search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோய்"

    • ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    திருவனந்தபுரம்:

    ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் நோய் ஆகும். அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் இந்த வைரஸ் பரவுகிறது. கேரள மாநிலம் மரப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஹெபடைடிஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    அந்த மாவட்டத்தில் நிலம்பூர் அருகே உள்ள பொதுகல்லு மற்றும் எடக்கரை ஊராட்சிகளில் ஏராளமானோர் ஹெபடைடிஸ் வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும் பொதுக்கல்லு ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 47 மற்றும் 60 வயது மதிக்கத்தக்க இருவர் ஹெபடைடிஸ் நோய் பாதித்து இறந்தனர்.

    இந்நிலையில் அங்கு மேலும் ஒருவர் இறந்தார். 37 வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று இறந்து விட்டார். இதனால் அந்த வைரஸ் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து விட்டது. மேலும் பொதுக்கல்லு ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

    தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மலப்புரம் மாவட்டத்தில் இதுவரை 232 பேர் ஹைபடைடிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நோய் பாதிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு சுகாதார பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மலப்புரம் மாவட்ட கலெக்டர் வினோத் தெரிவித்துள்ளார்.

    கருமையான சிறுநீர், குமட்டல், வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்டவைகளே ஹெபடைடிஸ் வைரஸ் நோயின் அறிகுறிகளாகும். அந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் பழச்சாறுகள் தயாரிக்க சுத்தமான தண்ணீரை பயன்படுத்ததுவதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    • தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
    • மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    சென்னை:

    சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் சமீபத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டது. பெரும்பாலான தெருக்களில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்ட நிலையில் சில இடங்களில் இன்னமும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.

    இந்த பணிகள் காரணமாக சில தெருக்களில் கழிவுநீர் தேங்கும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக முகப்பேர் கிழக்கில் உள்ள நக்கீரன் சாலை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த தெருவில் சுமார் 3 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளன. அந்த தெரு மக்கள் கழிவுநீர் மீதுதான் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் தேங்கிய கழிவுநீர் வேறு எந்த பகுதிக்கும் வடிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு மழைநீர் வடிகால் அமைப்பு பணிகள் தொடங்கப்பட்ட போது பல தெருக்களில் இதே பிரச்சினை ஏற்பட்டது. கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன.

    என்றாலும் நக்கீரன் சாலையில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்தது இன்னமும் சரி செய்யப்படவில்லை. மேலும் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் விடப்படுவதால் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து முகப்பேர் கிழக்கு பகுதியில் பல தெருக்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கும் நிலை நீடிக்கிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் தெரிவித்தும் பயனில்லாத நிலைதான் காணப்படுகிறது.

    புகார்கள் தெரிவிக்கப்படும் தெருக்களுக்கு அதிகாரிகள் வராமலேயே புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக ஆன்லைனில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    குடிநீர் வாரிய அதிகாரிகள் பெரும்பாலான தெருக்களில் தேங்கி உள்ள நீரை அகற்றுகிறார்கள். என்றாலும் அவர்களால் முழுமையாக பணி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முகப்பேர் கிழக்கில் 92, 93-வது வார்டுகளில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது. பழுதடைந்த கழிவுநீர் குழாய்கள் இன்னும் 3 நாள் முதல் ஒரு வாரத்திற்குள் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி உறையூர் பகுதியில் மஞ்சள் காமாலை நோய் பரவுவதாக சந்தேகிக்கப்படுகிறது
    • பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து விட்டதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகம்

    திருச்சி, 

    திருச்சி உறையூர் பகுதி கல்லறை மேட்டுத் தெரு, சோழராஜபுரம், பாண்டமங்கலம் , நாச்சியார் கோவில், பாளையம் பஜார், பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, வாத்துக் காரத் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்சல் மற்றும் வாந்தியால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை திருமயம் கடியப்பட்டணத்தில் நாட்டு மருத்துவம் பார்த்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து அதில் சாக்கடை நீர் கலந்து விட்டதால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா தெரிவித்திருந்தார்.மேலும் பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவேமாநகராட்சி சுகாதாரத் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்ற வேண்டும்.

     மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தேங்காய், கொப்பரை விலை கடும் சரிவு மற்றும் விற்பனை இல்லாமல் தேக்கம் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னையில் தற்போது நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சின்ன பொம்மன் சாளை பகுதியில், மனோன்மணிக்கு சொந்தமான தென்னந்தோப்பில், நூற்றுக்கணக்கான மரங்களின் குருத்து அழுகி, திடீரென கீழே சாய்ந்தும், ஒரு சில நாட்களில் அம்மரங்கள் காய்ந்து கீழே விழுந்தும் வருகிறது.அதே போல் விஜயகுமாருக்கு சொந்தமான தோட்டத்திலும், இதே போல் தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது.

    காரணமே தெரியாமல் தஞ்சாவூர் வாடல் நோயாக இருக்கலாம் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு என எந்த விதமான நோய் தாக்குதல் என தெரியாமல், பாதிக்கப்பட்ட மரங்களை காய்களுடன் வெட்டி வீழ்த்தி தீ வைத்தும் வருகின்றனர்.இவ்வாறு சின்ன பொம்மன் சாளை, புங்கமுத்தூர், வாளவாடி, பொன்னாலம்மன் சோலை என தென்னை மரங்கள் அதிகம் உள்ள பெரும்பாலான கிராமங்களில், பரவலாக தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது.

    எனவே தென்னை மரங்களை தாக்கும் நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தரவும் வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாகும்.

    இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னை மரங்கள் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக அளவு காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்பட்டதும் குருத்துக்களில் அவை உணவாக கொண்டு அவற்றை நாசம் செய்துள்ளன.

    தொடர்ந்து பெய்த மழையின் போது குருத்துக்களில் மழை நீர் தேங்கி குருத்து அழுகல் நோயாகவும் மாறியுள்ளது. பசும் பூஞ்சாணம் தாக்கி கடும் துர்நாற்றம் அடிக்கும். இதற்கு பசுஞ்சாணம் உள்ளிட்டவற்றை மக்க வைக்காமல் நேரடியாக பயன்படுத்துவதே காரணமாகும்.

    பிடித்த உணவாகவும், புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகவும் மக்கவைக்காத சாணங்கள் காரணமாக அமைகிறது. இவற்றில் காண்டாமிருக வண்டுகள் அதிகளவு உற்பத்தியாகி தென்னை மரங்களை தாக்கி வருகிறது.இதற்கு எருக்குழிகளில் மெட்டாரைசியம் தெளித்தால் புழுக்களை கட்டுப்படுத்த முடியும். வேப்பம்புண்ணாக்கு, மணலுடன் கலந்து மூன்று அடுக்காக மரத்தை சுற்றிலும் அணைக்க வேண்டும்.

    குருத்து அழுகல் நோய்க்கு காப்பர் ஆக்சி குளோரைடு பயன்படுத்தலாம். மெட்டாரைசியம் தேவையான அளவு வேளாண் துறையில் இருப்பு உள்ளது.

