search icon
என் மலர்tooltip icon

    அசாம்

    • அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.
    • இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    கவுகாத்தி:

    பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.

    இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • அசாம் மாநிலத்தில் 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார்.
    • பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த இவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் பூங்காவை சுற்றிப் பார்த்தார். பின்னர் யானை சவாரி சென்றார்.

    காசிரங்காவில் இருந்து அருணாச்சால பிரதேசம் செல்லும் பிரதமர், இன்று மதியம் மீண்டும் அசாம் மாநிலம் வருகிறார்.

    அசாம் மாநிலத்தில் 3,992 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

    அசாம் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருப்பவர் ராணா கோஸ்வாமி. இவர் இன்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்தும் உள்ளார்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி உள்ளார். மேலும், புதுடெல்லிக்கு சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பா.ஜ.க.-வில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    இவர், அசாம் ஜோர்ஹாட்டின் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

    இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும் போது "தனக்கு இது பற்றி எந்த தகவலும் வரவில்லை. ஆனால் அவர் காங்கிரஸின் சக்திவாய்ந்த தலைவர். அவர் பா.ஜ.க.-வில் இணைந்தால், நான் அதை வரவேற்பேன்" என்றார்.

    • சம்பவத்தின்போது கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடியை நடத்தினார்கள்.
    • வருகிற 23-ந்தேதி பகல் 11.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

    கவுகாத்தி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் அவர் அசாம் மாநிலத்தில் நடை பயணத்தை நடத்தினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது கூட்டத்தினரை கலைக்க லேசான தடியடியை நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசார் அசாம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 23-ந்தேதி பகல் 11.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் அசாம் போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் 23-ந்தேதி அசாம் போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கு அசாம் காங்கிர சார் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுலை கைது செய்ய அசாம் போலீசார் மறைமுகமாக திட்டமிடுகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மணமகன் கல்லோல் தாஸ் பதிலுக்கு மணமகளின் காலில் விழுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.

    இந்தியாவில் திருமணங்களின் போது மணமக்கள் பெரியோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஒரு சில மாநிலங்களில் திருமண சடங்கின் ஒரு பகுதியாக மணமகள் மணமகனின் கால்களில் விழுந்து ஆசி பெறும் வழக்கமும் உள்ளது. அந்த வகையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் போது மணமகள், மணமகன் கல்லோல் தாசின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மணமகன் கல்லோல் தாஸ் பதிலுக்கு மணமகளின் காலில் விழுவது போன்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது கூடியிருந்த திருமண வீட்டார் அனைவரும் பலத்த கரவொலி எழுப்புகின்றனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அதில், பலரும் விமர்சனம் செய்த நிலையில் மணமகன் கல்லோல்தாஸ் கூறுகையில், நான் சடங்குகளை புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. என் மனைவிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று தான் கருதினேன் என்றார். அதே நேரத்தில் அவரது செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒரு பயனர், மணமகனை யாரும் தடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவரை எப்படி உற்சாகப்படுத்தினார்கள் என்பதை கவனியுங்கள். அப்படிதான் இருக்க வேண்டும் என பாராட்டினர். இதை போல மற்றொரு பயனர் தனது பதிவில், ஒவ்வொரு திருமணமும் இப்படித்தான் இருக்க வேண்டும். கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கி ஓடினோம்.
    • வீட்டிற்கு மேற்கூரையின் மீது சோலார் தகடுகள் பதிக்க ஒரு கோடி குடும்பங்களுக்கு உதவி செய்யப்படும்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அசாம் மாநிலம் சென்றிருந்தார். சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிந்த திட்டங்களை திறந்து வைத்தார்.

    அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் பிரசாரத்தை நோக்கி ஓடினோம். தற்போது நாங்கள் கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

    இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் வீட்டின் மேற்கூரை மீது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் அமைப்பது குறித்து மிகப்பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு சோலார் தகடுகள் அமைப்பதற்கு மத்திய அரசு உதவி புரியும்.

    மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும் வசதியானதாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. மத்திய அரசின் பட்ஜெட்டில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெடடில், 11 லட்சம் கோடி ரூபாய் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அயோத்தியின் மிகப்பெரிய ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு நான் தற்போது அசாமில் உள்ள அன்னை காமாக்கியா கோவில் வந்துள்ளேன். இங்கு நான் அன்னை காமாக்கியா திவ்ய பரியோஜனா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இது நிறைவு பெறும்போது, இந்தியா மற்றும் உலகில் அன்னை காமாக்கியாவின் பக்தர்களை மகிழ்ச்சியால் நிரப்பும்.

    ராமர் கோவிம் கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே, அதாவது 12 நாட்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • 11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
    • அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை.

    சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக தங்கள் கலாச்சாரத்தைப் பற்றியே வெட்கப்படும் போக்கை உருவாக்குகிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    11,600 கோடி மதிப்பிலான திட்டங்களை வெளியிட்டு கவுகாத்தியில் நடந்த மாபெரும் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த காலத்தை அழித்து எந்த நாடும் முன்னேற முடியாது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது" என்றார்.

    மேலும் அவர், " தொடங்கப்பட்ட திட்டங்கள் வடகிழக்கு மட்டுமின்றி தெற்காசியாவின் மற்ற பகுதிகளிலும் இணைப்பை பலப்படுத்தும்.

    கடந்த 10 ஆண்டுகளில் அசாமில் அமைதி திரும்பியுள்ளது. 7,000க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களை கீழே இறக்கிவிட்டு முக்கிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்" என்றார்.

    • பிரச்சனைகளைத் தீர்க்காமல் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
    • இந்த யாத்திரை செய்வதன் மூலம் அவர் நேரத்தை வீணடிக்கிறார் என்றார் அசாம் எம்.எல்.ஏ.

