என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நிலவரி திட்ட அலுவலகத்தில் ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சத்தியமங்கலம் நகர நிலவரித்திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக வேல்முருகன், நில அளவை ஆய்வாளராக பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த அலுவலகத்தில் சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் உள்ள நில அளவை மற்றும் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த அலிமுல்லா என்பவர் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தார்.

    இதையடுத்து அவர்கள் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அலிமுல்லா இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை அலிமுல்லாவிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் திடீரென மாலை 6 மணியளவில் அலுவலகத்துக்குள் நுழைந்து கையும் களவுமாக அவர்களை பிடித்தனர்.

    பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அதிகாரிகள், ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் திடீர்சோதனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 1மணிவரை நீடித்தது.

    பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நிலவரி திட்ட தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 2பேரையும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 2பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்ச ஒழிப்புபோலீசில் சிக்கிய தாசில்தார் வேல்முருகன், நில அளவை ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
    புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் வேன் டிரைவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி அடுத்த அன்னே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). வேன் டிரைவர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் அல்லி முத்து (31). கூலி தொழிலாளி. இவருக்கும் திருமணமாகவில்லை. அல்லி முத்துவின் சித்தி வசந்தி (50) அதே பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் மகேந்தி ரனுக்கும் வசந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.மகேந்திரனுக்கும் வசந்திக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து அல்லிமுத்துக்கு தெரிய வந்தது. அவர் மகேந்திரனை சித்தியுடனான கள்ளத் தொடர்பை கை விடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் மகேந்திரன் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு மகேந்திரன் வசந்தி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அல்லிமுத்து மகேந்திரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து மகேந்திரனை கையால் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து மகேந்திரன் அருகிலிருந்த சமுதாய கூட திண்ணையில் மயங்கி விழுந்து இறந்தார். அல்லிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அல்லிமுத்துவை தேடி வருகின்றனர்.


    தாளவாடி அருகே வனச்சாலையை சிறுத்தை கடந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தாளவாடியை சேர்ந்த 2 பேர் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கும்டாபுரம் அருகே சென்றபோது அங்குள்ள வனச்சாலையை சிறுத்தை ஒன்று கடக்க முயன்றது. சிறுத்தையை கண்டதும் காரில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காரை நிறுத்திவிட்டு சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. வனச்சாலையை சிறுத்தை கடந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு 14 ஆயிரத்து 361 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று 23 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 25 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். 

    மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 186 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    பவானி அருகே மொபட் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் நித்தியானந்தன் (வயது 33). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் காலிங்கராயன்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது அவருடைய மொபட்டை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசில் அவர் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று பவானி காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தனது ெமாபட்டுடன் நின்று கொண்டிருந்தவரை நித்தியானந்தன் பிடித்து சித்தோடு போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் ஜம்பை பகுதிைய சேர்ந்த ரவி (30) என்பதும், அவர்தான் நித்தியானந்தனின் மொபட்டை திருடி சென்றதும்,’ தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து ரவியை போலீசார் கைது செய்தனர்.
    பவானி அருகே துணி அரவை மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனது.
    பவானி:

    ஈரோடு அருகே உள்ள குமிளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பவானியை அடுத்த சித்தோடு அருகே உள்ள பச்சைப்பாளி மேடு பகுதியில் துணி அரவை மில் வைத்து உள்ளார்.

    கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பனியன் மற்றும் டீ சர்ட்டுகள் உற்பத்தி செய்தது போக மீதம் உள்ள கழிவு துணிகள் மறு சுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு இந்த மில்லுக்கு கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டுவரப்பட்ட கழிவு துணிகள் இங்குள்ள எந்திரங்கள் மூலம் பஞ்சாக மாற்றப்படுகின்றன. பின்னர் இந்த பஞ்சு மீண்டும் பனியன் தயாரிக்க தேவையான நூல்களாக தயாரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை மில்லில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனே இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய அதிகாரி காந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசம் ஆனதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு 14 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று 3 பேர் மட்டுமே குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 982 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 193 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஈரோடு டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உள்பட அனைத்து போலீசாரும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 3 பேரும் நேற்று பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    ஈரோட்டில் நோயால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சீனிவாசன் ஈரோடு பவானி ரோடு அசோகபுரம் பகுதியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நந்தகோபால் (வயது 15). 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் நந்தகோபால் ஈரோடு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வைராபாளையம் பகுதிக்கு சென்றார்.

    பின்னர் அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது நந்தகோபால் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தகோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் கால்மிதியடி தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
    சித்தோடு:

    ஈரோடு குமிளம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சித்தோடு பச்சப்பாளி வசுவப்பட்டி என்ற கிராமத்தில் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம், பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் கம்பெனி ஆகியவை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் பகல் நேரத்தில் மட்டும் ஊழியர்கள் வேலைப்பார்ப்பார்கள். இரவில் யாரும் இருக்க மாட்டார்கள். வழக்கம் போல் நேற்று பணி முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த கம்பெனியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    தீயணைப்பு துறையினரின் முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. பகல் நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

    இது குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஐ.டி.பி.எல். திட்டத்துக்கு நில எடுப்பு அறிவிப்பானை வாங்க மறுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மொடக்குறிச்சி:

    தமிழகத்தில் தனியார் நிறுவனம் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதித்து வருகிறது. இதற்கு விசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதே போல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் (ஐ.டி.பி.எல்.) கோவையில் இருந்து பெங்களூரு தேவ கொந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதனால் திருப்பூர் ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். மேலும் இந்த திட்டத்தை சாலையோரம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மொடக்குறிச்சி பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மொடக்குறிச்சி அருகே உள்ள அட்டவனை அனுமன்பள்ளி அடுத் பழையபாளையம் பகுதியில் நில எடுப்பு அறிவிப்பாணை விவசாயிகளிடம் வழங்க அரச்சலூர் வருவாய் அலுவலர் கமலவதி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விவசாயிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்களை தரமாட்டோம். நில எடுப்பு ஆணையை பெற்று கொள்ள மாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் இதற்கு எதிராக கோ‌ஷ மிட்டனர்.

    இதனால் அதிகாரிகள் அங்கு இருந்து திரும்பி சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதில் ஐ.டி.பி.எல். திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரும், தற்சாற்பு விவசாயிகள் சங்க மாநில தலைவருமான பொன்னையன், குணசேகரன், முருகேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பணிமனைக்குள் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி டிரைவர் இறந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 57). அந்தியூர் கரட்டுப்பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பஸ்களை சுத்தம் செய்ய கொண்டு செல்லும் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பக்தவச்சலம் பணிமனையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் பொள்ளாச்சியில் இருந்து அந்தியூருக்கு வந்த அரசு பஸ் ஒன்று பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், டீசல் பிடிப்பதற்காக பணிமனைக்கு வந்தது. பஸ்சை அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்த ராஜா (58) என்பவர் ஓட்டினார்.

    அப்போது பணிமனைக்குள் நடந்து சென்றுகொண்டு இருந்த பக்தவச்சலம் மீது ராஜா ஓட்டிவந்த பஸ் மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பக்தவச்சலத்தை அருகே இருந்த ஊழியர்கள் மீட்டு உடனே அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அதே பஸ்சில் கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 12.30 மணி அளவில் பக்தவச்சலம் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதாக அரசு பஸ் டிரைவர் ராஜாவை கைது செய்துள்ளார்கள்.

    விபத்தில் இறந்த பக்தவச்சலத்துக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், ஸ்ரீதர் என்ற மகனும், லதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பக்தவச்சலத்தின் உடலை பார்த்து கதறி துடித்தது காண்பவர்களையும் கண்கலங்க செய்தது.

    ×