
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் முதல் மாடியில் ஒரு தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை திடீரென புகை வந்துள்ளது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, நிலைய அலுவலர் மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், சோபா போன்றவை எரிந்து சேதமானது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.
தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். பல் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.