என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
    • காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இன்று பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் சுமார் 30 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

    பேருந்து மாணவர்களை அவர்களது பள்ளிக்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, பொக்ரான் நகர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக சங்கரா காவல் நிலையத்தின் (ஜெய்சால்மர்) உதவி சப் இன்ஸ்பெக்டர் கைலாஷ் சந்த் கூறினார்.

    காயமடைந்த மாணவர்களில் பலர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் உள்ளூர் மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.

    வேறு சில குழந்தைகளின் பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி கூறினார். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    விபத்து குறித்து, ஜோத்பூர் ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா கூறுகையில், "ஜெய்சால்மரில் இருந்து 11 பள்ளிக் குழந்தைகள் சிகிச்சைக்காக ஜோத்பூருக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். ஆனால் விக்ரம் சிங் என அடையாளம் காணப்பட்ட ஊழியர் ஒருவர் காயம் அடைந்து உயிரிழந்தார்" என்றார்.

    • இரட்டை என்ஜினில் ஒன்று எப்போதுமே பழுது
    • ஒற்றை என்ஜின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது எனது பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிலர் அவர்களுடைய அரசாங்கத்தை (மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்வதால்) இரட்டை என்ஜின் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு இந்தியன் எப்போதுமே பழுதாகியே உள்ளது. உண்மையான என்ஜின் ராஜஸ்தான் அரசு.

    அவர்களுடைய இரட்டை என்ஜின் அரசைவிட இந்தியாவில் உள்ள எங்கும் ஒற்றை என்ஜின் ஆன எங்கள் ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. எங்களுடைய ஒற்றை என்ஜின் பாதுகாப்பானது உறுதியானது.

    பாரதிய ஜனதா அரசு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான், நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசான இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.

    மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை, அவர்களது கணக்கில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அசோக் கெலாட், இந்த திட்டத்திற்கான சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமையாகவே இருக்கும். வரும் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறினார்

    சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் 21 தலைவர்கள், 42 பொதுச்செயலாளர்கள், ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளர், 121 செயலாளர் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • பிரதமர் மோடி காணொலி மூலம் ரிமோட் பட்டனை அழுத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
    • பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

    ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

    அமிர்தசரஸ்-ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமையான விரைவுச் சாலைப் பகுதியையும், பசுமை ஆற்றல் வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான டிரான்ஸ்மிஷன் லைனின் முதல் கட்டத்தையும், பிகானரில் இருந்து பிவாடிக்கு டிரான்ஸ்மிஷன் லைனையும், 30 படுக்கைகள் கொண்ட மாநில இஎஸ்ஐசி மருத்துவமனை ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணித்தார்.

    பிகானேர் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு மற்றும் 43 கிமீ நீளமுள்ள சுரு-ரதன்கர் பிரிவின் இரட்டிப்பாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

    பிகானேரில் உள்ள நோராங்தேசரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் ரிமோட் பட்டனை அழுத்தி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

    மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிகானீர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும்.
    • இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.

    இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது. வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.

    கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும்  நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும்.

    அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

    ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.

    • 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.

    கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

    • ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது
    • மோடிக்கு கிடைத்த மரியாதை, 130 கோடி மக்களுக்குமான மரியாதை

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

    நேற்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா மத்திய பிரதேச மற்றும் சத்தீஸ்கர் பேரணியில் பேச, உள்துறை அமைச்சர் அமத் ஷா ராஜஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பேசினார். அப்போது ஊழலில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பர் ஒன் என விமர்சனம் செய்தார்.

    மேலும் பேரணியில் அவர் பேசியதாவது:-

    ஊழலில் அசோக் கெலாட்டின் அரசு நம்பன் ஒன்-ஆக திகழ்கிறது. ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது. இங்கே (பேரணி நடைபெற்ற மெவார் மைதானம்) கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சியமைக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

    மோடிக்கு உலகளவில் கிடைத்த மரியாதை, அது பா.ஜனதா கட்சிக்கோ அல்லது மற்ற ஒருவருக்கோ கிடைத்த மரியாதை அல்ல. 130 கோடி மக்களுக்கும் கிடைத்த மரியாதை. ராஜஸ்தானில் 43 லட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    மத்திய பிரதேசம் கார்கோனில் நடைபெற்ற பெரணியில ஜே.பி. நட்டா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை விமர்சனம் செய்து பேசினார் ''லட்லி லட்சுமி யோஜனா (பெண் குழந்தைகள் படிப்பிற்காக சிவராஜ் சவுகான் கொண்டு வந்த திட்டம்) திட்டத்தை கமல்நாத் நிறுத்தினார். தற்போது மக்கள் நவம்பர் மாதம் வரும் தேர்தலில் அவரை நிறுத்திவிடுவார்கள் (தேர்தல் தோல்வி)'' என்றார்.

    மேலும், ''மத்தியில் மோடி, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் அரசு. இரண்டு அரசுகளும் சேர்ந்து மக்களுக்கு தேவையானவற்றை உடனடியாக கொண்டு சேர்ப்பார்கள்'' என்றார்.

    • குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது.
    • ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசின் ஊழல் கழுத்து அளவு ஆழமாக உள்ளது.

    ஜெய்ப்பூர் :

    பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராட்டி உள்ளார். ராஜஸ்தானின் பரத்பூரில் கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசியபோது, இதை அவர் தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குடும்ப அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை பா.ஜனதா அழித்து விட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் குடும்பங்களின் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பா.ஜனதாவிலோ கட்சிதான் குடும்பம் ஆகும். முன்பெல்லாம் இந்திய பிரதமர்கள் அமெரிக்காவுக்கு செல்லும்போது, பயங்கரவாதம் குறித்து மட்டுமே விவாதித்து விட்டு வந்துவிடுவார்கள்.

    ஆனால் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது, விண்வெளித்துறை, அன்னிய நேரடி முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டுவிட்டு வந்து இருக்கிறார்.

    தற்போது இந்தியாவை குறித்து பேசும்போது, யாரும் பாகிஸ்தானை குறிப்பிடுவதில்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனை நாம் அடைந்துள்ளோம்.

    உலகம் முழுவதும் பிரதமர் மோடியை புகழ்வதை பார்த்து காங்கிரஸ் கட்சிக்கு வயிற்றெரிச்சல். எனவே அவர்கள் பிரதமரை 'பாம்பு', 'தேள்', 'டீ விற்பவன்' என்றெல்லாம் அழைக்கிறார்கள். ராஜஸ்தானில் ஆளும் கெலாட் அரசின் ஊழல் கழுத்து அளவு ஆழமாக உள்ளது. ஊழல் செய்வதற்கு தங்கள் கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் அவர்கள் வெளிப்படையாக லைசென்ஸ் கொடுத்திருக்கிறார்கள். எங்கும் ஊழல் பரவி இருக்கிறது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடி வரை ஏலம் போன செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது.
    • தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் செம்மறி ஆட்டுக்கு கொடுக்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூசிங். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் செம்மறி ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த ஆட்டின் வயிற்று பகுதியில் உருது வாசகம் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவர், அந்த கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்தார். அப்போது செம்மறி ஆட்டின் உடலில் 786 என்ற எண்கள் காணப்பட்டது தெரிய வந்தது. இந்த 786 என்ற எண்கள் இஸ்லாமிய மதத்தில் புனிதம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

    இதனால் அந்த செம்மறி ஆட்டை விற்பதற்கு ராஜூசிங் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    செம்மறி ஆட்டின் உடலில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என எனக்கு தெரியாது.

    இதுபற்றி இஸ்லாமிய சமூக உறுப்பினர்கள் சிலருடன் ஆலோசித்த போதுதான், அது 786 என்ற எண் என கூறினர். பக்ரீத்தையொட்டி இந்த செம்மறி ஆட்டை அதிக விலை கொடுத்து வாங்க சிலர் முன்வந்தனர். ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கூட கொடுத்தும் வாங்குவதற்கு முன்வந்தனர். ஆனால் அதனை விற்க நான் தயாராக இல்லை. ஏனென்றால் அந்த ஆடு என்னிடம் மிகவும் அன்பாக உள்ளது என்றார்.

    ரூ.1 கோடி வரை ஏலம் போன அந்த செம்மறி ஆட்டுக்கு தற்போது சிறப்பு கவனிப்பு வழங்கப்படுகிறது. தினமும் மாதுளை, பப்பாளி, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் கொடுக்கப்படுகிறது.

    • கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார்.
    • இளம்பெண்ணை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க தலித் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொலை செய்யப்பட்டவர் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பிற்காக சென்று வந்துள்ளார். அவரை கடந்த 15 நாட்களாக தினேஷ் என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் வகுப்பிற்காக அந்த பெண் சென்ற போது கஜூவாலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மனோஜ் குமார் மற்றும் பாகீரத்குமார் என்ற 2 போலீஸ்காரர்கள் மற்றும் தினேஷ் உள்ளிட்ட கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை எடுக்க கூடாது என பெண்ணின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு தேஜஸ்வனி கவுதம் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    முதல் கட்டமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களான மனோஜ் குமார், பாகீரத் குமார் ஆகிய 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வரதட்சணை வழக்கில் மனைவிக்கு பராமரிப்பிற்காக 2.25 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
    • பணம் இல்லாததால் கணவன் சிறையில் அடைப்பு. உறவினர்கள் முதல் தவணை செலுத்த முன்வந்தனர்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தஷ்ரத் குமாவாத் என்பவர் வழக்கில்தான் இந்த வினோதம் நடைபெற்றுள்ளது. இவருக்கு சுமார் 10 வருடத்திற்கு முன் சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த சில வருடங்களில் தஷ்ரத் குமாவாத் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜெய்பூராஸ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மனைவியின் பராமரிப்பிற்காக 2.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த தொகையை தஷ்ரத்தால் செலுத்த முடியவில்லை. இதனால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    ஜெயிலில அடைக்கப்பட்டுள்ள தஷ்ரத்தின் உறவினர்கள் அவரை வெளியில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். இதனால் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை முதல் தவணையாக நீதிமன்றத்தில் செலுத்த தொடங்கினார்.

