search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild boar"

    • சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • காட்டுபன்றியை வேட்டையாடி இறைச்சியை கொண்டுவந்த 11 பேரை பிடித்தனர். மாவட்ட வனஅலுவலர் அறிவுறுத்தலின்பேரில் 11 பேருக்கும் ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்- சிறுமலை சாலையில் வனசோதனை சாவடி அமைந்துள்ளது. இங்கு சம்பவத்தன்று வனக்காப்பாளர்கள் சங்கர், தனலட்சுமி ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது உதவி வனபாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வாகன தணிக்கை நடை பெற்றது.

    சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் சிறுமலை பழையூரில் தோட்ட மேற்பார்வையாளராக பணிபுரியும் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பெருமாள்(65), திண்டுக்கல் காந்தி கிராமத்தை சேர்ந்த ஜோதிபிரகாஷ்(32) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் கொண்டுவந்த பாத்திரங்களில் ஆய்வு செய்த போது காட்டுபன்றி இறைச்சி இருந்தது. இதனையடுத்து வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் பாண்டி, சரவணன், அப்துல்ரகு மான் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த தோட்ட த்திற்கு பெருமாளை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது காட்டுபன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட முத்து ராமலிங்கம், சக்திவேல், ரமேஷ், நாட்ராயன், முருகன், பாண்டி, ஜெய ப்பிரகாஷ், கோபிஆனந்த், குமரன் ஆகிய 11 பேரை பிடித்தனர். மாவட்ட வனஅலுவலர் ராஜ்குமார் அறிவுறு த்தலின்பேரில் 11 பேருக்கும் ரூ.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.
    • காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சின்ன தானங்குப்பம் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 28). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று மணிவண்ணன் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது நிலத்திற்கு விவசாய பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது நிலத்தில் இருந்த காட்டுப் பன்றி திடீரென்று மணிவண்ணனை கடித்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் உடனடியாக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி ஊடுறுவதை வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காட்டுப் பன்றிக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • தற்போது காட்டுப்பன்றி இறந்துகிடந்த ஜானகிகாடு பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து அடுத்தடுத்து 2பேர் பலியான சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தொற்றுபாதிப்பு கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் ஜானகி காடு பகுதியில் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியை மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    அதில் அந்த காட்டுப் பன்றிக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் உஷாரானார்கள். ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவினால், தொற்று பாதித்த பகுதிக்கு ஒருகிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றிகளை அழிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

    ஆனால் தற்போது காட்டுப்பன்றி இறந்துகிடந்த ஜானகிகாடு பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வேறு பன்றிகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    அதேநேரத்தில் கோழிக் கோடு மாவட்டதில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. மேலும் பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, அதுபற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.

    • வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து வந்தனர்.
    • 2 பேரும் காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    காட்டுப்பன்றி வேட்டை

    அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் வனசரக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வனவர்கள் மகேந்திரன், குமார், வனக்காப்பாளர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், அனிதா, வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், தாசன் ஆசிர்வாதம் ஆகி யோர் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிந்தா மணியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சண்முகராஜ் (வயது 27), புளியங்குடியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (26) ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரூ. 50 ஆயிரம் அபராதம்

    இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 2 பேருக்கும் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • விளைநிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள்.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.

    தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். இதுதவிர குறுகிய கால பயிர்களான கீரை வகைகள், பூக்கள், மக்காசோளம் உள்பட பல்வேறு வகையான பயிர்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

    தற்போது தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 120 நாள் பயிரான மக்காசோளம் தை மாதம் அறுவடை செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டமாக புகுந்து மக்காசோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பலமுறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கூறினர்.

    இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுவதை தடுக்கும் விதமாக விளை நிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள். இதன் மூலம் காட்டுப்பன்றி தொல்லை சற்று குறையும் என எதிர்பார்க்கிறார்கள். 

    • காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் மழை பெய்தும் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டனூர், சீனியேந்தல், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய காரணத்தினால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.

    தற்போது நெல் பரிச்சல் ஏற்படும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் நரிக்குடி அருகே உள்ள சீனியேந்தல், கட்டனூர் காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளம், எஸ்.கடமங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ளவிவசாய நிலங்களில் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதுகுறித்து காவிரி, வைகை, கிருமால் நதி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மச்சேசுவரன் கூறியதாவது:-

    நரிக்குடி பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு கண்மாயும் நிரம்பாத நிலையில் இருந்து வந்தது. கடந்த 2,3 வருடங்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதற்கு பின்பு வயல் பகுதியில் சீமைகருவேல் மரங்கள் அடர்ந்திருந்ததை அப்புறப்படுத்தி நெல் நடவு செய்து உள்ளனர்.

    விவசாயிகள் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்ணதாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது
    • மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40), விவசாயி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுப்பன்றியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.

    மேலும் மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.

    தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்கு வைத்த கம்பி வேலியில் சிறுத்தை சிக்கியதை அடுத்து அதை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மங்கலம்டேம். அணையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ரப்பர் தோட்டம், வாழை மற்றும் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. இதனால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். சில விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கம்பிவேலி அமைத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் அங்குள்ள ரப்பர் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். கம்பி வேலிக்கு இடையே உள்ள ஒரு மதில் சுவர் அருகே இருந்து சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்த கரியங்கயம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் கால்நடை டாக்டர் மற்றும் மயக்க மருந்து செலுத்தும் உதவியாளருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். கம்பிவேலியில் சிக்கிய சிறுத்தையால் ஓட முடியவில்லை. இதனால் மிக ஆக்ரோ‌ஷமாக இருந்தது.

    இதனையடுத்து கால்நடை டாக்டர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுத்தை மயங்கியது. பின்னர் அதனை கூண்டுக்குள் மீட்டனர். மயங்கிய நிலையில் உள்ள சிறுத்தையை பாதுகாப்பாக வனத்துக்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  #tamilnews
    தாளவாடியில் காட்டுபன்றி தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஊர் தாளவாடி. இங்குள்ள பூஜைகவுடர் வீதியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 30). தொழிலாளி.

    இவரது மனைவி பெயர் லாவண்யா (28). திருமணம் ஆகி 2 ஆண்டே ஆகிறது. 1½ வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

    இன்று காலை 7 மணி அளவில் சித்தராஜ் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து அருகே உள்ள பகுதிக்கு சென்றார்.

    அப்போது மறைந்து இருந்த ஒரு காட்டு பன்றி திடீரென ஆவேசமாக ஓடிவந்து அவரது தொடை பகுதியில் கடித்துதூக்கி வீசியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயத்துடன் சத்தம் போட்டபடி துடித்துக் கொண்டிருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சித்தராஜை மீட்டு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    காட்டு பகுதிக்குள் திரியும் காட்டு பன்றிகள் தற்போது தாளவாடி ஊருக்குள்ளேயே புகுந்துவிடுகிறது. ஏற்கனவே பலபேரை விரட்டி கடித்துள்ள காட்டுபன்றியால் இன்று ஒரு உயிர் பறிபோய் உள்ளது எனவே ஊருக்குள் காட்டு பன்றிகளை வரவிடாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தாளவாடி பகுதி மக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    ×