என் மலர்tooltip icon
    • நாளை சாமுண்டி ஊர்வலம் நடக்கிறது.
    • 20-ந்தேதி ராமலிங்கேஸ்வரர்- சவுண்டேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    திண்டுக்கல் கிழக்கு ரதவீதியில் ராமலிங்க சவுண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. அதன்படி திருவிழா நேற்று தொடங்கியது. அம்மனை அழைக்க, உடலை வருத்தி கத்திபோடும் நிகழ்ச்சி நடத்தப்படுவது ஐதீகம் ஆகும். அதன்படி நேற்று பகல் 12 மணியளவில் கோவிலில் கத்தி போடும் பக்தர்களுக்கு பட்டம் கட்டுதல் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் வீரபாண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தி பரவசத்துடன் கத்தி போட்டபடி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    முன்னதாக காலை 7 மணிக்கு அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு உப்புக்கேணி விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு வருதல் நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு யானைத்தெப்பத்தில் இருந்து வீரபத்திர சுவாமி அழைப்பு நடக்கிறது. அதைத்தொடர்ந்து நாளை (புதன் கிழமை) சாமுண்டி ஊர்வலம், நாளை மறுநாள் பண்டாரி ஊர்வலமும் நடக்கிறது.

    அதன்பின் திருவிழாவின் ஐந்தாவது நாளான (வெள்ளிக்கிழமை) பால்குட ஊர்வலம், பொங்கல் வைத்தல் நடக்கிறது. அன்று மாலை 6 மணியளவில் மகாஜோதி ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி கத்தி போடுதல் நிகழ்வுடன் ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைகிறது. திருவிழாவின் நிறைவு நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், அதன் பிறகு சுவாமி ராமலிங்கேஸ்வரர்- சவுண்டேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதன்பிறகு பக்தர்கள் மஞ்சள் நீராட்டு, புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

    • இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • பச்சை மாங்காயை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சை மாம்பழம் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    சர்க்கரை - 1/2 கப்

    புதினா இலைகள் - சிறிதளவு

    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

    ஐஸ்கட்டி - தேவையான அளவு

    தேவையான பொருட்கள் :

    செய்முறை :

    மாங்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் நறுக்கிய மாங்காயை போட்டு அதனுடன் இஞ்சி, சர்க்கரை, புதினா, சாட் மசாலா, ஐஸ்கட்டி, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய ஜூஸை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றிஅதன் மேல் புதினா, மிளகாய் தூள் தூவி பருகவும்.

    இப்போது சூப்பரான பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • 18-ந்தேதி தங்க கமல வாகனத்தில் அம்மன் எழுந்தருளுகிறார்.
    • 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். இந்த விழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக நேற்று பஞ்சப்பிரகார உற்சவம் நடைபெற்றது.

    இதையொட்டி இக்கோவிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை மேல் வைத்து ஒரு தங்க குடத்திலும், 25 வெள்ளி குடங்களிலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பட்டர்கள் புனித நீரை எடுத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவில் குருக்கள் யானை மீது தங்க குடத்தில் புனித நீரை எடுத்து மேள, தாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க, கடைவீதி, சன்னதி வீதி வழியாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து திருமஞ்சனத்துடன் சிறப்பு வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் அம்மன் வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து, மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம் முதல் சுற்று, தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று, தங்கரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதியில் பாதியும், வடக்கு மாடவாளவீதியில் நான்காவது சுற்று, கீழரத வீதி மேல ரத வீதி வடக்கு ரதவீதியில் ஐந்தாவது சுற்றாகவும் பஞ்சப்பிரகார சுற்றுகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    நேற்று இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார். 18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணியக்காரர் பழனிவேல் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர்.
    • பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் விழாவின் சிகர நிகழ்ச்சியாக பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடபரி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தரளி வேடபரி வீதிஉலா வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ராஜவீதிகளின் வழியாக சென்று வேடபரி வாகனம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அம்மன் வீதிஉலா வந்தபோது, ஆரவாரத்தோடு பக்தர்கள் மாலைகளை போட்டனர். மணப்பாறை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    முன்னதாக பாரம்பரிய கலைகளான நெருப்பு தீப்பந்தம் ஏந்தி ஆடுதல், சிலம்பம், கரகம் என பல்வேறு நடனங்கள் நடைபெற்றது. பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கிடா, கோழி வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றுது. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் கட்டியும் வந்தனர்.

    நாளை (புதன்கிழமை) காலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மணப்பாறை நகராட்சி நிர்வாகமும், பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை போலீசாரும் செய்திருந்தனர்.

    • உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள்.
    • ஆரோக்கியத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, குழந்தை திருமணங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள்.

    அவற்றுள் டீன் ஏஜ் வயது கர்ப்பங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. குழந்தை திருமணங்களால் கர்ப்பத்தை தாங்கும் சக்தியை உடல் பெறமுடியாமல் போவதால் அவை ஆரோக்கியத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், குழந்தைத் திருமணத்திற்கு தள்ளப்படும் சிறுமிகளில் 5 பேரில் 3 பேர் டீன் ஏஜ் வயதுக்குள்ளேயே கர்ப்பம் அடைந்துவிடுவது தெரியவந்துள்ளது.

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர், உத்தரப்பிரதேசத்தின் சந்தோலி, மகாராஷ்டிராவின் பர்பானி, ஒடிசாவின் கந்தமால் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள நான்கு மாவட்டங்களில் இருக்கும் 40 கிராமங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தைத் திருமணங்களுக்கும், பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கும், பாலின சமத்துவமின்மைக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வறுமை சூழல், வேறு இடங்களுக்கு இடம் பெயர்வது, காதல் போர்வையில் குடும்பத்துக்கு தெரியாமல் வேறு நபருடன் ஓடி விடுவாரோ என்ற பயம், திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகிவிடுவாரோ என்ற அச்சம் உள்ளிட்டவை குழந்தைத் திருமணத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    குழந்தைத் திருமணம் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி 16 சதவீத பெற்றோர் மற்றும் மாமியார்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. குழந்தைத் திருமணத்தை எதிர்கொள்ளும் சிறுவர்-சிறுமிகளில் 34 சதவீதத்தினருக்கு மட்டுமே அதன் பாதிப்பு புரிந்திருக்கிறது.

    • இந்த ஆசனம் வயிற்று உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.
    • இடுப்புக்கு வலுவூட்டுகிறது.

    சமஸ்கிருதத்தில் 'அர்த்த' என்றால் 'அரை', 'உர்த்வா' என்றால் 'நிமிர்ந்து' அல்லது 'மேல்நோக்கி', 'உபவிஸ்த' என்றால் 'உட்கார்ந்தவை' மற்றும் 'கோணா' என்றால் 'கோணம்'. இது ஒரு காலை மேல்நோக்கி உயர்த்தி அமர்ந்த நிலையில் உள்ள போஸ் என்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.

    அரை நிமிர்ந்து அமர்ந்திருக்கும் கோணம் முதுகெலும்பை பலப்படுத்துகிறது.

    செய்முறை

    யோகா பாயில் உட்கார்ந்து, உங்கள் கால்களை ஒருவருக்கொருவர் எதிராக வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து, உங்கள் வலது பெருவிரலைப் பிடித்து, உங்கள் வலது காலை தரையில் இருந்து உயர்த்தவும். உங்கள் வலது காலை முழுவதுமாக நீட்டும்போது மூச்சை வெளிவிடவும். போஸை 20 விநாடிகள் வைத்திருங்கள். வலது காலை விடுவித்து, இடது காலால் அதையே மீண்டும் செய்யவும்.

    தோள்பட்டை, இடுப்பு மற்றும் முழங்காலில் கடுமையான வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். காலைப் பிடிக்க முடியாதவர்கள் யோகா ஸ்ட்ராப் பயன்படுத்தலாம்.

    பயன்கள்

    இந்த ஆசனம் வயிற்று உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இது இடுப்புக்கு வலுவூட்டுகிறது. இடுப்புகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இது கால்களை நீட்டி வலுப்படுத்துகிறது. சியாட்டிக் வலியை நீக்குகிறது. மன அழுத்தத்தை போக்க இது ஒரு பயனுள்ள யோகா போஸ்.

    • நாளை மாத சிவராத்திரி, பிரதோஷம் இணைந்து வருகிறது.
    • நாளை விரதம் இருந்து சிவனை வழிபட உகந்த நாள்.

    மாத சிவராத்திரி என்பது மாதந்தோறும் சிவனாரை வழிபடும் அற்புதநாள். பிரதோஷம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உரிய அருமையான நாள். இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் தென்னாடுடைய சிவனாரை வழிபடுங்கள். சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி.

    மாதந்தோறும் சஷ்டி போல, ஏகாதசி போல, சிவராத்திரி வரும். சிவனாரை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள்.

    நாளை 17.5.2023 புதன்கிழமை சிவராத்திரி. மாத சிவராத்திரி, வைகாசி மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், விரதம் இருந்து காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள். பதிகம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும்.

    அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாகவும் பிரதோஷம் வரும். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். இந்தநாளில், விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதும் பசுக்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த விசேஷம்.

    நாளை சிவனாருக்கு உகந்த சிவராத்திரியும் சிவனாருக்கு உரிய பிரதோஷமும் ஒரேநாளில் அமைவது கூடுதல் சிறப்பு.

    புதன் கிழமையைச் சொல்லும்போது, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையில், மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒருசேர வருகிறது. இந்த வீரியமுள்ள நாளில், காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி சொல்லுங்கள். ருத்ரம் பாராயணம் செய்யுங்கள். அல்லது காதாரக் கேளுங்கள்.

    மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த நாளில், முடிந்தால் விரதம் மேற்கொள்ளுங்கள். முக்கியமாக, விரதத்தை விட தானம் உயர்ந்தது. எனவே, இந்தநாளில், ஒரு நாலுபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள்.

    வீட்டில் விளக்கேற்றி, குடும்பமாக அமர்ந்து பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். குடும்பமாக நமஸ்கரித்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

    உங்கள் இன்னல்களெல்லாம் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் தவிடுபொடியாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் போகும். துக்கங்களெல்லாம் பறந்தோடும். இதுவரை சந்தித்த மொத்த வேதனைகளில் இருந்தும் உங்களை மீட்டெடுத்து அருள்வார் சிவனார்!

    • பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும்.
    • பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.

    பூமியில் பிறந்த மனிதன் உலகை மட்டுமின்றி பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவனாக திகழுகிறான். எனினும் சிலர் அந்த பஞ்ச பூதங்களுக்குஇரையாகும் துயரமும் தொடருகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தண்ணீரை தேக்கிவைத்தும், ஆறு, கால்வாய்கள் வழியாகவும் விவசாயத்துக்கு கொண்டு செல்கிறோம். பூமியை தோண்டி கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்தும் பயன்படுத்துகிறோம்.

    தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்

    'உள்ளூர்காரனுக்கு பேயை கண்டால் பயம், வெளியூர்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம்',

    'ஆழம் தெரியாமல் காலை விடாதே'

    போன்ற பழமொழிகள் தண்ணீரில் உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. எனினும் வெளியூர்களுக்கு செல்லும் இளைஞர்கள் அங்குள்ள நீர்நிலைகளை கண்டதும் குதூகலம் அடைகிறார்கள். நீச்சல் தெரியாவிட்டாலும், அதில் குளித்தே தீர வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. நீச்சல் தெரிந்தவர் அழைக்கும்போது, நீச்சல் தெரியாதவரும் தண்ணீருக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.

    அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க ஆற்றங்கரையில் ஆபத்தான பகுதி, ஆழமான பகுதி குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளனர். ஆனாலும் அதையும் மீறி, கரையில் நின்று குளிக்க சென்று, ஆழமான பகுதிக்கு நகரும்போது காலனின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.

    நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் யாரும் உள்ளே சென்று குளிக்கக்கூடாது என்று தடுப்புச்சுவர் கட்டி கேட் போடப்பட்டு உள்ளது. ஆனாலும் சுவர் ஏறி குதித்து குளிக்க செல்கிறார்கள். இதனால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் நெல்லை அருகே திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 38 பேர் இறந்து உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 13 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

    கரூர் பகுதிக்கு விளையாட சென்ற பள்ளி மாணவிகள் காவிரி ஆற்றில் குளித்தபோது அடுத்தடுத்து உள்ளே விழுந்து பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    தூத்துக்குடியில் 14 பேர் பலி

    நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மாவட்டத்தின் நடுவே பாய்ந்தோடி சென்று கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கீழ் பல்வேறு குளங்கள் உள்ளன. மேலும் மானாவாரி பகுதியிலும் குளங்கள் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் இந்த குளங்கள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலங்களில் பெரும்பாலான குளங்களில் குறைந்த அளவு தண்ணீரே கிடக்கிறது.

    இதுபோன்ற குளங்கள், ஆறு, கடல் பகுதியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாமல் சிறுவர்கள், இளைஞர்கள் மூழ்கி இறக்கும் துயரமும் நிலவுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்து உள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 7 பேர் நீர்நிலைகளில் மூழ்கி பலியாகி உள்ளனர். விளாத்திகுளம் அருகே புதூர் சிவலார்பட்டியில் கடந்த 13-ந் தேதி கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் மீளாத்துயரை ஏற்படுத்தியது.

