என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • பிரதமர் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார்.
    • அப்படியானால், மத்திய அரசு ஏன் வங்காளத்தின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான நிதியை நிறுத்தியது?.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது என விமர்சித்திருந்தார்.

    இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021 மாநில தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    அரசியல் சுற்றுலாப் பயணி நரேந்திர மோடி, வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார். அப்படியா? அப்படியானால், மத்திய அரசு ஏன் வங்காளத்தின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான ரூ.24,275 கோடியை வன்மத்துடன் நிறுத்தி வைத்துள்ளது?

    2021 சட்டமன்றத் தேர்தலில் அவமான தோல்விக்குப் பிறகு, வங்காளத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எங்கள் பகிரங்க சவாலை மோடி அரசாங்கம் ஏன் நிராகரித்துள்ளது?.

    மாநிலத்தில் கிராமப்புற வீட்டுவசதிக்கான மத்திய அரசின் நிதியை முடக்கியதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்காக தனது சொந்தக் கருவூலத்திலிருந்து ரூ. 30,000 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.

    இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும், ஏன் மம்தா பானர்ஜி தலையிட்டு, திட்டத்தின் கீழ் 12 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.14,400 கோடி செலவில் வீடுகளை வழங்க வேண்டியிருந்தது? பங்களார் பாரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 16 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க, மேற்கு வங்கத்தின் சொந்தக் கருவூலம் ஏன் கூடுதலாக ரூ.19,700 கோடியைச் சுமக்க வேண்டியிருந்தது? என கேள்வி எழுப்பியுள்ளது.

    பிரதமர் மோடி, "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வங்காளத்தின் அரசியல் களத்தில் ஒரு உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும். தடை ஏற்படுத்தும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த பாஜக அரசாங்கம் வரும்போதுதான் வங்காள மக்களுக்கு உண்மையான நலன் ஏற்படும் .

    இந்த நாட்டின் முதன்மை ஊழியராக நான் வங்காள மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய முயற்சிக்கிறேன். இந்த மாநிலத்தில் உள்ள வீடற்ற மக்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிரந்தர வீடுகளைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    மத்திய அரசு ஏழை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்காகத் தொடங்கியுள்ள நலத்திட்டங்களின் முழுப் பலன்களையும் நீங்கள் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அவற்றுக்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு.

    ஆனால் அது நடக்கவில்லை. இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் மிகவும் கொடுமையானது மற்றும் இரக்கமற்றது. ஏழைகளுக்காக மத்திய அரசால் அனுப்பப்பட்ட நிதியை இங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் வங்காளத்தின் ஏழை மக்களின் எதிரிகள். அவர்கள் உங்கள் கஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் கஜனாவை நிரப்புவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர்" என குற்றம்சாட்டியிருந்தார்.

    • பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள்.
    • மொழி மற்றும் வட்டார வழக்கில் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன.

    மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு சென்றிருந்தார். இன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்கு பெங்காலில் உள்ள மால்டாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஊடுருவல் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகில் பணப் பற்றாக்குறை இல்லாத, வளர்ந்த மற்றும் செழிப்பான நாடுகள் கூட ஊடுருவல்காரர்களை வெளியேற்றி வருகின்றன. மேற்கு வங்காளத்திலிருந்தும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது அதற்கு சமமாக அவசியமானது. பாஜக ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், ஊடுருவல்காரர்களை வேரறுக்கவும் பெரிய நடவடிக்கை எடுக்கும்.

    பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். மொழி மற்றும் வட்டார வழக்கில் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன. ஊடுருவல்காரர்களின் மக்கள்தொகை அதிகரித்துவருவதால், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் உள்பட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

    ஊடுருவல்காரர்கள் மாநிலத்தில் குடியேறுவதை உறுதி செய்வதற்காகவே திரிணாமுல் காங்கிரஸின் "சிண்டிகேட்" அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஊடுருவல்காரர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே ஒரு கூட்டணி உள்ளது.

    நீங்கள் இந்த கூட்டணியை உடைக்க வேண்டும். பாஜக அரசாங்கம் அமைந்தவுடன், ஊடுருவல் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

    நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதை மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த மதுவாக்கள் போன்ற அகதிகளுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மீது தாக்குதல்.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பெங்காலி பேசுவதற்காக சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    வடக்கு பெங்காலில் நிர்வாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்றிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2026 மேங்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கலவரத்தை தூண்ட திட்டமிடுகிறது.

    மேற்கு வங்க மாநிலத்திற்கு வெளியில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் உள்ள டெல்டங்கா இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மைனாரிட்டி சமூகத்தின் இந்த கோபம் நியாமானது.

    மேற்கு வங்கத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் துன்புறுத்தப்படுகிறார்கள். நாங்கள் அவர்களுடைய குடும்பத்துடன் நிற்கிறோம்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    வெளிமாநிலத்தில் பெங்கால் மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனால் முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    • கடந்த வாரம் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

    மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநர் ராஜீவ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி அமலாக்கத்துறை, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், விசாரணை முகமைக்கு மேற்கு வங்க காவல்துறையின் மூத்த அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும், அவர்கள் தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரியுள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தை அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது. 

    கடந்த வாரம் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையின் நடுவே மம்தா பானர்ஜி வந்து, விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிறரின் பங்கு குறித்து சிபிஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. அங்கு உடனடி நிவாரணம் கிடைக்காததைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    கடந்த வாரம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற அறையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும். 

    ஐ-பேக் (I-PAC) மீது நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக, தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று கோரி மேற்கு வங்க அரசு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் 'கேவியட்' மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

    • உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர்.
    • அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

    இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு கோடி பேரை நீக்க பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி முடிவு செய்துள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

    மேற்கு வங்க மாநில முதல்வராக மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையருக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    ஒருதலை பட்சமாகவும், தேர்தல் பவுதி அதிகாரிகள் (EROs) அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், SIR நடவடிக்கையின்போது, வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 54 லட்சம் பேரை நீக்கிவிட்டனர். உண்மையான வாக்காளர்களை மொத்தமாக நீக்கியுள்ளனர். அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், தங்களது பெயரை உறுதி செய்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்தபடியே, பாஜக-வால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி பெயர்களை நீக்கியது. இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள், SIR தரவுகளில் உள்ள பெயர்ப் பொருத்தமின்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டன. திருமணத்திற்குப் பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றிய பெண்களின் பெயர்களை அவர்கள் நீக்கிவிட்டனர்.

    பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டணி இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து மேலும் ஒரு கோடி வாக்காளர்கள் பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 

    • மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற மம்தா பானர்ஜி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் பிரசார பாடலை வெளியிட்டுள்ளது.

    "அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பெங்கால் வெற்றி பெறும்" என்பது முக்கிய பல்லவியாக இந்த பாடலில் அமைந்துள்ளது.

    மேலும், "புதிய திசையுடன் ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்கிறோம். உங்கள் இருள் புதிய விடியலுக்கு முன்னால் தோற்றுவிடும். நாங்கள் சிஏஏ அல்லது என்ஆர்சி-க்கு அஞ்ச மாட்டோம். தாய் வங்காளத்தின் வலிமையை நீங்கள் உணர்ந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. இந்த பூமியில் அனைவருக்கும் இடமுண்டு. அன்பு மிரட்டலுக்குப் பணியாது போன்ற வரிகள் இடம் பிடித்துள்ளன" போன்ற வரிகளும் இடம் பிடித்துள்ளன.

    நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் நிறுவனமான I-PAC மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது என குற்றம்சாட்டினார்.

    • நான் நேற்று செய்ததில் எந்த தவறும் இல்லை.
    • என்னுடைய கட்சி தரவுகளை அவர்கள் திருட முயன்றார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்நர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி I-PAC நிறுவனத்திற்கு சென்றார். இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக தரவுகளை திருட சோதனை நடத்தப்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இன்று அமலாக்கத்துறைக்கு எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணி தனது தலைமையில் நடத்தினார். இதனால் கொல்கத்தா ஸ்தம்பித்தது.

    போராட்ட பேணியின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    * என்னை யாராவது அரசியல் ரீதியாக தாக்க முயற்சி செய்தால், நான் அரசியல் ரீதியாக புத்துணர்ச்சி பெறுவேன்.

    * தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், மக்கள் அதிகாரத்தை திருடி மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அவர்கள் அதை பெங்காலில் செய்ய விரும்புகிறார்கள்.

    * நேற்று I-PAC நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையின்போது, அவர்கள் என்னுடைய கட்சியின் வியூகங்களை திருட முயன்றனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

    * டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது எங்களுடைய எம்.பி.க்களை போலீஸ் தாக்கினார்கள். ஆனால், பெங்காலில் பாஜக சிகப்பு கம்பளம் வரவேற்பை பெறுகிறது.

    * நான் நேற்று செய்ததில் எந்த தவறும் இல்லை. என்னுடைய கட்சி தரவுகளை அவர்கள் திருட முயன்றார்கள்.

    * டெல்லியின் மூத்த பாஜக தலைவர்கள் நிலக்கரி சுரங்க ஊழல் பணத்தை பெறுகிறார்கள். தேவைப்பட்டால் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிடுவேன்.

    * பெங்கால் சட்டசபை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். மத்தியில் பாஜக அரசு 2029 வரை தொடரக் கூடாது."

    * யாராவது ஒருவர் என்னை கொல்ல வந்தா், தற்பாதுகாப்பு உரிமை எனக்கு இல்லையா?

    * எம்.பி. கல்யாண் பானர்ஜியை பார்த்து, நம்முடைய அடுத்த இலக்கு, தேர்தல் ஆணைய அலுவலக போராட்டமாக இருக்கட்டும்.

    * பெங்கால் வெற்றிக்குப் பிறகு நாம் டெல்லியில் வெற்றி பெற வேண்டும். இந்தயாவை ஆளு பாஜகவை அனுமதிக்கக் கூடாது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • I-PAC நிறுவனம், அதன் இயக்குநர் வீடுகளில் ED சோதனை.
    • சோதனை எதிர்த்து போலீசார், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.

    மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை திடீரென திரணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் வீட்டில் சோதனை நடத்தியது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பான முக்கிய தரவுகளை திருடுவதற்கான சோதனை எனக் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

    மேலும், அமலாக்கத்துறைக்கு எதிராக மம்தா பானர்ஜி புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் போலீஸ் அமலாக்கத்துறைக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    மம்தா தனது புகாரில் பெயரிடப்படாத அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

    இதேபோல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தடை விதிக்கக் கோரி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    • தேர்தல் உத்தி வகுத்து கொடுக்கும் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.
    • தேர்தல் தொடர்பான முக்கியமான தரவுகளை திருட சோதனை நடத்தப்பட்டதாக மம்தா குற்றச்சாட்டு.

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுத்து கொடுக்கும் ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டது.

    கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர்.

    மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மதியம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொல்கத்தாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மேற்கு வங்கத்தில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு பணிகள் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எஸ்.ஐ.ஆர். பணிகள் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பல பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.

    பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு கூட அவர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    பெண் வாக்காளர்களின் பெயர்கள் ஏன் அதிக அளவில் நீக்கப்பட்டன? ஏன் இளைஞர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன? அவர்கள் வாக்களிக்க அனுமதி இல்லை.

    வாக்காளர் பட்டியலில் இருந்து 54 லட்சம் பெயர்களை நீக்கியுள்ளனர்.

    எஸ்.ஐ.ஆர். பணிகளின்போது ஏற்பட்ட மனஅழுத்தம் மற்றும் நெருக்கடியால் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பா.ஜ.க. ஒரு கொலைகார கட்சி என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்
    • புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்"

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது. கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார் .

    சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர். 

    மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சோதனையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

    தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை  பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

    அமலாக்கத்துறையின் இந்த சோதனை பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உள்ளார். அங்கிருந்து அமலாக்கத்துறை எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துக் கொள்கிறார்கள். சோதனையின்போது அங்கு காவலர்கள் யாரும் இல்லை. ஒரு பக்கம் SIR என்ற பெயரில் பெயர்கள் நீக்கப்படுகின்றன, மறுபுறம் அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல், கட்சியின் வியூகம் மற்றும் கட்சியின் திட்டங்களைச் சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா? நானும் அதேபோல பா.ஜ.க அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பினார். 

    மேலும் பா.ஜ.க-விற்குத் துணிவிருந்தால் தன்னை அரசியல் ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்" என்றும் அவர் சாடினார்.  மேலும் "பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் எங்களுடன் மோதி தோற்கடிக்கப் பாருங்கள். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், தரவுகளை திருடுகிறீர்கள். இதையெல்லாம் செய்வதால், உங்களிடம் இருக்கும் இடங்களையும் இழப்பீர்கள்." என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு (92) தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அமர்த்தியா சென்னின் வாக்காளர் விவரங்களில் வயது உள்ளிட்டவற்றில் சில முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக ஜனவரி 16-ஆம் தேதி பீர்பூம் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அமர்த்தியா சென் போன்ற புகழ்பெற்ற ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று சாடியுள்ளது.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும்  நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 

    பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், மோடி தலைமையிலான பாஜக அரசின் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமர்த்தியா சென் நிலைப்பாடு:

    பாஜகவின் கொள்கை 'இந்து ராஷிடிரா' இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும், சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதாகவும் அமர்த்தியா சென் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் பங்களிப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது நாட்டின் சமத்துவத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்

    விசாரணையின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்படுவது ஆங்கிலேயர் காலத்து அடக்குமுறையை நினைவூட்டுகிறது, கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் அரசு தலையிட்டு இந்துத்துவா சித்தாந்தத்தைத் திணிக்கிறது, பாஜக அரசு வணிகத்திற்குத் தரும் முக்கியத்துவத்தை, ஏழை மக்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்திற்குத் தருவதில்லை எனவும் அமர்த்தியா சென் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சனம் செய்திருந்தார். 

    .

    ×