என் மலர்
கன்னியாகுமரி
- மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
- காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களை சந்தித்து பேசி மீனவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.

கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், கனிமொழி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குமரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக விஜய் வசந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க கோரி நேற்று தூத்துக்குடி சென்று சம்பந்தபட்டவர்களுடன் பேச்சு நடத்தி அவர்கள் விடுதலைக்கு வழிவகை செய்தேன்.
— VijayVasanth (@iamvijayvasanth) March 25, 2024
கடந்த மூன்று நாட்களாக இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண உதவிகள் செய்த மாண்புமிகு… pic.twitter.com/a9FIsblEzx
- இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
- திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் என்ஜினீயரின் வீட்டாரும் மணமகளின் வீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்கள். இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று காலையிலேயே திருமண வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து இருந்தனர்.அவர்களுடன் மாப்பிள்ளை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திருமண வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்ததால் திருமண வீடு களைகட்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் மணமகள் வீட்டிற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
- மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
குளச்சல்:
கடந்த 19-ந் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்த குளச்சலை சேர்ந்த 73 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஒரு கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதனை கண்டித்து குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சிறைபிடிக்கப்பட்டு 5 நாட்களாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். அவர்களை நேற்று இரவு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நள்ளிரவு 2 மணிவரை அங்கிருந்தவாறு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
- நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தக்கலை:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேலும் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வதை கண்டறியும் வகையில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது அந்த வழியாக ஒரு பிக்கப் வேன் வந்தது. அந்த வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தங்க, வெள்ளி நகைகள் இருந்தன. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து நகைகளை வேனுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு வருமான வரித்துறை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான பணியாளர்கள் விடிய விடிய விசாரணை நடத்தியதில் அந்த வேனில் 2½ கிலோ தங்க நகைகளும் 4 கிலோ வெள்ளி நகைகளும் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
அந்த நகைகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து உரிய ஆவணமின்றி கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மற்றொரு நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து வருமான வரித்துறையினர் உரிய ஆவணங்களை சமர்பித்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தற்போது நகைகளுடன் அந்த வேனை பறிமுதல் செய்து போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை ரூ.36 லட்சத்து 23 ஆயிரத்து 372 ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை.
- கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.
நாகர்கோவில்:
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிம வளங்கள் கிடைப்பதில்லை.
கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும். எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை. இதனால் 3 ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்கு வழிசாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தின் கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொறுத்தவரை நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.
- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதி மார்ஷல் நேசமணி, தாணுலிங்கம் நாடார், பெருந்தலைவர் காமராஜர், குமரி ஆனந்தன் என பெருந்தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.
கன்னியாகுமரி தொகுதியில் 1951 முதல் 1998 வரை காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தொகுதி வெற்றிபெற்று இருந்தது. 1996-ம் ஆண்டு பாரதிய ஜனதாகட்சி முதல் முறையாக கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டென்னிஸ் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலிலும் பொன் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

அப்போது அமைந்த பாரதிய ஜனதா ஆட்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரியாகவும், நகர்புற வளர்ச்சித்துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.
2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய இணை மந்திரியாக பொறுப்பேற்றார். தொழிற்சாலைகள் மற்றும் பொதுப் பணித்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும், நிதித்துறை மற்றும் துறைமுக துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
அப்போது குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். மார்த்தாண்டத்தில் மேம்பாலம், பார்வதிபுரத்தில் மேம்பாலம், சுசீந்திரம் பாலம் போன்ற உன்னத திட்டங்களை செயல்படுத்தினார். குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டங்களை செயல்படுத்த பொன்.ராதாகிருஷ்ணன் முக்கிய பங்கு வைத்தார்.
தற்போது மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து குமரி மாவட்டத்திற்கு பொன். ராதாகிருஷ்ணன் பெற்று தந்தார்.
2019 நடந்த தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2021-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவில்லை. தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதா கட்சி குமரி மாவட்டத்தில் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.

