என் மலர்
குழந்தை பராமரிப்பு
- போதைபொருட்களின் கலாசாரம் தற்போது மாணவர்களிடையே அதிகரித்து இருப்பது வேதனையாக உள்ளது.
- 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.
குடியால்... குடிகெடும் என்பார்கள். கள்ளச்சாராயத்தை ஒழித்தாலும், போதை ஒழியவில்லை.... நகர வாலிபர்களிடம் சோசியல் டீரிங்காக தொடங்கிய போதைபழக்கம், அதுவே காலபோக்கில் போதைக்கு முழுமையாக அடிமையாகிவிடும் சூழ்நிலைக்கு கொண்டுபோய் விடுகிறது. சிலர் விளையாட்டாக அதை பயன்படுத்தி, பின்னர் அதற்கு அடிமையாகி அதில் இருந்து விடுபட முடியாமல் தனது வாழ்க்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது இன்றைய கால உண்மை. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாய நிலை உள்ளது.
போதைப்பொருள், அதை பயன்படுத்தும் நபரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருடைய குடும்பத்தையே பாதிக்கிறது. மதுவில் தொடங்கி, கஞ்சா, அபின், போதை மாத்திரை, போதை ஸ்டாம்பு, போதை சாக்லெட் என்று போதை பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த வகையான போதைபொருட்களின் கலாசாரம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து இருப்பதுதான் வேதனையாக உள்ளது.
பாதை மாறும் நிலை
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வியாபாரிகள், சில மாணவர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு போதைப்பொருட்களை தாராளமாக சப்ளை செய்து, தங்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவலும் கிடைத்து உள்ளது.
குறிப்பாக 13 வயது முதல் 19 வயது வரை உள்ள டீன்-ஏஜ் மாணவர்கள், கல்லூரி மாணவிகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதுதான் நம்மை அதிர்ச்சியில் ஆழ வைக்கிறது. எனவே கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து கடிவாளம்போட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
வடமாநில வாலிபர்கள்
சஞ்சய் (காரமடை):- காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு முன்பு தாராளமாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. குறிப்பாக கடைகளில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை பலர் வாங்கி அங்கேயே குடிப்பதை பார்க்கும் மாணவர்கள், அவற்றை ஜாலியாக வாங்கி குடிக்கும்போது, அதற்கு அடிமையாகி வருகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் வழங்கக்கூடாது என்று அறிவித்தாலும் அதை யாரும் கேட்பது இல்லை.
ராஜா (அன்னூர்):- அன்னூர் பகுதியில் கிராமங்கள் அதிகம். இங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும்போது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகிறார்கள். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் வடமாநில வாலிபர்களை கண்காணித்து, தடுக்க வேண்டும்.
சேவியர் (பள்ளி ஆசிரியர்):- சில பள்ளிகளில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர் பயன்படுத்துவதுதான். அவர்கள் பயன்படுத்தி வைத்திருப்பதை, அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து, அதை சக மாணவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சில பள்ளிகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகளில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை விற்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
மாணவர்களை கண்காணிக்க வேண்டும்
சந்தியா (சிங்காநல்லூர்):- மாணவர்கள், வீடுகளில் இருக்கும் நேரத்தைவிட பள்ளி, கல்லூரிகளில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். சில மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தனியே அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா?, சரியாக கல்லூரிக்கு வருகிறார்களா? என்பது ஆசிரியர்களுக்குதான் தெரியும். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் உடனே அவர்கள் அதை கண்காணித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரின் வாழ்க்கை கெட்டுப்போகாமல் தடுக்க முடியும். எனவே அதை ஒவ்வொரு ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
குரூப் அமைத்து வாங்கும் மாணவர்கள்
ராமகிருஷ்ணன் (கல்லூரி பேராசிரியர்):- சில மாணவர்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்றவற்றில் குரூப் அமைத்து கொள்கிறார்கள். அந்த குரூப்பில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள், வியாபாரிகள் இருப்பதால், யாருக்கு எவ்வளவு வேண்டும், எங்கு வந்தால் கிடைக்கும் என்று அந்த குரூப்பில் பதிவிடுகிறார்கள். இதனால் போலீசாருக்கு தெரியாமல் போதைப்பொருட்கள் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. மாணவர்களின் செல்போனை நாங்கள் வாங்கி பார்க்க முடியாது. எனவே இதை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால், செல்போனை வாங்கி வாட்ஸ்-அப், டெலிகிராமில் என்னென்ன குரூப்பில் உள்ளார்கள் என்பதை கவனித்து தகவல் தெரிவித்தால் அதை தடுக்கலாம்.
போதைக்கு அடிமையானவர்களை கண்டுபிடிப்பது எப்படி?மனநல டாக்டர் பவித்ரா விளக்கம்
தற்போது மாணவர்களிடையே வலிநிவாரண மாத்திரையை சாப்பிட்டு போதையை ஏற்படுத்துவது, அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ஏற்றுக்கொள்ளும் பழக்கம்தான் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தம், ஆளுமைதன்மை குறைவது, மன குழப்பம், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தனிமையைதான் அதிகம் விரும்புவார்கள். சரியாக தூக்கமின்மை, அதிகமாக கோபப்படுதல், உணவில் நாட்டம் இல்லாதது, பள்ளி, கல்லூரிக்கு சரியாக செல்லாமல் இருத்தல், சம்பந்தம் இல்லாமல் பணம் கேட்டு வாங்கிச்செல்வது போன்றவை இருந்தால் பெற்றோர் மிகக்கவனமாக கண்காணிக்க வேண்டும்.
அப்படியே விட்டுவிட்டால் உடல் நடுக்கம், பதட்டம் அதிகமாக ஏற்படும். போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்தும்போது கல்லீரல் பாதிக்கும். எனவே அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச்சென்று மருந்து கொடுப்பதுடன், போதிய கவுன்சிலிங் வழங்கும்போது இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள்.
- பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.
''பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.
முன்பெல்லாம் குழந்தைகளை, குழந்தைகளாகவே வளரவிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியா? அவர்களை என்ஜினியராக்கப் போகிறேன், டாக்டராக்கப் போகிறேன் என்ற பெருமையோடு பெற்றோர் அவர்களிடம் விலையாகக் கேட்பது குழந்தைகளின் குழந்தைமையை!
நம் பிள்ளைகள் படிப்பதற்காகவும் ஜெயிப்பதற்காகவும் மட்டுமே பிறக்கவில்லை. உலகின் அத்தனை மகிழ்ச்சிகளையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள். அதற்கான உரிமைகள் உண்டு.
எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளின் அறிவுத் திறனறிந்து அதற்கேற்ற கல்வித் திட்டத்தில் சேர்க்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். சமச்சீர் கல்வியில் படிக்கவே சிரமப்படும் குழந்தையை, CBSE அல்லது ICSE படித்தால்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்று தாங்களாகவே முடிவெடுத்து, அந்தக் குழந்தையையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எத்தனை பெரிய பிழை?
முயலாமலிருப்பது தவறுதான். ஆனால், பெரும்பான்மையான குழந்தைகள் தம் இயலாமையோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டிப்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்.தனக்கு கடினமாக இருக்கும் பாடங்களை படிப்பதில் அவர்கள் படும் சிரமங்களையும், அதை எதிர்கொள்ள இயலாமலும், தன்னுடைய பயத்தை பகிர்ந்து கொள்ள முடியாமலும் அந்தக்குழந்தை எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை பெரியவர்களான நாம் சரியாக கவனிப்பதில்லை.
பிடிக்காத செயலை, அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலும் செய்யச் சொல்லி வற்புறுத்தும்போது குழந்தைகள் வாடித்தான் போகிறார்கள். கொஞ்சமும் இளைப்பாற நேரமின்றி, பள்ளி முடிந்ததும், மியூசிக், டான்ஸ், ட்ராயிங் என ஏதோ ஒரு பயிற்சி வகுப்பு, பின்னர் டியூஷன் என்று ஓடிக்கொண்டே இருப்பதால், பிள்ளைகள் விளையாட ஏங்குவதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
மனம் களைப்படையாமல் இருக்க, வீடியோ கேம் விளையாண்டு தனிமையை மறக்க முயற்சிப்பதால் ஏற்படும் விளைவு, மனப்பதற்றம். தன்னால் படிக்க முடியாது, எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்ற விரக்தியில் அடுக்கடுக்கான எதிர்மறை எண்ணங்கள் அவனை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் அதீத எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.
இவர்களில் பெரும்பாலும் பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள். தமக்கென்று ஒரு நண்பர் கூட்டம் சேர்த்து கொள்வதும் அதில் தன் நிலையை ஒப்பிட்டுக் கொள்வதும் இந்த பருவத்தில்தான் வேகமெடுக்கிறது.
கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.
- குழந்தைக்காக தந்தைகள் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
- தந்தைகள் தங்களின் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.
குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தந்தைகள் எத்தகைய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சமயத்தில் தந்தைகள் தங்களின் உணர்ச்சிகளை பெரிதாக வெளிப்படுத்தமாட்டார்கள் என்றாலும் பிள்ளைகள் அடையும் ஆனந்தத்தை பார்த்து மனம் குளிர்ந்து போவதுண்டு.மொத்தமே 46 விநாடிகளே பதிவாகி இருக்கும் அந்த வீடியோவில் குழந்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், பார்ப்பவர்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்ல வைத்துவிடும். அந்த அளவிற்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைத்திருப்பதாக பலரும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள்.
தத்தி தத்தி நடை பயலும் குழந்தை ஒன்று தனக்காக தந்தை உருவாக்கி இருக்கும் 'மினி பிளே ஹவுஸில்' ஏறி விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த குழந்தை சிறிய கூடாரத்துக்குள் ஓடோடி செல்கிறது. அங்கு மர பலகையில் செய்யப்பட்டிருக்கும் லிப்ட் போன்ற கட்டமைப்பின் மீது ஏறிக்கொள்கிறது. தந்தையின் அறிவுறுத்தலின்படி இரு கைகளையும் மரப்பலகையின் மீது வைத்து கெட்டியாக பிடித்துக்கொள்கிறது.
உடனே தந்தை சங்கிலியை மரப்பலகையில் பொருத்துகிறார். அதை பார்த்து குழந்தை இரு கைகளையும் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. பிறகு குழந்தை இரு கைகளையும் மரப்பலகையின் மீது வைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டதும் தந்தை கயிறு மூலம் இழுக்கிறார். உடனே மர லிப்ட் அசைந்தாடியபடி சில அடி தூரம் மேலே செல்கிறது. உடனே குழந்தை ஆனந்தத்தில் மிதக்கிறது. கைகளை தட்டி ஆரவாரம் செய்கிறது.
