search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்னலாடை"

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மே மாதத்திற்கான நூல் விலை மாற்றம் இல்லாமல் கடந்த மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளது.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

    நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. நடப்பு மாதத்திற்கான (மே) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.

    இதில் கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 10 எண் முதல் 30 எண் வரை கொண்ட நூல்கள் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 30 எண்ணுக்கு அதிகமான நூல் வகைகள் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத விலையில் குறைப்பு இல்லை என்றாலும் நடப்பு மாதத்தில் விலை ஏறாமல் இருப்பது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

    இதன்படி (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202க்கும், 20-வது நம்பர் ரூ.260-க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர், ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
    • உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை இருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 16-ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்து தொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.

    அதன்படி, திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக உற்சாகத்துடன் சென்றனர்.

    விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சில நாட்களாக, ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல் பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

    • சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர்.
    • திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடைதுணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாடும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சமூக நலன் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பின்னலாடை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட்டு, பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி, சங்க உறுப்பினர்கள் குழு தலைவர் சிவசுப்பிரமணியம், தொழிலாளர்கள் குழு தலைவர் லோகநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    சுவிட்சர்லாந்து வர்த்தக குழுவினர் தொழிலாளர்கள் நலன் குறித்து ஆய்வுக்காக திருப்பூர் வந்தனர். அப்போது அவர்களிடம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி, பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கி கூறினோம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம் உள்ளிட்ட திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலைகள் குறித்தும் அவர்களிடம் தெரிவித்தோம். பசுமை சார் உற்பத்தியை கவுரவித்து, அங்கீகார சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். அப்போது திருப்பூர் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி பராமரிப்பதாக சுவிட்சர்லாந்து குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் வந்தனர்.
    • சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளது. பனியன் உற்பத்தி வேகமெடுத்து வரும் நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி (டபிள்யூ.ஆர்.ஏ.பி.) சான்று வழங்கும் குழுவினர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வந்தனர். இந்த குழுவின் தலைவர் அவிடேஸ் செபரியன், துணைத்தலைவர் மார்க் ஜேகர் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணைசெயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் உலக அளவிலான 12 விதிமுறைகளை கடைபிடித்து ஆடைகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்து அந்த நிறுவனங்களுக்கு 'உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி' என சான்று வழங்குவார்கள். இந்த சான்றிதழ் பெற்றால் உலக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் கிடைக்கும்.

    ஏற்கனவே திருப்பூரில் சாயக்கழிவுநீர் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 90 சதவீத நீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் பசுமை திருப்பூராக மாற்றும் வகையில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு மரங்களாக வளர்ந்துள்ளன. இதுதவிர காற்றாலை, சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பின்னலாடை நிறுவனங்களுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த விவரங்களை அமெரிக்க குழுவினர் கேட்டறிந்தனர்.

    மேலும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிற்சாலை நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தினர். உலகளாவிய அங்கீகாரம் பெற்ற உற்பத்தி சான்று பெறுவதற்கான சாத்தியங்கள் திருப்தியளிப்பதாக குழுவினர் தெரிவித்தனர். நிறுவனங்களுக்கு சான்றுகள் கிடைக்கும்போது இதன் மூலம் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    • குன்னூரில் உள்ள ராணுவ படைத்தளத்தில் முறையான அனுமதி பெற்று துவங்கினோம்.
    • குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு மறுநாள் ராணுவ அதிகாரிகள் - பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும்.

    திருப்பூர்:

    பருத்தி பின்னலாடை ஆடை உற்பத்தியில் புகழ்பெற்ற திருப்பூரில் தற்போது பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தியும் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. குறைந்த விலையில் நீடித்து உழைக்கும் வகையிலான பாலியஸ்டர் பின்னலாடைகளுக்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெருகி வருகிறது.

    மத்திய அரசின், தூய்மை இந்தியா திட்டத்தை பின்பற்றி மறுசுழற்சி முறையில் நூல் மற்றும் ஆடை உற்பத்திக்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சேகரித்து அவற்றில் இருந்து மறுசுழற்சி பாலியஸ்டர் நூல்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது..