    கவுகாத்தி:

    அசாம் எம்.எல்.ஏ.வும், அனைத்து இந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சியின் பொதுச் செயலாளருமான ரபிகுல் இஸ்லாம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே உள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள் பல குழுக்கள் உள்ளன. ஆனால் ராகுல் காந்தி யாத்திரை செய்கிறார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.ஜ.க.வில் இணைந்தார். அசாமில் முன்னாள் அமைச்சர், தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

    இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை செய்வதன் மூலம் அவர் நேரத்தை வீணடிக்கிறார் என நினைக்கிறேன்.

    காங்கிரஸ் கட்சி தியாகம் செய்து மற்ற அரசியல் கட்சிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும். பிராந்திய கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள்.

    மக்களவை தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அசாமில் தங்கியிருந்தார். இப்போது பிரதமர் இங்கு வந்துள்ளார். பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் அசாம் சென்றார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஒவ்வொரு மாதமும் மாநிலத்திற்கு வந்து கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் தூங்கிக் கொண்டிருக்கிறது, அவர்கள் எதுவும் செய்யவில்லை என காட்டமாக தெரிவித்தார்.

    • பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு முதல்வர் சர்மா தலைமை தாங்கினார்.
    • பிரதமர் மோடியின் வருகையையொட்டி மாநிலத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 3ம் தேதி செல்கிறார். அங்கு, 11 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    பிரதமரின் வருகைக்கு முன்னதாக பல்வேறு ஆயத்த கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக அம்மாநில முதல்வர் சர்மா கூறினார்.

    இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "அசாம் மக்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்ற எங்கள் அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதில் பெரிய கவுரவமாக கருதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

    11,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்" என்றார்.

    மேலும், பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணத்தை கருத்தில் கொண்டு முதல்வர் சர்மா தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளுடன் தொடர் கூட்டங்களை நடத்தியதாக முதல்வர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

    • பாஜகவில் இணையும் நிகழ்ச்சி பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.
    • அசாம் மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    அசாம் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அங்கிதா தத்தா. இவரை அசாம் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டினார்.

    இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக அங்கிதா தத்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தியில் இருந்த அங்கிதா தத்தா பாரதீய ஜனதா கட்சியில் இணையபோவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் இன்று மாலை பாஜகவில் இணையும் நிகழ்ச்சி கவுகாத்தி பாசிஸ்தாவில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அசாமில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இணைந்தனர்.

    பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்கள் வருமாறு:-

    அசாம் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அங்கிதா தத்தா, கும்தாய் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பிஸ்மிதா கோகோய், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் (ஏஏஎஸ்யு) முன்னாள் தலைவர் தீபங்க குமார் நாத் மற்றும் ஏஏஎஸ்யு முன்னாள் துணைத் தலைவர் பிரகாஷ் தாஸ்

    திலீப் பால், புருஷோதம் டோலி, மிலன்ஜோதி ராய், ஹிமான் பர்மன், ஜிதுமோனி புயான், தேபாஜித் பதிர், பிரசாந்தா ஹசாரிகா, மனோரஞ்சன் நாத், போனி பதக், ஷியாமல் நாராயண் தேப் மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஞான சக்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று பாஜகவில் இணைந்து உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் பாபேஷ் கலிதா, அசாம் கேபினட் அமைச்சர்கள் ஜெயந்தா மல்லபருவா, பிஜூஷ் ஹசாரிகா, எம்எல்ஏக்கள் திகந்தா கலிதா, மனாப் தேகா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அங்கிதா தத்தா கட்சியை விட்டு நீக்கப்பட்டார்
    • அங்கிதா தத்தா இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.

    கவுகாத்தி:

    அசாம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் அங்கிதா தத்தா. இவர் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவரான பி.வி.சீனிவாசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். தான் அவமானத்துக்கு ஆளாவதாகவும், பாலின பாகுபாடு ஏவப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதனை அசாம் பா.ஜ.க. முதல் மந்திரியான ஹிமந்த் பிஸ்வா சர்மா வரவேற்றிருந்தார்.

    இதற்கிடையே, இதுதொடர்பாக அங்கிதா தத்தாவிடம் மாநில காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டது. அவரது விளக்கம் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அங்கிதா தத்தாவை 6 ஆண்டுகளுக்கு நீக்கி காங்கிரஸ் உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அங்கிதா தத்தா இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியானது.

    இவருடன் காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ. பிஸ்மிதா கோகோயும் பா.ஜ.க.வில் இணைகிறார்.

    • அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணத்திற்கு அம்மாநில அரசு தடங்கல் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு.
    • மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடைசி நாளாக நடைபயணம் மேற்கொள்கிறார்.

    நேற்று முன்தினம் கவுகாத்தியில் நுழைவதற்கு அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தடைவிதித்திருந்தார். அதையும் மீறி ராகுல் காந்தி கவுகாத்தியில் நுழைய முயன்றார். இதனால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    மேலும், ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவின்பேரில் போலீசார் ராகுல் காந்தி மீது மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். நேற்றைய நடைபயணத்தின்போது, என் மீது இன்னும் அதிகமாக வழக்குகள் போட முடியும். அதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என ஹிமாந்தா பிஸ்வா சர்மா பகிரங்கமாக மிரட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவிக்கையில் "நாங்கள் சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம். இந்த குழு ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள குறித்து விசாரணை நடத்தும். மக்களவை தேர்தலுக்கு பின்னர் நாங்கள் அவரை கைது செய்வோம். தற்போது நடவடிக்கை எடுத்தால், இது அரசியல் நடவடிக்கை எனக் கூறுவார்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. கவுகாத்தில் மக்களை தூண்டும் வகையில் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    ×