என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    பாப்பாரப்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் மணல் பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சின்னசாமி (வயது 37) என்பவருடைய வீட்டில் மொத்தம் 2,250 கிலோ எடை கொண்ட 75 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான விசாரணையில் கோழிப்பண்ணை மற்றும் டிபன் கடைகளுக்கு வழங்குவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் வழக்குப்பதிந்து சின்னசாமியை கைது செய்தனர்.

    இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எப்படி அவருக்கு கிடைத்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்களும், தாவித் மலான் 30 பந்தில் 42 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது.
    டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜாஸ் பட்லர், பேர்ஸ்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவரில் 37 ரன்களே அடித்தது. பேர்ஸ்டோ 17 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் 24 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு தாவித் மாலன் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்களும் சேர்த்தனர்.

    தாவித் மாலன்

    3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் முதல் மாடியில் ஒரு தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை திடீரென புகை வந்துள்ளது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, நிலைய அலுவலர் மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், சோபா போன்றவை எரிந்து சேதமானது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.

    தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். பல் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
    நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். 

    தற்போது சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்ட சுரு’, மோகன் லாலுடன் மரைக்காயர் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.

    கீர்த்தி சுரேஷ்
    கீர்த்தி சுரேஷ் - டோவினோ தாமஸ்

    ‘வாஷி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்குகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். வாஷி படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    கெலமங்கலம் அருகே லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் கெலமங்கலம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த ராஜன் (வயது 32), சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுநாத், (34) ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
    தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று, இவரும் அஜித்குமார் என்பவரும் ராஜகணபதி நகர் பக்கமாக நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைவாணன் என்கிற வேலு (20), பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் அவர்களிடம் தகராறு செய்தனர். மேலும் கணேசையும், அஜித்குமாரையும் கைகளாலும், பாட்டிலாலும் தாக்கினர். இதில் காயம் அடைந்த கணேஷ், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கலைவாணன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    திருப்பூர் மாநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாகும். மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.
    திருப்பூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில் புதிய வாக்காளர் சேர்ப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    திருப்பூர் மாநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாகும். மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். இதுதவிர காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சிகள், முத்தூர் பேரூராட்சியிலும் மிகப்பெரிய வெற் றியை பெற நாம் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு என்பது அந்தந்த டிவிசன் நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். அதில் ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் ஆகியோருடன் கலந்து பேசி முடிவு செய்யலாம். 

    ஒவ்வொரு வார்டுக்கும் ஒருமித்த கருத்தோடு ஒருவரை தேர்வு செய்தால் தலைமையிடம் தெரிவித்து எந்தவித மாறுதலும் இல்லாமல் அவர் அறிவிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்ட வர்கள் இருந்தால் 1,2,3 என்று தேர்வு செய்து தெரிவிக்கலாம். 

    வேட்பாளர் தேர்வு முற்றிலும் வெளிப்படையாக இருக்கும். அதில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள். வருகிற 13ந் தேதி மாலைக்குள் தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த விவரங்களை டிவிசன் நிர்வாகிகள் மாவட்ட அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    கட்சியின் தலைமைக்கு தெரிவித்து முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்க முடியும். புதிய வாக்காளர் சேர்ப்பு பணியை திறம்பட செய்ய வேண்டும். 

    மாநகராட்சி பகுதியில் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கான எல்லை வரையறை பட்டியலை பெற்று வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஷ்வரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். 
    சிவகாசியில் வாலிபர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வகணேஷ் (வயது 21). இவருக்கும், வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் வத்திராயிருப்புக்கு சென்ற செல்வகணேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் எரிச்சநத்தம் -விருதுநகர் சாலையில் கோட்டையம்மன் கோவில் அருகே செல்வகணேஷ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கருகி கிடந்தது.

    எம்.புதுப்பட்டி போலீசார், செல்வகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வத்திராயிருப்பைச் சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    பண்ணந்தூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    போச்சம்பள்ளி தாலுகா பெரியபாறையூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 30). சம்பவத்தன்று இவர் பண்ணந்தூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்ணந்தூரை சேர்ந்த சக்திவேல் (50) என்பவர், கோவிந்தசாமியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.200-ஐ பறித்தார். இதுகுறித்து கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணத்தில் வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). வேன் டிரைவர். கடந்த சில நாட்களாக ராஜ்குமார் வேலைக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவருடைய தாய் சுசீலா கேட்டார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூளகிரி அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 45). சம்பவத்தன்று சூளகிரிக்கு வந்த கோவிந்தம்மாள் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் கோவிந்தம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் கோவிந்தம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூடலூர்:

    கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அணையின் நீர் மட்டம் 139 அடியை நெருங்கியபோது கடந்த மாதம் 29-ந் தேதி அணையை ஒட்டியுள்ள 6 ‌ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிக்கு 3800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரள அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 9 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழக அமைச்சர்கள் அணையை பார்வையிட்டு திரும்பிய பிறகு கேரள அரசு தனது கெடுபிடிகளை தளர்த்தி வருகிறது.

    தற்போது கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2906 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நவம்பர் 10-ந் தேதி வரை 142 அடிக்குள் தேக்கி அதன் பின்னர் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் இது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக இதனை நடைமுறைபடுத்த வேண்டும். இல்லையெனில் கேரள அரசின் கெடுபிடிகள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ×