search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Employe looted"

    பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தலைமை தபால் நிலையத்தை ஊழியர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #postoffice

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஜோயல்ராஜ் (வயது 29) என்பவர் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர், தற்போது அயல் பணியாக பொதக்குடி தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று மதியம் பொதக்குடியில் இருந்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திற்கு ஜோயல்ராஜ் வந்தார்.

    அப்போது அவர் ஆவேசமாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், கண்ணாடிகள், பீரோ, டேபிள், நாற்காலிகள் என அனைத்தையும் அடித்து உடைத்துசூறையாடினார். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தபால் நிலையத்தில் வந்திருந்த பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    ரகளை செய்த ஜோயல்ராஜை பிடிக்க அங்கிருந்த ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

     


    இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோயல்ராஜை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக மன்னார்குடி தலைமை தபால் நிலைய அதிகாரி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல்ராஜை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், ஜோயல்ராஜ் பணி மாறுதல் கேட்டு வந்துள்ளார். பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தான் அவர், தபால் நிலையத்தில் பொருட்களை சூறை யாடியதாக தெரிய வந்தது. இதற்கு முன்பும் ஏற்கனவே 2 முறை ஜோயல்ராஜ் இதுபோல் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #postoffice

    ×