என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பஸ் என்ஜின் பழுதாகி தீப்பற்றி எரிந்தது.
    • பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி கடற்கரை, மெரினா கடற்கரை, ஈடன் பீச், சுண்ணாம் பாறு படகு குழாம், திருக்காஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புதுச்சேரி அரசு சாலை போக்குரவத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை பி.ஆர்.டி.சி. மினி பஸ் சின்ன வீராம்பட்டினம் பகுதிக்கு சென்றுவிட்டு, 6 பெண்கள் உட்பட 10 சுற்றுலா பயணிகளுடன் திரும்பி வந்து கொண்டிருந்தது.

    அப்போது ஓடைவெளி அரசு ஆரம்பப் பள்ளி எதிரே வந்தபோது, பஸ்சின் என்ஜின் பழுதாகி தீப்பற்றி எரிந்ததுடன் அதிலிருந்து அதிக புகை வெளியேறியது. இதை கண்டதும் சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர்.

    இதையடுத்து டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். அப்போது உயிர்பிழைத்தால் போதும் என்று எண்ணி பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.

    பின்னர் டிரைவரும், கண்டக்டரும், என்ஜினில் இணைக்கப்பட்ட பேட்டரி வயரை கழற்றி விட்டு தீ விபத்தை தடுத்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 70 பேர் பயணம் செய்ய முடியும்.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து விமான சேவை தொடங்கி வைக்க அழைப்பு.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி லாஸ்பேட்டை யில் உள்ள விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, ஐதராபாத் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான சேவை கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவையை தொடங்க இண்டிகோ நிறுவனம் முன்வந்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    புதுச்சேரி விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன சேவைக்காக பிரத்தியேக அலுவலக அறைகள், தொழில்நுட்ப அறைகள், இண்டிகோ நிறுவனம் ஊழியர்கள் பணியாற்றுவதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விமான சேவை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ளது.

    புதுவையில் இருந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி தினமும் காலை 11.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.25 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மதியம் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    அங்கிருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். புதுவையில் இருந்து 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில் 70 பேர் பயணம் செய்ய முடியும்.

    இந்தநிலையில் இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை சட்டசபை வளாகத்திற்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

    அப்போது அமைச்சர் லட்சுமிநாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தற்பொழுது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.

    அதன் காரணமாக 17.12.2024 முதல் 19.12.2024 தேதிகளில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மற்றவர்கள் புதுச்சேரி கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இந்த அறிவிப்பு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அவ்வப்பொழுது வெளியிடப்படும் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.
    • புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் களைகட்டத் தொடங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது.

    இதுதவிர இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் பட்டியலில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில் 2025-ம் ஆண்டு பிறக்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு புதுச்சேரி இப்போதே தயாராகி வருகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து புத்தாண்டு வரை ஒரு வார காலத்திற்கு புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.

    அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, புதுவையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பீச் ரெசார்ட்டுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஓட்டல்களில் உள்ள அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் புதுவையில் களைகட்டத் தொடங்கி உள்ளது.

    மேலும் டிசம்பர் 31-ந் தேதி மாலை முதல் நள்ளிரவு வரை நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியார் மூலம் பிரபலங்கள் பங்கேற்க கூடிய இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அளவில்லாத அசைவ உணவுடன் மது பானங்களும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவும் தொடங்கியுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி புதுச்சேரி நகர பகுதிகளான அண்ணாசாலை, நேருவீதியில் மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த வீதிகள் மின்னொளியில் ஜொலிப்பது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது.

    புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இது உள்ளது.

    போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பணியில் இருந்தாலும் இந்திரா காந்தி சிக்னல், ராஜிவ் காந்தி சிக்னல், நெல்லித்தோப்பு, கொக்கு பார்க் சிக்னல்களில் நாள் முழுதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரும் போது மட்டும் போக்குவரத்து போலீசார் தனி கவனம் செலுத்துகின்றனர்.

    புத்தாண்டை கொண்டாட இப்போதே வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவியத்தொடங்கி உள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நேற்று மாலை புதுச்சேரி நகர பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டது.

    • வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது.
    • வரிகள் செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் பார்சலில் இருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய தபால் துறை மூலம் நம் நாட்டில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது.

