தபால் அலுவலகம் மூலம் ரெயில்களில் பார்சல் அனுப்பும் வசதி அறிமுகம்- தொழில்துறையினர் வரவேற்பு

கோவையில் தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் பொதுமக்கள் பார்சல் அனுப்பும் வசதி தொடங்கியது. ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தபால் அலுவலகங்களில் பதிவு செய்து சதாப்தி ரெயிலில் பார்சல் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்.
தபால் அலுவலகங்களில் பதிவு செய்து சதாப்தி ரெயிலில் பார்சல் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்.
Published on

கோவை:

ரெயில்களில் சரக்கு பார்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் தங்களது பொருட்களை தபால் அலுவலகங்கள் மூலம் ரெயில்களில் அனுப்பும் வசதி நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தங்கள் பகுதியில் உள்ள தபால் அலுவலகங்களில் பொருட்களை கொடுத்து பதிவு செய்யலாம். ரெயில்களுக்கான பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும். நேற்று கோவையில் இருந்து சென்னை செல்லும் சதாப்தி ரெயில் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கியது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, "816 கிலோ எடையுள்ள பொருட்களுக்கு ரூ.477 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதன்படி ரெயில்களின் தூரம், ஊர் ஆகியவற்றை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வளவு பொருட்களை வேண்டுமானாலும் தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்ததனர்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட வர்த்தக பிரிவு அதிகாரி பாண்டுரங்கன் மற்றும் தபால்துறை அதிகாரி அகில் நாயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொழில்துறையினர் கூறும்போது, "இந்த திட்டம் சிறு, குறுந்தொழில்முனைவோர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும். எந்த இடத்தில் பொருட்களை உற்பத்தி செய்கிறோமோ அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் அனுப்புவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. இதற்காக தபால்துறை மற்றும் ரெயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com