பிரதமர் மோடியின் வருகை குமரி மாவட்ட மக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதையடுத்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது கட்சியின் வெற்றிக்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். நாகர்கோவிலில் உள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பலரும் திரண்டு உள்ளனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதாகவும் கூறி உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் களம் இறக்கபட்டுள்ளார். அவர் ஏற்கனவே சட்டமன்ற தொகுதி வாரியாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது குறித்து கட்சி தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள விஜய் வசந்த் மீண்டும் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
தன்னுடைய தந்தை வசந்தகுமார் வழியில் விஜய வசந்த் மக்கள் பணி ஆற்றி வருகிறார். எனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் அவருக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7, 78,734 பெண் வாக்காளர்கள், 135 மூனறாம் பாலினத்தினர் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இளம் வாக்காளர்களும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் இந்த தொகுதியில் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி தொகு தியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.கவும் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்றே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. கன்னியாகுமரியில் மீண்டும் தாமரை மலருமா? அல்லது காங்கிரஸ் கைப்பற்றுமா? இல்லையென்றால் இரட்டை இலை தளிர்விடுமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்துவிடும்.
- மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சுங்கான் கடையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் மாரிமுத்து (வயது 33).
விருதுநகரைச் சேர்ந்த இவர், இங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மது குடித்ததில் கீழே விழுந்ததாகவும் அதனால் தான் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாரிமுத்து உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் தாக்குதலில் தான் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் தான் தாக்கியதில் தான் மாரிமுத்து கீழே விழுந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நானும் மாரிமுத்துவும் மது அருந்தியபோது அவர் என்னிடம் ரூ.200 கடன் வாங்கினார். நீண்ட நாட்களாகியும் அதனை அவர் திருப்பித் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று மது அருந்தும் போதும் கடனை கேட்டேன். இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான், மாரி முத்துவை கீழே தள்ளிவிட்டேன். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
- ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க பறக்கும் படை, கண்காணிப்பு குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஈடுபட்டு இருந்த பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.
இதேபோல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியிலும் ரூ.1 லட்சம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- 3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.
- கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர். இந்த தொகுதி 1952-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.
ஆனால் 1952 மற்றும் 1954-ல் திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது.1957, 62, 67-ம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டசபைக்காக தேர்தலை சந்தித்தது. 1971-ம் ஆண்டு முதல் தான் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலை விளவங்கோடு எதிர்கொண்டுள்ளது. அது முதல் 12 பொதுத் தேர்தல்களை விளவங்கோடு சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றிக்கனியை பறித்து உள்ளன.
இதில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால்தான் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. ஆனால் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது சந்தேகம் என்கின்றனர். தொகுதியைச் சேர்ந்த பலரும். பாரதிய ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜெயசீலனும் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் தனது பெருமையை நிலைநாட்ட தொகுதியில் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. தொகுதி தங்களுக்கு தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போதே சீட் கேட்டு, சென்னை மற்றும் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகளின் கோட்டையான விளவங்கோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என தற்போதே அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தங்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் போன்றவற்றை வைத்து அ.தி.மு.க.வினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு தொகுதியில் தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8-வது முறையாக மகுடம் சூடுமா? வேறு கட்சிகள் வெற்றியை தட்டிப்பறிக்குமா? என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது.
- எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வும், பாரதிய ஜனதாவுடன் பா.ம.க.வும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதேபோல் அ.தி.மு.க.வும், பாரதிய ஜனதாவும் களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் விஜய் வசந்த் எம்.பி. களம் இறக்கப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும், அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத்தும் களம் இறங்குகிறார்கள். தேர்தலுக்கான மனுதாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அவர் குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார். இது பாரதிய ஜனதாவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் நாகராஜாதிடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக வருகைதர உள்ளனர். மேலும் விளவங்கோடு தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விரைவில் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைவர்கள் பிரசாரம் செய்ய வருகை தருவதையடுத்து கன்னியா குமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன.
- அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை மந்திரி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் விஜய்வசந்த் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படுகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அவர் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். இது பாரதிய ஜனதாவினருக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் பிரிவு உட்பட அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன.
நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.
- பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கோவளம் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

இதேபோல் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் ஒதுக்கி கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






