என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollangode Patrakali Amman Temple"

    • ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது.
    • ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும்.

    கொல்லங்கோடு:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தூக்கத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவின் போது நடைபெறும் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை சிறப்பு வாய்ந்தது.

    இந்த விழாவில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குழந்தைகளுடன் பங்கேற்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூக்க நேர்ச்சைக்கு முதல் நாள் நடக்கும் வண்டியோட்டம் நேற்று மாலை நடந்தது.

    தூக்க வில்லை சோதனை செய்யும் வகையில் கோவிலை சுற்றி நடத்தப்பட்ட வண்டியோட்டம் நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணியளவில் வழக்கமான பூஜைகள் முடிந்ததும் தூக்கக்காரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார். அதன்பிறகு காலை 6.30 மணிக்கு முதல் தூக்க நேர்ச்சை தொடங்கியது. இதில் முதல் தூக்கம் தேவி தூக்கம்.

    அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம் தொடங்கியது. ஒரு வில்லில் 4 குழந்தைகளை தூக்ககாரர்கள் தூக்கிச் சென்றனர். தூக்க நேர்ச்சையில் பங்கேற்க 1166 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக தூக்கதாரர்களும் தயாராக இருந்தனர்.

    தூக்க வில்லானது ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது. அதன்படி வில்லானது 350-க்கும் மேற்பட்ட முறை கோவிலை சுற்றி வந்து தூக்க நேர்ச்சை நிறைவடைகிறது.

    ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும். இன்று இரவு வரை இந்த நிகழ்ச்சி நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தூக்கத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    தமிழகம் மற்றும் கேரளா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதை கருத்தில் கொண்டு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம்.
    • 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.

    கொல்லங்கோடு:

    தமிழக-கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக அம்மன்கள் இருவரும் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பச்சை பந்தலில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தூக்கக்காரர்கள் குளித்து முடித்ததும் கோவிலை சுற்றி முட்டு குத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து முதலாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தூக்க தேரில் அம்மன் தூக்கம் நடத்தப்பட்டது. பிறகு வரிசையாக ஒவ்வொரு தூக்கமும் நடத்தப்பட்டது. இதற்காக ஒன்று முதல் 50 வரை உள்ள தூக்கக் காரர்கள் கோவிலில் வரிசையாக காத்திருக்க, மீதமுள்ள தூக்கக்காரர்கள் கச்சேரிநடை பகுதியில் உள்ள தறவாடு வீட்டிற்கு சென்று உடல் மற்றும் முகத்தில் கரும்புள்ளிகள் குத்தி வாளும் பரிவட்டமும் வாங்கி ஊர்வலமாக திருவிழா கோவிலை வந்தடைந்தனர்.

    திருமணமாகி குழந்தை பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு குழந்தைபேறு கிடைக்கப் பெற்றால் அவ்வாறு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டி இந்த கோவிலில் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர் இதற்காக வடிவமைக்கப்பட்ட 48 அடி உயர தேரில் தூக்கக்காரர்கள் தொங்கியபடி நான்கு குழந்தைகளை தூக்கியபடி ஒரு முறை கோவிலை சுற்றி வலம் வர தூக்க நேர்ச்சையானது முடித்து வைக்கப்படுகிறது.

     இந்த தூக்க நேர்ச்சை நள்ளிரவு நேரத்தையும் கடந்து சென்றது. அந்த வகையில் மொத்தம் 211 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை செய்யப்பட்டது.

    இந்த திருவிழாவின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்க நேர்ச்சையானது நடத்தப்பட்டது.

    தூக்க திருவிழாவை காண குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது. திருவிழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை தலைவர் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணைத் தலைவர் சசிகுமாரன் நாயர், இணைச்செயலாளர் பிஜூகுமார், உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீ குமாரன் நாயர், பிஜூ, சதிகுமாரன் நாயர் உள்பட கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

    ×