என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது.
- புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.600 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சூறாவளி புயலின் போது ஏறத்தாழ 500 மரங்கள் மற்றும் 1,596 மின் கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. மேலும் 2,15,750 ஏ.சி.எஸ்.ஆர் கண்டெக்டர்கள், 53 எண்ணிக்கையிலான ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகள் மற்றும் 52 பள்ளிகள்/கல்லூரிகள் கட்டிடங்கள் சேதமடைந்தன.
புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையளவு 1,399 மி.மீ.. ஆனால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1688.8 மி.மீ மழை பெய்துள்ளது. சுமார் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சுவிடுவது அவசியம் என்று கருதுவதால், இந்த அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறது. இந்த நிர்வாகத்தின் அந்தந்தத் துறைகள், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைத் துறை வாரியாக கீழ்க்கண்டவாறு தற்காலிக மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளன.

முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக ரூ.600 கோடி விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
- இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
தொடர் மழையால் சாத்தனுார் அணை நிரம்பியதாலும் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் அணையின் பாதுகாப்பை கருதி கடந்த 1-ந் தேதி நள்ளிரவு சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.
இதனால் கடலுார் தென்பெண்ணை யாற்றில் கடந்த 2-ந் தேதி தண்ணீர் பெருக்கெடுத்ததால், கடலுார் மற்றும் புதுச்சேரி மாநிலம் பாகூரை சுற்றியுள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின.
அன்று மாலை கடலுார்-புதுச்சேரி சாலையும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச் சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இதனால் வாகன ஓட் டிகள் கடலுார்-புதுச்சேரி இடையே கூடுதலாக 10 கி.மீ. பயணம் செய்தனர். நேற்று மதியம் கடலுார்-புதுச்சேரி சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடியத் தொடங்கியதால் 3 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கு கடலூர்-புதுச்சேரி இடையே நேரடி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் புதுவை-கடலூர் சாலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பாலம் உள்வாங்கியது. இதனால், புதுச்சேரி-கடலுார் சாலை போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.
தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் இப்பணி உடனே நிறைவடைய சாத்தியமில்லாததால் அவ்வழியே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாலம் உள்வாங்கியதையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றப்பட்டது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் வாகனங்கள் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனுார் வழியாக புதுச்சேரிக்கு வரவேண்டும். அதுபோல் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு செல்லும் வாகனங்கள் வில்லியனூர், அபிஷேக பாக்கம், தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல வேண்டும்.
- மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது.
- நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது.
புதுச்சேரி:
புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வருகிறது. தொடக்கத்தில் மழை சற்று குறைவாக பெய்த நிலையில் ஃபெஞ்சல் புயல் அதிக மழையை தந்தது.
புயல் கரையை கடந்தபோது புதுவையில் இதுவரை இல்லாத அளவாக 54 செ.மீ. மழை பதிவானது. இதனிடையே சாத்தனூர், வீடூர் அணைகளும் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது.
இந்த மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது. புதுவையின் மிகப்பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர், கிருமாம்பாக்கம் ஏரிகள் உள்பட 84 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன.
இதேபோல் புதுவையில் ஆறுகளின் குறுக்கே 27 படுகை அணைகள் உள்ளன. அதில் செல்லிப்பட்டு படுகை அணை ஏற்கனவே உடைந்துவிட்டது. தற்போது படுகை அணைகள் உள்ளன. இந்த அணைகளும் நிரம்பி வழிகின்றன.
கடந்த காலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியாக 68 செ.மீ. மழை பொழியும். ஆனால் இந்த ஆண்டு 76.50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது இதுவரை 11 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.
நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது. மேலும் விவசாய தேவைகளுக்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைக்கும்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
புதுச்சேரி பகுதியில் உள்ள 84 ஏரிகளும் நிரம்பிவிட்டன. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 4 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஏரிகளும் தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது.
கடந்த காலங்களில் பாகூர் ஏரி நிரம்பினால், ஊசுடு ஏரி நிரம்பாமல் இருக்கும். கடந்த ஆண்டு ஏரிகள் 70 சதவீதம்தான் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு இரு பெரிய ஏரிகளும் நிரம்பிவிட்டன.
