆமாம் என்றார்.
உங்க அப்பா அம்மா பெயர் என்ன? என்ன செய்கிறார்கள்? தம்பி எங்கே என்றார். அதற்கு அவள் பதில் அளித்ததும் சரி சாப்பிடு என்றார்.
முதலில் சுவீட் சாப்பிடு என்றார். தினமும் பள்ளிக்கு வருவியா? என்றும் பேசினார்.
நான் யார் தெரியுமா? என்று கேட்டதற்கு சி.எம். என்று அந்த மாணவி கூறினாள். சி.எம். என்பது பதவி. என் பெயர் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, பதில் சொல்ல தயங்கினாள். உடனே மாணவனிடம் அதே கேள்வியை கேட்டார். அவனும் முதலில் சி.எம். என்று பதில் அளித்தான். அதன் பிறகு ஸ்டாலின் என்று கூறினான்.
பள்ளிக்கு தினமும் வந்து விடுவாயா? சாப்பாடு நன்றாக உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். உடனே அந்த மாணவன் மற்றொரு மாணவனிடம் 'ஐயா சாப்பிடுவதை பார்' என்று கூறினான்.
உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியிடம், நீ எந்த ஊரில் இருக்கிறாய். இந்த ஊர் யாருடைய ஊர் தெரியுமா? எங்க அப்பா பெயர் தெரியுமா? கலைஞர் தெரியுமா? என்று கேட்டார்.
அந்த மாணவி யோசித்தபோது "கலைஞர்தான் என் அப்பா" என்றும் எடுத்துச் சொன்னார்.
ஸ்கூல் எப்போது முடியும் என்று கேட்டதற்கு 4 மணிக்கு முடியும் என்று பதில் அளித்தாள்.
மதியம் லஞ்ச் எங்கே சாப்பிடுவாய் என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். உடனே மாணவன் அணிந்திருந்த வாட்சை பார்த்து வாட்ச் ஓடவில்லை படம் பார்ப்பியா? என்றார். அதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசினான். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அணிந்திருந்த வாட்சை காண்பித்து இதில் என்ன டயம் என்று சொல் என்றார்.
தம்பி என் வாட்சை பார் டயம் என்ன என்று மீண்டும் கேட்டார். இப்போது சொல் டயம் பார்க்க தெரிகிறதா? என்றார். அதற்கு அந்த மாணவன் சொன்ன பதிலை கேட்டு சிரித்தார்.
- சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
- படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து.
நாகை:
நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை நான் சாப்பிட்டு விட்டேன்.
திருக்குவளையில் உதித்த சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. கருணாநிதி படித்த தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் செய்வதில் பெருமை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எனக்கு மன நிறைவை அளித்துள்ளது.
சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குழந்தைகளுக்கு பேபி ரொட்டி திட்டத்தை முதன்முதலில் வழங்கியவர் கருணாநிதி.
அண்ணா பிறந்தநாளாக செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கினால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும். பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
காலை உணவு சாப்பிடாத பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவது கஷ்டம். குழந்தைகளின் வளர்ச்சியில்தான் அரசாங்கத்தின் வளர்ச்சி அடங்கி உள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறோம். காலை உணவுத்திட்டத்தால் எதிர்கால தமிழ் சமுதாயம் ஏராளமான பயன்களை பெறும்.
மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது தி.மு.க. அரசு. பெரியார், அண்ணா, கருணாநிதி வளர்த்த சமூக நீதி பாதையில் தி.மு.க. அரசு ஆட்சி நடத்தும்.
இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை... ஏகலைவன்களின் காலம்... படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார்.
- காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
நாகை:
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.
- காலை உணவு திட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
- திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எனது கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என பெருமிதம் கொண்டார்.
இந்த காலை உணவு திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் நாளை நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
நாளை திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பதை முன்னிட்டு பள்ளியில் பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
வர்ணம் பூசும் பணிகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் அமைப்பது, நிகழ்ச்சி மேடை கட்டுமானப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதேப்போல் கருணாநிதி வீட்டின் முன்பு விழா மேடை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.
இந்த பணிகளை தி.மு.க மாவட்ட செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருக்குவளை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
- சுடுகாட்டுக்கு ெசல்லும் சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு ஊராட்சி சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேனாதிகாட்டில் உள்ளசுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சந்திராயன் 3விண்கலம் வெற்றி கரமாக ஏவப்பட்டது.
- மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து வெற்றியை கொண்டாடினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் சந்திரனுக்கு சந்திராயன் 3விண்கலம் வெற்றி காரமாக ஏவப்பட்டது கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பாகபட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் வசந்தா செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள்மே லாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