    நீச்சல் பயிற்சி

    கோடை விடுமுறையில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நெஞ்சை நொறுங்க செய்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சில நாடுகளில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது போன்று நீச்சல் பயிற்சியும் கட்டாயம் என்று கொண்டு வருவது நன்மை பயக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள், நீச்சல் ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

    பயப்பட தேவையில்லை

    நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன்:-

    மனித வாழ்க்கையில் நீச்சல் அத்தியாவசியமான ஒன்று ஆகும். இது உயிர் காக்கும் கலை ஆகும். நீச்சல் தெரியாமல் இருப்பது உடல் ஊனம் போன்றது. தண்ணீர் அருகில் செல்ல முடியாமல், ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியது வரும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். இசை, நடனம், கணினி உள்ளிட்ட பயிற்சிகளை போன்று நீச்சல் கற்கும் பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோரிடம் போதிய ஆதரவு இல்லை.

    நீச்சல் பயிற்சி உயிர்காக்கும் கலை மட்டுமல்லாமல், ஒருமுறை கற்றுக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீருக்குள் நீந்தி செல்ல முடியும். இதன்மூலம் உடல் வலுப்பெறும். நீச்சல் அடிக்கும்போது அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படும். மனம் ஒருமுகப்படும். நெல்லையில் அண்ணா விளையாட்டு அரங்கில் 25 மீட்டர் நீள நீச்சல் குளம் மற்றும் கீழநத்தம் விளையாட்டு அரங்கில் சர்வதேச தரத்தில் பந்தய நீச்சல் குளம் ஆகிய 2 இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இங்கு 12 நாட்கள் கோடைகால நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அதிகாரியை சந்தித்து, உடனடியாக நீச்சல் பயிற்சி பெறலாம்.

    பெற்றோர், குழந்தைகளை இந்த பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும். 12 நாட்கள் மட்டும் அழைத்து சென்று நீச்சல் பயிற்சி அளித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் குழந்தைகள் குறித்து பயப்பட தேவையில்லை. முறையாக நீச்சல் கற்றுக்கொண்டால் மற்றவர்களை விட தண்ணீரில் அதிகநேரம் மிதக்க முடியும். பேராபத்தில் பிறரையும் காப்பாற்ற முடியும்.

    நெல்லை மணிமூர்த்தீசுவரத்தை சேர்ந்த ஆசிரியைநந்தினி:-

    நான் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 4 வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன். நீச்சல் தெரிந்திருப்பதால் ஆறு, குளத்தில் பயம் இன்றி குளிக்க முடிகிறது. நீச்சல் தெரிந்தால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே, குழந்தை பருவத்திலேயே நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். மனிதனுக்கு நீரும், காற்றும் முக்கியம் என்பது போல் நீச்சலும் முக்கியமாகும்.

    எச்சரிக்கைகளை மதித்து...

    நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி கணேசன்:-

    தண்ணீரை கண்டதும் பலருக்கும் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். முன்பு பருவநிலை சரியாக இருக்கும். குளம், குட்டைகளில் நீர் நிரம்பி கிடக்கும். பெற்றோருடன் அங்கு சென்று நீச்சல் கற்றுக் கொள்வார்கள்.

    தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி ஆறு மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் குளிக்கும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக குளித்துச் செல்கிறார்கள். ஆனால் வெளியூரில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு வருகிறவர்கள், தாமிரபரணி ஆற்றில் சென்று குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கு நீச்சல் தெரியாததே காரணம் ஆகும்.

    எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிக்கும் பல இடங்களில் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் எச்சரிக்கையை மீறி விடுகிறார்கள். சீவலப்பேரியில் பாலத்தில் கிழக்கு பகுதியில் அடிக்கடி நிகழ்ந்த உயிரிழப்பை தடுக்கும் வகையில் அங்கு பொதுமக்கள் இறங்கும் படிக்கட்டு அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர கிணறுகள், குளங்களிலும் சில நேரங்களில் நீச்சல் தெரியாமலும், வேறு காரணங்களினாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையின்எச்சரிக்கைகளை மதித்து பொதுமக்கள் செயல்பட வேண்டும்.

    உடல் ஆரோக்கியம்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீரில் மூழ்கி 38 பேர் இறந்து உள்ளனர். அதில் ஆண்கள் 25, பெண்கள் 10, குழந்தைகள் 3 பேர் ஆவார்கள். 66 பேரை காப்பாற்றி உள்ளோம். இதில் 59 ஆண்கள், 6 பெண்கள், 1 குழந்தை அடங்குவர். இந்த ஆண்டில் இதுவரை 9 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை என 13 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். 5 பேரை காப்பாற்றி உள்ளோம்.

    தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அனைத்து விளையாட்டு பிரிவுகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிற்கு நீச்சல் பயிற்சிக்கு புதிதாக பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கிராமப்புறத்தை சேர்ந்தவர் சிறுவர், சிறுமியராக இருக்கும்போதே நீச்சல் உள்ளிட்ட கலைகளை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். ஆனால் நகர்ப்புறத்தில் அதற்கான வாய்ப்புகள் உருவாவதில்லை.

    வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட் அவசியம் என்பது போன்று நீச்சல் என்பதும் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர்களாக வளர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    பிளஸ்-2 வரை பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அப்போதுதான் நீர்நிலைகளின் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி சிக்குகிறார்கள். எனவே அவர்களை நீச்சல் தெரிந்தவர்களாக உருவாக்க வேண்டும். இது ஆபத்து காலத்தில் உயிர் பலியாவதை தடுக்கும். மேலும் நீச்சல் பயிற்சியானது உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்

    தூத்துக்குடியை சேர்ந்த ரோஜா ராஜ்:-

    நான் நீரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை நான் பல உயிர்களை காப்பாற்றி உள்ளேன். கடவுள் படைத்த உயிர் வீணாக போய் விடக்கூடாது. இதனை நான் மிகவும் விரும்பி செய்கிறேன். நீர்நிலைகளில் இளைஞர்கள் குளிக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம். இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்நிலைகளில் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும். நீச்சல் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக தனியாக ஒரு குழுவையே ஏற்படுத்தவும் இருக்கிறோம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை.
    • அ.தி.மு.க. என்றால் நாம் தான். நமக்கு எதிரி தி.மு.க. தான்.

    தஞ்சாவூர் :

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் வரவேற்றார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதா கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் சேகர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் இணைந்ததை வரவேற்கிறேன். துரதிருஷ்டவசமாக அ.ம.மு.கவுக்கு சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்து உள்ளனர். ஒவ்வொரு தொண்டர்களும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

    ஆனால் கட்சியில் நிர்வாகியாக, எம்.எல்.ஏ.வாக., அமைச்சராக, எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கத்திற்கு அந்த எண்ணம் இல்லை. 20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதில் இருந்து வைத்திலிங்கம் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    எல்லா அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதாவது செய்து தாருங்கள் என்று கூறுவார்கள். ஆனால் யாருக்கும் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியவர் தான் வைத்திலிங்கம். இப்படிப்பட்டவரை நான் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது. திருச்சியில் ஒரு கூட்டத்தை கூட்டி ஓ.பன்னீர்செல்வமும், வைத்திலிங்கமும் என்னைத்தான் திட்டினார்கள். என்னை திட்டி எந்த பிரயோஜனமும் இல்லை.

    நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவன். நான் மட்டும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இல்லை. இங்கு வந்திருக்கும் அனைத்து அ.தி.மு.க.வினரும், பொதுச்செயலாளர்கள் தான். ஓராயிரம் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் வந்தாலும் அ.தி.மு.க.வில் துரோகிகளுக்கு இடம் இல்லை. ஜெயலலிதா சட்டசபையில் பேசும் போது எனக்கு பின்னால் இந்த இயக்கம் நூறாண்டுகளுக்குமேல் இருக்கும் என்று கூறினார். அவர் மறைவுக்குப்பின்னர் எவ்வளவோ சோதனைகளை நாம் சந்தித்தோம். அதற்கு யார் காரணம்?.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். பின்னர் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா இரவு, பகலாக உழைத்து 2016-ல் அ.தி.மு.க. ஆட்சியை உருவாக்கினார் ஆனால் அந்த ஆட்சியை கலைக்க, எதிர்த்து வாக்காளித்தார். அவரை அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் மன்னிக்க மாட்டார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சி வலிமையோடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி, துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தோம். இதைவிட வேறு என்ன செய்ய வேண்டும்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா யாரோடு சேரக்கூடாது என நினைத்தார்களோ? தீய சக்தி என கூறினார்களோ? ஜெயலலிதா உயிர் போக காரணமாக இருந்தார்களோ? அவர்களை தேடிச்சென்று தி.மு.க.வுக்கு பினாமியாக, பி டீமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

    பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பதை போல பீ டீம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது முதல்-அமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்துள்ளீர்கள். தி.மு.க.வின் பீ டீமாக செயல்படுபவர்கள் எப்படி இந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க முடியும்.

