என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,925 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
    ஈரோடு:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பவானி, கோபி அரசு ஆஸ்பத்திரி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16-ந்தேதி முதல் கோவிஷுல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    முதல் 3 நாட்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது வரை அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 13 ஆயிரத்து 800 கோவிஷுல்டு டோஸ்கள் வந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் நேற்று வரை 1,925 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 197 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். தற்போது முதல் கட்டமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பிற துறை அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன் பிறகு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஈரோடு:

    தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிசந்திரன் முன்னிலை வகித்தார்.

    41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். அரசு பணியிடங்களை ஒழிக்கும் வகையிலான பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்துப்படி, சைக்கிள் போன்றவை வழங்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள், 200-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அனைவருக்கும் தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை, ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக வழங்கினர்.
    நம்பியூர் அருகே பாட்டியுடன் ஏற்பட்ட தகராறில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயாள். இவருடைய பேத்தி மவுனிகா (வயது 14). இவர் கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று காலை கருப்பாயாளும், மவுனிகாவும் வீட்டின் அருகே உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது மவுனிகா எனக்கு பசிக்கிறது சாப்பிட்டு விட்டு வருகிறேன் என பாட்டியிடம் கூறியுள்ளார். அதற்கு கருப்பாயாள் தண்ணீர் நின்றுவிடும். அதனால் தண்ணீர் பிடித்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா வீட்டிற்குள் சென்று சமையல் செய்ய வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

    ஈரோடு, ஜன. 27-

    ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    வேளாண் சட்டங்கள் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசு நடத்தி இருக்கிறது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் ஒத்தகருத்து வரவில்லை. வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சியையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

    துரதிஷ்டவசமாக ஒரு சில மாநில விவசாயிகளின் போராட்டம் காரணமாக, தவறாக அவர்கள் வழிநடத்தப்படுவதன் காரணமாக இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டி ருக்கிறது. விவசாயிகளின் சந்தேகம் போகவில்லை. குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கு பெற்று இருக்கிறார்கள். இதற்கு ஒத்த கருத்து தேவை.

    இருதரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தை அடிப்படையில் தான் முடிவு ஏற்பட வேண்டும். உண்மை நிலைக்கு ஏற்றவாறு செயல்பட தவறக்கூடாது. அவர்களும் இந்திய விவசாயிகள் தான். அனைவரின் மீதும் அக்கறை கொண்டவர்களாக மத்திய அரசு செயல்பட வேண்டும். குளிரிலும், மழையிலும் விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராடி வருகிறார்கள்.

    உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. அதன்படி பேச்சு நடத்தி ஒத்த கருத்து உருவாகும் என எதிர்பார்த்த சூழலில், குடியரசு தினத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. அப்பாவி விவசாயிகளுடன் சமூக விரோத கும்பல் புகுந்து குடியரசு தினத்தில் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், பிரச்சனை தொடர, அதில் குளிர்காயவும் அந்த கும்பல் விவசாயிகளை வழி நடத்துகிறது.

    தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தகட்டமாக மனு வாங்கும் திட்டத்தை தி.மு.க அறிவித்துள்ளது. வாக்காளர்கள் குழம்பி போய் உள்ளனர். எதிர்கட்சி வாக்கு வங்கிக்காக செயல் படுகிறார்கள். தேர்தலுக்கு 3 மாதமே இருக்கும் நிலையில் இது போன்ற அறிவிப்பு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. எதிர்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நாடக அரசியல் செய்ய கூடாது.

    ஈரோட்டில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் தரத்திற்குரிய மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய வேண்டும். ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார். அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் யாராக இருந்தாலும் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

    சசிகலா

    சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்தார். அவர் கண்மூடித்தனமாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் மக்கள் கூட்டம் கூடத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோட்டில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

    ஈரோடு நாராயணவலசு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). கூலித்தொழிலாளி.