தந்தை லிப்டை பிடித்துக்கொள்ள, குழந்தை பின்னோக்கி நகர்ந்து மர வீடு போன்ற சிறிய கூடாரத்துக்குள் செல்கிறது. அங்கிருந்து எட்டிப்பார்த்து உற்சாகம் அடைகிறது. பிறகு மர லிப்ட்டுக்குள் வந்து மீண்டும் கீழே இறங்குகிறது. தரைத்தளத்தை அடைந்ததும் மீண்டும் கைகளை தட்டி சிரித்தபடியே வெளியே வருகிறது.
மொத்தமே 46 விநாடிகளே பதிவாகி இருக்கும் அந்த வீடியோவில் குழந்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிகள், பார்ப்பவர்களை மீண்டும் குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்ல வைத்துவிடும். அந்த அளவிற்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைத்திருப்பதாக பலரும் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
- குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
- இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
நமது நாட்டில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் மீது யாரும் புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க கொண்டு வந்த சட்டம்தான் போக்சோ. இதன் முழு விரிவாக்கம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்பது ஆகும். இந்த சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சட்டம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளி படித்து வரும் குழந்தைகள் மத்தியில் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்தாலே இந்த சட்டத்தின் கீழ் வருவதால், பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு
குறிப்பாக கோவை மாவட்டத்தில் போக்சோ சட்டம் தொடர்பாக மாணவிகள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, சைல்டு லைன் ஆகியோருடன் போலீசார் இணைந்து பள்ளி குழந்தைகள், கிராமப்புறங்களில் போக்சோ சட்டம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதனால் பாலியல் சீண்டல்கள் செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்படும் மாணவிகள் தங்களின் பெற்றோரிடமோ, அல்லது ஆசிரியரிடமோ தெரிவிப்பதால், அவர்கள் போலீசில் புகார் செய்து குற்றங்கள் செய்யும் நபர்களை கைது செய்து வருகிறார்கள். மேலும் போக்சோ தொடர்பாக விழிப்புணர்வை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தி, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
பயம் இல்லை
சசிகலா (ஆசிரியை, அன்னூர்):- போக்சோ சட்டம் தொடர்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. எனவே மாணவிகள் தைரியமாக இருக்கிறார்கள். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்தது. அத்துடன் வெளியே சொன்னால் தங்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவார்களோ என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மாணவிகளிடம் அந்த பயம் இல்லை.
கந்தசாமி (பொள்ளாச்சி):- கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில்தான் போக்சோ சட்டம் அதிகளவில் பதிவாகி வருகிறது. அதுபோன்று அங்குதான் குழந்தை திருமணமும் அதிகமாக நடந்து வருகிறது. போக்சோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதுதான் இதன் வெளிப்பாடு. எனவே இந்த பகுதிகளில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி அனைத்து குக்கிராமங்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று, பள்ளி மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர் ஒத்துழைப்பு
முத்துகிருஷ்ணன் (தொண்டாமுத்தூர்):- தற்போது அனைத்து பள்ளிகளிலும் நல்ல தொடுதல், (குட் டச்) தீய தொடுதல் (பேட் டச்) என்று குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். இதனால் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் குக்கிராமங்கள், மலைவாழ் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு சரியாக விழிப்புணர்வு சென்று சேரவில்லை. எனவே இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தாரணி (பள்ளி மேலாண்மை குழு தலைவர்) :- சில பள்ளிகளில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துகளை சொல்ல நாங்கள் முயற்சி செய்து, அதில் பெற்றோரும் பங்கேற்க கூறினால், பெற்றோர் யாரும் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. அத்துடன் இதுபோன்ற நிகழ்ச்சிக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள். இதனால் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளிடம் எடுத்துச்சொல்ல முடியாமல் போய்விடுகிறது. என்னதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதற்கு மாணவிகளின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக மாணவிகள் மத்தியில் சென்றடையும்.