    டி.டி.வி. தினகரன் 10 ஆண்டு காலம் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர். ஓ.பன்னீர்செல்வத்தை அவர் துரோகி என்றார். தி.மு.க. எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். கட்சி, ஆட்சியை டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது விசாரிக்க வேண்டும் என்றார்.

    நம்மை உருவாக்கிய தலைவர் ஜெயலலிதா. அவருடைய மறைவு தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமா? என நாங்கள் கேட்டோம். ஆனால் விசாரணை கமிஷன் அமைத்தால் தான் நாங்கள் இணைவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தி.மு.க. எதிரி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துரோகி என்று கூறிய இரண்டு துரோகிகளுமான டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இன்று நண்பர்களாகி விட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் கைப்பற்ற முடியாது. அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களின் சொத்து என்று நீதிமன்றம் கூறி விட்டது. அதில் இருந்து ஒரு செங்கலை கூட பிடுங்க முடியாது. அ.தி.மு.க.வின் கோவிலான தலைமைக்கழகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடியவர்களை மக்கள் மன்னிப்பார்களா? நாம் நீதிமன்றம் சென்று அவற்றை திரும்ப பெற்றோம்.

    அ.தி.மு.க. என்றால் நாம் தான். நமக்கு எதிரி தி.மு.க. தான். தமிழகத்தில் தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். அதை கண் இமைபோல ஜெயலலிதா காத்தவர்.

    தி.மு.க. நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஆடியோவில் கூறினார். அ.தி.முக. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பணத்தை எப்படி மீட்க முடியுமோ அப்படி மீட்கும்.

    அந்த ரூ.30 ஆயிரம் கோடி குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவிடம் கூறியபோது, அவரும் ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார். விரைவில் கவர்னரை சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம். ரூ. 30 ஆயிரம் கோடி விவகாரத்தை அ.தி.மு.க., சும்மா விடாது.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா போன்ற பேதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. தி.மு.க. ஆட்சி என்றாலே மக்கள் அவதிப்படுகிறார்கள். இன்று கள்ளச்சாராயம் குடித்ததினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும்.

    இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணுகிறார்கள். அ.தி.மு.க. கட்சி தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினர்.

    விழாவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி வீரவாள், செங்கோல் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர்காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், சி.வி.சேகர், கோவிந்தராசு, முன்னாள் தஞ்சை நகர செயலாளர் பஞ்சாபிகேசன், எஸ்.டி.எஸ்.செல்வம், பேராவூரணி ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன் (திருவோணம்), சாமிவேல் (தஞ்சை மேற்கு), நாகத்தி கலியமூர்த்தி (தஞ்சை கிழக்கு), முருகானந்த் (பட்டுக்கோட்டை),முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பட்டுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கதிரவன், தஞ்சை தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துமாறன், மருத்துவக்கல்லூரி பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மனோகர், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நெம்மேலி திப்பியக்குடி கவாஸ்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஆழிவாய்க்கால் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் மேலஉளூர் சங்கர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வினோத்சத்தியமூர்த்தி, ஒன்றிய பாசறை பொருளாளர் தெற்கு கோட்டை காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் நன்றி கூறினார்.

    • பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
    • 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    இதையொட்டி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் இருந்து குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு விவேகானந்தபுரம் சந்திப்பு, ரெயில்நிலைய சந்திப்பு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, சன்னதி தெரு வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    அங்கு 5 மணிக்கு பஜனை, அதைத்தொடர்ந்து பெண்கள் மாநாடு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜையை நடத்தினர்.

    • சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது.
    • இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும்.

    சென்னை :

    தமிழகம் முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதேவேளை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வாட்டி வதைப்பதால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். இதற்கிடையே 'நானும் இருக்கிறேன் பார்' என்று உருவான 'மோக்கா' புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது.

    சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. ஓட்டலில் அடுப்பு அருகே நின்று சமைக்கும் 'மாஸ்டர்' போலவே, மக்கள் அனைவருமே அனல் தாக்கத்தில் இருப்பது போல உணர்ந்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் -105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கோவை - 96.8 டிகிரி - (36 செல்சியஸ்)

    குன்னூர் - 77 டிகிரி - (25 செல்சியஸ்)

    கடலூர் - 102.92 டிகிரி - (39.4செல்சியஸ்)

    தர்மபுரி - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    ஈரோடு - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.12 டிகிரி - (33.4 செல்சியஸ்)

    கரூர் - 104.9 டிகிரி - (40.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 73.58 டிகிரி - (23.1 செல்சியஸ்)

