என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகர் கவின் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் எலன் இயக்கத்தில் கவின் நடிக்கும் திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தில் லால், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஏ ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.


    ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் வருகிற 12-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'அன்னபூரணி'.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் அன்னபூரணி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னை 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது, "திரையரங்கில் படம் பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. அதனால் முதல் நாள் காட்சியெல்லாம் பார்க்க தைரியம் இருக்காது. எப்போதும் முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பேன்.


    மேலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள். அப்படி சொன்னாலே திட்டுகிறார்கள். நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லையா? இல்லை பெண் என்பதால் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. 'லேடி சூப்பர் ஸ்டார்' என்பதை நோக்கி என் பயணம் இல்லை" என்று கூறினார்.

    • மலையாள சினிமா மற்றும் டெலிவிசன் உலகில் பிரபலமாக அறியப்பட்டவர்.
    • காக்கா படத்தின் இவரின் பஞ்சமி காதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

    பிரபல மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு 24 வயதே ஆகிறது.

    மலையாள சினிமா மற்றும் டெலிவிசன் உலகில் இவர் பிரபலமானவர். புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினரின் போராட்டங்களை பற்றிய காக்கா படத்தின் பஞ்சமி காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இவரது மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சவர்ணதாதா, சவுதி வெள்ளக்கா, புழயம்மா, உயாரே, ஒரு குட்டநாடன் பிளாக், நித்யஹரித நாயகன், ஒரு யமந்தன் பிரேமகதா ஆகிய படங்களில் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது.

    • கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.
    • இப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

    இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. இந்த படத்திற்கு கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இந்த படம் உருவான காலத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. எனினும், இந்த படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.


    இதைத்தொடர்ந்து 22 வருடங்களுக்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் உருவாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் முதல் காட்சியில் கமல்ஹாசன் எண்ட்ரியின் போது ரசிகர்கள் கற்பூரம் காண்பித்து உற்சாகமாக கொண்டாடினர். இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனுராக் காஷ்யப் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

    இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.


    அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இவரே இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் ஜி.வி.பிரகாஷ் பிரபல இயக்குனருடன் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    ஜி.வி.பிரகாஷ் தற்போது ரிபெல், இடிமுழக்கம், கள்வன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சைரன், எஸ்.கே.21, சூர்யா 43 போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். எனவே இந்த பட வேலைகள் முடிந்த பிறகு அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.
    • நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் என தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். மேலும், நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.


    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "'தண்ணீர் தண்ணீர்

    எங்கணும் தண்ணீர்

    குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'

    எனும் ஆங்கிலக் கவிதை

    நினைவின் இடுக்கில் கசிகிறது

    வீட்டுக்குத் தண்ணீர் இல்லை

    என்பது சிறுதுயரம்

    வீட்டுக்குள்ளேயே தண்ணீர்

    என்பது பெருந்துயரம்

    விடியும் வடியும் என்று

    காத்திருந்த

    பெருமக்களின் துயரத்தில்

    பாதிக்கப்படாத நானும்

    பங்கேற்கிறேன்

    என் கடமையின் அடையாளமாக

    முதலமைச்சரின்

    பொது நிவாரண நிதிக்கு

    ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

    பொருள்கொண்டோர்

    அருள்கூர்க

    சக மனிதனின் துயரம்

    நம் துயரம்

    இடர் தொடராதிருக்க

    இனியொரு விதிசெய்வோம்;

    அதை எந்தநாளும் காப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் மதுரை மோகன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது.

    நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

    நடிகர் மதுரை மோகன் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் இவருக்கு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்தது.


    இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்து மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் மதுரை மோகன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் பலர் இவருக்கு சமூக வலைதளத்தில் மூலம் இரக்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இயக்குனர் பா.இரஞ்சித் நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தின் மூலமாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித்தை நேரில் சந்தித்து நடிகர் விக்ரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை 'தங்கலான்' படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது.


    • உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார்.
    • அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும் நடித்துள்ளார்.

    பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி பெங்களூரு அருகே சோழதேவனஹள்ளியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக நோய்வாய்பட்டு அவர் கடந்த சில நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார்.

    இந்த நிலையில் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் லீலாவதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

    தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் பிறந்த லீலாவதி கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'பட்டினத்தார்', 'சுமைதாங்கி', 'வளர்பிறை', 'அவள் ஒரு தொடா் கதை', 'நான் அவனில்லை', 'அவர்கள்', 'புதிர்', 'கர்ஜனை' ஆகிய 8 படங்களில் நடித்துள்ளார். அவள் ஒரு தொடர் கதையில் நடிகர் கமல்ஹாசனுடனும், அவர்கள், கர்ஜனை ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்துடனும், வளர்பிறையில் நடிகர் சிவாஜிகணேசனுடனும் நடித்துள்ளார்.

    இந்நிலையில் பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    பழம்பெரும் கன்னட திரையுலக பிரபலம் லீலாவதியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். சினிமாவின் உண்மையான அடையாளமான அவர், பல படங்களில் தனது நடிப்பால் வெள்ளித்திரையை அலங்கரித்தார். அவரது மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க திறமை எப்போதும் நினைவில் பாராட்டப்படும். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.
    • மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்க்குப்பதிவு செய்யப்பட்டது.

    நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடவடிக்கை எடுக்க வேண்டாம்- திரிஷா

    நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

    இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

    திரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி கருத்து

    "நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவனத்திற்கு வந்தது. அவரின் இந்த மரியாதை இல்லாத அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.

     

    இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். திரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக உடன் நிற்கிறேன்" என சிரஞ்சீவி குறிப்பிட்டிருந்தார்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.


    இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். 'வெப்பன்' படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்று மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.


    இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், "தனுஷ் மூன்றாவதாக படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அவரின் சொந்தகாரர் மகன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கும் நான் தான் இசையமைக்கவுள்ளேன். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்" என கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×