தைரியம் கிடைத்து உள்ளது
கல்லூரி மாணவி:- நான் பள்ளியில் படிக்கும்போது போக்சோ சட்டம் குறித்து எங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் என்னைப்போன்ற மாணவிகளுக்கு தைரியம் ஏற்பட்டது. அத்துடன் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட்டாலே இந்த சட்டம் பாய்வதால், பலர் பயந்து வருகிறார்கள். எனவே குழந்தைகளின் நலன் கருதி, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், இந்த சட்டத்தில் உள்ள தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
பள்ளி மாணவிகள்:- பள்ளிகளில் எங்களுக்கு போக்சோ தொடர்பாக ஆசிரியர்கள், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது பெற்றோரிடம் சொல்ல பயமாக இருக்கும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், யாராவது தவறான எண்ணத்தில் எங்களிடம் பேசினாலோ, அல்லது தொட்டாலோ நாங்கள் உடனே எவ்வித பயமும் இல்லாமல் ஆசிரியைகளிடம் சொல்லலாம் என்ற தைரியம் எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
சந்தோஷ்குமார்:- போக்சோ என்றால் சிறுமிகளிடம் தவறாக நடந்தால் மட்டும்தான் நடவடிக்கை என்று இல்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் போக்சோ சட்டம் பாயும். எனவே மாணவர்களிடமும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தவறாக தொட்டால் நமது வாழ்க்கையே வீணாக போய்விடும் என்று இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராஜேஸ்வரி (காரமடை):- காலையில் இருந்து மாலை வரை குழந்தைகள் பள்ளிகளில்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுவதை விட ஆசிரியைகளிடம்தான் நன்றாக பேசுவார்கள். பெற்றோர் சொன்னால் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். ஆனால் ஆசிரியர்கள் கூறினால் அதை கேட்பார்கள். எனவே பள்ளி குழந்தைகளிடம் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் என்று தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும். முக்கியமாக போக்சோ தொடர்பாக முழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி காரணமாகஒரே பள்ளியில் 12 மாணவிகள் புகார்
போக்சோ சட்டம் தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக ஒரு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோதே 12 மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். இதுதான் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பயன் ஆகும். ஆனால் சில பகுதிகளில் மாணவிகள் புகார் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் பெற்றோர் ஒத்துழைப்பு
தண்டனையை கடுமையாக்க வேண்டும்
போக்சோ தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சராசரியாக கோவை மாவட்டத்தில் மாதத்துக்கு 13 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளில் 5 பேர் கர்ப்பம் அடைந்துதான் வருகிறார்கள். இதில் உறவினர்களால் பாதிக்கப்படும் சிறுமிகள்தான் அதிகம். சிலர் இந்த குற்ற வழக்கில் கைதாகி இருந்தாலும் போதிய ஆதாரம் இல்லாமல் எளிதாக வெளியே வந்து விடுகிறார்கள். எனவே சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சட்டம் சொல்வது என்ன?
போக்சோ சட்டத்தில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? அதில் கிடைக்கும் தண்டனை விவரங்கள் எவை என்பது குறித்து வக்கீல் ஒருவர் கூறும்போது, போக்சோ சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். அபராதமும் உண்டு. குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, கட்டாயப்படுத்தி தொட வைப்பது பாலியல் சீண்டல் ஆகும். இதில் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, ஆபாசமாக பேசுவதும் போக்சோ சட்டத்தில்தான் வருகிறது. இதற்கு 5 ஆண்டு வரை தண்டனை கிடைக்கும் என்றார்.
- சமையல் அறையில், சூடான பொருட்களைக் கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும்.
- வீட்டில், அவசர காலத்தில் வெளியேறும் வழிகளைப் பற்றி குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு, ஆபத்து காலத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி கற்றுத்தர வேண்டியது முக்கியமானது. குறிப்பாக வீட்டில் மின் சாதனங்கள், சமையல் அடுப்பு பயன்படுத்துதல் மற்றும் பிற வேலைகளின் போது, சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
விழிப்புணர்வு: மின்சார வயர்களைச் சுற்றி, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைத்து விளையாடுவதைத் தவிர்ப்பது குறித்து, தெரியப்படுத்த வேண்டும். வீட்டில் மின் வயர்கள் சரியான முறையில் சீல் வைக்கப்பட்டுள்ளதா? கேஸ் சிலிண்டர் ஒழுங்காக மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தீ மற்றும் புகை அலாரங்களைப் பொருத்தி வைப்பதும், அவற்றை அவ்வப்போது, சோதனை செய்து, தயார் நிலையில் வைத்திருப்பதும் அவசியம். ஆபத்து காலத்தில், இந்தக் கருவிகள் எழுப்பும் சத்தம் குறித்து குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும். விபத்து ஏற்படுவதற்கு அறிகுறியாக இருக்கும் தீப்பொறிகள், புகை போன்றவை ஏற்பட்டால், அதை உடனடியாகக் கவனிக்கவும். அதை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுத் தந்தால், பெரிய தீவிபத்துகளைத் தவிர்க்கலாம். இது குறித்து உடனடியாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கற்றுத் தரவேண்டும்.
பாதுகாப்பு விதிமுறைகள்: சமையல் அறையில், சூடான பொருட்களைக் கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். வளர்ந்த குழந்தைகளுக்கு அடுப்பைப் பற்ற வைத்து அணைப்பது, ஓவன், மின்சார அடுப்பைக் கையாள்வது என அனைத்தையும் கவனமுடன் கற்றுத்தர வேண்டும். திறந்த நிலையில் மின் வயர்கள் இருந்தால், அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 5 அடி தூரம் தள்ளி இருக்கப் பழக்க வேண்டும். வயர்களை ஈரமான கையாலோ, துணியாலோ தொடுவது, ஒரு பிளக்கில் பல உபகரணங்களைப் பொருத்தி சார்ஜ் செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் பல கருவிகளை சார்ஜ் செய்தால், அவை அதிக சூடாகி, விபத்துக்கு வழிவகுக்கும். தேவையில்லாத சமயங்களில் வயர்களை பிளக்கில் இருந்து எடுப்பது கூடாது. சுவிட்சுகள் சரியாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிப்பதும் அவசியம்.
தப்பிக்கும் வழிமுறைகள்: வீட்டில், அவசர காலத்தில் வெளியேறும் வழிகளைப் பற்றி குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது, தீ விபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். தப்பிக்கும் வழித்தடத்தில் குறுக்கீடுகள் இருந்தால் அதை அகற்றிச் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, எதிர்பாராத விதமாக, ஆடைகளில் தீப்பிடித்தால், பட்டாசை கீழே போடுவது, தரையில் உருள்வது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
- மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று.
- சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.
மதித்தல் என்றால் என்ன? ஒரு மனிதருக்கோ ஒரு பொருளுக்கோ மதிப்பு கொடுப்பதை மதித்தல் என்கிறோம். நாம் ஒருவரை மதிக்கும் போது அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். மதித்தல் என்பது நற்பண்புகளில் முக்கியமான ஒன்று. மகிழ்ச்சி மற்றும் மன நிறைவான வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது மதித்தல் என்ற நற்பண்பு ஆகும். நாம் மற்றவரை மதிக்கும் போது நாமும் மதிக்கப் படுகின்றோம். யார் ஒருவர் மற்றவர்களை மதிக்கின்றார்களோ அவர்கள் ஒழுக்கமானவர்கள், பணிவானவர்கள் மற்றும் பிறரை கௌரவ படுத்துபவர். அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். இப்படி பட்டவர்கள் சமுதாயத்தில் மதிக்கப் படுகின்றனர்.
மதித்தல் என்ற நற்பண்பின் வகைகள் மற்றும் அப்பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிகள் பற்றி காண்போம்.
தன்னை மதித்தல் அல்லது சுயமரியாதை
நம்மை நாமே மதித்துக் கொள்வது மற்றும் மற்றவர் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வரையறுப்பது சுய மரியாதை ஆகும். சுயமரியாதை தான் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அடிப்படையாக இருக்கும். சுயமரியாதை தன்னம்பிக்கை அளிக்கும். புகழ் மற்றும் கௌரவத்தை கொடுக்கும். சுயமரியாதை இல்லாவிட்டால் நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள். நம் ஒப்புதல் இல்லாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும். நாம் அதன் படி செயல் பட வேண்டி வரும்; நம் இயற்கைக்கு மாறாக செயல் பட நேரிடும்.
தனி நபர் மற்றும் சமுதாயத்திற்கான மதிப்பு
மற்றவர்களை மதிப்பது என்பது மற்றவர் மீது அன்பு செலுத்துவது, அக்கறை மற்றும் மரியாதை கொடுப்பதாகும். மற்றவர்களை மதிப்பது என்பது அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். ஒரு தனி நபரை நீங்கள் மதிக்கும் போது உங்கள் மனம் எல்லோரையும் மதிக்கத் துவங்கிவிடும். குழந்தைகள் பெற்றோர் மற்றும் பெரியவர்களை மதிக்கிறார்கள்; மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கிறார்கள்; எனவே சமுதாயத்தில் சிறியவர்களுக்கு பெரியவர்களை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மேலும் சமுதாயத்தின் விதி முறைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
பலகீனமானவர்களை மதித்தல்
அனைவரையும் மதிப்பது தான் கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தின் அடையாளமாகும். குழந்தைகள், முதியவர்கள், உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள் போன்ற பலகீனமான மக்கள் உட்பட அனைவரையும் மதிப்பது அந்த சமுதாயத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது.
இயற்கையை மதிப்பது
இயற்கையை மதிப்பது என்பது நம்மை சுற்றி உள்ள இயற்க்கை வளங்களை மதிப்பதாகும். மக்கள் இயற்க்கை வளங்களை நீண்ட காலம் பயனளிக்கும் வகையில் கவனமாக கையாள வேண்டும்.அவை இந்த மொத்த சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும் .
மதித்தல் பண்பின் இன்றியமையாமை மற்றும் நன்மைகள்
அனைவருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களை மதிப்பதை மட்டும் தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். சமுதாயத் தகுதி வயது ஆகியவற்றை பார்க்காமல் அனைவரையும் சமமாக மதிக்க கற்றுத் தருவது இல்லை. அனைவருடன் சமமாக பழக சிறு வயது முதல் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் மற்றவர்களோடு பழகுவதில் எந்த சிக்கலும் இருக்காது
மற்றவரை மதிக்கும் நற்பண்பை வளர்த்துக் கொண்டால் அன்றாடும் மற்றவர்களோடு பழகவைத்து மகிழ்ச்சியாக இருக்கும். மனநிறைவோடு வாழலாம். மற்றவர்களை மதிக்கும்போது அது மன நிறைவை ஏற்படுத்துவதோடு நம்முடைய குறைகளை சொல்லி அதற்கான தீர்வுகளை பெறுவதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஒரு இனிமையான சூழல் உருவாகுவதற்கும், நம்முடைய வாழ்க்கை பாதை சரியான திசையில் செல்வதற்கும், வழி வகிக்கிறது. இப்படி பல நன்மைகளை உருவாக்கும் மதித்தல் என்ற நற்பண்பை நாம் வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது என்பது தெரிய வருகிறது.
இந்த மதித்தல் என்ற நற்பண்பை வளர்ப்பது எப்படி?