இந்த ஏரிகளில் தற்போது 1.73 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் உட்புகாமல் இருக்கும். மேற்கில் இருந்து வரும் தண்ணீர் உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரி வழியாக திருப்பப்பட்டதால் இந்திராகாந்தி சதுக்கத்தில் ஓரளவுக்கு சேதம் தடுக்கப்பட்டது.
அதேபோல் பூமியான்பேட்டை பகுதியில் பாலம் பெரியதாக அமைக்கப்பட்டதால் தண்ணீரை எளிதாக உள்வாங்கியது. இதனால் பூமியான்பேட்டை, ஜவகர் நகர் பகுதியில் தேங்கிய தண்ணீர் விரைவாக வடிந்தது. பொதுப்பணித்துறை மூலம் 44 பம்புகள் வைத்து தண்ணீர் இறைக்கப்பட்டது.
வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை தடுக்க 15 ஆயிரம் மண் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்னும் 25 ஆயிரம் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.
நகரப் பகுதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு கழிவுகளான மெத்தை, தலையணை போன்றவற்றை போட்டு வைத்துள்ளனர். இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதை ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.
சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டு சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் தண்ணீர் வடிவதில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வெள்ளமும் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
- பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
தவளக்குப்பம்:
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பாய்ந்து சென்றதால், புதுச்சேரி- கடலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாகூர் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டன.
நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது. இந்தநிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் உள்ள சிறிய பாலத்தின் மேற்கு பகுதி இணைப்பு சாலை நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்றபோது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாலத்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.
தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோரும் அங்கு வந்து பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் முருங்கப்பாக்கம், வில்லியனூர், உறுவையாறு, பாகூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் கடலூரில் இருந்து புதுவை வரும் வாகனங்கள் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.
அதேநேரத்தில் தண்ணீர் தேங்கிய, முகாம்களாக மாறிய தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப்பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலை பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தென்பெண்னை ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, முகாமாக மாற்றப்பட்டுள்ள குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.05) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு, திருக்கனூர், செட்டிபட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம், பனித்திட்டு, நத்தமேடு, பாகூர் கொம்பூனில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
- 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயலால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 361 பேர் புயல் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தனர்.
கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5 ஆயிரத்து 527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.
500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.
இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சி பிரமூகர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது
இவை புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதல் கட்ட சேத மதிப்பீட்டில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன.
புதுச்சேரி:
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ம் தேதி புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடைப்பட்ட பகுதியை மையமாக கொண்டு புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கியது. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதற்கிடையே, புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அங்கு பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்கள் நடைபெறும் 22 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது
- முன்னதாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு விமர்சனத்துக்குள்ளானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
- புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
- புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைகழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
- வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.
மேலும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும்.
வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.
வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ.40,000, இளம் கன்றுக்கு ரூ. 30,000 நிவாரண தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
- மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுச்சேரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செ.மீ. மழை அதிகமாக பதிவாகியிருந்தது. தற்போது 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுச்சேரியில் விளைநிலங்கள், வீடுகளின் சாலைகள் உள்பட அனைத்து பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசின் உதவி கோரப்படும்.
புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்படும். அனைத்து துறைகளும் கள பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
- தேர்வை எழுத மாணவர்கள் வெள்ளத்தை தாண்டியும் புதுவை வந்தனர்.
- 250 பேரில் 200 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மழை கொட்டிய சூழலில் நகரெங்கும் சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்வதே சவாலாக உள்ளது.
அதே நேரத்தில் தேசிய சட்டக்கல்லூரிகளில் சேர பொது சட்ட நுழைவுத் தேர்வான கிளாட் நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வுக்கான மையம் புதுச்சேரி சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமில்லாது பல மாவட்ட மாணவர்கள் புதுச்சேரி மையத்தை தேர்வு செய்திருந்தனர். தேர்வை எழுத மாணவர்கள் வெள்ளத்தை தாண்டியும் புதுவை வந்தனர்.
புதுச்சேரியில் தேர்வு எழுத 250 பேர் வரை ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 200 மாணவர்கள். தேர்வு எழுதினர். மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பெற்றோர்கள் அமர தேர்வு மையத்தில் அறை வசதியை சட்டக் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.