    மதுரை - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    நாகை - 100.04 டிகிரி - (37.8 செல்சியஸ்)

    நாமக்கல் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.02 டிகிரி - (38.9 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    சேலம் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    திருச்சி - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    திருத்தணி - 105.8 டிகிரி - (41 செல்சியஸ்)

    தொண்டி - 94.64 டிகிரி - (34.8 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.2 டிகிரி - (34 செல்சியஸ்)

    ஊட்டி - 78.62 டிகிரி - (25.9 செல்சியஸ்)

    வால்பாறை - 83.3 டிகிரி - (28.5 செல்சியஸ்)

    வேலூர் - 108.14 டிகிரி - (42.3 செல்சியஸ்)

    தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 'இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்' என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

    'மோக்கா' புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மழை ஆறுதலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது.
    • மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் தான்.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக எழுந்த ஊழல் முறைகேடு, 40 சதவீத கமிஷன் புகார்கள் ஒவ்வொன்றையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் மிக சிறப்பாகவே செயல்பட்டனர். பா.ஜனதா அரசை இக்கட்டான நிலையில் சிக்க வைக்க கிடைத்த எந்த வாய்ப்பையும் அந்த தலைவர்கள் நழுவ விடவில்லை. கடந்த ஓராண்டாகவே பா.ஜனதா அரசுக்கு எதிராக குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளிவந்தபடியே இருந்தது.

    இப்படி தொடர்ந்து பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை அதிகரித்து வந்தது. இவற்றை சரியான முறையில் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் அறுவடை செய்தனர் என்றே சொல்லலாம். கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் காலியான 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள தொகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும் ராஜினாமா செய்தனர். அதில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. ஆனால் சித்தராமையாவின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் நீடிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.

    அதன் பிறகு கர்நாடக காங்கிரசுக்கு யாரை கட்சி தலைவராக நியமிக்கலாம் என்ற விவாதம் எழுந்தது. அப்போது, டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவதை சித்தராமையா எதிர்த்தார். தான் முதல்-மந்திரி ஆவதற்கு டி.கே.சிவக்குமார் தடையாக இருப்பார் என்று அவர் கருதினார். ஆனால் சித்தராமையாவின் எதிர்ப்பையும் மீறி கட்சி மேலிடம் டி.கே.சிவக்குமாருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கியது.

    அதன் பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆவார் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சி கூட்டங்களில் கூறினர். அதற்கு டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் முதல்-மந்திரி பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் இரு தரப்புக்கும் கட்டளையிட்டது. அதன் பிறகு முதல்-மந்திரி பதவி குறித்து பேசுவதை இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தவிர்த்து வந்தனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஒற்றுமையாக கட்சி பணியாற்ற தொடங்கினர். கட்சி மேலிட தலைவர்கள், முதலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற செய்யுங்கள், அதன் பிறகு முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்று இரு தரப்புக்கும் உத்தரவிட்டனர். அதே போல் அவர்கள் 2 பேரும் ஒற்றுமையாகவும், பிறகு தனித்தனியாகவும் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சித்தராமையா ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதல்-மந்திரி பதவி குறித்து தனது மனதில் இருந்ததை வெளிப்படுத்திவிட்டார். அதாவது, முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்து அடிப்படையில் தான் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறினார். ஏனெனில் எம்.எல்.ஏ.க்கள் தனக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

    ஆனால் டி.கே.சிவக்குமாரோ, முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று கூறி வருகிறார். இந்த நிலையில் அக்கட்சி தலைவா்கள் நினைத்தபடி காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஏற்கனவே 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். ஆட்சியை திறம்பட நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.

    கட்சியை வலுப்படுத்தும் திறன் இருப்பது போல் ஆட்சியை சிறப்பாக நடத்தும் திறனும் டி.கே.சிவக்குமாருக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை கர்நாடகத்தில் குறிப்பாக தென் கர்நாடகத்தில் பலமாக இருக்கும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை பலவீனப்படுத்தி காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டவர் டி.கே.சிவக்குமார். அதனால் தான் இந்த முறை ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டையை தகர்த்து அங்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

    முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதை பார்ப்போம்.

    குருபா சமூகத்தை சேர்ந்த சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருந்தார். அவர் குருபா சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், 'அஹிந்தா' (தலித், ஓ.பி.சி., சிறுபான்மையினர்) தலைவராக பார்க்கப்படுகிறார். மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அவருக்கு கர்நாடகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயர் எடுத்துள்ள அவர் மீது எந்த விதமான ஊழல் வழக்குகளோ அல்லது சொத்து குவிப்பு வழக்குகளோ கிடையாது.

    அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவருக்கு ஆட்சி நிர்வாகத்திலும் அதே அளவுக்கு அனுபவம் உள்ளது. நகைச்சுவை, கேலி, கிண்டல் கலந்த சித்தராமையாவின் பேச்சு மக்களை சுண்டி இழுப்பதாக உள்ளது. சாதி, மதம், கட்சி ஆகியவற்றை தாண்டி பொதுக்கூட்டங்களில் அவரது பேச்சை கேட்பதற்கே பெருங்கூட்டம் கூடுவது வழக்கம். மாற்று கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பது உண்டு. ஆனால் சித்தராமையா கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அவ்வளவாக தீவிரமாக செயல்பட கூடியவர் இல்லை. கரடு முரடாக பேசும் அவர் பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் மிக கடுமையாக எதிர்த்து பேசக்கூடியவர்.

    சித்தராமையா ஏற்கனவே 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ள அனுபவம் கொண்டவர். பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை வலுவாக எதிர்க்கும் திறன் கொண்டவர். அதே நேரத்தில் அவரது பலவீனம் என்னவெனில், நல்லாட்சி வழங்கினாலும் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தவறியது, காங்கிரசில் இன்னும் சில தலைவர்கள், சித்தராமையா வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்று சொல்வது, அவருக்கு தற்போது 75 வயது ஆவது போன்றவை அவருக்கு பலவீனமாக உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள டி.கே.சிவக்குமார், 1985-ம் ஆண்டு தனது 25-வது வயதிலேயே முன்னாள் பிரதமர் தேவகவுடாவை எதிர்த்து சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மாணவர் காங்கிரசில் நிர்வாகியாக இருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

    கட்சியை வலுப்படுத்துவதிலும், வியூகம் வகுப்பதிலும் சிறந்து விளங்கும் அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக மெல்ல உருவாகி வருகிறார். தென் கர்நாடகத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வட கர்நாடகத்தில் அவ்வளவாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். காங்கிரசின் "டிரபல் சூட்டர்" என்று சொல்லப்படும் டி.கே.சிவக்குமார், கட்சி மேலிடம் கூறும் பணிகளை அப்படியே அச்சு பிசகாமல் செய்து முடிப்பவர்.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது குதிரை பேரத்திற்கு பயந்து அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அந்த எம்.எல்.ஏ.க்களில் சிலரை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்தபோதும், அது முடியாமல் போனது. அந்த நேரத்தில் டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட பலரது மந்திரிசபையில் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பணியாற்றியுள்ளார். கட்சியை வலுப்படுத்தும் திறன் கொண்ட டி.கே.சிவக்குமாருக்கு மாநிலம் முழுவதும் சம அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை. ஒக்கலிகர் சமூகத்தின் பலமான தலைவராக கருதப்படும் அவர் பிற சமூகங்களுக்கான தலைவராக மற்றவர்கள் பார்ப்பது இல்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    டி.கே.சிவக்குமாா் கட்சிக்கு விசுவாசமிக்கவர், சோனியா காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக பழகக்கூடியவர், ஒக்கலிகர் சமூகம் அவரை ஆதரிப்பது, வயது போன்ற விஷயங்கள் பலமாக அமைந்துள்ளன. மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பதால் அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்க வேண்டும். இதற்கு முன்பு எஸ்.எம்.கிருஷ்ணா, வீரேந்திர பட்டீல் போன்ற தலைவர்கள் மாநில தலைவர்களாக இருந்து முதல்-மந்திரி பதவியை அடைந்தவர்கள். கட்சியின் மூத்த தலைவர்களின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ளது. ஆனால் சித்தராமையாவின் அனுபவம், மக்கள் செல்வாக்கு, அவருக்கு இருக்கும் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு, வழக்குகள் போன்றவை டி.கே.சிவக்குமாருக்கு தடையாக உள்ளன. அவரது பலவீனம் என்று சொன்னால், டெல்லியில் சிறையில் இருந்தது, பிற சமூகங்களின் ஆதரவு அவருக்கு அதிகமாக இல்லாதது போன்றவை ஆகும்.

    மேலும் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அமைப்புகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரும் நாட்களில் டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா போல் அந்த வழக்குகளில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இவை டி.கே.சிவக்குமாருக்கு பலவீனமாக உள்ளது.

    எதுவாக இருந்தாலும், இருவருமே பலமான, உறுதியான தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×