    நோய் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக ஆய்வு செய்து மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. எது மாதிரியான பாதிப்பு என தெரியாமல் விவசாயிகள் தேவையற்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அதிக சேதம் உண்டாக்கும் தென்னையை தாக்கும் தஞ்சாவூர் வாடல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 12,584 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னை மரங்களை தாக்கும் நோய்களில் தஞ்சாவூர் வாடர் நோய் அதிக சேதம் விளைவிக்கக் கூடியது. இது கடற்கரையை ஒட்டிய மணற்பாங்கான இடங்கள், மானாவாரி தோப்புகள், பராமரிப்பு இல்லாத தோப்புகள் ஆகிய இடங்களிலும் மற்றும் கோடைகாலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும். எனவே விவசாயிகள் தென்னையினைத் தாக்கும் வாடல் நோயினைக் கண்டறிந்து கட்டுப்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நோய் தாக்கி இறந்த மரங்களையும், நோய் முற்றிய நிலையில் உள்ள மற்ற மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தைச் சுற்றி வட்டப் பாத்திகள் அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். கோடையில் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு சதவீதம் போர்டோ கலவையை 40 லிட்டர் என்ற அளவில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் வட்டப்பாத்தியில் மண் நன்கு நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும். ஹெக்சாகோனசோல் இரண்டு மிலி மருந்தை 100 மிலி தண்ணீரில் கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேர் வழியாக உட்செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார்
    • அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இந்நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கும் மேல் சேதம் விளைவிக்கிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர்பட்டு வழிந்தோடுவதாலும், பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது.

    காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல், மந்தமான தட்பவெப்பநிலை, அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவுதல், காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். நிழலான பகுதிகள், நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.

    எனவே அந்தக் களைகளை முழுவதுமாக அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினைப் பறித்து அழித்து விட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு இந்நோய் பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீர்பாய்ச்சுதல் கூடாது. மேலும் வயலில் அதிகமாக நீர்நிறுத்தவும் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாகக் இருந்தால் காப்பர்ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்படைந்து உள்ளது.

    இதுபற்றி அபிராமம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் கோடை காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி விவசாயத்தை செய்து வந்த நிலையில், இந்தப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொருளதார நஷ்டம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனர்.

    • திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இந்த பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இதனால் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது

    . இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி கழக அதிகாரிகள் துப்புரவு தொழிலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

    • கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • இந்த நோயால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், கழுமங்கலம், கச்சிப்பெருமால், துலாரங்குறிச்சி, இடையார், சூரியமணல், கல்லாங்குளம், வாணத்திைரயான்பட்டிணம், காடுவெட்டங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், கீழமைக்கால்பெட்டி, பாண்டிபஜார், சுத்தமல்லி, உல்லியகுடி, வெண்மான்கொண்டான், தத்தனூர், மனகெதி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வாழும் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து தங்களின் அன்றாட பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பருவ நிலை மாற்றத்தினால் மாடுகளை அம்மை நோய் தாக்கி வருகிறது. இந்த மாட்டு அம்மை ஆரம்பத்தில் கொசு கடி, ஈ கடி போல் தெரிகிறது. பின்னர் ஒரு வாரத்தில் உடம்பு முழுவதும் சின்ன கட்டிகள் மற்றும் காலில் பெரிய கட்டிகள் தோன்றி மாடுகள் மேயமுடியாமலும், நடந்து செல்லமுடியாமலும் அவதிப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கழுமங்கலத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள்:- என்னிடம் 4 மாடுகள் இருக்கிறது. இதில் 2 மாடுகளுக்கு அம்மை நோய் வந்ததால் நான் ரொம்ப சிரமப்பட்டேன். மாட்டின் உடம்பு முழுவதும் கட்டிகள் மற்றும் வீக்கம் இருந்தது.

    உடனே கால்நடை மருத்துவரை அணுகி விவரத்தை சொல்லி தடுப்பூசி போட்டேன். அதன் பிறகு இயற்கை முறையில் வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தேன். பிறகு படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து பழைய நிலைக்கு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. பிளாக்குறிச்சியை சேர்ந்த கொளஞ்சிநாதன்:- எனது ஊரில் உள்ள விவசாயிகளின் மாடுகளுக்கு அம்மை நோய் வந்து மாடுகள் கஷ்டப்படுவதை நேரில் பார்த்தேன். அதனால் எனது மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் நம்மால் தாக்கு பிடிக்க முடியாது. அதனால் எனது 4 மாடுகளையும் விற்றுவிட்டேன்.

