என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்தால் மாணவி ஆசிரியரிடம் எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார்.
    • செல்போன் ஆடியோவை மாணவி தனது பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் உள்ளூர் மற்றும், வெளியூரில் இருந்து மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் மாணவிகளுக்கு விடுதி வசதியும் உள்ளது.

    இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசுகிறார்.

    அதில், உன் மீது புகார் வந்துள்ளது. உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும். அதனால் எனது வீட்டிற்கு வரவேண்டும் என செல்போனில் கூறுகிறார். அதற்கு அந்த மாணவி, நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறுகிறார்.

    அதற்கு அந்த ஆசிரியர், வீட்டிற்குத்தான் வரவேண்டும் என கட்டாயப்படுத்தி அழைப்பு விடுக்கிறார். ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்தால் அந்த மாணவி ஆசிரியரிடம் எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார்.

    ஆனால் அந்த ஆசிரியர் விடாமல் அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுப்பது போல பேசி தனது வீட்டிற்கு அழைக்கும் செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த செல்போன் ஆடியோவை மாணவி தனது பெற்றோர் மூலம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் அருண்தம்புராஜ் சம்மந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்சா தலைமையில் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு வந்தனர்.

    அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவிகளிடம் தனித்தனியே வாக்குமூலம் எழுதி வாங்கினர். சுமார் 1 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின்னர் சமூகலநத்துறை அதிகாரிகள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    மாணவிகளிடம் பெறப்பட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அதே நேரத்தில் விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்பிக்கப்படும். அதன் பின்னர் இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    நாகை தனியார் நர்சிங் கல்லூரி ஆசிரியர், அங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போல செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.
    • விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 31 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் பொது கழிவறைகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும், நகராட்சி சார்பில் 95 தனிநபர் கழிவறை கட்டும் பணிகளையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இது குறித்து நகராட்சி கமிஷனர் ஹேமலதா கூறியதாவது:-

    வேதாரண்யம் நகராட்சியில் ரூ. 28 லட்சத்தில் 95 தனி நபர் கழிவறைகள் கட்டப்படுகிறது.

    இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ. 9 ஆயிரத்து 330 அரசு மானியமாக 30 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.

    தற்போது 18 கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மேலும், ரூ. 31 லட்சம் 28 ஆயிரம் செலவில் கட்டப்படும் பொது கழிவறையும் விரைந்து பணிகள் முடிக்கபட்டு பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு விடப்படும் என்றார்.

    ஆய்வின்போது வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஆத்மா குழு தலைவர் சதாசிவம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

    • பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
    • சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு முன் மண்டபத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவிய பொடி, பழங்கள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து சங்குகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

    ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • விவசாய நிலங்களுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்.
    • கடல்நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோர முள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர், கடலை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கத்தால் கடலில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    மேலும் விவசாய விளை நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.

    சுமார் 100 ஏக்கர் அளவுக்கு பயிர்களை கடல் நீர் சூழந்துள்ளதால் அவைகள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது,

    நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.

    அதன் ஒரு பகுதியாக வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

    கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • 1500 வகையான நெல் ரகங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.
    • வேளாண் செம்மல், நம்மாழ்வார் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, குரவப்புலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. இவரது கணவர் சித்த மருத்துவர் சரவணகுமரன் தம்பதியினர்.

    இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1500 வகையான நெல் ரகங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.

    அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்து பழங்கால மரபுகளை மீட்டெடுத்து வருகின்றனர்.

    இவர்களது மீட்டெடுப்–புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது-2022 அறிவித்து இவ்விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதுதவிர, சிவரஞ்சனி வேளாண் செம்மல், நம்மாழ்வார் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

    மேலும், சிவரஞ்சனியை கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளார்.

    இத்தம்பதியினர், 1500 வகையான ரக நெல் விதைகளை தனது 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளனர்.

    இவரது வயல்களில் மருத்துவ குணம் நிறைந்த தமிழ்நாட்டு நெல் ரகங்களான கருங்குறுவை, மாப்பிள்ளை சாம்பா, குடவழை, ஓட்டம், கருப்பு கவுணி, நவரா, பூங்கார், ரத்த சாவி, காலாநமக் ஆகிய நெல்வகைகளும், மேற்குவங்க நெல்வகைகளான ராமல்லி, ஓரகழமா, ராஜகழமா மற்றும் கேரளா நெல் வகைகளான ஜெகன்னாத் போக், ஒரிசா புல், கர்ணா புல் ஆகியவைகளை சாகுபடி செய்துள்ளார்.

    இதனை ஏராளமான விவசாயிகளும், விவசாய துறை அதிகாரிகளும் பார்–வையிட்டு இத்தம்பதியின் முயற்சியை பாராட்டினர்.

    • மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் உள்ளிட்ட செடிகள்.
    • மூலிகை வனத்தில் பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் செடிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டு செடிகள் முன்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த மூலிகை வனத்தில் தற்போது பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், நேற்று வேதாரண்யம் வருகை தந்த கலெக்டர் அருண் தம்புராஜ் மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மூலிகை செடிகள் செழித்து வளர்ந்திருப்பதை கண்டு அதிகாரிகளை பாராட்டினார்.

    இது போல் மூலிகை வனம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது, தாசில்தார் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் வேதையன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர்.

    • நள்ளிரவு 12 மணி அளவில் அவசரமாக அறுவை சிகிச்சை.
    • மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பன்னால் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவரது மனைவி திருமுகப்பிரியா.

    இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தலை பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    குழந்தைக்கு தொப்புள் கொடி சுத்தி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு திருமுகப்பிரியாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பணிக்குடம் உடைந்துள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் திருமுகப்பிரியாவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவ ர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்து வமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து குழந்தையின் தந்தை வீரசேகரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிரசவத்தின் போது குழந்தை இறந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 மது பாட்டில்கள் இருந்தது.
    • மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தது.

    அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 மது பாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் கொட்டாரக்குடி ஊராட்சி சின்னகண்ணமங்கலம் காலாணித்தெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் சாய்குமார் (வயது 22), திருநள்ளார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மதிவாணன் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 130 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • புதுமண தம்பதிகள் பங்கேற்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
    • பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சமூக நலத் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நாகப்–பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சுகாதாரத் துறையினர், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட மனித சங்கிலியும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வண்ண பலூன்களை காற்றில் பறக்க விடும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் பங்கேற்ற ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பெண் சிசுக்கொலைகளை தடுப்பது குறித்து விழிப்–புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலம் போட்டிகளும் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

    அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகள் பங்கேற்ற கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள், 3ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
    • ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த ௪-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் மாண்டஸ் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்க ப்பட்டது. மேலும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்லும் அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

    • 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று ள்ளனர்.

    இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமானார்.

    இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகுகளில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் தேடும் பணி நடந்து வருகிறது.

    • வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
    • கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-

    நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.

    இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

    கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.

    நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.

    கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.

    எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    ×