search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "African swine fever virus"

    • காட்டுப் பன்றிக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • தற்போது காட்டுப்பன்றி இறந்துகிடந்த ஜானகிகாடு பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து அடுத்தடுத்து 2பேர் பலியான சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தொற்றுபாதிப்பு கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில் கோழிக்கோட்டில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. கோழிக்கோடு மாவட்டம் ஜானகி காடு பகுதியில் ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியை மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    அதில் அந்த காட்டுப் பன்றிக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் உஷாரானார்கள். ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவினால், தொற்று பாதித்த பகுதிக்கு ஒருகிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பன்றிகளை அழிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

    ஆனால் தற்போது காட்டுப்பன்றி இறந்துகிடந்த ஜானகிகாடு பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த பன்றி பண்ணைகளும் இல்லை. இதனால் அந்த பகுதியில் வேறு பன்றிகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

    அதேநேரத்தில் கோழிக் கோடு மாவட்டதில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது. மேலும் பன்றி பண்ணை உரிமையாளர்களுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு பரவாது என்று கூறியுள்ள சுகாதாரத்துறை, அதுபற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது.

    ×