search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் அலுவலகம்"

    • முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை மந்திரியாக இருப்பவர் முகமது ரியாஸ். இவர் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மருமகன் ஆவார்.

    முகமது ரியாஸ், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்ட செயலாளராக இருந்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தின் போது, வடகரையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    இதுதொடர்பாக முகமது ரியாஸ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடகரை தபால் அதிகாரி சார்பில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மாவட்ட கோர்ட்டு, அபராத தொகையை கட்ட உத்தரவிட்டது.

    இருப்பினும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அபராதத்தை கட்டாமல் இருந்து வந்தனர். இதுதொடர்பாக வடகரை தபால் துறை சார்பில், வடகரை கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, வட்டி மற்றும் கோர்ட்டு செலவுத் தொகை சேர்த்து ரூ.3.81 லட்சம் கட்ட உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து மந்திரி முகமது ரியாஸ் உள்பட 12 பேரும், நீதிபதி ஜோஜி தாமஸ் முன்னி லையில் அபராத தொகையை கட்டினர்.

    • தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
    • போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் முதல் தளத்தில் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் பதிவு தபால், விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது ஆதார் திருத்த பணிகளும் தபால் அலுவலகத்தில் நடை பெறுவதால் இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் அந்த தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை அங்கு வந்த கிராம மக்கள் பலரும் பார்த்து விட்டு குழப்பம் அடைந்து வருகின்றனர்.

    அந்த அறிவிப்பு குறித்து தபால் அலுவலக ஊழியர்களிடம் கேட்ட போது, இணைய வழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய தகவலும், அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் மற்றும் அதற்கான வழிமுறைகளும் குறித்து அதில் விளக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    விளாத்திகுளம் தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வரும் அப்பகுதி கிராம மக்களுக்கு இந்தி தெரியாததால் தபால் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள இந்தி வழிகாட்டு முறை போஸ்டரால் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட தபால் துறையினர் இணைய வழி புகார், இணையதளம் மற்றும் தொலைபேசி எண், வழிகாட்டி முறைகள் அடங்கிய போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் மூடப்பட்ட தபால் அலுவலகத்தை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்
    • செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் வடக்கு 2-ம் வீதியில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இதனை மச்சுவாடி, காமராஜபுரம், வண்டிப்பேட்டை, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் மச்சுவாடி கிளை தபால் நிலையம் தற்போது மாவட்ட தலைமை தபால் நிலைய அலுவலகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.இதனை புதுக்கோட்டை நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு கண்டித்து உள்ளது.

    இது பற்றி அவர்கள் கூறும் போது, மச்சுவாடி கிளை தபால் நிலையத்தை போன்று புதுக்கோட்டை நகரில் பல கிளை தபால் நிலையங்கள் மாவட்ட தபால் நிலையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இது தபால் நிலையத்தை பயன்படுத்தும் மக்களை அப்புறப்படுத்த கூடிய செயலாகும். மச்சுவாடி கிளையில் பணிபுரிந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் மச்சுவாடி கிளை தபால் நிலையம் அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஏற்கனவே புதிய பேருந்து நிலையம், சின்னப்பா பூங்கா செல்லும் வழியில் இயங்கி வந்த தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. செல்போன்களின் தாக்கத்தால் தபால் சேவை குறைந்துள்ளது. ஆனால் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கும், அலுவல் ரீதியிலான தபால்கள் அனுப்புவதற்கும் தபால் அலுவலகங்களை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிளை தபால் அலுவலகங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருவது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.


    • கோவையில் தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் பொதுமக்கள் பார்சல் அனுப்பும் வசதி தொடங்கியது.
    • ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    கோவை:

    ரெயில்களில் சரக்கு பார்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது பொருட்களை தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் அனுப்பும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் பொருட்களை கொடுத்து பதிவு செய்யலாம். ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி ரெயில் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கியது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "816 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு ரூ.477 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன்படி ரெயில்களின் தூரம், ஊர் ஆகியவற்றை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்ததனர்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரி பாண்டுரங்கன் மற்றும் தபால்துறை அதிகாரி அகில் நாயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொழில்துறையினர் கூறும்போது, "இந்த திட்டம் சிறு, குறுந்தொழில்முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும். எந்த இடத்தில் பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்புவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. இதற்காக தபால்துறை மற்றும் ரெயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

    • 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
    • www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     திருப்பூர் :

    நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    மூவர்ண கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் தேசியக் கொடி விற்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசியக்கொடிகள், காகித பொருட்கள விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 8 சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேசிய கொடிகள் ஆகியவை பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும். குறிப்பாக தபால் நிலையங்கள் மற்றும் www.epostoffice.gov.in எனும் ஆன்லைன் முகவரியிலும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 20 இன்ச் அகலம் 30 இன்ச் நீளம் உள்ள தேசியக்கொடி 25 ரூபாய் மட்டுமே.

    ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற சொல்வதால் மக்களிடையே தேசபக்தி உணர்வை ஏற்படுத்தவும், அதற்காக உழைத்தவர்களை நினைவுபடுத்துவதே இதன் திட்டமாகும். ஒவ்வொரு தபால் அலுவலகம், தலைமை அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், மற்றும் கிளை அலுவலகங்களில் 15 ந் தேதி தேசிய கொடி ஏற்றப்படும் என கோட்ட தபால் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்.எம்.எஸ். தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    பெண் குழந்தைகளுக்காக பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம்,வங்கிகளில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச டெபாசிட் தொகை குறைக்கப்பட்டுள்ளது. #PostOffice #SSY
    புதுடெல்லி:

    பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்காக, பெற்றோர்கள் பணம் சேமிக்க வசதியாக அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழ்நாட்டின் அஞ்சல் அலுவலகங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டமாக செயல்பட்டு வருகிறது. 

    2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை, இந்த திட்டம் மூலம் முதலீடு செய்யலாம். தொடக்கத்தில் சேமிக்கும் பணத்துக்கு 9.1 சதவிகித வட்டி என அறிவிக்கப்பட்டது. ஆனால், படிப்படியாக வட்டி குறைக்கப்பட்டு தற்போது 8.1 சதவிகித வட்டி அமலில் உள்ளது. 

    இந்தக் கணக்கில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்ச தவணைத்தொகையாக ரூ.1000 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். 

    இந்நிலையில், செல்வமகள் திட்டத்தின் குறைந்தபட்ச ஆண்டு டெபாசிட் தொகை, ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டதால், பலர் அதிருப்தி அடைந்த நிலையில் அவர்களை சரிகட்ட மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ×