என் மலர்
உத்தரகாண்ட்
- சார் தாம் யாத்திரை செல்ல கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
- கோவிலில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ, ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்:
இந்துக்களின் நான்கு புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பயணம் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய முதல் நாளில் கேதர்நாத் கோவிலில் சுமார் 29,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.
தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சார் தாம் புனித யாத்திரை மேற்கொள்வதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர்.
இதற்கிடையே, சார் தாம் யாத்திரை செல்வதற்கு கட்டாயமாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சார் தாம் யாத்திரைக்கான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை விஐபி தரிசனத்துக்கு மாநில அரசு தடையை நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரடோரி கூறுகையில், யாத்திரை செல்லும் பாதைகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனை மேற்கொள்வார்கள். புனித தலங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் வீடியோ மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உத்தரகாண்டில் உள்ள கிர் கார்பெட் தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார்.
- சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் விருப்பத்தை பெற்று உள்ளது.
கோடை காலத்தை மகிழ்ச்சியுடன் களிப்பதற்காக பலரும் சுற்றுலா செல்வதை விரும்புவர். அந்தவகையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உத்தரகாண்டில் உள்ள கிர் கார்பெட் தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அவர் ஜிம் கார்பெட் பூங்காவில் நடப்பது காட்டில் சவாரி செய்வது போல உள்ளது என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் விருப்பத்தை பெற்று உள்ளது.
A Jim Corbett safari is not just a walk in the park; it's a ride in the wild ?#IncredibleIndia pic.twitter.com/m9Rsiwh5xo
— Sachin Tendulkar (@sachin_rt) May 9, 2024
- புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது.
- இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேபால்:
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா,கலாபானி ஆகிய பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிய நாட்டின் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படம், நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது.
100 ரூபாய் நோட்டுகளில் லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி உள்ளிட்ட பகுதிகள் உள்ள நேபாளத்தின் புதிய வரைபடத்தை அச்சிட பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு செய்தித்தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். நேபாளத்தின் இந்த நடவடிக்கை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.
- அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷிகேஷ்:
பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள 7 கட்ட தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
உத்தரபிதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. இங்கு 5-வது கட்டமாக மே 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் மேலிடத்தின் பாரம்பரிய தொகுதியாகும்.
கடந்த முறை ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். இதற்கான ஓட்டுப்பதிவு நேற்று முடிவடைந்து விட்டது. அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை. மேல்சபை எம்.பி.யாக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என நாடே விரும்புகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் இருந்தும் எனக்காக குரல் எழுகிறது. நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நான் 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் (பா.ஜனதா) மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். பா.ஜனதாவை அகற்ற மக்கள் நினைக்கிறார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்து நாட்டு மக்கள் காந்தி குடும்பத்துடன் இருக்கிறார்கள்.
இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
இந்த மாதம் தொடக்கத்திலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். தற்போதும் அவர் அதே மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அமேதி தொகுதியில் ராபர்ட் வதேராவுக்கு 'சீட்' கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
- சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
- இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
- வேட்பாளர்களின் பிரசாரமும் இல்லை, வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவில்லை.
டேராடூன்:
உத்தரகாண்டில் 24 கிராமங்களில் மக்கள் வசிக்காத இடங்களாக இருப்பதால் அதனை பேய் கிராமங்களாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
உத்தரகாண்டில் வருகிற 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. கிராமங்கள் தோறும் தேர்தல் களைகட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த 24 கிராமங்களில் மட்டும் தேர்தலுக்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் அமைதியான முறையிலேயே இருக்கிறது. தேர்தல் கமிஷனும் இங்கு வாக்குச்சாவடிகள் ஏதும் அமைக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க இந்திய தேர்தல் கமிஷன் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, உத்தரகாண்டில் உள்ள 24 கிராமங்களில், தேர்தல் நாளான ஏப்ரல் 19-ந் தேதி ஒரு வாக்குச்சாவடி கூட இருக்காது.
அரசு அறிவிப்பின் படி இந்த கிராமங்கள் "பாலைவன கிராமங்கள்" என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் உள்ளூர் மக்களால் "பேய் கிராமங்கள்" என்று அழைக்கப்படுகின்றது.
மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தகவலின்படி , சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 16 மக்களவைத் தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்ற இந்த 24 கிராமங்கள், இந்த முறை தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது.
இந்த கிராமங்களை "மக்கள் வசிக்காத கிராமங்கள்" என்று மாநில இடம்பெயர்வு ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
அல்மோரா, டெஹரி, சம்பாவத், பவுரி கர்வால், பித்தோராகர் மற்றும் சாமோலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தக் கிராமங்கள் இப்போது மக்கள் வசிக்காதவையாகக் கருதப்படுகின்றது.
பிப்ரவரி 2023-ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி உத்தரகாண்டில் 2018 மற்றும் 2022-க்கு இடையில் மாநிலத்தில் உள்ள 6,436 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பைத் தேடி தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர். இருப்பினும் அவர்கள் அவ்வப்போது தங்கள் கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

அதே நேரத்தில், மாநிலத்தில் உள்ள 2067 கிராமங்களில் இருந்து சென்றவர்கள் நிரந்தர இடம்பெயர்வாக சென்றுள்ளனர். வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றைத் தேடி மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர், அவர்கள் திரும்பி வரவில்லை.
புலம்பெயர்தல் ஆணையம் நடத்திய ஆய்வின் அறிக்கையில்:- ஏராளமான தனிநபர்கள் தங்கள் மூதாதையர் நிலங்களை விற்றுள்ளனர், பல நிலங்களை தரிசாக விட்டுவிட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், அல்மோரா மாவட்டத்தில் 80 கிராம பஞ்சாயத்துகள் நிரந்தர இடம்பெயர்வு காரணமாக கைவிடப்பட்டது.
2018 மற்றும் 2022-க்கு இடையில், மாநிலத்தில் உள்ள 24 கிராமங்கள் முழுவதுமாக "மக்கள் வசிக்காதவையாக" மாறிவிட்டன என்று அந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வெறிச்சோடிய 24 கிராமங்கள் இந்த முறை பொதுத் தேர்தலின் போது எந்தவிதமான அதிர்வையும் காணாமல் அமைதியாகவே இருக்கும்.
அங்கு வேட்பாளர்களின் பிரசாரமும் இல்லை, வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து உத்தரகாண்ட் தலைமை தேர்தல் அதிகாரி புருஷோத்தம் கூறுகையில்:-
இந்த பிரச்சினை இடம்பெயர்வோடு தொடர்புடையதாக இருந்தாலும், 50-க்கும் குறைவான வாக்காளர்கள் வசிக்கும் மாநிலத்தின் மிகவும் தொலைதூர பகுதிகளில் கூட தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளை நிறுவியுள்ளது. அணுக முடியாத பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய வாக்களிப்பை எளிதாக்குவதே ஆணையத்தின் நோக்கமாகும்."
சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, "2018 மற்றும் 2022-க்கு இடையில், மாநிலத்தில் உள்ள 2,067 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மொத்தம் 28,531 பேர் நிரந்தர இடம்பெயர்வுக்கு உட்பட்டுள்ளனர், மாவட்ட தலைமையகம் அல்லது பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
35.47 சதவீதம் பேர் அருகிலுள்ள நகரங்களைத் தேர்ந்தெடுத்தும் 23.61 சதவீதத்தினர் பிற மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர். 21.08 சதவீதத்தினர் மாநில எல்லைகளைத் தாண்டி பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர் என்றார்.
- கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர்.
- இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள் என்றார் பிரியங்கா.
டேராடூன்:
உத்தரகான்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இங்குள்ள ராம் நகருடன் எங்கள் குடும்பத்துக்கு நீண்ட தொடர்பு உள்ளது.
காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள்? கடந்த 10 ஆண்டாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை.
10 ஆண்டாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ.க. இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுகிறது.
கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால் ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும்? சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்துள்ளது.
முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும்?
இமாசலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி தேவ பூமி என வர்ணித்தார். தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சில மாதங்களுக்குப் பிறகு ஒரு பேரழிவு ஏற்பட்டபோது, மாநில மக்களுக்கு நிவாரணமாக ஒரு பைசா கூட மோடி அரசு வழங்கவில்லை. அனைத்து நிவாரணங்களும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியது என தெரிவித்தார்.
- 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
- காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது.
மத்திய பாதுகாப்புத் மந்திரி ராஜ்நாத் சிங் இன்று உத்தரகாண்ட் மாநிலம் கவுசாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைகின்றனர்.
காங்கிரஸ் கட்சி தற்போதில் இருந்து இன்னும் சில வருடங்களில் டைனோசர் போன்று அழிந்துவிடும் என அச்சப்படுகிறேன். 2024-க்கு பிறகு சில ஆண்டுகளில், நாம் காங்கிரஸ் பெயரை எடுத்தால், யார்? அது என்று குழந்தைகள் கேள்வி கேட்பார்கள்.
தினசரி காங்கிரஸ் கட்சிக்குள் அடிதடி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் போன்றதாகிவிட்டது. ஒருவருக்கொருவர் சட்டையை கிழித்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
- நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
- மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.
பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் நிலையற்ற மற்றும் பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம் எதிரிகள் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு அதை சாதாகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், மோடி தலைமையின் கீழ் வலுவான அரசாங்கம் அமைந்த பிறகு, நமது படைகள் பயங்கரவாதிகளை அவர்களுடைய இடத்திலேயே வீழ்த்தின.
70 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் நிறைவேற்றல், ஒரே ரேங்க் ஒரே பென்சன், சட்டமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற சட்டங்களை நிறைவேற்றும் தைரியத்தை வலுவான பா.ஜனதா அரசு பெற்றது.
பலவீனமான காங்கிரஸ் அரசாங்கத்தால் கடந்த காலங்களில் எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்த முடியவில்லை. தற்போது எல்லை அருகே சாலைகள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.
ஊழல்வாதிகள் நாட்டை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் தனக்கு எதிராக உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சக்தியை நீக்குவதாக சொல்கிறார்கள். இதற்கு உத்தரகாண்ட் மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஐந்து மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
- பல்வேறு மாநிலங்களில் பிரதமர் மோடி ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்து வருகிறார்.
- முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி பிரதமர் மோடிக்கு உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.
டேராடூன்:
பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் ரோடு ஷோ, பேரணி மற்றும் பிரசாரங்கள் செய்தும் வருகிறார்.
இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் உள்ள ஹரித்வார், தெஹ்ரி கர்வால் மற்றும் பவுரி கர்வால் ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் ரிஷிகேஷில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரிஷிகேஷில் நடைபெற்ற பேரணி நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அங்கு அவருக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி உடுக்கை ஒன்றை பரிசாக அளித்தார்.
பரிசைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த உடுக்கையை அடித்து மகிழ்ந்தார். அதன்பின் பேரணியில் உரையாற்றினார்.
ஏப்ரல் 2-ம் தேதி உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசினார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு உத்தரகாண்டில் அவர் நடத்தும் இரண்டாவது பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- உத்தரகாண்டில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
- அப்போது பேசிய அவர், ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர் என்றார்.
ருத்ராபூர்:
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பாஜக ஏற்பாடு செய்திருந்த வாகனப் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்.
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர்
கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் என தெரிவித்தார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பகவான் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன்பின் பொதுமக்கள் பகவான் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியா அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் காத்திருக்கவும் என பா.ஜனதா கேட்டுக்கொண்டது.
அதனால் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில முதல்வர புஷ்கர் சிங் தாமி தனது மந்திரிசபை மந்திரிகளுடன் அயோத்தி சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று உத்தரகாண்டில் இருந்து விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டனர். அப்போது ஜெய் சிய ராம் என முழங்கினர்.