    அம்மை நோய் முடிந்த பிறகு மாடுகள் வாங்கி கொள்ளலாம் என்று இருக்கிறேன். பொதுவாக இந்த நோயை ஆரம்பத்திலேயே விவசாயிகள், கால்நடை வளர்பவர்கள் கண்டு பிடித்து தடுப்பூசி மற்றும் இயற்கை முறையில் மஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி ஆகியவற்றை சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் சரியாகிவிடுகிறது. இந்த மாட்டம்மை நோயை ஆரம்பத்தில் கண்டு பிடிக்காத விவசாயிகளின் மாடுகள் மற்றும் கன்றுகள் இறந்து விடுகின்றன. ஆனந்தகிருஷ்ணன்:- என்னிடம் 3 மாடுகள் உள்ளது. அம்மை நோய் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தி விட்டேன். அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போய்விட்டது.

    நான் இருந்ததால் உடனே தடுப்பூசி செலுத்திவிட்டேன். வசதி இல்லாத ஏழை விவசாயிகள் அவர்கள் மாடுகளுக்கு அம்மை நோய் வந்தால் அவர்களால் தடுப்பூசி செலுத்த முடியாது. இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கால்நடை மருத்துவ முகாம் அமைத்து தடுப்பூசி போடுதல் வேண்டும், ஒரு சில ஊராட்சியில் தடுப்பூசி முகாம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளை தாக்கும் பெரியஅம்மை, மாட்டு அம்மை, இதனை சேர்ந்த தோல் கழலை நோய் உள்ளிட்ட நோய்களை தடுத்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    ராய் டிரஸ்ட் இன்டர்நே ஷனல், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து பொது, சர்க்கரை மற்றும் இருதய நோய் இலவச மருத்துவ முகாம் ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயக்காரன்புலம் அரிமா சங்க தலைவர் அரிமா மாதவன் தலைமையில் நடைபெற்றது.

    ஆயக்கா ரன்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் மற்றும் திருத்துறைப்பூண்டி ஹரிஸ் தங்க மாளிகை உரிமையாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார தலைவர் அங்கை. ராசேந்திரன் முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருத்தினராக ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் கலந்து கொண்டார்.

    காமாட்சி மெடிக்கல் சென்டர் மூத்த மருத்துவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் சசிகலா, ராகுல்யா உடல்நலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முடிவில் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    முகாமில் பொருளாளர் முருகானந்தம், அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடை ந்தனர். நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், பி.எம்.ஐ, ரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதய பரிசோதனைகள் (இ.சி.சி.மற்றும் எக்கோ) செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கூறியினார்.
    • நோயின் முக்கியமான அறிகுறிகள் நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.

    வேதாரண்யம்:

    சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் பாக்டீரியா, இலைக்கருகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.

    தற்போது இலைக்கருகல், நோயின் முக்கியமான அறிகுறிகள் நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.

    அவ்வளவாக புலப்படாத மற்றொரு அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமான மாறுவதாகும்.

    இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.

    இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே இலையுறைக்கும் பரவுகிறது.

    நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.

    இதனை கட்டுபடுத்த வேளாண்மை துறையின ரால் பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று, நான்கு முறையாக பிரித்து மேலுரமாக இடலாம்.

    யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.

    நோயின் தாக்குதல் அதிகரிக்கும்போது எக்டே ருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
    • கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது.

    மதுரை

    மதுரை அண்ணா பஸ் நிலையப் பகுதியல் மழைநீர் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு வருவோர் அண்ணா பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த அண்ணா பஸ் நிலையம் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    பஸ் நிலையத்தின் உள் பகுதியில் மழைநீர், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி பணியாகவும் காட்சியளிக்கிறது. மேலும் பஸ் நிலைய பகுதி முழுவதுமே குடிமகன்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பெண் பயணிகளும், பஸ் நிலையத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.

    எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகிகளும், போக்குவரத்து கழகமும், மாநகர காவல் துறையும் இணைந்து செயல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும். பயணிகள் அச்சமின்றி வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×