என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
    • தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.

    நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.

    கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.


    குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    • பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதி நடைபெறுகிறது.
    • பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர்.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய திருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி தைப்பூச திருவிழா முடிந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் 4 ரதவீதிகளில் உலா வருவார். 10-ந் தேதி திருக்கல்யாணமும், முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 11-ந் தேதியும் நடைபெறுகிறது.

    2ம் நாளான இன்று பழனி ஸ்ரீ தண்டாயுதம் சுவாமி பக்தர்கள் பேரவை சார்பாக 16-ம் ஆண்டு பங்குனி உத்திர தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர். பழனி முருகனுக்கு கொடுமுடியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்காவடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இன்று மதியம் ஸ்ரீ சண்முகசுவ மண்டபத்தில் புது அன்னதானம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பழனி ஸ்ரீ தண்டாயுதம் பேரவை பக்தர்கள் பேரவை சார்பாக அழகர் செய்திருந்தார்.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரையாக பழனிக்கு வரத்தொடங்கி உள்ளனர். பால், பன்னீர், பறவை காவடி எடுத்துவந்து கிரிவீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.

    கேரளாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வந்திருந்ததால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சாமியை தரிசனம் செய்தனர்.

    • பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது.
    • ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும்.

    பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது.

    பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

    அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது.

    பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 10-ம் தேதி இரவு 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அடுத்த நாள் 11-ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர்கள் சிவனேசன், பழனிவேலு, ராகவன், கந்தவிலாஸ் உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீன், நரேஷ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, ஸ்ரீபெரியநாயகி அம்மன் கல்வி அறக்கட்டளை தலைவர் சுந்தரம் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது.
    • வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது இவர் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.

    ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், டி.எஸ்.பி. கண்ணன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    • மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர், தேனி, வைகை அணை, பெரியகுளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 68 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2949 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 85.48 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 26.56 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 30.87 அடியாகவும் உள்ளது.

    ஆண்டிபட்டி 30.8, அரண்மனைபுதூர் 23, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 9.2, சோத்துப்பாறை 12, வைகை அணை 27.2, போடி 7.2, கூடலூர் 1.6, தேக்கடி 3.6, சண்முகாநதி 2.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானலில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் தருமத்துப்பட்டி, கன்னிவாடி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட்டது. வட்டப்பாறை, கோனூர், கசவனம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்த போது மின்தடை நிலவியதால் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்கள் அவதியடைந்தனர்.

    திண்டுக்கல், சிறுமலை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

    • உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    உதகை மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    அதன்படி உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் வார நாட்களில் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    மருத்துவ சேவை, சரக்கு வாகங்கள் மற்றும் உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    இத்திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத்திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருஆவினன்குடி கோவிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி தங்க குதிரை வாகனம், தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    6ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மன், திருமுருகன், திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 7ம் நாளான ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உதிரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிரி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் நிறைவாக ஏப்ரல் 11-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். பங்குனி உத்திரம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

    • வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
    • தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.

    சின்னாளபட்டி:

    100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில்,

    தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக வழங்க வேண்டிய ரூ.4039 கோடியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. இதனால் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. கிராமப்புற பெண்கள் இத்தொழில் மூலம் சுய சார்பு நிலையை அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தினசரி ரூ.240 முதல் ரூ.270 வரை சம்பளம் கிடைக்கிறது. வியர்வை சிந்தி உழைத்த மக்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.

    தமிழகத்திற்கு இதேபோல் கல்வி நிதியை வழங்காமலும், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தும் துறை சார்ந்த அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும்.

    நிதியை விரைவில் ஒதுக்காவிட்டால் எங்களது அடுத்தகட்ட போராட்டமும் தொடரும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் மீடியா சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுககு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் கூறியதைபோல தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. மன்னர் ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியாது. மக்கள் வாக்களித்து அவர்களுக்காக செயல்படும் திராவிட மாடல் அரசாக தி.மு.க. விளக்கி வருகிறது. தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு யாரும் போட்டி கிடையாது. மக்கள் ஆதரவுடன் மீண்டும் வருகிற தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
    • புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.

    திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.

    வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.

    தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

    புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
    • நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.

    பழனி:

    இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.

    இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

    கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 பேர் சிவராஜை சரமாரியாக தாக்கி மது பாட்டிலை உடைத்து குத்தினர்.
    • டீசல் ஊற்றி எரித்து 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு தப்பிச் சென்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கால் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 60). இவர் பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக தங்கும் விடுதி வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.

    மது பழக்கத்துக்கு அடிமையான சிவராஜை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜை அவரது சகோதரி சாந்தி அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்தார்.

    அதன் பின் சிவராஜ் வீட்டுக்கு செல்லாமல் தனது விடுதி அறையிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் சிவராஜூக்கும் மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மதுரை தத்தனேரியைச் சேர்ந்த மணிகண்டன் (29), அருண், ஜோசப், சந்தோஷ், நாகசரத் ஆகியோருக்கும் இடையே தொடர்ந்து நட்பு ஏற்பட்டது.

    அவர்கள் செல்போனில் அடிக்கடி பேசி வந்த நிலையில் சிவராஜின் விடுதிக்கு கடந்த வாரம் வந்துள்ளனர். மறு வாழ்வு மையத்தில் இருந்து போதையில் இருந்து மீண்ட அவர்கள் மீண்டும் ஒன்றாக மது குடித்ததாக தெரிகிறது.

    பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் சிவராஜிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் 5 பேரும் சிவராஜை சரமாரியாக தாக்கியதுடன் மது பாட்டிலை உடைத்து குத்தினர்.

    படுகாயமடைந்த சிவராஜை அருகில் இருந்த பயர் கேம்ப்பில் வைத்து டீசல் ஊற்றி எரித்தனர். பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை சுமார் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அனைவரும் தப்பிச் சென்றனர்.

    இதனிடையே சிவராஜ் மாயமானது குறித்து அவரது சகோதரி சாந்தி கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், அவருடன் தங்கி இருந்த 4 பேர் மாயமானதை அறிந்த போலீசார் அவர்களின் விபரத்தைக் கேட்டனர்.

    மேலும் சிவராஜ் தங்கி இருந்த அறையில் ரத்தக்கறை இருந்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடலை தேடிய போது பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டனர். அந்த உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே விடுதியில் இருந்து தப்பிச் சென்ற மணிகண்டன் தாங்கள் சிவராஜை தாக்கி கொலை செய்தது குறித்து மறுவாழ்வு மைய நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மணிகண்டனை அவர்கள் கைது செய்தனர். கொடைக்கானல் போலீசாரும் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். குடிபோதையில் இந்த கொலை நடந்ததா? அல்லது விடுதியை அபகரிக்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மறு வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பழக்கம் கொலையில் முடிந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×