என் மலர்tooltip icon

    ஈரோடு

    சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கோதண்டன். இவரது மனைவி முத்தம்மாள். இவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி அருகில் இருந்த ஒரு கிணற்றில் விழுந்தார்.

    அங்கிருந்தவர்கள் இதுகுறித்து சிவகிரி போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து முத்தம்மாளை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை அருகே கணவரின் கள்ளக்காதலி மகளை பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், அங்கப்பா வீதி பகுதியில் வசித்துவரும் சண்முகநாதன், கனகா தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிஷ்கா ( வயது 7) நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சிறுமி கனிஷ்கா இறந்து கிடந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உடலை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி கனிஷ்கா குரல் வளை நசுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனடிப்படையில் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மூதாட்டி சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் வனிதா என்பவர் அந்த குழந்தையை தோளில் போட்டு கொண்டு சென்றதை பார்த்ததாக கூறினார்.

    இதனால் பக்கத்து வீட்டு வனிதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்தான் கனிஷ்காவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    சிறுமியை கொன்ற வனிதா

    குன்னூர், தூளூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் வனிதா (33). இவருக்கும் சேலம் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(35) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கருமாண்டி செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்துள்ளனர்.

    பக்கத்து வீட்டில் வசித்து வந்த சண்முகநாகன், கனகா குடும்பத்தினருடன் இவர்கள் நட்பாக இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வனிதாவின் கணவரான கமலக்கண்ணனுக்கும் கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் இளைய மகள் கனிஷ்காவை தன் மகள் போல் பாவித்து அந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.

    இதனால் கமலக்கண்ணனுக்கும் வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும் தனது மகனுக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும் என கருதிய வனிதா கனிஷ்காவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதனால் நேற்று முன் தினம் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்காவை தின்பண்டங்கள் தருவதாக கூறி கடத்தி சென்று அங்கு அந்த சிறுமியின் வாயை பொத்தி கழுத்தின் குரல்வளையை நெரித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் சிறுமியின் உடலை தனது தோளில் போட்டு கொண்டுசென்று அருகில் உள்ள ஒருமரத்தடியில் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனதைத்தையும் ஒப்புக்கொண்டு வனிதா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வனிதாவை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் வனிதா கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    ஈரோடு:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

    விழாவில் சுற்று சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மறைந்த அம்மாவின் ஆசியுடன் இந்த ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செயல்படுத்தி வருகிறார்.

    இன்று மக்களை முதல்வர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். அம்மா பாணியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி புரட்சிதலைவி ஜெயலலிதாவின் வாரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.

    ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. 7 ஆண்டாக மின்துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் விமர்சித்து வருகிறார். அவர் செயல் தலைவர் அல்ல செயல் இழந்த தலைவராக உள்ளார். அவர் என்னதான் ஆட்சியை விமர்சனம் செய்தாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள். அவர் மீது மக்கள் வெறுப்புடன்தான் உள்ளனர்.

    காவிரி ஆணையத்தை புதுப்பிக்க தவறியவர் கலைஞர். ஆனால் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து சட்ட போராட்டம் நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு வாங்கியவர் ஜெயலலிதா.

    தினகரன் புதிய கட்சி தொடங்கி இருப்பது வேடிக்கை. அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. குறிப்பாக கொங்கு நாட்டு மக்களுக்கு தினகரன் யார் என்று தெரியாது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
    தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.#ADMK #EdappadiPalanisamy
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் காலிங்கராயன் மணிமண்டபம் திறப்பு விழா, வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட ஆண்டு விழா ஆகிய விழாக்கள் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்னை உருவாக்கி உங்கள் முன் நிறுத்தியிருப்பது இந்த பள்ளி தான். நான் படித்த பள்ளி இது. 1967-ம் ஆண்டு முதல் 6-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு அதாவது எஸ்.எஸ்.எல்.சி. வரை இங்கு படித்தேன்.

    சிறந்த ஆசிரியர்கள் பெருமக்கள் எங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்தனர். அதையெல்லாம் நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் படித்து முதல்-அமைச்சராக உருவாகி இருக்கிறேன் என்றால் அந்த பெருமை இந்த பள்ளிக்கூடத்தை சாரும்.

    குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 65 சதவீதம் மக்கள் விவசாயப்பணி செய்கிறார்கள். உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ, அதுபோல் விவசாயத்துக்கு நீர் முக்கியம். இந்த நீர் இருந்தால்தான் விவசாயிகளும், வேளாண்மையும் நன்றாக இருக்கும். எனவே கடந்த ஆண்டு 1,519 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டது.

    இந்த ஆண்டில் 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளில் நீர் வரத்து கால்வாய், கரைகள் பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், ஆழப்படுத்துதல், உபரிநீர் செல்லும் கால்வாயை தூர்வாரி சரிசெய்தல் ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அந்தந்த பகுதி விவசாய சங்கங்களுக்கு வழங்கப்படும். சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி குடிமராமத்து பணிக்கு செலவாகும் தொகை முழுவதும் அரசு அவர்களுக்கு வழங்கும். இதனால் எந்த தவறும் நடந்து விடாமல் பணிகள் நடைபெறும்.

    இந்த பணிகள் நிறைவடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம், ஏரிகளில் தேங்கி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படும். இதுபோல் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி வீணாக செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க 3 ஆண்டுகளுக்கான திட்டம் போடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டுக்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான் படித்த பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் கேட்டு கொண்டு உள்ளனர். அந்த கோரிக்கைகள் இந்த அரசு நிறைவேற்றி தரும். இங்கு ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில் புதிய கலையரங்கம், பள்ளிக்கூட சிறப்பு பராமரிப்பு நிதி, சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு ரூ.1 கோடி தேவை என்று தெரிவித்தனர். அந்த தொகையை முழுமையாக தமிழக அரசு வழங்கும்.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ADMK #EdappadiPalanisamy
    கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
    கோபி:

    தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று கோபி வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கின் முக்கிய விசாரணை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்துக்கு பாதகமாக காவிரி வழக்கில் தீர்ப்பு வந்தால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம். தமிழக விவசாயிகளின் உரிமைகள் பாதிக்காத அளவுக்கு தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. மாணவர்களை திருப்திபடுத்தவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை.

    எம்.எஸ்., எம்.டி. மருத்துவ உயர் படிப்புகளில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதை ரத்து செய்த மத்திய அரசை கண்டிக்கிறோம். கல்வி, சுங்கவரி, வரிவிதிப்புகளின் உரிமை தற்போது தமிழ்நாட்டில் மாநில அரசின் கைகளில் இல்லை. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

    கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் போன்ற கொந்தளிக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?.

    அதிக எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் வெறும் ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழக மக்களின் நலனுக்காக இன்னும் துணிச்சலான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.

    சிறிய கட்சியாக இருந்தாலும் நாங்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார். அதை நாங்கள் கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோபி அருகே கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் தாலுகா அலுவலக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி ஆஞ்சநேயர் வீதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). நம்பியூர் தாலுகா அலுவலக ஊழியர்.

    இவர் நேற்று பணிக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் வந்த கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதின.

    இதில் ராபர்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேனை ஓட்டி வந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    சித்தோடு அருகே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியதால் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    பவானியை அடுத்த காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி லதா. இவரது மகன்கள் ஜெயராஜ்(வயது27). தொழிலாளி. பிரபாகரன்(23). லாரன்சும், லதாவும் இறந்து விட்டனர்.

    ஜெயராஜிக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது குடும்பத்தினர் ஜெயராஜிடம் கூறினார்களாம்.

    இதனால் ஜெயராஜ் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந்தேதி இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தார்.

    சிகிச்சைக்காக ஜெயராஜை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயராஜை கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். #CMEdappadiPalaniswami

    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டம் பவானி வருகிறார்.

    பவானி அந்தியூர் பிரிவில் மேட்டூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.

    விழாவுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், பி.தங்க மணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகிறார்கள்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இந்த பள்ளியில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி) வரை மொத்தம் 6 வருடங்கள் படித்தார். பள்ளியில் உள்ள ஆஸ்டலில் முதல்வர் தங்கி படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தான் படித்த அரசு பள்ளி ஆண்டு விழா என்றதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் “விழாவில் கலந்து கொள்ள வருகிறேன். பழைய பள்ளி நண்பர்களையும் தனக்கு பாடம் கற்பித்த ஆசான்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டும்” என்றும் கூறினார்.

    அரசு பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அரசு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தும் மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தான் படித்த அரசு பள்ளி ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருவதையொட்டி அவருடன் படித்த பழைய சகமாணவர்களும், இப்போது படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பவானி நகர மக்களும் முதல்வரை வரவேற்க தடபுடல் ஏற்பாட்டை செய்து வருகிறார்கள். #CMEdappadiPalaniswami

    கர்நாடகாவில் நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 9 இடங்களில் தற்காலிகமாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. #Karnatakaassemblyelection

    தாளவாடி:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தலையொட்டி கர்நாடக- தமிழகம் எல்லையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட தமிழக- கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இரு மாநில வனப்பகுதி எல்லைகளாகும் பாரகுண்டி, ராமபுரம், எல்லக்கட்டை, பந்தனஹள்ளி, அருள்வாடி, பைனாபுரம், கேர்மாளம், ஜல்லிபாளையம், ஆசனூர் ஆகிய 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு நுழையும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைசாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலத்தில் ஒரு கடையில் பலகாரத்தின் மீது ஊர்ந்த எலியால் பரபரப்பு ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் இருந்த 25 கிலோ பலகார வகைகளை அழித்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அறிவுரை பேரில் சத்தியமங்கலத்தில் உள்ள பலகார கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    உணவு தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், குழந்தைவேலு ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கடையில் இருந்த பலகாரங்களில் எலி ஒன்று இருந்தது தெரிய வந்தது. பலகாரத்தின் மீது ஊர்ந்த அந்த எலியை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றினர்.

    பிறகு கடைகளில் இருந்த 25 கிலோ பலகார வகைகள் பினாயில் மூலம் அழிக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிகாரிகள் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர். கடையில் உள்ள அனைத்து பலகாரங்களையும் மூடி போட்டு வைத்து தயாரிப்பு தேதியையும் ஒட்டி வைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.



    ஓய்வு பெற்ற முன்னாள் விமான படை வீரர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அம்மாபேட்டை:

    தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நிலமகள்நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 61). விமான படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாக்கியலெட்சுமி (55).

    இந்தநிலையில் சரவணன் மற்றும் பாக்கியலெட்சுமி ஆகிய இருவரும் குடும்பத்தோடு நேற்று காலை வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து சரவணன் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் வீட்டை சோதனை இட்டனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஓய்வு பெற்ற விமான படை வீரர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை அருகே இளநீர் கடைக்குள் கார் புகுந்து வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம் பாளையம் ஊராட்சி, சின்னியம்பாளையம் கிராமம் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம் (வயது62) இளநீர் வியாபாரி.

    நேற்று மதியம் நல்லசிவம் கடையில் அமர்ந்திருந்த போது அந்த வழியாக சென்னையில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து இளநீர் கடைக்குள் புகுந்தது.

    இதில் நல்லசிவம் கார் சக்கரத்தில் சிக்கி சுமார் 20 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லசிசம் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்தில் ரோட்டின் குறுக்கே நின்ற காரால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிவந்து சியாஜூதீன்(33) மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×