    இவருடைய மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் இளைய மகன் அசோக் (19) ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்றும் இதனால் மன உளைச்சல் ஆக இருப்பதாகவும் தன்னுடைய தாயிடம் கூறி புலம்பியுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மின்விசிறியில் சேலையால் அசோக் தூக்குபோட்டு கொண்டார். இதப்பார்த்த பெற்றோர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அசோக்கின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் திடீரென மரணம் அடைந்தார்.
    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் ஓடத்துறை பொம்மநாயக்கன்பாளையம் காமராஜர்நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருடைய மனைவி கவுசல்யாதேவி (வயது 24). இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கவுசல்யாதேவி ஈரோடு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக கடந்த 2018-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட கவுசல்யாதேவி கடந்த 18-ந் தேதியில் இருந்து விடுப்பில் உள்ளார். மேலும் அவர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கவுசல்யாதேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் ஆயுதப்படை போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் கணவர் இறந்த துயரத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி பானுமதி (வயது 52). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பானுமதி கடந்த 2 ஆண்டுகளாக தனது மகனுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். குமாரசாமி ஈரோட்டில் இருந்து உள்ளார். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    பானுமதி அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் குமாரசாமியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்து முடித்தனர். இந்தநிலையில் கணவரை இழந்த துயரத்தில் காணப்பட்ட பானுமதி கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷத்தை எடுத்து குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பானுமதி இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ரோட்டில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியார்நகர் சிதம்பரம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 38). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. மதுகுடிக்கும் பழக்கம் உண்டு.

    இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் காணப்பட்ட அருண்குமார் நேற்று முன்தினம் விஷத்தை குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்குமார் இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    ஈரோடு:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை, திருப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    இதையடுத்து அவர் இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    • நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன். தமிழை மத்திய அரசும், மோடியும் அவமதிப்பதை ஏற்க முடியாது.

    • தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் பிணைப்பல்ல, குடும்ப பிணைப்பு.

    • டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழக கலாசாரத்தை மதிக்கவில்லை.

    • இந்தியாவில் மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    • ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு தமிழக மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மொழிபெயர்த்து கூறினார்.
    அந்தியூர் சந்தையில் நேற்று வெற்றிலை விற்பனை ரூ.6 லட்சத்துக்கு நடந்தது.
    அந்தியூர்:

    அந்தியூர் சந்தையில் நேற்று வெற்றிலை விற்பனை நடந்தது. இந்த சந்தைக்கு அத்தாணி, கள்ளிப்பட்டி, வேம்பத்தி, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், சந்தியபாளையம், பிரம்மதேசம், முனியப்பன்பாளையம், எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    100 எண்ணிக்கைகள் கொண்டது ஒரு கட்டு ஆகும். இதில் ராசி ரக வெற்றிலை ரூ.100 முதல் ரூ.120 வரையும், பீடா வெற்றிலை ரூ.50 முதல் ரூ.60 வரையும், செங்காம்பு ரூ.6-க்கும் என மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை ஆனது. ஈரோடு, பெருந்துறை, மேட்டூர், தர்மபுரி, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெற்றிலையை வாங்கிச் சென்றனர்.
    சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்ந்து கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கு ஏலம் போனது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், கொத்தமங்கலம், ராஜன் நகர், பீர்கடவு, அரியப்பம்பாளையம், செண்பகபுதூர், பெரியகுளம், டி.ஜி.புதூர், ஏழூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

    இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.81-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

    இதேபோல் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,750-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.820-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

    நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ரூ.490-ம், காக்கடா ரூ.75-ம், செண்டுமல்லி ரூ.14-ம், ஜாதிமல்லி ரூ.200-ம் உயர்ந்திருந்தது. பட்டுப்பூ ரூ.5-ம், கனகாம்பரம் ரூ.120-ம் அரளி ரூ.20-ம் விலை குறைந்திருந்தது.
    பண்ணாரி சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடி வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அப்போது வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

    அப்போது லாரியின் பின்பக்கத்தில் இருந்த மூட்டைகளில் மக்காச்சோளம் இருந்தது. பின்னர் லாரிக்குள் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    லாரியில் 24 மூட்டைகளில் மக்காச்சோளமும், 80 மூட்டைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் 5 டன் அளவுக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

    இதையடுத்து போலீசார் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த காந்தராஜ் (38) என்பதும், கிளீனர் ஊட்டியை சேர்ந்த சதீஷ் (35) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து இந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு வரப்பட்டது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பின்னர் போலீசார் குட்காவுடன் லாரியை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    ×