என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுப்பன்றிகள்"

    • விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
    • காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இதனால் காய்கறிப் பயிர்களில் பயிர் சேதம், பூச்சி, நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய விலையின்மை, பல மடங்கு உயர்ந்த உற்பத்திச் செலவு போன்றவற்றால் தவித்து வரும் விவசாயிகளுக்கு மழை பாதிப்புடன், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் இழப்பும் சேர்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காடுகளில் வசிக்க வேண்டிய காட்டுப் பன்றிகள் காடுகளை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்து, கிட்டத்தட்ட நாட்டுப் பன்றிகளாகவே மாறி விட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் காட்டுப் பன்றிகள் தற்போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் ஊருக்குள் ஊடுருவி விட்டன.பகல் நேரங்களில் புதர்களுக்குள் மறைந்து ஓய்வெடுக்கும் காட்டுப் பன்றிகள் இரவு நேரத்தில் விளைநிலங்களுக்குள் படையெடுத்து பயிர்களைத் தின்றும், கிளறியும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன.

    தற்போது மடத்துக்குளம், வேடப்பட்டி, கணியூர் உள்ளிட்ட மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. தற்போது இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் பொழுதிலும் சில பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தென்படுகின்றன. இதனால் விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. மேலும் கால்நடைகளையும் காட்டுப்பன்றிகள் தாக்கி காயப்படுத்தும் நிலை உள்ளது. ஊருக்குள் உள்ள காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் என்று கருதாமல் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஒருசில விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றி சேலைகளைக் கட்டி வைத்து காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். அதையும் தாண்டி காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை. அதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிர்களை சேதப்படுத்தும் போது இழப்பீடு பெற முடியாத நிலையே உள்ளது. மேலும் விவசாயிகள் நாய்களைப் பயன்படுத்தியோ, பட்டாசு உள்ளிட்டவற்றை வீசியோ, காட்டுப் பன்றிகளை விரட்டும் போது எதிர்பாராத விதமாக அவை உயிரிழக்க நேரிட்டால் விவசாயிகள் குற்றவாளிகளாகும் நிலை உள்ளது. தற்போது காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன் படிப்படியாக வெவ்வேறு பகுதிகள் நோக்கி ஊடுருவி வருகின்றன.இதே நிலை நீடித்தால் விவசாயத்தின் மிகப் பெரிய சவாலாக காட்டுப் பன்றிகள் உருவெடுக்கும் நிலை உள்ளது.எனவே உடனடியாக முடிவெடுத்து, வனத்தை விட்டு வெளியேறிய காட்டுப் பன்றிகளை முழுமையாக அழிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
    • அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 50) .இவர் தோட்டத்து வேலைக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி ஒன்று அவரை கீழே தள்ளி காலில் கடித்தது .அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாப்பாத்தியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடிமங்கலம் பகுதியில் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கூட்டமாக வந்து பயிர்களை நாசம் செய்வதால் வனத்துறையினர் இதை தடுக்க வேண்டும் அல்லது சுட அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுப்பன்றி மனிதர்களையே தாக்க ஆரம்பித்துள்ளதால் தோட்ட வேலைக்கு செல்வோர் பீதி அடைந்துள்ளனர் .எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
    • மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அலங்கியம், குண்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றிகள், விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றன.வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்துவருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திலும் மான், மயில்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.விவசாயிகளுக்கு பதில் அளித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.மயில் தேசிய பறவை என்பதால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து அறிக்கை அனுப்பி வருகிறோம்.

    பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் காடுகள் அல்லாத பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் உள்ளதாக முந்தைய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அவ்விவரங்கள் ஏற்கனவே அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மான்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
    • வனப்பகுதி எல்லையில் சோலார் மின்வேலிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் நுழைவது தொடர் கதையாகி வருகிறது.

    காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வந்து கரும்பு மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    தற்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகின்றனர். அதன்படி பஞ்சப்பள்ளி அருகே கங்காபாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் ஞானவேல், வெங்கடாசலம் ஆகியோரது விளை நிலங்களில் புகுந்து சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதனால் பாதிப்புக்குள்ளான விவசா யிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பயிர் சேதத்தை ஆய்வு செய்தனர்.

    காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வனப்பகுதி எல்லையில் சோலார் மின்வேலிகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.
    • புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம்.

    உடுமலை:

    மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் விவசாயத்துக்கு சவாலாகவும், விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அமராவதி, உடுமலை, கொழுமம் வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் வசித்து வருகின்றன. சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட இரை விலங்குகளிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்திலும், இரைகளை தேடியும் அடிவார பகுதிகளுக்கு வந்த காட்டுப்பன்றிகள் அங்கேயே தங்கி விட்டன. அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டருக்கு மேல் இடம் பெயர்ந்து பரவியுள்ளன.மேலும் அந்த பகுதிகளில் உள்ள புதர்கள் மற்றும் பள்ளங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து பல மடங்காக பெருகி விட்டன.

    மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விளைநிலங்களுக்குள் கூட்டம் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் பயிர்களைத் தின்றும் மிதித்தும் வீணாக்கி வருகின்றன. அத்துடன் கால்நடைகளை தாக்குவதுடன் மனிதர்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன.காட்டுப்பன்றிகளை விரட்டும் நோக்கத்தில் தாக்கும் உரிமை மனிதர்களுக்கு இல்லை.இதனால் காட்டுப்பன்றிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாற்று வழி தேட வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் விளைநிலங்களை சுற்றி சேலைகளை கட்டி விட்டால் அவை காற்றில் அசையும் போது அச்சத்தில் காட்டுப்பன்றிகள் ஓடி விடும். ஆனால் தற்போது சேலைகளை கிழித்து உள்ளே நுழைந்து பயிர்களை சேதப்படுத்துமளவுக்கு அவற்றின் வாழ்வியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது புதிய முயற்சியாக ஒருவித வாசனையை வெளியிடக்கூடிய திரவத்தை பயன்படுத்தி வருகிறோம். சந்தையில் கிடைக்கும் அந்த திரவத்தை கயிறுகளில் நனைத்தோ அல்லது பாட்டில்களிலோ விளைநிலத்தைச் சுற்றி தொங்க விட வேண்டும்.அதிலிருந்து வெளிவரும் விரும்பத்தகாத வாசனையால் காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களை நெருங்குவதில்லை.

    ஆனால் சற்று கூடுதல் செலவு பிடிக்கும். இந்த திரவத்தை அரசு மானிய விலையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • 3 மணி நேரம் போராடி மீட்டனர்
    • காப்பு காட்டில் பத்திரமாக விடப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதிகளை சுற்றி சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பறந்து விரிந்த காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளது.

    இந்த காட்டில் புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை, முள்ளம்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. விலங்குகள் அடிக்கடி உணவுகளை தேடி விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

    இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் வனவிலங்குகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் கூட்டமாக வந்து செல்கின்றன.

    ஒடுகத்தூர் அடுத்த அத்தி குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.

    வழக்கம்போல ரமேஷ் காலை நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார் அப்போது கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பன்றி குட்டிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    வனத்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் போராடிக் கொண்டிருந்த 11 காட்டு பன்றிகளை உயிருடன் மீட்டனர். வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.

    வனத்துறையினர் அருகே இருந்த காப்பு காட்டில் பன்றிகளை பத்திரமாக விட்டனர்.

    • விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 பன்றிகள் விழுந்துள்ளன.
    • இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிக்கி தவித்த காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

    கிணற்றில் சிக்கிய காட்டுப்பன்றிகள் பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

    இரவு உணவு தேடி பாலபத்ரபூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் 27 காட்டுப்பன்றிகள் நுழைந்துள்ளது. விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 காட்டுப்பன்றிகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன.

    இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வருவதற்கு இயந்திரங்கள் கொண்டு சரிவுப் பாதை அமைத்தனர். பின்னர் அந்த பாதை வழியாக காட்டுப்பன்றிகள் கிணற்றை விட்டு பத்திரமாக வெளியே வந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி, "ஒரு குட்டி காட்டுப்பன்றி முதலில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம், பின்பு அதை மீட்பதற்காக ஒவ்வொரு பன்றியும் உள்ளே விழுந்திருக்கலாம் என்றும் இந்தச் சம்பவத்தில் ஒரு ஒரு குட்டி காட்டுப்பன்றி இறந்ததாகவும், மீதமுள்ள 26 காட்டுப்பன்றிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது" என்று தெரிவித்தார்.

    தனியார் விவசாய நிலத்தில் இந்த கிணறு தோண்டப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிணற்றை மூடி வைக்குமாறு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.
    • வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானைகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி பகுதிகளில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த மலை கருப்பு சாமி கோவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கரடிக்கல் பாறை என்ற இடத்தின் அருகே ஜானகி சரவணன் என்பவரின் 8 ஏக்கர் தோட்டம் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகின்றார். இதில் வாழை, சோளப்பயிர், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளார்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காட்டுப்பன்றிகள் வெளியேறியது. இதையடுத்து காட்டு பன்றிகள் ஜானகி சரவணன் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    தொடர்ந்து அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களை அந்த காட்டு பன்றிகள் சேதப்படுத்தியது. அங்கு 1.50 ஏக்கர் அளவில் பயிரிட்டுள்ள பயிர்களில் 75 சென்ட் பயிர்களை முற்றிலும் சேதப்படுத்திஉள்ளது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் தோடங்களில் புகாமல் இருக்க விவசாயிகளுக்கு உதவ வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினருக்கு வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர்

    மேலும் அறுவடைக்கு சில தினங்களில் இருக்கும் நிலையில் பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு விவ சாயிகள் வேதனை அடைந்தனர்.

    • சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.
    • குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியிலான திருவிக நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சாலைகளில் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம் உள்ளன.

    அதனை தொடர்ந்து நேற்று இரவும் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.

    அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனத்தை இயக்கி சென்றனர். எனவே ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேன்கனிகோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிகோட்டை:

    தேன்கனிகோட்டை அருகேயுள்ள நாட்ராம் பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெம்பன் மற்றும் சிவனப்பா. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். நேற்று இரவு வனவிலங்குகளை வேட்டையாட அதேபகுதியில் உள்ள பஞ்சள்துணை என்ற கிராமத்திற்கு இவர்கள் சென்று உள்ளனர். 

    அப்போது அங்கு சித்தராமையா என்பவரின் வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் இருவரும் சிக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கிய அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வேலியில் சிக்கி 2 பேர் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×