    ஒரு பார்சலில் ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் அனுப்பினால் அதை சேவை ரீதியாக எடுத்துக் கொள்ளாமல், வணிக ரீதியாக கருதப்படும் என பல நாடுகள் சர்வதேச தபால் துறை அமைப்பிற்கு தற்போது தெரிவித்துள்ளன.

    உதாரணத்திற்கு உங்களின் உறவினர் ஒருவர் பிரான்சில் இருக்கிறார்.அவருக்கு நீங்கள் தபால் துறை பார்சல் மூலம் 3 சட்டைகள் அனுப்புகிறீர்கள். இதில் 2 சட்டைகள் மட்டுமே சேவையாக கருதப்படும். 3-வது சட்டை வணிக ரீதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனை ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக கருதப்படுகிறது.

    இதனால் பார்சல் அனுப்புவோர் ஏற்றுமதிக்கு கொடுக்க வேண்டிய ஆவணங்கள் ஐ.இ.சி., பதிவு எண் மற்றும் ஜி.எஸ்.டி., வரிகளுக்கு செலுத்தப்பட்ட ஆவணம் கட்டாயம் அந்த பார்சலில் இருக்க வேண்டும்.


    இந்த ஆவணங்கள் இல்லையெனில் அந்த பார்சல் டெலிவரி செய்யப்படாமல் உடனடியாக திருப்பி அனுப்பப்படும். இதற்கு ஆகும் சேவை கட்டணங்களை செலுத்திய பின்னரே பார்சல் அனுப்பியவருக்கு பொருள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

    இந்தியாவில் இருந்து பார்சல்கள் மூலம் அனுப்பப்படும் பொருட்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

    இதனால் தங்கள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படுவது டன், அன்னிய செலாவணி வருவாயும் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல்வேறு நாடுகள் இதுபோன்ற பார்சல்களை தடை செய்து வருகின்றன.

    இதுபோல் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் மூலம் அனுப்பப்பட்ட சில பார்சல்கள் இதுபோன்ற பிரச்சனையில் திருப்பி அனுப்பப்பட்டதால் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவோர் தபால் துறையில் விசாரித்து அனுப்புவது நல்லது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    அதன்பின்னர் புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் திட்டத்தை அமல்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

    புதுச்சேரியில் ஏற்கனவே போலீசார் மற்றும் அரசுஊழியர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு ஊழியர்களும், சில வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.

    இந்த சூழலில் தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் வருகிற ஜனவரி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதனை அமல்படுத்தவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
    • பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ்சிவன் நேற்று இரவு 7 மணிக்கு புதுச்சேரி வந்தார். புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்ற அவர் அங்கு சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான `சீகல்ஸ்' ஓட்டலை விலை பேசினார். இதனை கேட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்த அவர் விக்னேஷ் அது அரசு சொத்து என்றார். உடனே விக்னேஷ் சிவன், சீகல்ஸ் ஓட்டலை ஒப்பந்த அடிப்படையிலாவது வாடகைக்கு தருவீர்களா? என கேட்டார்.

    அதற்கு அமைச்சர் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிசெய்து வருகிறார்கள். அதனை ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாது' என்றார்.

    தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், புதுச்சேரியில் கடற்கரை பகுதிகள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றாவது கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு, புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகள் கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார்.

    அதன் பின்னர் விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே கலை நிகழ்ச்சி நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டார்.

    அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், புதுச்சேரி துறைமுக வளாகத்தில் பொழுது போக்கு மையம் ஒன்றை கட்டி வைத்துள்ளோம். அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க முடியும், அதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினால் போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம்' என்றார்.

    இதற்கு சம்மதம் தெரிவித்த விக்னேஷ் சிவன் பின்னர் சட்டசபை வளாகத்தில் இருந்து புறப்பட்டு துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

    நயன்தாராவின் கணவர் விக்னேஷ்சிவன் புதுச்சேரியில் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வருவதால் அதில் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி தாக்கிய பெஞ்ஜல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், துணை மின்நிலையங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டமாக கணக்கிடப் பட்டுள்ளது.

    புயலுக்கு பின் புதுச்சேரி நகர பகுதி ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமங்களில் அணைகள் திறப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள வில்லை.

    இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வருகிற 16-ந் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக புதுச்சேரி முழுவதும் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

    விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழி சாலை, ஆரோவில் பகுதி களில் கனமழை பெய்தது. நகர பகுதியான லேசான மழைபெய்தது. பேரிடர் மேலாண்மை துறை கேட்டு கொண்டதற்கிணங்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு புதுச்சேரிக்கு மீண்டும் வந்துள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தர விட்டார். இதனால் இன்று காலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. பஸ்களில் கூட்டம் இல்லை

    மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆறு, ஏரி, குளம் உட்பட நீர் நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மழையால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத் திலும், இடை யிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே புதுச்சேரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    புதுச்சேரி கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும். இந்த வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். மீனவர்கள் தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல், அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வரும்படி கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.

    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
    • தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை என ஆறு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை என ஆறு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
    • மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி, 3 சுய நிதி மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) மற்றும் என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறலாம்.

    இந்த என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் குறைந்த நீட் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜெண்டுகள் மூலம் போலியான வெளிநாட்டு தூதரகங்களின் கடிதம் அளித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்றனர்.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 73 மாணவர்கள் போலியான தூதரக ஆவணங்கள் சமர்ப்பித்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏஜெண்டுகள்கள் தூதரக கடிதங்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மெட்டி சுப்பாராவ் (வயது50), தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்ற ஜேம்ஸ் (48), செல்வகுமார் (43), கார் லோஸ் சாஜிவ் (45,) வசந்த் என்ற விநாயகம் (42) ஆகிய 5 ஏெஜண்டுகளை கைது செய்து போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இதில் தொடர்புடைய மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஏஜெண்டுகள் புதுச்சேரி மட்டுமல்லாது பல மாநில மாணவர்களுக்கும் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    இதனால் இந்த வழக்கு அகில இந்திய அளவிலான மோசடிக்கு அச்சாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • சிறப்பு குழந்தையான நவதீப் பிறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் உயிரிழந்தார்.
    • புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 895 ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை ஆனந்தா நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி மகாலட்சுமி.

    லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆஷா பணியாளராக மகாலட்சுமி பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் நவதீப் (வயது 11).

    சிறப்பு குழந்தையான நவதீப் பிறந்ததிலிருந்து உடல்நலக்குறைவால் இருந்து வந்த நிலையில் இறந்து போனார்.

    குழந்தையின் கண்களை தானம் வழங்க மகாலட்சுமி தம்பதியினர் முன்வந்தனர். இதையடுத்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண்கள் தானம் செய்யப்பட்டது.

    இதனால் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த 4 பேருக்கு பார்வை கிடைக்க இந்திய செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்தது.

    தங்களது குழந்தை இறந்தாலும் அவனது கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைப்பது பெருமை கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர்.

    புதுவையில் கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 895 ஜோடி கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

    இதன் மூலம் யூனியன் பிரதேசங்களில் கண் தானம் செய்வதில் புதுவை முதலிடம் வகிக்கிறது.

    • மடுகரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன்.

    94 வயதான எம்.டி.ராமச்சந்திரன் வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.

    இதனையடுத்து சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை எம்.டி.ஆர்.ராமசந்திரன் காலமானார்.

    மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்- அமைச்சார் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன் நெட்டப்பாக்கம் தொகுதியில் 1969-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

    அதன்பிறகு மண்ணாடிப் பட்டு தொகுதியில் 1974, 1977 ஆகிய ஆண்டுகள் அ.தி.மு.க. சார்பிலும், 1980, 1985, 1990 ஆகிய ஆண்டுகள் தி.மு.க. சார்பிலும், 2001-ல் மீண்டும் அ.தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டு 7 முறை எம்.எல்..ஏ.வாக வெற்றி பெற்றவர்.

    இதில் 16.1.1980 முதல் 23.6.1983 வரையும், 8.3.1990 முதல் 2.3.1991 வரையும் என 2 முறை புதுச்சேரி முதல்- அமைச்சராக பதவி வகித்தவர். 11.6.2001 முதல் 26.5.2006 வரை புதுச்சேரி சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். 2 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

    மறைந்த எம்.டி.ராமச் சதிரன் உடல் சொந்த ஊரான மடுகரையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் முதலமைச்சர் எம்.டி.ராமச்சந்திரன் மறைவிற்கு அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் மாலை 4 மணிக்கு நடக்கிறது. 

    ×