என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

    முந்தைய பா.ஜனதா ஆட்சி மீதான ஊழல் புகார்கள் குறித்து அசோக் கெலாட் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் கடந்த மாதம் போராட்டம் நடத்தினார்.

    சச்சின் பைலட்டின் தந்தையும், மறைந்த முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜேஷ் பைலட் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சச்சின் பைலட், தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதை மறுத்தது.

    இந்நிலையில், ராஜேஷ் பைலட் நினைவுநாளையொட்டி, தவுசா நகரில் உள்ள ஒரு விடுதியில் ராஜேஷ் பைலட் சிலையை சச்சின் பைலட் திறந்து வைத்தார். தனிக்கட்சி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    என்னை பொறுத்தவரை, மக்களிடையே நம்பகத்தன்மை பெறுவதற்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கிறேன். மக்கள் நம்பிக்கை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள், நம்பகத்தன்மை ஆகியவைதான் அரசியலில் மிகப்பெரிய சொத்துகள்

    நான் அரசியலில் நுழைந்து கடந்த 22 ஆண்டுகளாக, இந்த நம்பிக்கை குறைந்து போகும் அளவுக்கு எந்த காரியமும் செய்யவில்லை. இனிவரும் காலங்களிலும் அந்த நம்பிக்கைதான் எனக்கு மிகப்பெரிய சொத்து. அது எப்போதும் குறைந்துபோக விட மாட்டேன். இது சத்தியம்.

    எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும், மக்களுக்காக போராடி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வேன். கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

    நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ஆட்சியில் இருந்த பா.ஜனதாவை துணிந்து எதிர்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.
    • காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல் இன்று வரை உட்கட்சி பூசல் ஓயவே இல்லை.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை.

    முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை.

    அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓரம் கட்டினார். ஒருகட்டத்தில் கொந்தளித்துப்போன சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

    இப்படி ஒவ்வொரு முறையும் பைலட் கலகக் குரல் எழுப்பும் போதெல்லாம் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது. ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் சச்சின் பைலட் கோஷ்டியிடம் இருந்து வந்தது.

    இதற்கிடையே, காங்கிரசில் இருந்து சச்சின் பைலட் வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், நாளை மறுதினம் தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

    • அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
    • நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.

    பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம்.
    • நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் எதுவும் இல்லை என தகவல்.

    ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது.

    பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் எதுவும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    • 100 யூட்டுகள் வரை பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிப்பு.
    • அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன். பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
    • சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்பா? என எதிர்க்கட்சி விமர்சனம்

    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். நான்கரை ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதனால் மக்கள் மனதை கவரும் வகையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை நழுவ விட்ட பா.ஜனதா, கெலாட்- சச்சின் பைலட் இடையிலான மோதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை கையில் எடுத்து ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது. இந்த நிலையில் அசோக் கெலாட் அறிவிப்பு பா.ஜனதாவை சற்று அச்சம் அடைய செய்துள்ளது.

    இதற்கிடையே, நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளை அடித்துவிட்டு, ஆட்சியின் கடைசி காலத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதா? என சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ராஜேந்திர ரதோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜேந்திர ரதோர் கூறியதாவது:-

    மோடியின் மாநாடுகளை பார்த்து அசோக் கெலாட் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால்தான் நேற்றிரவு வலுக்கட்டாயமாக இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    நான்கரை ஆண்டுகள் மக்களை கொள்ளையடித்துவிட்டு, தற்போது தேர்தலை அணுகுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் திடீரென உங்களுடைய அறிவிப்புகளை மக்கள் நம்புவதற்கு ஒன்றும் முட்டாள்கள் அல்ல. உங்களுடைய கொள்கை மற்றும் நோக்கம் குறைபாடானது.

    இவ்வாறு ரதோர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது.
    • அங்கு முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல் மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார்.

    ஜெய்ப்பூர்:

    மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கருடன் சேர்த்து ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

    இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என முதல் மந்திரி அசோக் கெலாட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    இதனால், அவர்கள் அந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. 100 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

    இதேபோல், 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதுடன், நிலையான கட்டணம், பிற கட்டணங்கள் உள்ளிட்டவை 200 யூனிட் வரை தள்ளுபடி செய்யப்படும். அவர்களுக்கான மின் கட்டணத்தொகையை அரசே செலுத்தி விடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    • நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.
    • காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும் என்றார்.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், 9 ஆண்டுகள் நிறைவையொட்டி அஜ்மீர் நகரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலனுக்காக பாஜக அரசு 9 ஆண்டுகாலத்தை அர்ப்பணித்துள்ளது.

    2014க்கு முன், ஊழலுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினர். முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சியை நடத்தியது.

    காங்கிரஸிடம் புதிய உத்தரவாதத்தில் சூத்திரம் உள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் உத்தரவாதங்களை நிறைவேற்றுகிறார்களா? இல்லை. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக்கும்.

    ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம், இலவச மின்சாரம் முதல் மலிவான சமையல் எரிவாயு வரையிலான சமூக நலத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையை அகற்றுவோம் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளித்தது. ஆனால் அது ஏழைகளுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக மாறியது. ஏழைகளை தவறாக வழிநடத்துவதும், அவர்களைப் பின்வாங்குவதும் காங்கிரஸின் கொள்கையாக உள்ளது.

    இதனால் ராஜஸ்தான் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்.

    கடந்த திங்களன்று பல முயற்சிகளுக்கு பிறகு ஒற்றுமையை வெளிப்படுத்திய போதிலும் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

    நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி, வளர்ச்சியைத் தடுக்கும் ஊழல் அமைப்பை காங்கிரஸ் உருவாக்கியது.

    இப்போது, உலகம் இந்தியாவைப் பற்றி பேசுகிறது. மேலும் இந்தியா தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிக அருகில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    நாட்டின் நாயர்களான முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூட காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது.

    ஆனால், பாஜக அரசு ஒரே தரம், ஒரே ஓய்வூதியம் திட்டத்தினை நாட்டில் அமல்படுத்தியதுடன், அவர்களுக்கு அரியர்ஸ் தொகையையும் வழங்கியது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருந்தது. பிரதமருக்கு மேல் உச்சபட்ச அதிகாரம் ஒருவரிடம் இருந்தது. இளைஞர்களின் கண்முன்னே இருள் சூழ்ந்திருந்தது. இன்று இந்தியா உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜஸ்தானில் 9 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
    • நிறைவு விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் விரைந்தார்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் விரைந்தார்.

    நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி அம்மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    கோவில் கருவறையில் உள்ள பிரம்மா சிலை முன்பு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார்.

    பின்னர் பிரதமர் மோடிக்கு அச்சகர் பிரசாதம் வழங்கினார்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.

    வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே கோஷ்டி மோதல் நீடித்து வந்தது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் தலைமையில் இருவரையும் தனித்தனியே சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பாஜகவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இது இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஒன்றாக போட்டியிடுவார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என கூறியுள்ளார்.

    • ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
    • பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேரும், ஆல்வார், ஜெய்ப்பூர் மற்றும் பிகானீரில் தலா ஒருவர் பலியாகினர்.

    மேலும் பலர் காயமடைந்தனர்.

    டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், புயல் காரணமாக கடந்த இரு தினங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    • பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.
    • பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறி முதல் செய்தனர். அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.

    அது லஞ்சப்பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×