என் மலர்
ஒடிசா
- ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம், 24 ஆண்டு கால பிஜூ ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக்கின் மகன்தான் நவீன் பட்நாயக். இவர் தனது தந்தையின் மறைவுக்கு பின் பிஜூ ஜனதா தளம் கட்சியைத் தொடங்கி கடந்த 2000-ம் ஆண்டு ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்து முதல் மந்திரியாக பதவியேற்றார்.
அதன்பின் தொடர்ந்து நடைபெற்ற 4 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஒடிசா மாநிலத்தில் 5 முறை முதல் மந்திரி பதவியை அலங்கரித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.
ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க, பிஜூ ஜனதா தளம் தனித்தனியாக களம் இறங்கின.
நவீன் பட்நாயக் தனது செயலாளராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டினை பிஜூ ஜனதா தளம் கட்சியில் சேர்த்ததுடன், அவரை பிரசார தளபதியாக்கி தேர்தலைச் சந்தித்தார்.

இந்த வியூகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது பா.ஜ.க. ஒடிசா மண்ணை வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு தாரை வார்ப்பதா என கேள்வி எழுப்பியது.
மேலும், புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவியை பிரசாரத்தில் முன்னிலை படுத்தியது பா.ஜ.க. இந்த விவகாரமும் விசுவரூபம் எடுத்தது.
இதற்கிடையே, ஒடிசாவில் வெளியான சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பிஜூ ஜனதா தளத்துக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. தொடக்கம் முதலே பிஜூ ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்தது. பா.ஜ.க. வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றனர்.

ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ.க. 78 இடங்களை கைப்பற்றி அசத்தியது. பிஜூ ஜனதா தளம் 51 இடமும், காங்கிரஸ் 14 இடமும், மற்றவர்கள் 4 இடமும் பெற்றனர். இதன்மூலம் ஒடிசாவில் நவீன்பட்நாயக்கின் 24 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட நவீன் பட்நாயக் தனது பாரம்பரிய ஹின்ஜிலி தொகுதியில் வென்ற நிலையில், கன்தாபன்சி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லட்சுமண் பாகிடம் தோல்வி அடைந்தார்.
ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தை வீழ்த்தி பா.ஜ.க. முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
நவீன் பட்நாயக் 2000 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை சட்டசபை தேர்தலில் வென்று முதல் மந்திரியாக இருந்துள்ளார்.
- சிறுமி வேலைக்கு சென்று வரும் நேரத்தை கண்காணிக்க தொடங்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் குனுகிசான்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை குனுகிசான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தருதிஹி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குனுகிசானை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்து குனுகிசான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீனில் வந்தார். அவர் வெளியே வந்த நாளில் இருந்து தனது மீது பாலியல் புகார் கொடுத்த சிறுமியை தேடி வந்தார். சிறுமி ஜார்சுகுடா நகரில் தனது அத்தை வீட்டில் தங்கி பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார்.
இதனை தெரிந்து கொண்ட குனுகிசான் சிறுமியிடம் சென்று தனது மீது புகார் தெரிவித்துள்ள பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்கும் படி பேசினார். அதற்கு அந்த சிறுமி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் குனுகிசான் சிறுமி மீது ஆத்திரமடைந்தார். அவரை கொலை செய்ய திட்டமிட்டார். சிறுமி வேலைக்கு சென்று வரும் நேரத்தை கண்காணிக்க தொடங்கினார். கடந்த 7-ந் தேதி மற்றொரு வாலிபருடன் சேர்ந்து சிறுமியை கடத்தினார். அவர்கள் பைக்கில் சிறுமியை கடத்தி சென்றனர். ரூர்கேலா மற்றும் தியோகரை இணைக்கும் சாலை பகுதிக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு வைத்து கத்தியால் சிறுமியின் தலையை துண்டித்து கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிராமணி ஆற்றில் தர்கேரா நாலில் மற்றும் பலுகாட் பகுதியில் வீசினர்.
இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் கடந்த 7-ந் தேதி ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை பைக்கில் 2 வாலிபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. 2 வாலிபர்களுக்கு மத்தியில் சிறுமி இருந்தார். 2 வாலிபர்களும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்கள்குறித்த அடையாளம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்திய வாலிபர் குனுகிசான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குனுகிசானை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சிறுமியை கடத்தி கொலை செய்து உடல் பாகங்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் குனுகிசானை கைது செய்தனர். பிராமணி ஆற்றில் சிறுமியின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று.
- இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது.
புவனேஸ்வர்:
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், அடுத்த மாதம் (ஜனவரி) ஒடிசாவுக்கு வருகை தர உள்ளார். இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங், ஒடிசா தலைமைச் செயலகத்தில் முதல்-மந்திரி மோகன் சரண் மாஜியை சந்தித்தபோது இந்த தகவலை உறுதி செய்தார்.
ஒடிசாவில் நடைபெறும் மாநில முதலீட்டாளர் உச்சிமாநாட்டின் (மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 2025) முதல் வெளிநாட்டு பங்குதாரராக சிங்கப்பூர் இணைந்துள்ளது.
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரங்களில் சிங்கப்பூரும் ஒன்று. இந்தியாவும் சிங்கப்பூரில் ஐ.டி., வங்கி மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் மூலம் வலுவான முதலீட்டை கொண்டுள்ளது.
இந்தியா-சிங்கப்பூர் இடையே நீண்ட காலமாக நட்புறவு உள்ளது. பரஸ்பர வளர்ச்சி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.
சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டுகால ராஜதந்திர உறவைக் கொண்டாடுகின்றன. இரு நாடுகளும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. இந்த நட்புறவு இப்போது வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கலாசார பரிமாற்றம் போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு மூலோபாய கூட்டாண்மையாக உருவாகியுள்ளது. இந்த இருதரப்பு உறவை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூர் அதிபர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
ஒடிசா முதல்-மந்திரி மாஜி கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றபோது, சிங்கப்பூர் அதிபர் ஒடிசாவிற்கு வருகை தர ஏற்பாடு செய்யுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, சிங்கப்பூர் அதிபர் தனது இந்திய பயணத்தின் போது ஒடிசாவுக்கு வர முடிவு செய்துள்ளார்.
- ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன.
- இதில் மின்சாரம் தாக்கி மட்டும் 149 யானைகள் பலியாகி உள்ளன என்றார் வனத்துறை மந்திரி.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வனத்துறை மந்திரி கணேஷ் ராம் சிங்குந்தியா பேசியதாவது:
ஒடிசா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 857 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளின் இயற்கைக்கு மாறான மரணத்திற்கு மின்சாரம் தாக்குதலே முக்கியக் காரணம். நோய்கள், விபத்துக்கள், வேட்டையாடுதல் ஆகிய காரணங்களுக்காகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
2014-15 மற்றும் 2024-25 (டிசம்பர் 2 வரை) 149 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
வேட்டைக்காரர்கள் 30 யானைகளைக் கொன்றனர்.
நோய்களாலும் அதிக எண்ணிக்கையாக 305 யானைகள் உயிரிழந்தன.
இயற்கை மரணங்களாக 229 யானைகள் இறந்திருக்கின்றன.
ரெயிலில் அடிபட்டு 29 யானைகள் உயிரிழந்தன.
யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையினால் 16 யானைகள் இறந்தன.
90 யானைகள் இறந்ததன் பின்னணியை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையால் கண்டறிய முடியவில்லை.
சமீபத்தில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி ஒடிசாவின் வெவ்வேறு காடுகளில் 2,103 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- ஒடிசாவில் 22 மாதங்களில் தினமும் 777 பேரை நாய்கள் தாக்கியுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
- 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஒடிசாவில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், அம்மாநில அரசு வழங்கிய தரவுகளின்படி, ஒடிசாவில் ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5.20 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, தவறான கோரைகள் அல்லது வளர்ப்பு நாய்கள் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 777 நபர்களைக் குறிவைத்துள்ளன.
காங்கிரஸின் ராயகடா எம்எல்ஏ கத்ரகா அப்பலா சுவாமியின் கேள்விக்கு, மீன்வளம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோகுலானந்த மல்லிக் பதில் அளித்தார். அப்போது அவர்," 22 மாதங்களில் ஒடிசாவில் மொத்தம் 5,20,237 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன" என்றார்.
அதன்படி, 2023ல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2024 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 33,547, 32,561 மற்றும் 29,801 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2019ம் ஆண்டில் கால்நடை கணக்கெடுப்பின்படி, ஒடிசாவில் 17.34 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவந்துள்ளது.