    பாலியஸ்டர் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில் களமிறங்கிய திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம், யெஸ் இந்தியா கேன் என்ற அமைப்பை உருவாக்கி பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இந்நிறுவனம் மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் நூலில் முதன்முதலாக பின்னலாடை தயாரித்து பிரதமர் மோடிக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து யெஸ் இந்தியா கேன் இயக்குனர் வால்ரஸ் டேவிட் கூறியதாவது:-

    கரூரில் உள்ள நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட பழைய தண்ணீர் பாட்டில்களில் இருந்து பாலியஸ்டர் நூலிழை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. மறுசுழற்சி என்பது நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அதன்படி முதன்முதலாக மறுசுழற்சி பாலியஸ்டர் பின்னல் துணியில் இருந்து பிரதமர் மோடிக்கு, கோட் மற்றும் அங்கவஸ்திரம் தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

    குன்னூரில் உள்ள ராணுவ படைத்தளத்தில் முறையான அனுமதி பெற்று துவங்கினோம். பிரதமர் அலுவலகமும் நேரடியாக தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியுள்ளது. முதன்முதலாக, மிலிட்டரி பிரின்ட் கோட், ஆரஞ்சு, நீலம், மெரூன் நிற கோட் என 4 வகை கோட்களும், அங்கவஸ்திரங்களும் தயாராகி வருகின்றன.

    குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு மறுநாள் ராணுவ அதிகாரிகள் - பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். அப்போது பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் ஆடைகள் பரிசளிக்க அனுமதி பெற்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது.
    • இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகர்களிடம் ஆர்டர் பெற்று பின்னலாடைகளை தயாரித்து அனுப்புகின்றன. ஏற்றுமதி வர்த்தகத்தில் பில் ஆப் லேடிங்'(பி.எல்.,) என்ற ஆவணம் முக்கியமானது. ஏற்றுமதி நிறுவனம் ஆர்டர் சார்ந்த முழு விவரங்கள் அடங்கிய பி.எல்., ஆவண தொகுப்பை வங்கியில் ஒப்படைக்கிறது.

    இறக்குமதியாளர் ஆடைக்கான தொகையை வங்கியில் செலுத்தி பி.எல்., ஆவணத்தை பெறவேண்டும். ஆவணத்தை வழங்கினால் மட்டுமே கப்பல் சரக்கு கையாளும் நிறுவனம் ஏற்றுமதியாளர் அனுப்பிய சரக்குகளை இறக்குமதியாளர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்பது விதிமுறை.

    இது குறித்து திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி, உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

    சில கப்பல் சரக்கு முகமை நிறுவனங்கள், ஆவண விதிகளை மீறுகின்றன. தொகை செலுத்திய விவரங்களுடன் கூடிய பி.எல்., ஆவணத்தை பெறாமலேயே ஆடைகளை இறக்குமதியாளரிடம் வழங்கி விடுகின்றன. சரக்கு கையாளும் நிறுவனமும் வெளிநாட்டு வர்த்தகர்களும் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகள் சாத்தியம்.

    திருப்பூரில் 10 ஏற்றுமதி நிறுவனங்கள் அனுப்பிய மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை, பி.எல்., ஆவணமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி நாட்டு வர்த்தகர்கள் கைப்பற்றியது தெரியவந்துள்ளது. இதில் பல்லடத்தை சேர்ந்த ஒரே ஏற்றுமதி நிறுவனம் மட்டும் 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகளை பறிகொடுத்துள்ளது. ஆவணமின்றி ஆடைகளை கைப்பற்றிக்கொள்ளும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.

    ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தி அனுப்பியபோதும், தரம் சரியில்லை என சாக்குபோக்கு கூறி, விலையை குறைக்கின்றனர். இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.சட்டரீதியாக போராடி, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து தொகையை பெறுவதற்குள் நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

    ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உரிய தொகையை பெற்றுத்தருவதற்காக ஆர்பிட்ரேசன் கவுன்சில் மூலம் சரக்கு கையாளும் நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் உள்ளூரில் இயங்கும் வர்த்தக முகமை நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்திவருகிறோம்.பின்னலாடை ஏற்றுமதியாளர் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆர்டர்களுக்கு தவறாமல் இ.சி.ஜி.சி., எனப்படும் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×