குழந்தைகள் தவறு செய்யும் போது அல்லது இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளும் போது பெற்றோர்கள் அவர்களை கண்டிக்க கூடாது; தடுக்கவும் கூடாது. அதற்கு மாறாக அவர்களிடம் இப்படி கேட்க வேண்டும் "இதே காரியத்தை உனக்கு யாராவது செய்தால் நீ எப்படி உணர்வாய்"? "மற்றவர்கள் இடத்தில் இருந்தும் யோசிக்க கற்றுக்கொள்". இந்த அணுகுமுறை குழந்தைகளே தாங்கள் செய்வதை சரியா தவறா என்பதை யோசிக்கும் அறிவை வளர்க்கும். இதனால் அவர்களே தங்களை மதித்துக் கொள்ளும் உணர்வை உண்டாக்கும். பெற்றோர்களின் பழக்க வழக்கங்களை பார்த்து குழந்தைகள் பல பழக்கங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். மதித்தல் என்ற நற்பண்பை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை மதிக்க வேண்டும். அவர்கள் செய்யும் சிறு உதவிக்கு நன்றி சொல்வது, நல்ல செயல் செய்யும் போது பாராட்டுவது, அவர்களுக்கு பெற்றோர்கள் சிறு தவறு இழைத்து விட்டால் மன்னிப்பு கேட்பது இப்படி குழந்தைகளோடு பழகும் பொது இயல்பாக அவர்களும் மதித்தல் என்ற நற்பண்பை கற்றுக் கொள்வார்கள். மற்றவர்களோடு இனிமையாக பழகும் கலையை வளர்த்துக் கொள்வார்கள். மேலே சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டு குழந்தைகளின் மனதில் மதித்தல் என்ற நற்பண்பை சிறு வயது முதலே வளர்க்கத் தொடங்குங்கள். அவர்களின் வாழ்வை வளமாக்குங்கள்.
- பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும்.
- ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
குழந்தைகளைக் குளிப்பாட்ட நிச்சயம் நலங்குமாவு பயன்படுத்தக்கூடாது. நலங்குமாவில் சேர்க்கப்படுகிற பொருள்கள் யாருக்கு, எந்தவித ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.
பிறந்த குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் சருமமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். சில குழந்தைகள் அலர்ஜி தன்மையோடு பிறப்பார்கள். குழந்தையின் சருமம் ஓரளவு முதிர்ச்சியடையும்வரை அந்த ஒவ்வாமை தொடரும். ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் அது சரியாகும்.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே.... குறிப்பாக மஞ்சள்... இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- பெண் குழந்தைகளை கவுரபடுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் ஒடுக்கப்படுகின்றன.
உலகில் உயிர்கள் தோன்றிட உறவுகள் மலர்ந்திட உரிப்பொருளாக விளங்குபவள் பெண் என்னும் பேராற்றல்.
அப்பாவிற்கு தேவதையாகவும், அம்மாவிற்கு தெய்வமாகவும், சகோதரர்களுக்கு செல்லமாகவும் வலம் வரும் பெண் குழந்தைகளை கொண்டாடும் வகையில் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.
இன்றைய காலகட்டங்களில் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை களைவதோடு, அவர்களை ஊக்குவித்து கவுரபடுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்த போதே கள்ளிப்பால் கொடுத்து அதனை அழிக்க தொடங்கிய பெண் சிசுக்கொலை ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் எங்கோவோர் இடத்தில் நடந்து கொண்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. சமூகத்தில் நிலவி வரும் பாலின சமத்துவமின்மை காரணமாக பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகளும், அத்தியாவசிய தேவைகளும் ஒடுக்கப்படுகின்றன. ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் எந்தவொரு சுதந்திரமும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை என்ற சூழல் இன்றளவும் நிலவுகிறது.
இது தவிர பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம் என்ற கொடுமையான நிகழ்வு இன்றும் இருப்பது மனவேதனை தரும் செய்தியாகும். நாகரிகம் வளர்ந்தாலும் இன்றைய சூழலில் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவர்களின் உரிமை பறிக்கப்படுவதன் அடையாளமாகவே கருதப்படுகிறது.
பல ஆண்டுகள் நடந்த போராட்டங்களின் விளைவாக தற்போது பெண் குழந்தைகளுக்கு எதிரான ஒடுக்கப்படும் சூழல்கள் மாறி வருகின்றன. அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தடையின்றி வந்தடைகிறது. வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணும் இப்போது ஒலிம்பிக்கில் கோப்பையை வெல்கிறாள். அடுப்பங்கரையில் அடைப்பட்டிருந்தவள் ஆகாய விமானத்தை இயக்குகிறாள்.
இவையெல்லாம் பாலின சம உரிமை ஊக்குவிப்பதாக இருந்தாலும்கூட, இக்காலத்தில் அவர்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் அவலநிலை பெருகி வருகிறது. பருவ நிலை அடைந்த பெண்ணை விட, சின்னஞ்சிறு குழந்தைகள்கூட பாலியல் வன்மத்தால் சிதைக்கப்படுகிறார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்யும் மிருகத்தனமான மனிதர்களால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதா? அல்லது வீட்டிலே பாதுகாப்பதா? என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பல ஆண்டுகளாக போராடி வாங்கிய உரிமைகள் பறிக்கப்பட்டு மீண்டும் பிற்போக்கான சமுதாயத்தில் பெண் குழந்தைகள் அடைக்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தகு கொடுமையான நிகழ்வுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்போதுதான் இந்த நிலை மாறும், பெண் குழந்தைகளின் எதிர்காலமும் வளம்பெறும் என்பது முற்றிலும் உண்மை.
இத்தகைய தடைகளையும், கொடுமைகளையும் தாண்டி வளர்ந்து வரும் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்திட இந்நாளில் நாம் உறுதியேற்போம்.
- குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
- பெற்றோர்தான் உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் சுமார் 1 கோடியே 40 லட்சம் குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறார்கள். உடல் பருமன் விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். பெற்றோர்தான் உடல் பருமனை தடுக்கும் வழிமுறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலமாகவே உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
குழந்தை பருவத்திலேயே உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
* துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான் பெரும்பாலான குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவை விரைவாக உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
* இன்றைய காலகட்டத்தில் தெருக்களில் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வீடியோ கேம், செல்போன், டேப்லெட் போன்ற டிஜிட்டல் சாதனங்களைத்தான் அதிகம் பயன்படுத்த விரும்புகிறார்கள். அதனால் உடல் ரீதியாக செயலற்றவர்களாக மாறிவிட்டார்கள். சோம்பேறித் தனமும் சுலபமாக குடிகொண்டு விடுகிறது. இவை எளிதில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடுகின்றன.
* ஆரம்ப நிலையிலேயே உடல் பருமன் பிரச்சினையை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல நாள்பட்ட நோய்களுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், சுவாச மற்றும் செரிமான பிரச்சினைகள், பக்கவாதம், இதய நோய் போன்றவை இவற்றுள் அடங்கும். குழந்தை பருவத்திலேயே உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடாவிட்டால் மூன்று குழந்தைகளில் இருவர் வாழ்நாள் முழுவதும் உடல் பருமனுடன் காணப்படுவார்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியா நீரிழிவு நோயின் தலை நகரமாக மாறி உள்ளது.
* குழந்தை பருவ உடல் பருமன், பொது சுகாதார பிரச்சினையாக மாறும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
குழந்தை பருவ உடல் பருமனை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியமானது. அவற்றுள் சில வழிமுறைகள்:
குழந்தைகளின் காலை உணவில் நார்ச்சத்து, புரதம் இடம்பெற செய்யுங்கள். இவை நீண்ட நேரம் உற்சாகமுடன் செயல்பட வைக்கும்.
குழந்தைகள் மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. உணவை பிரித்து ஐந்து, ஆறு வேளையாக சாப்பிடலாம். அவ்வாறு குறைவாக சாப்பிடுவது எளிதில் செரிமானம் ஆவதற்கு வித்திடும்.
அந்தந்த பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட செய்யுங்கள். காய்கறி சூப்கள், பழ ஜூஸ்கள் வடிவிலும் உட்கொள்ளலாம். அவை ஊட்டச்சத்துக்களை சமமான அளவில் வழங்க உதவும்.
உணவை வேகமாகவோ, மெதுவாகவோ சாப்பிடும் பழக்கத்தை தவிர்ப்பதற்கு டைனிங் டேபிளில் அமரும் வழக்கத்தை பின்பற்றலாம். சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்ப்பதை தவிர்க்கவும் பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு இனிப்பு பலகாரங்கள் மற்றும் பானங்கள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இயற்கை சர்க்கரை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்வதற்கு ஊக்குவிப்பது நல்லது.
தினமும் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடுவதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள். ஏனெனில் உடல் பருமனை தவிர்ப்பதற்கு உடல் செயல்பாடு முக்கியமானது. அவை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக செயல்பட தூண்டும். போதிய உணவு உட்கொள்வது, போதுமான நேரம் தூங்குவது, விளையாடுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவது என குழந்தைப் பருவம் முதலே ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவது உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
- குழந்தைகளை ‘ரிஸ்க்’ எடுக்க அனுமதியுங்கள்.
- குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள்.
1. நம்பிக்கையை விதையுங்கள்:
குழந்தைகளிடத்தில், 'உன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அதையே அடிக்கடி கூறுங்கள். அதை அவர்கள் நம்பத் தொடங்குவார்கள். அந்த நம்பிக்கையே அவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும்.
2. காயங்கள் ஏற்படட்டும்:
குழந்தைகள் குதித்து விளையாடும்போது கீழே விழுந்து காயமடையட்டும். அவர்களை தடுக்காதீர்கள். அப்போதுதான் தோல்வியில் இருந்து எழுந்து, மண்ணைத் துடைத்துக்கொண்டு நடக்கக் கற்றுக் கொள்வார்கள்.
3. போட்டியிடுங்கள்:
அவர்களை போட்டிகளில் பங்கேற்கச் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற மாட்டார்கள். அதனை எதிர்பார்க்கவும் செய்யாதீர்கள். அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தோல்விகளை எதிர்கொள்ள அவர்களை பழக்கப்படுத்தும். தோல்வியை விட தோல்வி பயம் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதனை புரிந்து கொள்ளுங்கள்.
4. முயற்சி அவசியம்:
குழந்தைகளை 'ரிஸ்க்' எடுக்க அனுமதியுங்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களை செய்ய அனுமதியுங்கள். மரத்தில் ஏறட்டும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடட்டும். அது காயமடையக்கூடிய சூழ்நிலைகளில் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும். மேலும் காயமடையலாம் என்று தெரிந்தால், அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதையும் நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
5. உயரட்டும்:
ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் முன்னோடிகளை விட அதிக வாய்ப்புகளை பெறுகின்றனர். உங்களுக்கு கிடைக்காத வாய்ப்புகளும், வளங்களும் அவர்களுக்கு கிடைக்கும். அவற்றை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கு அவர்கள் பயன்படுத்தட்டும். அவர்களிடம் எதையும் திணிக்காதீர்கள்.
6. முன்மாதிரியாக இருங்கள்:
குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள். அவர்களிடம் என்னவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அதுவாகவே இருங்கள். உங்கள் நிலைப்பாட்டை மாற்றாதீர்கள். குழந்தைகளின் இதயத்தை காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாதீர்கள்.
