என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    • ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    நாகை:

    நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    முன்னதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை நேற்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகரநீர்முளை பகுதியில் உள்ள டீக்கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராஜாங்கம் (வயது 55) என்பவர் டீ குடித்துக் கொண்டிருந்தார். கடையின் அருகில் கோவிந்தராஜ் (50) என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். இருவரும் விவசாயிகள்.

    அதேவேளையில், கேரளாவில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கார் அகரநீர்முளை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து டீ கடையின் அருகில் இருந்த ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உடனடியாக இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பாசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைஞாயிறு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றொரு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

    அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.

    • படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.
    • 2 மீனவர்களையும் மீட்டு கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஆறுகாட்டுத்துறை மீனவகிராமத்துக்கு கிழக்கே வங்ககடலில் சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு பைபர் படகு நிற்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இலங்கைக்கு சொந்தமான பைபர் படகில் 2 மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 மீனவர்களையும் மீட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் , மைக்கேல் பெர்னாண்டோ என்பதும் கடலில் மீன் பிடித்த போது திடீரென படகின் எஞ்சின் பழுதானதால் இந்திய கடல் பகுதியில் வந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கடத்தி செல்ல இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்படும் ரேசன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க துறைசார்ந்த அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பழனிவேல் தலைமையில் அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் 9 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வேளாங்கண்ணி அருகே பறவை காய்கறி சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள், நாகை பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் காரைக்காலுக்கு கடத்தி செல்ல இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களை அதிகாரி தேடிவருகின்றனர். 32 மூட்டைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 800 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை பனங்குடி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    அப்போது பறக்கும்படை துணை வட்டாட்சியர் ரகு, வாணிப கழக தர ஆய்வாளர் பிரபாகரன் அலுவலக உதவிஆய்வாளர்கள் ராமன், பூவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.
    • பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடலில் பலத்த காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.

    அதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் பைபர் படகு மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் குறைந்த தூரம் சென்று மீன்பிடிக்கும் பைபர் படகுகளும் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.10 லட்சம் மீன் வர்த்தகம் தடைபட்டது. மேலும், பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆறுகாட்டுத்துறை பகுதியில் நேற்று கடல் சீற்றம் தணிந்ததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    குறைந்த தூரத்திற்கு சென்று மீன்பிடித்து கரை திரும்பும் இந்த பைபர் படகு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்கள் சிக்கினாலும், மீன்பிடி தடைக்காலம் என்பதால் அந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றுள்ளனர்.

    • குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியை சேர்ந்தவர் ராமநாதன். வேதாரண்யம் மேற்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு அருந்ததி என்ற மகள் உள்ளார். பி.ஏ. பட்டதாரி.

    இவரும் தஞ்சாவூர் மாவட்டம், பரக்கலக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன்-பரமேஸ்வரி தம்பதியின் மகனான விஜய்யும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். விஜய் படிப்பை முடித்து விட்டு லண்டனில் பணியாற்றி வருகிறார்.

    நாளடைவில் இவர்கள் காதலித்து வருவது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. இதற்கு குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, விஜய்-அருந்ததிக்கு கடந்த 3-ந்தேதி பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்ததும் நீண்ட விடுப்பு கிடைக்காத காரணத்தால் மணமகன் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மணமக்கள் வீட்டார் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் அருந்ததியோ தான் லண்டன் சென்று தனது காதலனை கரம் பிடிக்க போவதாக வீட்டில் கூறிவிட்டு, அதன்படி, கடந்த 8-ந்தேதி தனியாக சென்னையில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு அவரின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை லண்டனில் உள்ள முருகன் கோவிலில் மணமக்களுக்கு இந்து முறைப்படி சிவாச்சாரியார் தமிழில் மந்திரங்கள் கூறி திருமணம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர்கள், நண்பர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழா நடந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த முருகன் கோவிலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் குறித்து அறிந்த அவர் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்தில் அமைச்சர் நேரடியாக கலந்து கொண்டது அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

    • ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பைக், லோடு வேன் மற்றும் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் தெற்கு பொய்கைநல்லூர் வீட்டில் ஆடுகள் மேய்சலுக்கு கொண்டு சென்று பின்னர் ஆடுகளின் உரிமையாளர் வீட்டில் ஆடுகளை எல்லாம் கட்டி கவைத்து விட்டு, பின்னர் அவர் தூங்க சென்றார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு ஒரு கார் வந்தது. அந்த காரில் இருந்து முன்பக்க கதவை திறந்து ஒருவர் வேகமாக கீழே இறங்கினார். அங்கிருந்த ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது.

    தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதனை வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலங்கை கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 20-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    மேலும் கடல் சீற்றமாக காணப்படும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீன்வளத் துறை எச்சரிக்கை எடுத்து 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடலில் இருந்து கரைக்கு பாதுகாப்பாக இழுத்து வைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மீன்பிடி தடைகாலம் உள்ள நிலையில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத இந்த வேளையில் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் 4 நாட்களுக்கு மீன் வியாபாரம் முற்றிலுமாக இருக்காது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது.
    • மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் மீன்பிடி தடைகளும் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்காமல் இருந்து வந்தனர். இந்த சூழலை பயன்படுத்து அந்நிய நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படை நாள்தோறும் ரோந்து சென்று வந்துள்ளனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    நாளை அவர்களது 5 படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் ஒப்படைக்க உள்ளனர்.

    • அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    இந்தியா - இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளை 17-ந்தேதி படகு சேவை தொடங்க இருந்த நிலையில் மீண்டும் வரும் 19-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அந்தமானில் இருந்து நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் திட்டமிட்ட நாகை - காங்கேசன் - நாகை பயணிகள் கப்பல் சேவையினை இயக்க முடியவில்லை என்றும் சேவையினை 19-ந் தேதியில் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    பதிவு செய்த பயணிகள் 19-ந் தேதி அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம் அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக பெற விரும்பினால் கட்டணத்தினை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.
    • மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நாகப்பட்டினம்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு மே 17-ந் தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரைவு ரெயில் (06037) இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல, மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 18-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் விரைவு ரெயில் (06038) இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 11.30 மணிக்கு சென்றடையும்.

    தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாப்புலியூர், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, வைதீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×