என் மலர்
செய்திகள்

பவானியில் நாளை மறுநாள் 6 வருடம் படித்த அரசு பள்ளி ஆண்டு விழாவில் முதல்வர் பங்கேற்பு
ஈரோடு:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டம் பவானி வருகிறார்.
பவானி அந்தியூர் பிரிவில் மேட்டூர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
விழாவுக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், பி.தங்க மணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகிறார்கள்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இந்த பள்ளியில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி) வரை மொத்தம் 6 வருடங்கள் படித்தார். பள்ளியில் உள்ள ஆஸ்டலில் முதல்வர் தங்கி படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் படித்த அரசு பள்ளி ஆண்டு விழா என்றதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் “விழாவில் கலந்து கொள்ள வருகிறேன். பழைய பள்ளி நண்பர்களையும் தனக்கு பாடம் கற்பித்த ஆசான்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு கிட்டும்” என்றும் கூறினார்.
அரசு பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அரசு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தும் மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
தான் படித்த அரசு பள்ளி ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருவதையொட்டி அவருடன் படித்த பழைய சகமாணவர்களும், இப்போது படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பவானி நகர மக்களும் முதல்வரை வரவேற்க தடபுடல் ஏற்பாட்டை செய்து வருகிறார்கள். #CMEdappadiPalaniswami






