என் மலர்
சென்னை
- சென்னை பாரிமுனையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சர்வே எடுக்கச் சென்றனர்.
- அப்போது அங்கு வந்த ரவுடிகள் த.வெ.க. கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை பாரிமுனையில் சர்வே எடுக்கச் சென்ற த.வெ.க. கட்சியினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர. அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது.
இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.
- நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.
- ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
* ராமதாசை சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள். அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி.
* நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் ராமதாசிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள்.
* ராமதாசை சுற்றி இருக்கும் துரோகிகள் அவருக்கு தவறான தகவல்களை சொல்லி அவரது மனதை மாற்றுகிறார்கள்.
* ஜி.கே.மணி செய்த துரோகங்கள் நிறைய இருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் பேசும் அளவிற்கு அவருக்கு தகுதி இல்லை என்று பேசினார்.
- அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
- அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
ராயப்பேட்டை:
சென்னை ராயப்பேட்டையில் பா.ம.க. மாநில இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
* எ.வ.வேலு அமைச்சர் கிடையாது வியாபாரி. இன்னும் 2 மாதத்தில் 1, 2, 3 என சிறையில் கம்பி எண்ணப்போகிறார்.
* சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி உட்பட 47 தொகுதிகளை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஒதுக்கி உள்ளது தி.மு.க.
* தி.மு.க.வினர் கிராமங்கள் அளவில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பணத்தை கொண்டுபோய் பதுக்கி வைத்துள்ளனர்.
* பணத்தை மட்டுமே நம்பி தி.மு.க. இந்த சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.
* கேடு கெட்ட தி.மு.க. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று கூறுங்கள்.
* இளைஞர்களால் எத்தனையோ பல புரட்சிகள் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற புரட்சி நடக்கும்.
* தேர்தலில் தி.மு.க. ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெல்லும். தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும்.
* அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
* அரசு ஊழியர்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது.
* துணை பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்களுக்கு தி.மு.க. போலி வாக்குறுதி அளித்துள்ளது என்றார்.
- அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 13-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
13-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
15 மற்றும் 16-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார்.
- இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள சென்னை மண்டல கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு புத்தாடைகள், பழ வகைகள் மற்றும் மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.
2025-2026-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "திருக்கோவில்கள் சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10.11.2025 அன்று திருவல்லிக்கேணியில் 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 2,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கோவில்கள் சார்பில் 20,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்திடும் வகையில் சென்னை வேப்பேரி பி.கே.என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் 70 வயது பூர்த்தியடைந்த 500 மூத்த தம்பதியினருக்கு வேட்டி மற்றும் சட்டை, புடவை, ரவிக்கை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள், குங்குமசிமிழ் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கி சிறப்பு செய்து தொடங்கி வைத்தார்.
இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் 3,000 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது. இவ்விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதா சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் அப்பன் உலகாரிய இராமனுஜ எம்பார் சுவாமிகள், மேயர் பிரியா, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் துரை. ரவிச்சந்திரன், ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகி சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
- ‘பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிகப்பெரிய பொய்யை கட்டமைத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவர்களோ, பெற்றோர்களோ, எதிர்க்கட்சியினரோ கோராதபோது, எனது மனதில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, கவர்னரின் ஒப்புதலுக்கு காலதாமதமானதால், அந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று, அரசியலமைப்புச் சட்ட ஷரத்தில் உள்ள உரிமையை பயன்படுத்தி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.
'சத்துணவு திட்டம் என்றால் புரட்சித் தலைவர்' 'தொட்டில் குழந்தை திட்டம் என்றால் புரட்சித் தலைவி அம்மா' '7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்றால் எனது தலைமையிலான அரசு' என்று எங்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஏற்கனவே நான் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தையே உல்டாவாக்கி முதலமைச்சர், தான் புதிதாகக் கொண்டு வந்ததுபோல் தம்பட்டம் அடித்து வருகிறார்.
வாயைத் திறந்தால் பொய் சொல்வதையே வாடிக்கையாகக்கொண்டு செயல்படும் ஸ்டாலினின் பேச்சு இனி தமிழக மக்களிடம் எடுபடாது.
'பொய்யாலும், விளம்பரத்தாலும் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது' என்பதை ஸ்டாலின் உணரும் காலம் விரைவில் வர உள்ளது. இனியாவது இதுபோன்ற பொய்யை கட்டமைப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- படிப்பு என்பது தான் பெண்களுக்கான சிறந்த அணிகலன்.
- 16 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கல்வி தான் பெண்களுக்கு அழகு சேர்க்கும்.
* பெண்கள் என்றாலே அழகு தான், அப்படிப்பட்ட பெண்ணுக்கு அறிவு தான் அழகு.
* படிப்பு என்பது தான் பெண்களுக்கான சிறந்த அணிகலன்.
* தமிழகம் உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு உயர கல்விதான் காரணம்.
* தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் தான் உலக நாடுகளுடன் தமிழ்நாடு போட்டியிடுகிறது.
* பெண்களின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்ல அது நாட்டின் வளர்ச்சி.
* நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.
* வெற்றிக்கு கடின உழைப்பு தேவை. கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது.
* 16 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.
* ரூ.14,000 மதிப்புள்ள கருப்பை வாய் தடுப்பூசியை தமிழ்நாடு நமது சிறுமிகளுக்கு இலவசமாக வழங்குகிறது.
* நீங்கள் அனைவரும் எனக்கு மகள்கள் தான்.
* பெற்றோர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
- 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
* 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.
* தி.மு.க. அரசு கொண்டு வந்த மாடல் பள்ளிகளால் ஐ.ஐ.டி.யில் மாணவிகள் பயில்கின்றனர்.
* கடந்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றுள்ளது.
* 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை தி.மு.க. அரசு மாற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
- மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.
* நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் அமையும். நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
* தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரம் போல் உள்ளது இந்த பாராட்டு விழா.
* கிராமப்புறங்களில் பள்ளி முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத சூழல் இருந்தது. இதனை புதுமைப்பெண் திட்டம் மாற்றியது.
* புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
* மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.
- இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.
சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்தத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக்காய்ச்சல் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.
தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.
* பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
* இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.
* இறந்த கோழியை உண்ண வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
- ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.
மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ?
சுவர் தன் மீது விழுந்துவிடுமோ?
தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?
போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.
இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது…
இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?
அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா?
இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.
பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.
விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.
- 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
- கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், டூரிஸ்ட் கேப் , மேக்ஸி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்த வேண்டும், ஓலா, உபர், ராபிடோ, போர்ட்டர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.
சென்னையில் 30 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜாகிர் உசேன் கூறியதாவது:-
13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
எனவே கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.
இவற்றை உடனடியாக இந்த அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மாலை 4 மணி அளவில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார்.