மேலும், சட்டமடையில் "விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதி, 2023-ஐ பின்பற்றி, நகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் திட்ட அங்கீகாரச் சான்றிதழைப் பெற்ற நிறுவனங்கள் மூலம் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக" அமைச்சர் கூறினார்.
2022-23 நிதியாண்டில் ஒடிசாவின் எட்டு நகர்ப்புறங்களில் 4,605 தெருநாய்கள் கருத்தடை செய்யப்பட்டதாகவும் மல்லிக் சபையில் தெரிவித்தார்.
- ராமாயண நாடகத்தில் பேய் வேடத்தில் நடித்த நடிகர் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ரலாப் பகுதியில் கடந்த 24-ந்தேதி ராமாயண நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது பேய் வேடத்தில் நடித்த 45 வயது நாடக நடிகர் மேடையில் உயிருடன் இருக்கும் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று ஒடிசா மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பாபுசிங் மற்றும் ஜனாதன் பிஜுலி ஆகியோர் பேசினர்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் நாடக அமைப்பாளர்களில் ஒருவரான பின்பதர் கவுடா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி பெற்றது.
- இதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் பிருத்வி, ஆகாஷ் மற்றும் அக்னி உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அடுத்த தலைமுறை உபகரணங்களை தயாரிப்பதில் தற்போது டி.ஆர்.டி.ஓ. கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே, டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 1,500 கி.மீ. தூரம் இலக்கைச் சென்று தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரை அருகே உள்ள சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஏவுகணை வளாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. மூத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா ஒரு பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- ஒடிசா மாநிலத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- பத்ம விருது பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது.
புவனேஸ்வர்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொறியியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், வர்த்தகம், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை மற்றும் சாதனைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் என மொத்தம் 55 பேர் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பத்ம விருது பெற்றவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியால் அரசுக்கு 2 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
- ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூரி:
ஒடிசாவில் பத்ரக் பகுதியருகே சென்று கொண்டிருந்த பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுபற்றி பூரி நகரின் அரசு ரெயில்வே போலீஸ் காவல் நிலைய உயரதிகாரி எஸ்.கே. பாஹினிபதி செய்தியாளர்களிடம் கூறும்போது, பத்ரக் பகுதியை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும் அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பின்னர், ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றனர். அந்த ரெயில் பூரி நகரை பாதுகாப்பாக சென்றடையும் வகையில் அவர்கள் இணைந்து செயல்பட்டு பாதுகாப்பை வழங்கினர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அடங்கிய 4 குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன என்றார்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது. பயணிகள் அனைவரும் அந்த பெட்டியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது உடனடியாக கண்டறியப்படவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- அவருக்கு ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 14,000க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
- இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூர்கேலா:
ஒடிசா மாநிலம் கந்த்ர்துடா மற்றும் சமர்பிண்டா கிராமத்தை சேர்ந்த பஜனை குழுவினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மாருதி வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். நேற்று இரவு ஒடிசா சுந்தர்கர் பகுதியில் வேன் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில வேனில் பயணம் செய்த பஜனை குழுவை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இது பற்றி அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு அவர்கள் மறியல் நடத்தினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
- விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 பன்றிகள் விழுந்துள்ளன.
- இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிக்கி தவித்த காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் சிக்கிய காட்டுப்பன்றிகள் பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
இரவு உணவு தேடி பாலபத்ரபூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் 27 காட்டுப்பன்றிகள் நுழைந்துள்ளது. விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 காட்டுப்பன்றிகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வருவதற்கு இயந்திரங்கள் கொண்டு சரிவுப் பாதை அமைத்தனர். பின்னர் அந்த பாதை வழியாக காட்டுப்பன்றிகள் கிணற்றை விட்டு பத்திரமாக வெளியே வந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி, "ஒரு குட்டி காட்டுப்பன்றி முதலில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம், பின்பு அதை மீட்பதற்காக ஒவ்வொரு பன்றியும் உள்ளே விழுந்திருக்கலாம் என்றும் இந்தச் சம்பவத்தில் ஒரு ஒரு குட்டி காட்டுப்பன்றி இறந்ததாகவும், மீதமுள்ள 26 காட்டுப்பன்றிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது" என்று தெரிவித்தார்.
தனியார் விவசாய நிலத்தில் இந்த கிணறு தோண்டப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிணற்றை மூடி வைக்குமாறு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






