என் மலர்
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 5-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் குணசேகரன் (வயது 50). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பாரதி (45). இந்த தம்பதிக்கு ஆதித்யன் (12) என்ற மகனும், ஆர்த்தி (14) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். குணசேகரன் திட்டக்குடிக்கு சென்று விட்டார். தினமும் பள்ளி முடிந்தவுடன் பாரதி பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை அழைத்து வருவார்.
ஆனால் நேற்று தாய் வராததால் குழந்தைகள் இருவரும் தாங்களாகவே வீட்டிற்கு நடந்து வந்தனர். வீட்டிற்கு வந்து கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை. பின்பக்கமாக சென்று சமையலறை ஜன்னல் வழியே பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து குழந்தைகள் அலறினர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாரதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பாரதியின் கழுத்தில் கத்தி குத்தும், பின்புறம் தலையில் பலத்த காயமும் இருந்தது. பாரதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின் மற்றும் 5 பவுன் செயின் ஒன்றையும் அறுத்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அனைத்து பீரோக்கள் உடைந்த நிலையிலும் இருந்தன. பீரோ மற்றும் லாக்கரில் இருந்த பவுன் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த வீட்டிலிருந்து அருகில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள பாப் பாங்குளம் கிராமம் தெற்கு தெரு வரை சென்று அங்கேயே சிறிது நேரம் சுற்றி வந்தது. அதன்பின்னர் பெரம்பலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபிநவ்குமார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெண்ணை கொலை செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாரதி அணிந்திருந்த தாலிச்செயினில் தாலியை மட்டும் துண்டாக்கி அதனை விட்டு விட்டு, செயின்களை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் பாரதி பயன்படுத்திவந்த 2 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆண்டிமடம்:
ஜெயங்கொண்டம் அடுத்த தா.பழூர் அருகே விஏஓ பால சுப்ரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கீழமைக் கேல் பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்ச் அருகே செல்லும்போது எவ்வித அனுமதி இன்றி மணல் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி கேட்ட போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து விஏஓ பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
மேலும் சாத்தம்பாடி விஏஓ வீரபாண்டியன் செங்குழி பறனேரி ஓடையில் ஜேசிபி வைத்து டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டிருந்த போது மறித்து விக்கிரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வழக்குபதிந்து செட்டிதிருக்கோணத்தை சேர்ந்த வன்னிய ராஜன்(41), டிராக்டர் டிரைவர் கும்பகோணம் குருங்குடியை சேர்ந்த பழனி செல்வம்(24) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார். மேலும் ஜேசிபி எந்திரம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
எனவே உயர்த்தப்பட்ட வரியை வாபஸ் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி அரியலூரில் இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று அரியலூர் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் நிலையம், சின்னக்கடை, பெரிய கடை வீதிகள், திருச்சி மற்றும் பெரம்பலூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. கார், ஆட்டோ, பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே அரியலூர் நகராட்சி கமிஷனர் வினோத், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #Tamilnews
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சிக்கு அடுத்தபடியாக அரியலூரில் தான் கோர்ட் அமைக்கப்பட்டது.
தற்போது மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மகிளா கோர்ட், சப்கோர்ட், குடும்பநல கோர்ட், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதிதுறை நடுவர் நீதிமன்றம் எண்-1, எண்-2, நுகர்வோர் கோர்ட் உட்பட 11 கோர்ட்டுகள் உள்ளது.
இதில் மகிளா கோர்ட், குடும்ப நலநீதிமன்றம், நுகர்வோர் கோர்ட் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இதில் 2 நீதிபதிகளுக்குதான் நீதிபதி குடியிருப்பு உள்ளது. மற்ற நீதிபதிகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசிற்கு மாதம் பல லட்சம் ரூபாய் செலவாகிறது.
பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சுற்றிலும் முட்புதர்கள் மண்டிகிடப்பதால் பாம்பு, பல்லி, பூச்சிகள் படையெடுத்து வருகின்றது. பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய ஆவணங்கள் மழை காலங்களில் நனைகின்றது.
கோர்ட்டில் சுமார் 200 வழக்கறிஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 17ஆண்டு காலமாக வக்கீல்கள், அனைத்து தரப்பு பொதுமக்கள், அரசியல்வாதிகள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமாக உருவாக்கப்பட்டது. அனைத்து தரப்பு அரசு அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுப்பது அரசின் கடமை. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் கொடுக்கும் முதல் தேர்தல் வாக்குறுதி அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படும் என்று. வெற்றி பெற்ற பிறகு எட்டிகூட பார்ப்பதில்லை என்று புகார் கூறுகின்றனர் பொதுமக்கள். வக்கீல் சங்கத்தினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். உடனடியாக செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 23.8.2017 அன்று அரியலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வக்கீல் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
தலைமை செயலகத்திலிருந்து மனு மீது பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் வந்ததே தவிர எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் அரியலூர் - திருச்சி பைபாஸ் சாலையில் அம்மாகுளம் கிராம பகுதியில் அமீனாபாத் எல்லையில் நிலம் பார்வையிடப்பட்டு சர்வே செய்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க போதுமான இடம் என அரசு அறிக்கை அனுப்பியும் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.
இந்நிலையில் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்துக் கொடுக்க கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என வக்கீல் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
எனவே அனைத்து தரப்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்து கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #tamilnews
அரியலூர் நகரின் மையப் பகுதியில் பஸ் நிலையம் அருகே ஒரே வளாகத்திற்குள் வட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், தீயணைப்புத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.
இதே வளாக்ததிற்குள் சிறுவர் சீர்திருத்த பள்ளியான கிளைச்சிறைச்சாலையும் உள்ளது. இந்த சிறையில் 18 முதல் 21 வயது வரையிலான கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்.
20 பேர் வரை அடைக்கப்படும் இந்த சிறையில் நேற்றைய தினம் 3 பேர் மட்டும் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாயகனைபிரியான் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் மணிகண்டன் (வயது 19) என்பவர் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 18-ந்தேதி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைதான மணிகண்டன் நேற்று மாலை உணவு உண்பதற்காக அறையில் இருந்து திறந்துவிடப்பட்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று காம்பவுண்டு சுவரின் மீது ஏறிய மணிகண்டன் அங்கிருந்து கீழே குதித்து தப்பிச்சென்றார்.
உடனடியாக பணியில் இருந்த சூப்பிரண்டு மற்றும் 3 போலீசார் பல்வேறு இடங் ளில் தேடினர். ஆனால் தப்பிய மணிகண்டன் சிக்கவில்லை. இதுகுறித்து சூப்பிரண்டு பாலு அரியலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் இருந்து தப்பிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகிறார்கள். #Tamilnews