    வரதட்சணை புகார் அளித்த தஷ்ரத்தின் மனைவி பணத்தை எண்ணிஎண்ணி சோர்வாகிட வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ.... முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை ஏழு பெட்டிகள் வைத்து கொண்டு வந்தனர்.

    இதனால் நீதிபதி வியப்படைந்தார். இதெல்லாம் என்னது என கேட்க...

    ஐயா... நாங்கள் தஷ்ரத்தின் உறவினர்கள். தஷ்ரத் கட்ட வேண்டிய பணத்தில் முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக கொண்டு வந்துள்ளோம். ஏழு பெட்டிகளில் 280 கிலோ எடைகொண்டது என்றனர்.

    என்ன இருந்தாலும் இதை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் பணத்தை எண்ணி பாதுகாக்கும்படி உத்தரவிட்டார்.

    நாணயங்களாக வழங்குவது வேண்டுமென்றே துன்புறுத்தல் செயலாகும். இது மனிதாபிமானமற்ற செயல் என்று சீமாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். ஆனால் தஷ்ரத் சார்பில் ஆஜரான வக்கீல், நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்க இந்திய பணம ஆகும் என்றார்.

    55 ஆயிரம் ரூபாயும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக இருந்தன.

    • அசோக் கெலாட் மக்களுக்காக உழைத்திருந்தால் விளம்பர போஸ்டர் எதற்கு
    • டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சிதான்

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று ராஜஸ்தானில் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார்.

    நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. நீங்கள் வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் எங்களை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.

    நாங்கள் இங்கே வரும்போது, அசோக் கெலாட் போஸ்டர்கள் கங்காநகர் முழுவதும் மற்றும் இந்த மைதானத்திலும் ஒட்டப்படிருந்ததை பார்த்தோம். அவர் கடந்த 5 வருடம் மக்களுக்காக உழைத்திருந்தால், இந்த போஸ்டர்கள் தேவையிருந்திருக்காது.

    பேரணியின்போது சிலர் இங்கே வந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதெல்லாம் கோழைத்தனம். அசோக் கெலாட் 5 வருடம் ஏதும் செய்யவில்லை. இதனால் ஆம் ஆத்மியின் பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது.
    • ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோலி கிராமத்திற்கு திருமண ஊர்வலம் புறப்பட்டது. இதில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்து அசத்தினார். ஒரு டிராக்டரை மணமகனே ஓட்டினார். மொத்தமுள்ள 51 டிராக்டர்களில் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.

    இதுகுறித்து மணமகன் கூறுகையில், "தனது குடும்பத்தின் பிரதான தொழில் விவசாயம். ஒரு விவசாயியின் அங்கீகாரமாக டிராக்டர் கருதப்படுகிறது. அவரது தந்தையின் திருமண ஊர்வலம் ஒரு டிராக்டரில் புறப்பட்டது. எனவே, எனக்கு ஏன் 51 டிராக்டர்கள் ஊர்வலத்தில் இருக்கக்கூடாது என்று அனைவரும் நினைத்தனர்" என்றார்.

    மேலும், மணமகனின் தந்தை, ஜெதாராம் கூறுகையில் "ஒரு டிராக்டர் 'பூமியின் மகன்' என்று கருதப்படுகிறது. என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே 20-30 டிராக்டர்கள் இருந்தன. என் விவசாய நண்பர்களுடன் சேர்ந்து, அவற்றில் மொத்தம் 51 டிராக்டர்களை நான் பதிவு செய்தேன். காலையில் ஊர்வலம் புறப்பட்டபோது மேலும் 10-12 டிராக்டர்கள் சேர்ந்தன. டிராக்டர்கள் மூலம் விவசாயம் செய்கிறோம். அதற்கு ஏன் ஊர்வலம் செல்ல முடியாது? என்று நினைத்தோம்.

    ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்" என்றார்.

    ×