என் மலர்
நாகப்பட்டினம்
- இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
- இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் தனது மனைவி சூரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்று இருந்தார். இன்று காலை திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, 3000 அமெரிக்கா டாலர், ஈராக் நாட்டு ரியால் 3000 ரொக்கம் 400 ஆயிரம்,பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார்.
- போலீசார் ஆடு திருடி சென்ற லோடு ஆட்டோவை விரட்டி கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் விற்குடி ஊராட்சி வீரபோகம் மேலத்தெருவை சேர்ந்தவர்(வயது 61) விவசாயி.இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார். சம்பவதன்று நள்ளிரவில் ராமலிங்கம் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி செல்வதை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் பார்த்துள்ளார்.அதனை உடனடியாக ராமலிங்கத்திடம் கூறியுள்ளார்.
இது குறித்து ராமலிங்கம் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் ஆடு திருடி சென்ற லோடு ஆட்டோவை விரட்டி கங்களாஞ்சேரியில் மடக்கி பிடித்தனர்.அப்போது லோடு ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் 3 பேர் தப்பி சென்றனர்.லோடு ஆட்டோவை ஓட்டிவந்த டிரைவர் கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் வண்ணான்குளம் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் விஸ்வா (22)என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து ஆடு திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விஸ்வாவை கைது செய்தனர்.மேலும் தப்பிச்சென்ற கூத்தூர் பகுதி சேர்ந்த ராஜேஷ், ஆழியூர் ஸ்ரீநாத் உள்பட பேரை தேடி வருகின்றனர்.
- தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
- வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரணயம் ஒன்றியத்தில்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட செயல்படுத்தப்படும் ஊராட்சிகளான வாய்மேடு, பஞ்சநதிகுளம்கிழக்கு, பிராந்தியங்கரை, தகடூர் ,தேத்தாக்குடிதெற்கு ஆகிய கிராமங்களில் வேளாண்மை இடுபொருள்கள் சிறப்பு திட்டங்களாக வேளாண் கருவிகள் தொகுப்பு தார்ப்பாலின் ஜிப்சம் சிங்சல்பேட் வரப்பு உளுந்து விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும் பதிவு செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடுபொருட்கள் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்தார். உடன் வேளாண்மை அலுவலர்கள் அனிஷ், நவீன்குமார் இருந்தனர்.
- நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும்.
- மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் குடிநீர் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இதில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. , தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜு, பேரூராட்சி அலுவலர் குமார், பேருராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்செல்வி, பிச்சையன், துணைத் தலைவர் கதிரவன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அவ்வை பாலசுப்ரமணியன், சௌரிராஜன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகராட்சி தொகுதிக்கு மக்கள் தொகை கணக்கின்படி குடிநீர் வழங்குவதில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் பற்றாக்குறை அளவை சுமூக கணக்கிட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும். ஆனால் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதால் உடனடியாக தண்ணீர் ஏற்றும் இடத்தில் அளவீடு கருவி பொருத்துவது எனவும் மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி குடிநீர்வடிகால் வாரிய நீர் ஏற்று மையத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் தலைஞாயிறு தண்ணீர் ஏற்றும் நேரத்தை தனித்தனியாக குறிப்பிட்டு போர்டுவைக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கஜா புயல் காலம் வரை நீர் ஏற்றும் மின் நிலையத்திற்கு 24 மணி நேரமும்மின்சாரம் வழங்கப்பட்டது போல் தற்போது வழங்க வேண்டும் .ஒரு நாள் விட்டு ஒரு நாள் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவேண்டுமென கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
- இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர்.
- 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து மேலக்காட்டை சேர்ந்தவர்சரபோஜி ராஜன் (வயது 52), வெளிப்பாளையத்தை சேர்ந்தவர்இளமாறன் (46) .
இவர்கள் சிலருடன் சேர்ந்து இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்தநெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு சொகுசு கார், சுமார் 147கிலோ கஞ்சா பிடிபட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரபோஜிராஜன், இளமாறன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி சரபோஜிராஜன் ,இளமாறன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
- சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாகூரில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பனங்குடி ஊராட்சி பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் சேர்ந்த மக்கள் அன்றாடம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர நாகூர்-நன்னிலம் சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் வாஞ்சூர் ரவுண்டானா பனங்குடி இடையே உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதேபோல் எதிரே புதுமனை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலை வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படுமா? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.
- வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி தொடங்குகிறது.
- 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
வெளிப்பாளையம் :
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2010-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு அகல பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையே ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததால் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.
இதை தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில் இந்த வழித்தடத்தை மின் பாதையாக மாற்றும் பணியும் நடந்து வந்தது.
சீரமைப்பு பணிகள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி ரெயில்வே தொழில்நுட்ப பிரிவினர் இரண்டு முறை சோதனை செய்தனர். மேலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து நாகை-வேளாங்கண்ணி மின் பாதையில் 29-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணிக்கு மின்பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.
- தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் நகராட்சியின் சார்பில் 2020-22 ஆண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை காலங்களில் புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.
தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின், நகர மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் இப்ராஹிம், ஒப்பந்தக்காரர் அன்பழகன், தாசில்தார் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதன்படி 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
- கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு கஞ்சா மற்றும் கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன்படி (2021 - 2022) ஆண்டுகளில் 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மீதமுள்ள கஞ்சா 9 குற்றவாளிகளின் வங்கி கணக்கினை விரைவில் முடக்கம் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுபோன்று கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
- மின்துறையில் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி, ஒளி காட்சி நடைபெற்றது.
வேதாரண்யம் :
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வை பொறியளார் சதீஷ்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் புகழேந்தி ,ஆத்மா குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சோழன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிகுமார், மலர்வண்ணன், இளம் மின்பொறியாளர் அன்பரசன், உதவி மின்பொறியாளர்கள் மனோகரன், சுப்பிர–மணியன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் முருகன், கல்லூரி நாட்டு நலதிட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட மின்துறை அலுவலர்கள் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் மின்துறையில் 8ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி ஒளி காட்சி மின்சார விழிப்புணர்வு மின்சார சிக்கனம், குறித்தும் வருங்காலத்தில் மின் சேவையை நிவர்த்தி செய்யசூரிய சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு வேதா–ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பரிசுகள் வழங்கினார். முடிவில் நாகை கோட்டபொறியார் சேகர் நன்றி கூறினார்.
- 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.
- நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் குறுவை நெல் பயிறில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-மேலப்பூதனூர் கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயி அவரின் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து அவற்றிற்கு ட்ரோன் மூலமாக நானோ யூரியா என்ற உரத்தை தெளித்துள்ளார்.
நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.ட்ரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் ஒரு குறைவான நேரத்தில் அதிக பரப்பினை தெளிக்க முடியும். தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்க ட்ரோன் முறை பயன்படுத்தலாம். நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்முறை விளக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள், காய்கள், பழங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது.
- அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் கொண்டு பிரத்தியங்கராதேவி மகா சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் தோஷங்கள் நீங்கவும் வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது.
பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.






