search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னை மரங்களில் நோய் தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் - வேளாண்துறை விளக்கம்
    X

    கோப்பு படம்.

    தென்னை மரங்களில் நோய் தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் - வேளாண்துறை விளக்கம்

    • தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்ற வேண்டும்.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தேங்காய், கொப்பரை விலை கடும் சரிவு மற்றும் விற்பனை இல்லாமல் தேக்கம் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னையில் தற்போது நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சின்ன பொம்மன் சாளை பகுதியில், மனோன்மணிக்கு சொந்தமான தென்னந்தோப்பில், நூற்றுக்கணக்கான மரங்களின் குருத்து அழுகி, திடீரென கீழே சாய்ந்தும், ஒரு சில நாட்களில் அம்மரங்கள் காய்ந்து கீழே விழுந்தும் வருகிறது.அதே போல் விஜயகுமாருக்கு சொந்தமான தோட்டத்திலும், இதே போல் தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது.

    காரணமே தெரியாமல் தஞ்சாவூர் வாடல் நோயாக இருக்கலாம் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு என எந்த விதமான நோய் தாக்குதல் என தெரியாமல், பாதிக்கப்பட்ட மரங்களை காய்களுடன் வெட்டி வீழ்த்தி தீ வைத்தும் வருகின்றனர்.இவ்வாறு சின்ன பொம்மன் சாளை, புங்கமுத்தூர், வாளவாடி, பொன்னாலம்மன் சோலை என தென்னை மரங்கள் அதிகம் உள்ள பெரும்பாலான கிராமங்களில், பரவலாக தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது.

    எனவே தென்னை மரங்களை தாக்கும் நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தரவும் வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாகும்.

    இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னை மரங்கள் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக அளவு காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்பட்டதும் குருத்துக்களில் அவை உணவாக கொண்டு அவற்றை நாசம் செய்துள்ளன.

    தொடர்ந்து பெய்த மழையின் போது குருத்துக்களில் மழை நீர் தேங்கி குருத்து அழுகல் நோயாகவும் மாறியுள்ளது. பசும் பூஞ்சாணம் தாக்கி கடும் துர்நாற்றம் அடிக்கும். இதற்கு பசுஞ்சாணம் உள்ளிட்டவற்றை மக்க வைக்காமல் நேரடியாக பயன்படுத்துவதே காரணமாகும்.

    பிடித்த உணவாகவும், புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகவும் மக்கவைக்காத சாணங்கள் காரணமாக அமைகிறது. இவற்றில் காண்டாமிருக வண்டுகள் அதிகளவு உற்பத்தியாகி தென்னை மரங்களை தாக்கி வருகிறது.இதற்கு எருக்குழிகளில் மெட்டாரைசியம் தெளித்தால் புழுக்களை கட்டுப்படுத்த முடியும். வேப்பம்புண்ணாக்கு, மணலுடன் கலந்து மூன்று அடுக்காக மரத்தை சுற்றிலும் அணைக்க வேண்டும்.

    குருத்து அழுகல் நோய்க்கு காப்பர் ஆக்சி குளோரைடு பயன்படுத்தலாம். மெட்டாரைசியம் தேவையான அளவு வேளாண் துறையில் இருப்பு உள்ளது.

    நோய் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக ஆய்வு செய்து மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. எது மாதிரியான பாதிப்பு என தெரியாமல் விவசாயிகள் தேவையற்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×