என் மலர்tooltip icon

    அரியலூர்

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 

    கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அன்று ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் முற்பகலில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடனும், நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    ஜெயங்கொண்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு 4 ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு கடைக்காரர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தினார். 

    இந்நிலையில் ஒரு சில கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து நேற்று முன்தினமே ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் சிலர் நேற்று காலை அகற்றினர். பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்தனர். இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று காலை 11 மணியளவில் ஜெயங்கொண்டம் கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி ஊழியர்கள், போலீசார் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் தாராளமாக சென்று வருகின்றனர்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    மேலும் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையேல் மீண்டும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகள் தொடரும். எனவே தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் இருக்க தனிப்படை அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிவராஜ், சண்முகசுந்தரம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மின்சார வாரிய அதிகாரி சிலம்பரசன், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சுரேந்திரன் (வயது 20). இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட வீட்டின் முன்பு உள்ள சாலையில் தனது பெயரை எழுதிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சுரேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேந்திரன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூரில் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 6-வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, சன்னாவூர் (தெ) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில்    சூரியமணல், வாழைக்குறிச்சி ஆகியகிராமங்களிலும், ஆண்டி மடம் வட்டத்தில் அய்யூர் கிராமத்திலும் நடைபெறுகிறது.
    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். #tamilnews
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு. இவர்களது மகன் தமிழரசன்.

    இந்த நிலையில் நேற்று நடராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பானுவும், தமிழரசனும் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். மாலையில் தமிழரசன் மட்டும் வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறைக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    நகை கொள்ளை போனது பற்றி தமிழரசன் செல்போனில் தனது தாய் பானுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    முதல் கட்ட விசாரணையில் புத்தாண்டு அன்று வீடு பூட்டி கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க வழியாக வந்து பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த கொள்ளை ஈடுபட்டது தெரிய வந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தமிழகத்தில் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். #Jallikattu

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பண பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7.50 லட்சம் பணமோசடி செய்த அரியலூர் ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம்  சக்திநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை நெய்வேலியை சேர்ந்த சிவக்குமார், சு.ஆடுதுறையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் அணுகி, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். 

    இதையடுத்து விஸ்வநாதன், அவரது நண்பரான அரியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராயப்பன் என்பவரை அணுகியுள்ளார். அவர் கரூரை சேர்ந்த சேர்மன் என்பவர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக  சிவக்குமார், மணிகண்டன் ஆகியோரிடமிருந்து  முன்பணமாக ரூ.7.50 லட்சத்தை வாங்கிய விஸ்வநாதன், அதனை ராயப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால்  நீண்ட நாட்களாகியும் ராயப்பன் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

    இது குறித்து விஸ்வநாதன் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இது குறித்து நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில்  போலீசார் ஆசிரியர் ராயப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தா.பழூர் அருகே வீடுகள் மீது அரசு சொகுசு பஸ் புகுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
    ஜெயங்கொண்டம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் வினோதன்(வயது 52). அரசு சொகுசு பஸ் டிரைவரான இவர், நேற்று அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து அரசு சொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சவூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். தா.பழூர் அருகே மதனத்தூர் கிராமத்தில் கும்பகோணம்- ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் அருகில் இருந்த முருகானந்தம்(36) என்பவரது வீட்டில் மோதி நின்றது. இதில் வீட்டின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. 

    இதில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. மேலும் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மொபட், ஜெயலட்சுமி(65) என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த கரடிகுளம் மேலத்தெருவை சேர்ந்த கதிரவன்(35), கொடுக்கூர் குடிகாடு நடுத்தெருவை சேர்ந்த சம்பத்(30), அரசு பஸ் டிரைவர் வினோதன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு பஸ்சை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
    செந்துறையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்க இருந்த நிலையில் கர்ப்பிணி மனைவி கண்ணீர் விட்டு கதறினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சுப்ரமணியன் (வயது 38), விவசாயி. இவர் செந்துறையில் இருந்து ராயம்புரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராயம்புரம் காலணி  அருகே சென்றபோது, எதிரே கான்கிரீட் ஏற்றிவந்த டிப்பர் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் பைக்கில் சென்ற சுப்பிரமணியன் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் லாரி டிரைவரை கைது செய்வதோடு, இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் செந்துறை-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் விவசாயியின் உறவினர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் விபத்தினை ஏற்படுத்திய வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர். 

    மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சுப்பிரமணிக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மலர்கொடி கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவருக்கு குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் மலர்கொடிக்கு அவரது பெற்றோர் வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணியன் விபத்தில் இறந்த சம்பவம் கேட்டு கர்ப்பிணியான அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறினார். சுப்ரமணியன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.    
    அரியலூர் அருகே நண்பனை கொன்று நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோவிந்தசாமி (வயது 29). இவர் கடந்த 24-ந்தேதி இரவு ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சாலையில், ராங்கியம் கிராமப்பகுதியில் தலையில் காயத்துடன் சாலையில் கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார்.

    இந்தநிலையில் கோவிந்த சாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த வேணு கோபால் மகன் வேல்முருகன் (26) மற்றும் சிலர் கோவிந்த சாமியை கொலை செய்ததாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோவிந்தசாமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    கோவிந்தசாமியும், வேல் முருகனும் நண்பர்கள். சம்பவத்தன்று மது வாங்கி தருமாறு கோவிந்தசாமி, வேல் முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேல் முருகன் இரும்பு கம்பியால் கோவிந்தசாமியின் தலையில் தாக்கியுள்ளார்.

    இதில் அவர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம், வேல்முருகன், கோவிந்தசாமியின் முகவரியை கூறியதோடு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துள்ளார். போலீசார் விசாரணையில் வேல்முருகன் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயங்கொண்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்: 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், திருச்சி கோட்ட கூட்டுக்குழு ஆகியோர் இணைந்து காந்தி பூங்கா முன்பாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயங்கொண்டம் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் சங்க கோட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர் வினாயகமூத்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி கண்மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கமலேஷ் சந்திரா பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். 

    குழந்தைகளின் படிப்பிற்காக ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், மீன்சுருட்டி, கங்கைகொண்டசோழபுரம், வரதராஜன்பேட்டை, கல்லாத்தூர், வாரியங்காவல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராமிய தபால் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது கொடுத்து ரூ.1கோடி மோசடி செய்த அரியலூர் மின்வாரிய பெண் அதிகாரி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய் மேற்பார்வையாளராக சோபனா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சோபனா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

    இதனிடையே 5 பேர்கள் கொண்ட மின்வாரிய தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததில் 2013 முதல் 2018 வரை சோபனா வேலை பார்த்த காலங்களில் பஞ்சாயத்துகளில் மின் இணைப்பு வழங்குவதில் போலி ரசீது வழங்கி சுமார் ரூ.1கோடி வரையில் மோசடி செய்தது கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோபனா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×