7. மோசமான நடத்தை:
குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும்போது அவர்களை திருத்தி வழிநடத்த வேண்டும். அவர்கள் ஏதாவது கெட்ட செயலைச் செய்யும்போது கண்டித்து திருத்த வேண்டும். அதில் தவறில்லை. சரியான நடத்தை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டுங்கள்.
8. குழந்தைகளை நம்புங்கள்:
அவர்களை நம்புங்கள். எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். அவர்கள் மீது நம்பிக்கை இன்றி இருந்தால் அவர்களும் உங்களிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
9. அனுபவங்களைக் கொடுங்கள்:
உங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை அவர்களுடன் பகிருங்கள். அனாதை இல்லங்கள், சுற்றுலா, அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு கிடைத்த அனுபவத்தைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.
10. கேளுங்கள்:
குழந்தைகளை எந்த விஷயமும் தெரியாதவர்கள் என்று நினைக்க வேண்டாம். அவசரப்பட்டு பதில் சொல்லவும் வேண்டாம். அவர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள். அப்படி செய்தால் நான் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்று புகார் கூற மாட்டார்கள்.
11. ஒப்பிடாதீர்கள்:
பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று ஒப்பீடு. குழந்தைகளை யாருடனும் ஒப்பிடாதீர்கள். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன்.
12. பாதுகாப்பான இடம் கொடுங்கள்:
அனைவருக்கும் பாதுகாப்பான இடம் தேவை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாக இருங்கள். எதுவுமே இல்லாமல், எதிர்பார்க்காமல் உங்களிடம் அன்பை பெறுகிறார்கள். நீங்கள் அவர்கள் மீது கோபமாக இருந்தாலும் கூட, எப்போதும் அவர்களை நேசிப்பீர்கள் என்பதை புரிய வையுங்கள்.
- குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும்.
- ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.
குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது, சவுகர்யம் மற்றும் சுலபமாக பராமரிப்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் ஆடைகள் மென்மையானதாகவும், இழுதன்மையுடன் வளைக்கக் கூடியதாகவும், எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். ஈரப்பதம் இருந்தால் ஆவியாகி காற்றோட்டம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் இன்மை, ஈரத்தால் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும். ஆடைகள் எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அழகிற்காக கத்தரித்து ஆடை அலங்கரிக்கப்பட்டிருந்தால் சலவை செய்யும்போது மிகுந்த கவனம் தேவைப்படும். மேலும், இது போன்று கத்தரித்து அலங்கரிக்கப்படுவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
பின்னப்பட்ட துணியால் ஆன ஆடைகள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு இழுதன்மை பெற்று நீளும் திறன் பெற்றும் இருக்கும். எனவே குழந்தைக்கு பின்னப்பட்ட துணியாலான ஆடையை அணிவிப்பது மிகவும் எளிது. முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் ஆடையின் திறப்பு மேல் இருந்து கீழ்வரை அமைத்து இருப்பது ஆடை அணிவித்தலை எளிமையாக்கும். முடிச்சு போட்டு கட்டுபவை அல்லது தட்டையான பொருத்துவான்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். கழுத்துப் பகுதிக்கு இழுத்து கட்டக்கூடியவைகளை அநேகமாக பரிந்துரைப்பதில்லை. ஏனெனில், கட்டக்கூடிய நாடாவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். முடிச்சு போட்டு கட்டக்கூடியன அல்லது பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவை பாதுகாப்பான முறையில் தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.
குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும். முக்கியமாக குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். சட்டையில் அழுக்குபடாதிருக்க சட்டையின் மேல் முழுவதுமாக அணியப்படும் ஆடையே இருபாலின குழந்தைகளுக்கும் எளிமையான ஆடையாகும். முக்கியமாக கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் பொருத்தியிருந்தால் குழந்தைகளுக்கு டையாப்பர் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட ஆடையானது குழந்தைகளின் கால் முட்டிகளை மூடும் கவசமாக தரையில் இருந்து உராய்வதை பாதுகாக்கும். கால்சட்டையின் கால்பகுதி குழந்தையின் முட்டிகளுக்கு அதிக பலமளிக்க கூடியதாக இருப்பதால் நீடித்து உழைக்குமாறு இருப்பது அவசியம்.
ஆரோக்கியம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை. ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. விருப்பங்கள் மற்றும் தேவைகள் ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.
ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் பிரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம்.
வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை. உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. கிலைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய பிராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது.
உதாரணத்திற்கு சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன. உதாரணத்திற்கு நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.
- சர்வாதிகார பெற்றோர் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள்.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைப்பார்கள்.
மிகவும் கண்டிப்பான பெற்றோர் அல்லது சர்வாதிகார பெற்றோர் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்பிக்க பொய்யர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு. இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிகமான வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவனிடமும் சர்வாதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.
அதிகார பெற்றோர்: நாம் முன்னர் கண்ட சர்வாதிகார பெற்றோருக்கும் இந்த வகை பெற்றோருக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வகையில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைப்பார்கள். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை செட் செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல தூண்டுவார்கள். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை தண்டிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திப்பார்கள்.
எப்போதும் குழந்தைகளின் மதிப்புகளையும் உணர்வுகளையும் இவர்கள் மதிப்பார்கள். இதனால் இந்த வகையில் உள்ள பெற்றோர் குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும் அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக இவர்கள் இருப்பதுண்டு.






